இலக்குவனார் திருவள்ளுவன் 17 September 2021 No Comment
எனும் மறைமொழி அறியாதவரா நம் புலவர் பெருமானார்? கடல் போலக் குமுறிய புலவர் நெஞ்சில் கருத்து மின்னல் ஒன்று மின்னியது. அம்மின்னல் ஒளி அவர்க்கு ஒரு நல்வழி காட்டியது. எழுச்சி கொண்டார் புலவர். உணர்ச்சிக் கடலாயிருந்த அவர் உள்ளம் உறுதி மலை யாயிற்று. அவர் தம் துயரெல்லாம் மறந்தார்; வறுமைத் தீயில் வேகும் தம் மனைவியார் சிந்தும் கண்ணீரையும், பசிக்கொடுமைக்கு இரையாகிய தம் அன்புச் செல்வத்தின் அலறலையும் மறந்தார்; தம் வாழ்வினும் நாட்டின் நல் வாழ்வும், அருளின் வெற்றியுமே பெரியவெனக் கருதினார். அக்கணமே குமண வள்ளலிடம் விடை பெற்றுக் கொண்டு காடும் மலையும் பின் ஒழிய, ஒலியினும் ஒளியினும் வேகமாய்ப் பறந்தோடிச் சென்றார் இளங்குமண னிடம், நெட்டைக் கனவில் நீந்திக்கொண்டு தன்னை மறந்து அரியணையில் கிடந்தான் இளங்குமணன். அறத்தின் திருவுருவைக் கானகத்திற்கு அனுப்பிவிட்டு இறுமாந்திருந்த அவன்பால் வாயிற்காவலர் விரைந்தோடி, வாளும் கையுமாய்ப் புலவர் ஒருவர் வந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். அவன், ‘தடையின்றி வர விடுக!’ என்றான். சிந்தனையில் ஆழ்ந்தது அவன் உள்ளம். ‘வாளும் கையுமாய்ப் புலவரா!…… அண்ணன் தலைக்கு விலை வைத்தோமே!…. என்னாயிற்றோ!’ என நினைந்தான். அவன் தலை சுழன்றது; மனம் கலங்கியது. ‘அண்ணன் தலைக்கு விலை வைத்த-வாள் வைத்த கயவன் நீ!’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் அவன் உள்ளத்தினுள்ளே ஒலித்தது. இளங்குமணன் இதயம் துடித்தது. புலவரும் உருவிய வாளுடன் உள்ளே புகுந்தார். இளங்குமணன் வாளுடன் வரும் வண்டமிழ்ப் புலவரைக் கண்டான். ‘அண்ணன் தலை என் கையிலா!’ என்று அலமந்து நடுங்கியது அவன் மனம். தானாடாவிடினும் தன் சதை ஆடுமன்றோ? அவன் தன் பால் வந்த தண்டமிழ்ப் புலவர்க்கு இருக்கை அளித்து, அவர் வாயினின்று வரும் சொல் நோக்கி நின்றான். அவன் தோற்றத்தையும் துடிப்பையும் கூர்ந்து நோக்கியவராய்ச் செவ்வியறிந்து அவன் செவிகளில் செந்தமிழ் அமுதை வார்க்கலானார் சாத்தனார்:
‘எப்பொருளும் நிலையாத இந்நிலவுலகின் கண்ணே நிலை பெறுதலைக் கருதியவர், தம் புகழை இந்நிலமிசை நிறுத்தித் தாம் மறைந்தனர். அணுகுதற்கரிய தலைமை யுடைய பெருஞ்செல்வர், வறுமையால் இரப்போர்க்கு ஒன்றும் ஈயாமையால் பழமை சான்ற கொடையாளரைப் போலப் பின்னும் தம் பெயரை நிறுத்தி உலகத்தோடு இடையறாது தொடர்ந்து புகழுடன் இன்றும் விளங்குதலை அறியாது போயினர். யான் பாவலர்க்குப் பரிசிலாகச் சிறந்த யானைகளை மிகுதியாகக் கொடுக்கும் அழிவில்லா நற்புகழ் சான்ற வலிய குதிரையையுடைய தலைவனைப் பாடி நின்றேன். ‘பாடி வந்த பரிசிலன் பயனின்றி வாடினனாகப் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது!’ என நினைந்து, தன்னிற்சிறந்த பொருள் வேறின்மையால், தன் தலையை எனக்குத் தருவதற்காக வாளைத் தந்தான் நின் தமையன்! அவனைக் கண்டு வென்றி மிக்க உவகையால் ஓடி வந்தேன்!’ என்ற பொருள் பொதிந்த பாடலைக் கூறினார் சாத்தனார்:
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள்