(தோழர் தியாகு எழுதுகிறார் 19.3 தொடர்ச்சி)
காலநிலைக் களம்: ஏற்றமும் சறுக்கலும்
கரியிருவளி(Carbon dioxide) முதலான பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவியலர்களும் சூழலியர்களும் வலியுறுத்தத் தொடங்கி பல்லாண்டு கழிந்த பிறகுதான் உலகத் தலைவர்களுக்கு மெல்ல உறைக்கலாயிற்று. 1979இல்தான் சுவிட்சர்லாந்து நாட்டில் செனிவா நகரில் காலநிலை மாற்றம் பற்றிய உலகத் தலைவர்களின் முதல் பெரிய மாநாடு நடைபெற்றது.
அதற்குப் பிறகு காற்று மண்டலத்தில் கரியளவு கிட்டத்தட்ட 25 விழுக்காடு உயர்ந்துள்ளது. 1997ஆம் ஆண்டு சப்பான் நாட்டு கியோட்டா நகரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகைமுறை உடன்படிக்கையில் 150க்கு மேற்பட்ட நாடுகள் ஒப்பமிட்டன. வளர்ச்சி பெற்ற நாடுகள் தங்கள் உமிழ்வுகளை 1990ஆம் ஆண்டிலிருந்த அளவுகளின் கீழே 5 விழுக்காடாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த உடன்படிக்கை கோரிற்று. அப்படிக் குறைத்துக் கொள்வதைக் கண்காணிப்பதற்கான சட்டகத்தையும் அது ஏற்படுத்திற்று.
கியோட்டா உடன்படிக்கையின் ஒரு முகன்மைக் குறை: வளரும்பருவ நாடுகளின் கரியுமிழ்வுகளை அது கட்டுப்படுத்தவில்லை. பெருமளவு உமிழ்வுகளுக்குப் பொறுப்பான சீனமும் இந்தியாவும் இந்த நாடுகளில் அடங்கும். 2015 பாரிசு காலநிலை உடன்படிக்கையில்தான் இந்தக் குறை சரிசெய்யப்பட்டது.
பாரிசு உடன்படிக்கையின்படி, சீனம், இந்தியா உட்பட ஒப்பமிட்ட ஒவ்வொரு நாடும் புவியின் நிரலளவு வெப்பநிலையை தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த அளவைவிட 1.5 பாகைக்கு மேல் உயர விடாமல் பார்த்துக் கொள்ளும் நோக்கில் நாட்டளவு இலக்குகள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதிக்குள் கரியுமிழ்வில் கேடற்ற நிலையை எட்டி விட வேண்டும்.
கியோட்டா, பாரிசு உடன்படிக்கைகளைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் இயற்றியுள்ள சட்டத்தின்படி, உறுப்பு நாடுகளின் கூட்டு முயற்சியால் உமிழ்வுகளை 2030ஆம் ஆண்டுக்குள் 1990க்கு மேல் 55 விழுக்காடு என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அந்தந்த நாடுகளிலும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் பிடென் ஆட்சியும் இதற்கு உறுதியேற்றுள்ளது.
ஆக, இதற்கு மேல் வேறென்ன வேண்டும்? என்று கேட்கத் தோன்றுகிறதா? உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதன்று. ஏனென்றால் இது புதைபடிவ எரிபொருள் தொழிலில் ஈடுபட்டுள்ள முதலியப் பெருங்குழுமங்களின் கொள்ளை ஈட்டங்களைக் கட்டுப்படுத்துவதாகும்.
இந்தப் பெருங்குழுமங்களுக்குத் தொண்டு செய்யும் அரசுகள், அரசியல் கட்சிகள் எந்த உமிழ்வுக் கட்டுப்பாட்டையும் ஏற்க மாட்டா. 2015 பாரிசு உடன்படிக்கையிலிருந்து 2017இல் அமெரிக்க திரம்பு(Trump) ஆட்சி விலகிக் கொண்டதன் பின்னணி இதுதான். அமெரிக்க ஆலைத் தொழில் மீது இந்தக் கட்டுப்பாடு நியாயமற்ற சுமைகளை ஏற்றுவதாகவே திரம்பு(Trump) காரணம் சொன்னார். இந்த விலகல் 2020 முதல் செயலுக்கு வர வேண்டும்.
பிடென் பதவியேற்ற முதல் நாளே பாரிசு உடன்படிக்கைக்குத் திரும்புவதாக அறிவித்தார். இந்த உடன்படிக்கையின் பங்காளர்களான 192 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இதனை வரவேற்றுள்ளன. அமெரிக்கப் பொருளியலின் பசுங்குடில் வாயு உமிழ்வுகளை 2030க்குள் 2005 அளவைக் காட்டிலும் குறைந்தது 50 விழுக்காடு குறைக்கவும் பிடென் இலக்கு வைத்துள்ளார்.
புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றாக சூரிய விசை, காற்றாலை, கடலலை போன்ற ஆற்றல் வழிகளை நாடும் முயற்சிகளும் நடக்கின்றன.
மறுபுறம் ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் மண்ணில் புதைந்துள்ள கரிவளத்தை எடுத்துக் கொள்ள மேலை நாடுகளை அழைத்துக் கொண்டிருப்பது கவலைக்குரியது. இந்தியாவில், குறிப்பாக ஈரவளி(Methane) போன்ற நீர்மக் கரிமம் (hydro carbon) தோண்டியெடுக்கப் பெருங்குழுமங்களுக்கு வழி திறந்து விடும் முயற்சிகள் இந்தியாவின் பன்னாட்டு உறுதிப்பாடுகளுக்கு முரணானவை.
மொத்தத்தில் புதைபடிவ எரிபொருள் கட்டுப்பாட்டு முயற்சியில் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதையாகவே உள்ளது.
மேலை நாடுகள் தங்கள் மண்ணைத் தோண்டுவதைக் குறைத்துக் கொண்டு ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா முதலிய பகுதிகளில் மண்ணைத் தோண்டக் கிளம்பி விட்டால், காலநிலை மாற்றத்தின் மீதான தாக்கம் இன்னுங்கூட மோசமாகவே இருக்கும்.
காலநிலை மாற்றக் களத்தில் பன்னாட்டு மாநாடுகள், கலந்தாய்வுகள், உடன்படிக்கைகள், குறிக்கோள்கள், இலக்குகள் எல்லாமே தேவைதான். ஆனால் இவை போத மாட்டா. இவற்றை மட்டும் நம்பியிருக்கவும் முடியாது. அனைத்துக்கும் மேலாக ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் விழிப்புடனும் துடிப்புடனும் செயல்படுவது இன்றியமையாதது.
அப்படியானால், புரட்சிக்காக உழைப்பதா? காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடுவதா? எது முதன்மை? என்று தாழி அன்பர்கள் கேட்க விரும்பும் வினாவிற்கு விடை காண வேண்டும். காண்போம்.
தரவு : தாழி மடல் .17
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’
சங்கம் தோன்றித் தமிழ் வளர்த்த வரலாற்றை அறிஞர் வையாபுரிப் பிள்ளையும் ஏற்றுக் கொள்கின்றார். சங்கம் தோன்றிய பின்னர், புதிதாக இயற்றப்படும் நூல்கள் சங்கப் புலவர் முன்னிலையில் அரங்கேற்றப்படுதல் வேண்டும் என்ற ஒரு விதியுமிருந்தது என்பதை யாவரும் அறிவர். சங்கம் தோன்றுவதற்கு முன்னர் புதிய நூல்கள் அரசர் கூட்டும் அவையில் அரங்கேற்றப்பட்டன. தொல்காப்பியம் நிலந்தரு திருவின் நெடியோன் அவையில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.1 ஆதலின் தொல்காப்பியம் சங்க காலத்திற்கு முற்பட்டதாகும் என்று தெளியலாம். ஆதலின் தொல்காப்பியர்
++
1. பனம்பாரனார் பாயிரம்.
++
வாழ்ந்த காலம் சங்கம் தோன்றுவதற்கு முந்தியதும், ஆரியர் தமிழகத்தில் குடியேறியதும், நிலம்தரு திருவின் நெடியோன் பாண்டி நாட்டை ஆண்டதும், மூவேந்தர்களும் சிறப்புற ஆட்சி புரிந்து கொண்டிருந்ததும் ஆகிய ஒரு காலமாகும் என்றறிதல் அகச் சான்றுகட்கும் புறச்சான்றுகட்கும் ஒத்ததாகும்.2 அக்காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாமென்பது என் கருத்து.
இக் காலத்திலேயே தமிழ் மொழி வரையறுத்த இலக்கண நூல்களைப்பெற்றிருந்தது என்பது தொல்காப்பியத்தால் தெளியக்கிடக்கும் செய்தியாகும். வரையறுத்த இலக்கணங்களைப் பெற்றுள்ள மொழிதான், வலிய கரைகட்கு இடையே செல்லும் பேராற்றைப்போல் ஒழுங்குற இயங்கும். இன்று உலகத்தவரால் போற்றப்பட்டுப் பயிலப்பட்டு வரும் ஆங்கில மொழி, நூற்றாண்டு தோறும் மாற்றமுற்று வந்துள்ளமை அதற்கென வரை
யறுத்த இலக்கணத்தைப் பதினெட்டாம் நூற்றாண்டு வரை அது பெற்றிராமையால்தான்.3 ஆங்கில மொழியில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலக்கணநூல்கள் தோன்றின. ஆனால் அவை வழக்கொடு முரண்பட்டுப் பயில்வார்க்கு இடர்விளைத்தனவாம். பின்னர்தான் நூல் வழக்கு உலக வழக்கு ஆகியவற்றைத் தழுவி இலக்கண நெறி செல்ல வேண்டும் என்று முடிவு கட்டினராம். இங்கிலாந்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கில மொழிக்கு நிகழ்ந்தது, தமிழ் மொழிக்குத் தமிழ்நாட்டில் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே நிகழ்ந்துவிட்டது.
வடவேங்கடம் தென்குமரி
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணித்
(தொல்பாயிரம்)
++
2 . தொல்காப்பிய ஆராய்ச்சி (எனது நூலிற்) காண்க.
3. A History of English Languages : Page 314
தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கணம் யாத்தார். தமிழின் முதல் இலக்கணம் தொல்காப்பியந்தான் என்று கருதிவிடுதல் கூடாது. செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் என்று கூறப்படுவது தமிழ்நாட்டில் தமிழில் இயற்றப்பட்டிருந்த இலக்கண நூல்கள் பற்றியே யாகும். தொல்காப்பியர் முந்தையோர் கருத்துகளை எடுத்தாளும் போதெல்லாம் என்ப, என்மனார் என்று கூறுவதை இயல்பாகக் கொண்டுள்ளார். நூல் முழுவதும் நோக்குமிடத்து இருநூற்று எண்பத்தேழு (287) இடங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதை அறியலாகும். ஆதலின் தமிழ்மொழியில் வரையறுத்த இலக்கணங்கள் தோன்றியகாலம் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட பன்னூறு ஆண்டுகளில் இருக்கக் கூடும். ஆகவே, தமிழ்மொழியில் இலக்கியங்கள் தோன்றிய காலமும் எழுத்துத் தோன்றிய காலமும் வரையறுத்துக் கூற முடியாத தொன்மையை உடையன என்று உணரலாம்.
தொல்காப்பியர் காலத்தில் இலக்கண நூல்கள் பல இருந்தனவென்று தொல்காப்பியத்தாலேயே அறிகின்றோம். அங்ஙனமிருக்கத் தொல்காப்பியரும் புதியதொரு நூல் இயற்றப் புகுந்தது எற்றுக்கு என்று சிலர் கருதலாம். மக்களால் பயன்படுத்தப்படுகின்ற மொழி மாறிக்கொண்டேதான் இருக்கும். இம் மாற்றமே அதன் உயிர்த் தன்மையை அறிவிப்பதாகும். மாற்றமற்ற மொழி உயிரற்ற மொழியாகும். தமிழ் உயிருள்ள வழக்கு மொழி. பண்பட்ட இலக்கணத்தைப் பெற்று வரையறுத்த நெறிகளில் மக்கள் மொழியைப் பயன்படுத்திய போதிலும், மக்கள் அறிதலின்றியே மாற்றங்கள் சில, மொழிப் போக்கில் உண்டாகிவிடுதல் இயல்பு. மொழிநூலறிஞர்கள் இம் மாற்றங்களை அறிந்து அதற்கேற்ப இலக்கண விதிகளை இயம்புதலை மேற்கொள்வர்.
தொல்காப்பியர் புலமைசால் மொழிநூலறிஞர் ஆதலின், தமிழ்மொழியில் தாம் கண்ட புதிய இயல்புகளை முன்னோர் நூல்கள் மொழிந்தவற்றோடு கூட்டிப் புதியதோர் இலக்கண நூலை யாத்துத் தந்துள்ளார். இதனாலும் தமிழின் தொன்மையை அறியலாகும். பண்பட்ட இலக்கணம் பெற்றிராத மொழிகள் விரைந்து மாறும் இயல்பின. இலக்கணம் பெற்றுள மொழிகளில் மாற்றங்கள் தோன்ற பல நூற்றாண்டுகள் செல்லவேண்டும். தமிழோ பண்பட்ட இலக்கணத்தைத் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பும் பெற்றிருந்தது என்று அறிந்தோம். பண்பட்ட இலக்கணத்தைப் பெற்ற தமிழில் மாற்றங்களும் விரைந்து நிகழ்ந்திரா. தொல்காப்பியர் காலத்தில் தமிழில் மாற்றங்கள் காணப்பட்டனவென்றால் அவர் காலத்துக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே தமிழ் தோன்றியிருத்தல் வேண்டுமென்பது தெளிவு.
சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்
முதுமொழிநீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே
எனும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளைக் கூற்றையும் உன்னுக.
தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இலக்கியங்கள் பலவும் இலக்கணங்கள் பலவும் தோன்றியிருந்தன. அவற்றின் துணையால் தொல்காப்பியர் தம் நூலை இயற்றினார். பழந்தமிழ் இலக்கியங்களால்தாம் பழந்தமிழ் நிலையை அறிதல் கூடும். (The language of a past time is known by the quality of its literature. A History of English Literaure – Page 76.) நாமும் பழந்தமிழ் நூல்களால் பழந்தமிழ் நிலையை அறிய முயலுவோம்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்