மதுவிலக்கு அமுல்படுத்த முடியாத கொள்கையா?

1 view
Skip to first unread message

செல்வன்

unread,
Mar 16, 2018, 9:59:12 AM3/16/18
to செல்வன்


மதுவிலக்கு அமுல்படுத்த முடியாத விசயம் என பலரும் கருதுகிறார்கள். ஆனால் வரலாறு கூறும் உண்மை வேறு மாதிரி உள்ளது.

1920ல் தான் அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. ஓட்டுரிமை கிடைத்ததும் அவர்கள் செய்த முதல் வேலை மதுவிலக்குக்கு ஆதரவான சட்டதிருத்ததுக்கு ஓட்டளித்ததுதான். அதற்குமுன் பல ஆண்டுகளாக பெண்கள் இயக்கமாக திரண்டுதான் மதுவை ஒழிக்க போராடிவந்தனர். அங்கே என இல்லை, 1990களில் ஆந்திராவிலும் மதுவிலக்கு அமுல்படுத்தபட காரணம் பெண்கள் நடத்திய போராட்டமே (பின்னர் விலக்கபட்டது)

1920- முதல் 1933 வரை நீடித்த அமெரிக்க மதுவிலக்கு தோல்வி அடைந்தது என கருதபட்டாலும் உண்மை வேறானது. மதுவிலக்கு அதன் குறிக்கோளில் வெற்றியே அடைந்தது. அதன் தோல்வி அரசியல் ரீதியானது மட்டுமே.




1920க்கு முன்பு தனிநபர் மது நுகர்வு இருந்த விதம் மதுவிலக்கு அறிமுகபடுத்தட்டபின் தரைமட்டத்துக்கு வீழ்ந்தது. மீண்டும் 1920 அளவுகளை அது எட்ட ஐம்பது ஆன்டுகள் பிடித்தது.

1930களில் 42% அமெரிக்கர் சுத்தமாக மது அருந்தும் வழக்கமே இல்லாமல் இருந்தனர். 1970ல் கூட இந்த எண்ணிக்கை 38% ஆக இருந்தது (தற்போது இது 13% மட்டுமே. பெண்கள் தான் மதுவிலக்குக்கு ஆதரவு என தெரிந்து அதன்பின் பெண்களை குறிவைத்து மதுவகைகளை அறிமுகபடுத்தி வீழ்த்தினார்கள்)

1920களுக்கு முன்பு இருந்த லிவர் சிரோசிஸ் வியாதிகளின் சதவிகிதம் தரைமட்டத்துக்கு வீழ்ந்து 1970 வரை அந்த குறைவான அளவே நீடித்தது.

அங்கே மட்டுமில்லை, தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியில் ஒரு சில ஆண்டுகள் மதுவிலக்கு அறிமுகபடுத்தபட்டபோது சிறுசேமிப்பு அளவு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததாகவும், அரசு மருத்துவமனைகளில் கூட்டம் பெருமளவு குறைந்ததாகவும் பத்திரிக்கை செய்திகள் வந்தன.

ஆக அறிமுகபடுத்தபட்ட நாடுகளில் எல்லாம் மதுவிலக்கு உடல்நலன் ரீதியில் வெற்றியையே அளித்துள்ளது.

அதன் அரசியல்ரீதியான தோல்விக்கான காரணங்களை ஆராயலாம்.

அமெரிக்காவில் அல்கபோன் உள்ளிட்ட பல மாபியா கும்பல்கள் மதுவை காய்ச்சி விற்றனர். இதனால் மதுவிலக்கு குற்றங்களை அதிகரித்தது என ஒரு தோற்றம் உருவானது.

ஆனால் இதற்கு முக்கிய காரணம் மதுவிலக்கு ஆதரவாளர்கள் கொண்டு வந்த வோல்ஸ்டெட் சட்டம்தான். முந்தைய மதுவிலக்கு சட்டத்தை விட இது கடுமையாக இருந்ததுடன் பியருக்கும் தடை விதித்தது. பியருக்கும் தடை வந்தபின் சிறுவணிகர்கள், உணவகங்கள் ஆதரவை சட்டம் இழந்தது.

அத்துடன் வீடுவீடாக காவலர் புகுந்து மதுவை ஸ்டாக் வைத்தவர்களை எல்லாம் கைது செய்ய துவங்கியவுடன் சர்வாதிகார அரசு நடத்துவது போன்ற தோற்றம் உருவானது.

ஆனால் அப்போதும் மதுவிலக்கு மக்கள் ஆதரவை இழக்கவில்லை.

1930ல் மிகபெரும் பஞ்சம் வந்து நாடெங்கும் கஞ்சிதொட்டிகள் திறக்கபட்டன. அமெரிக்கவரலாற்றின் மிககொடிய பஞ்சம் அது. அப்போது மதுவிலக்கை ரத்து செய்தால் சுற்றுலாதுறை வளரும், வணிகம் பெருகும், பஞ்சம் அழியும், அரசுக்கு வரிவருவாய் அதிகரிக்கும் என்பது போன்ற சம்பந்தமில்லாத வாதங்களை முன்வைத்து மதுவிலக்கு ரத்து செய்யபட்டது.

பியரை தடை செய்யாமல் இருந்து, பொதுமக்களை குறிவைக்காமல் இருந்திருந்தால் மதுவிலக்கு வெற்றியே அடைந்திருக்கும்.

தமிழகத்தில், ஆந்திராவில் மதுவிலக்கு ரத்தாக காரணமும் அதுபோன்ற கடுமையான முறையில் அமுல்படுத்தபட்டதே.

ஒரேயடியாக அனைத்து மதுவகைகளுக்கும் தடை என அறிவிப்பதால் அரசுக்கு ஒரே நாளில் கோடிக்கணக்கில் நட்டம் ஏற்படும். அதன்பின் கள்ளசாராம் காய்ச்சபடும். அதில் விசசாராயம் அருந்தி நூற்றுக்கணக்கானோர் மரணமடைவார்கள். அதை காரணம் காட்டி மதுக்கடைகள் மீண்டும் திறக்கபடும்.

அதனால் மதுவிலக்கை படிப்படியாக அமுல்படுத்துவதே நல்லது. அமுல்படுத்தினால் அது நிச்சயம் வெற்றி அடையும்.

துவக்கத்தில் அதிக ஆல்கஹால் இருக்கும் மதுவகைகளை தடை செய்து, பியர், கள்ளு மாதிரியானவற்றை விற்று அதன்பின் ஓரிரு தலைமுரைகளில் அதையும் நிறுத்தலாம். அல்லது தொடரலாம்.

மதுவிலக்கு முக்கியமாக ஏழைகளுக்கு அளிக்கபடும் மிகப்பெரும் சலுகையாக இருக்கும். பல்லாயிரம் கோடிகள் அவர்கள் குடும்பத்துக்கு மிச்சமாகும். பலர் உயிர் பிழைபபர்கள். வியாதிகள் குறையும். மருத்துவசெலவுகள் குறையும்.

குறையும் வருமானத்தை சரிக்கட்ட தேவையற்ற இலவசங்களை எல்லாம் நிறுத்தலாம். புதிதாக வரிகளை கூட விதிக்கலாம்.

பொதுமக்களை குறிவைத்து கைது செய்வதை நிறுத்தினால் மக்களிடையே சட்டத்துக்கு ஆதரவு இருக்கும்.

முக்கியமாக மதுவிலக்கு வந்தாலும் குடிப்பது முற்றிலும் நிற்காது, ஆனால் அளவுகள் குறையும் என்பதை உணரவேண்டும்.

உதாரணமாக இந்திய மாநிலங்களின் சராசரி மதுநுகர்வு

ஆந்திராவில் வாரம் 700 மிலி
புதுவை 300 மிலி
தமிழகம் 105 மிலி

மதுவிலக்கு இருக்கும் குஜராத்தில் 56 மிலி, மதுவிலக்கு நீன்டநாள் அமுலில் இருந்த ஆன மிஜோரத்தில் 31 மிலி மட்டுமே

ஆக மதுவிலக்கு வந்தாலும் குடிப்பவர்கள் பாண்டிசேரி, ஆந்திரா என போய் வாங்கிவந்து திருட்டுதனமாக குடித்துகொண்டுதான் இருப்பார்கள். அதை எல்லாம் தடுக்காமல் விட்டுவிட்டு, பியர், கல்ளு மாதிரியானவற்றை விற்றால் ஓரிரு தலைமுறைகளில் மதுவின் வாசமே அறியாத ஒரு புதிய தலைமுறை உருவாகும். குடிக்காமல் உயிர்வாழ்வாழவே முடியாது என இருப்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது. அவர்களை வீடுவிடாக புகுந்து கைது செய்யாமல், மென்மையான முறையில் மதுவிலக்கை அமுல்படுத்தினால் நிச்சயம் அது வெற்றி அடையும்.

அதை செய்யகூடிய துணிச்சலும், மனதின்மையும் கொண்ட அரசு அமையுமா என்பதுதான் கேள்விக்குறி.


--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages