உ
பிள்ளையார் துணை இந்திய ரா துணை
என்று சிறிசேனா துவங்கிய இந்த ஆட்டம் எங்கு நிற்கும் என்று
தெரியவில்லை. ரா தன்னைக் கொல்ல முயல்வதாக சிறிசேனா புலம்பியதாக
இந்திய நாளிதழ்களில் செய்தி வந்ததில் இருந்து இந்தத் தீவுத் தேசம்
தகித்துக்கொண்டும், அந்தத் தகிப்பைச் சரிசெய்ய வழியிருந்தும்
சகித்துக் கொண்டும் இருக்கிறது. மாலத்தீவின் தேர்தல் திருவிழா
முடிந்து முடிவு வந்து, அதிகாரம் கை மாறுவதற்குள்ளாக, இலங்கையில்
மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு இருக்கிறது. சீன நிறுவனத்தை மீறி இந்திய
நிறுவனத்திற்கு கட்டுமான காண்ட்ராக்ட் வழங்கியது, ரணில் நீக்கம்,
ராஜபக்ச அவசர நியமனம், பெரும்பான்மையை நிருபிக்க இயலாமல் கவிழ இருந்த
பாராளுமன்றத்தை முடக்கியது, பிறகு உலக அர்ச்சனை தாங்காமல் பாராளு
மன்றத்தை இயக்கியது, அதனாலேயே நம்பிக்கை இன்மை வாக்கெடுப்பில்
ராஜபக்ச மண்ணைக் கவ்வியது, கோர்ட் கையால் குட்டு வாங்கியது என்று
ஒவ்வொரு ரீலுக்கும் கிளைமேக்ஸ் வைத்து நகர்கிறது இலங்கை அரசியல்.
மேற்கொண்டு பிணக்கை நீடிக்காமல் அதிபர் சிறிசேனா, ரணில் உடன் ஒரு
உடன்பாட்டிற்கு வந்து தடம் புரண்டு கிடக்கும் நாட்டை சரி
செய்யவேண்டும். இல்லை என்றால் இது போகும் வழி இருண்டு கிடக்கிறது.
பிணக்கு சரி செய்யப்படும் என்று நம்புவோமாக.