மடையர்கள் யார்?
மடை என்பது குளம் அல்லது ஏரியில் இருந்து நீர் வெளியேறும் வாசல் எனில், அவ்வாசலைத் திறந்து மூடும் கதவு தான் மதகு. பிற்காலத்து மடைகள் குளக்கரையில் அமைந்திருக்கும், அதாவது வீட்டிற்கு வாசல் வெளிச்சுவற்றில் இருப்பது போல, எப்படி வீட்டிற்கு வெளியே நின்று கதவைத் திறந்து மூடுவது எளிதோ, அதே போன்று கரையின் மீது நின்று மதகைத் திறப்பதும் மூடுவதும் எளிது.
சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்து மடைகளின் அமைப்பு மாறுபட்டது, ஒரு சமையலறை சிங்க்ல் (Kitchen Sink) தண்ணீர் எப்படி நடுவே இருக்கும் துளையில் இணைக்கப் பட்டிருக்கும் குழாய் மூலமாக வெளியேறுமோ, அதே போல் குமிழித் தூம்பு மடையில், ஏரி நீர் குளத்தின் நடுவே இருக்கும் குமிழிதூம்போடு இணைந்த ஒரு நிலத்தடிக் கால்வாய் மூலமாக வெளியேறும்.
தண்ணீரை வெளியேற்றவும் அடைக்கவும் குமிழிதூம்பைத் திறக்க வேண்டும். குமிழிதூம்பு ஆழத்தில் ஏரிப் படுகையில் இருக்கும். ஒருவர் கரையில் இருந்து நூறு மீட்டர்கள் வரை நீந்திச் சென்று, குளத்தின் நடுவே இருக்கும் மடையை அடைந்து, பின்பு இருபது அல்லது முப்பது அடிகள் ஆழத்திற்கு மூழ்கிச் சென்று தூம்பினைத் திறக்க வேண்டும். சில நேரங்களில், திறப்பவர்கள் நீரோட்டத்தில் உள்ளே இழுக்கப்படலாம். உயிருக்கு உத்தரவாதமில்லாத வேலை. ஆனால் அக்காலத்தில் இவ்வேலையைச் செய்து முடிக்கப் பயிற்சி பெற்ற மக்களும் இருந்தனர், அவர்கள் தான் மடைக்குடும்பர்கள்.
பல நேரங்களில், கரை உடையாமல் பாதுகாப்பதற்காக, தங்கள் உயிரைக் கொடுத்து, ஆம், உயிரைக் கொடுத்து மடையைத் திறந்துள்ளனர். அப்படி உயிர்த்தியாகம் செய்த மடைக்கும்பர்களை நினைவுகூரும் நடுகற்களும் கல்வெட்டுகளும் தமிழகம் முழுவதும் நிறைய இடங்களில் உள்ளன. மடைக்குடும்பர்கள், மடையர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். “மடையன்” என்ற சொல் இன்று வசைச் சொல்லாக பயன்படுத்தப்படுவது , அவர்களின் தியாகத்திற்க்கு நாம் செய்யும் அவமரியாதை.
சுந்தர பாண்டியர் காலத்தில் மடைக்குடும்பர் ஒருவருக்கு மன்னர் அளித்த தானம் பற்றிய கல்வெட்டு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம், முதுகுடி கிராமத்தில் இருக்கிறது என்ற குறிப்பினைப்பார்த்து அதனைத் தேடிச் சென்ற பொழுது, அக்கல்வெட்டு அங்கு இல்லை. சற்று வருத்தம் தான்.
பின்னொரு நாளில் இரவிச்சந்திரன் சாரின் மாணவர் ஒருவர், “எங்கள் ஊர் கண்மாயில் ஒரு கல்வெட்டு உள்ளது வந்து வாசித்துச் சொல்ல முடியுமா?”எனக் கேட்டிருந்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம், அழகாபுரி கிராமத்தின் கள்ளர்ககுளம் கண்மாய்க்குள் இருக்கும் மடையின் ஒரு தூணில் இருக்கும் மடைத்தூண் கல்வெட்டு அது. நான் வாசித்த முதல் மடைக்குடும்பர் கல்வெட்டும் அதுவே.
கல்வெட்டின் காலம் 18 அல்லது 19 ஆம் நூற்றாண்டு. அழகாபுரி பாசனப்பட்டு, சேகரம் கள்ளர் குளத்துக்கு, நீர் பாய்ச்சிகள் யார் என்று குறிப்பிட்டு, அந்த நீர்பாய்ச்சிகள் தானமாய்க் கொடுத்த தூண் என்ற செய்தி உள்ளது. இக்கல்வெட்டின் மூலம், பிற்காலத்தில் குமிழித் தூம்புகள் ஏரியின் கரைக்கு மாற்றப்பட்டு விட்டாலும், மடையை இயக்கும் பணியைத் தொடர்ந்து மடைக்குடும்பர்களே செய்து வந்தனர் என்றும், அவர்கள் நீர்பாய்ச்சிகள் என்று அழைக்கப்பட்டதையும் அறிந்து கொள்ள முடிகிறது. கல்வெட்டில் இருக்கும் நிறைகுளத்தான் என்ற பெயர், நீரும் நீர் நிலைகளும் அவர்கள் வாழ்வியலோடு பிணைந்திருந்த வரலாற்றைச் சொல்கிறது.
35 வரிகள் கொண்ட கல்வெட்டு வாசகம்:
1.௳
2.அளகாபு
3.ரிப்பாச
4.யப்பட்டு
5.சசேகர
6.ம் கள்ள
7.ர் குளம்
8.நீரப்பா
9.ச்சி பன்
10.டாரிக் கு
11.டும்பன்
12.மகன் நிற
13.குளத்து
14.க் குடும்ப
15.ன் ஷ கா..
16...ரக்கு
17.டும்பன் ம
18.கன் கங்க
19.ர குடும்
20.பன் ஷ இ
21.ருளக் கு
22.டும்பன்
23.மகன் சிவ
24.னுக் குடு
25.ம்பன் முத்
26.துவீரக் கு
27.டும்பன் ம
28.கன் இரு
29.ளாண்டி
30.க் குடும்
31.பன்த் தொ
32.ணை
33.க்கல்
34.உபைய
35.ம் ௳
https://www.facebook.com/share/p/1AWo6u4ADj/