
அதுதான் அவருடைய ஈர்ப்பும் கூட. திரையிடலுக்கு வந்திருந்த வாசகர்களில் சிலர் உணர்ச்சி மேலிட கண்ணீர் கூட விட்டுவிட்டனர் பாவம்.“அசோகமித்திரனுக்கு உங்களுடைய ஓவியம் ஒன்றைப் பரிசளியுங்களேன்” என்றேன். அழகாகச் சட்டமிடப்பட்ட ஓர் அருமையான ஓவியத்தை டக்ளஸ் பரிசளித்தார். அதைப் பெற்றுக்கொண்டு ஓவியத்தைப் பார்த்த அசோகமித்திரன், “நான் சரியாகப் பார்க்கிறேனா?” என்று டக்ளஸிடம் கேட்டார். “அப்படியில்லை, இப்படி” என்று அவர் பிடித்திருந்த பக்கத்தை டக்ளஸ் மாற்றிக் காண்பித்தார்.
ஏற்புரையில் இதைக் குறிப்பிட்டுப் பேசிய அசோகமித்திரன், “ஒரு முக்கியமான ஓவியர் இந்த விழாவில் கலந்துகொண்டு ஒரு ஓவியத்தைப் பரிசளிக்கிறார். ஆனால், அதை எப்படிப் பார்ப்பதென்றுகூட நமக்குத் தெரியவில்லை. நம்மைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்” என்று சங்கடப்பட்டார். இந்த எளிமையும் சத்தியமும்தான் அசோகமித்திரன்.
”சார், நான் ஒரு எழுத்தாளன். என்னைப் போய் இந்த வேலையையெல்லாம்
செய்யச் சொல்கிறீர்களே?” என்றார் வாசனிடம் அசோகமித்திரன். அதற்கு
வாசன் சொன்ன ஒரு பதிலால் அசோகமித்திரனின் ஒட்டு மொத்த வாழ்க்கையே
திசை மாறியது. அப்போது அசோகமித்திரனுக்கு 35 வயது என்று
நினைக்கிறேன். “ஏம்ப்பா, நீ எழுத்தாளனா இருந்தா இந்த வேலைக்கு
வந்திருக்க மாட்டியேப்பா?”
அவ்வளவுதான். அந்தக் கணமே வேலையை ராஜினாமா செய்து விட்டு அடுத்த 20
ஆண்டுகள் ஏழ்மையில் உழன்றார் அசோகமித்திரன். இதெல்லாம் அசோகமித்திரனே
எழுதினது. சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிடவில்லை என்று
சொல்லியிருக்கிறார். எனக்கே தெரியும். அவருக்கு ஆஸ்துமா. மூச்சு விட
சிரமப்படுவார். மாத்திரை மருந்து வாங்கக் காசு இருக்காது. தமிழைப்
போலவே ஆங்கிலத்திலும் எழுத வல்லவர். ஆங்கிலத்தில் அவர்
எழுதியிருந்தால் இந்நேரம் நோபல் பரிசு பெற்றிருப்பார். ஆனால்
தமிழில்தான் எழுதுவேன் என்று உங்களுக்கும் எனக்கும் தாய்மொழியான
தமிழைத் தேர்ந்தெடுத்தார். பட்டினி கிடந்தார். அவர் பிள்ளைகள்
தலையெடுத்த பிறகுதான் அவரால் சாப்பிட முடிந்தது. ஆனால் வயிறு
சுருங்கி விட்டது. ஒரே ஒரு மொளகா பஜ்ஜி போதும்ப்பா என்பார்.