(வெருளி நோய்கள் 1216-1220 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1221-1224
சில சூழல்களைத் தாங்கிக் கொள்ள இயலாமை குறித்த பேரச்சம் தாங்காமை வெருளி.
உயர்வளிமண்டல ஈரப்பதத்தைச் சில தாவரங்களால் தாங்கிக் கொள்ள இயலாது. அதுபோல் சில சூழல்களைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.
இதற்குச் சரியான சொல் பொறாமை(Intolerance) என்பதுதான். ஆனால், பொறாமை என்பதை அழுக்காறு என்னும் பொருளில்தான் பார்ப்போம். (அழுக்காறும் பொறாமையின் வெளிப்பாடுதான்.) பொறுக்காமை என்பதும் சரியான சொல்லே. ஆனால் பொறுக்குதல் என்பதன் எதிர்ச்சொல்லாகக் கருதக் கூடாது. எனவே, பொருள் குழப்பம வரக்கூடாது என்பதற்காகத் தாங்க இயலாமையைக் குறிப்பிடும் வகையில் தாங்காமை என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
00
நடைத்துணைச் சட்டகமாக உள்ள தாங்கி, தாங்கு கட்டை, தாங்கு கோல், முடவன் கோல், கவட்டுக் கட்டை, ஊன்றுகோல் எனப் பலவகையாக அழைக்கப்பெறும் தாங்கி(crutches/walking frames) குறித்த வரம்பற்ற பேரச்சம் தாங்கி வெருளி.
சிலருக்குத் தாங்கித் தங்கள் ஊனத்தைக்காட்டுவதாகவும் சிலருக்குத் தாங்கித் தங்கள் இயலாமையைக் காட்டுவதாகவும் எண்ணிப் பேரச்சம் கொள்கின்றனர். சிலருக்குத் தாங்கி இல்லாத வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற எண்ணத்திலும் பேரச்சம் வரும்.
Dekaniki என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தாங்கு கட்டை எனப் பொருள். Rollate என்றால் நடைச்சட்டம் எனப்பொருள்.
00
தாடியினைக் கண்டு வரும் காரணமில்லாத் தேவையில்லா அச்சம் தாடி வெருளி.
பெரும்பாலும் பெண்களுக்குத்தான் தாடிவெருளி வருகிறது. தாடியைச் சோம்பலின் அடையாளமாக, முரட்டுத்தனத்தின் வெளிப்பாடாக, நோயின் குறியீடாக எனப் பலவகையிலும் தாடியைக் கருதுபவர்களால் தாடிமீது தேவையற்ற அச்சம் வருகிறது.
தாடிக்கு அணல் என்றும் மற்றொரு பெயர் உண்டு. சங்கக்காலத்தில் கோழி, சேவல், ஓந்தி, குரங்கு ஆகியவற்றின் தாழ் கழுத்து மயிரையும் அணல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தாடியைச் சிந்தனையின் அடையாளமாகவும் அழகின் அடையாளமாகவும் கருதுகின்றனர். அதுபோல் அன்று ஆண்மையின் அடையாளமாகப் பெருமிதமாகக் கருதியுள்ளனர்.
“அடிபுனை தொடுகழல் மைஅணற் காளைக்கு என்
தொடி கழித்திடல் யான் யாய் அஞ்சுவலே!”
எனப்புலவர் நக்கண்ணையா் புறநானூற்றில்(83) கூறுகிறார்.
“புலம் புக்கனனே! புல் அணற்காளை”
எனப்புலவர் உலோச்சனார் (புறநானூறு 258) வீரனுக்குப் புற்களைப்போல முகத்தில் தாடி மண்டிக்கிடந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.
கருமையான தாடியை அழகாகக் கருதியுள்ளனர் என்பதை,
தாத்தா கடிகாரம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தாத்தா கடிகார வெருளி.
தாத்தாவின் கடிகாரம் அல்லது தாத்தா காலக் கடிகாரம் என்னும் பொழுது பழமை என்றும் புதுமையற்றது என்றும் கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 05 March 2026 அகரமுதல
(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 – தொடர்ச்சி)
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்
தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள்
பொதுத்தலைப்பு:
இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை 3 : கல்விக்கடமை
கல்விக்கடமை முழுவதும் அரசின் பொறுப்பு என்றானால் கல்வி நிலையம் யார் நடத்தினாலும் வணிகமாய் இல்லாமல், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில்தான் இருக்கும். இருப்பினும் இன்றைய சூழலில் மக்களின் நாட்டம் தனியார் கல்வி நிலையங்கள் மீதே உள்ளது. தனியார் கல்வி நிலையங்கள் மிகப்பெரிய கட்டடங்களுடனும் ஏந்துகளுடனும் இருப்பதைப் பார்த்து அரண்டு போகக்கூடாது. இவ்வசதிகள் கல்வி நிலையம் நடத்துநர்களின் சொந்தச் செல்வத்தில் உருவானவையா? இல்லையே! பொதுமக்களின் செல்வத்தால் – படிக்க வருபவர்களின் செல்வத்தால் உருவாகின்றவைதாமே!
“ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்பது கற்கையின் சிறப்பை உணர்த்தும். ஆனால், பிச்சை எடுக்காமல், கடன் வாங்காமல், இடர்ப்படாமல் கல்வி பெறும் நிலையை உருவாக்க வேண்டியது – பொருள்நிலை, சாதி, சமய வேறுபாடின்றி அனைவருக்கும் கட்டணச்சுமையில்லாக் கல்வி அளிக்க வேண்டியது – அரசின் கடமையாகும். எனவே, கல்வி நிலையங்களை அரசே நடத்துவதே முறையாகும். ஆனால், இப்பொழுது தனியார் நடத்தும் கல்வி நிலையங்கள் பல உள்ளன. எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு அரசு பின்வரும் முறையில் கல்வி நிலையங்கள் நடத்த வகை செய்ய வேண்டும்.
கல்வி பற்றிப் பார்த்த நாம், கல்விக்கூடங்கள் பரவலாக இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்தும் காண வேண்டும்.
13/10/12 அன்று அருகமைப் பள்ளி குறித்தும் சமச்சீர்க்கல்வி குறித்தும் சொற்பொழிவு நிகழ்ந்துள்ளது. எனவே, அருகமைப்பள்ளி குறித்தும் ஒரே வகுப்பிற்கு வெவ்வேறு பாடமுறை இருப்பதால் சமச்சீர்க்கல்வி குறித்தும் காண்போம்.
சமச்சீர்க்கல்வி இருந்தால்தான் அருகமைப்பள்ளி என்பது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும்.
கல்விமுறையில் பாடத்திட்டம் ஒரே வகையாக இருப்பது மட்டுமல்ல சமச்சீர்க்கல்வி. கல்வித்தரம், கல்வி நிலையங்களின் தரம் முதலியனவும் ஒரே வகையாக நன்முறையில் இருக்க வேண்டும். இக்கல்வி நிலையம் உயர்ந்தது, அக்கல்வி நிலையம் தாழ்ந்தது என்று வேறுபாடில்லாமல், எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஒரே வகையான வாய்ப்பு நலனும் சிறப்பும் தரமும் இருக்க வேண்டும். எக்கல்விநிலையமாயினும் அதில் சேர்ந்து படிக்கலாம் என்ற நிலை வரவேண்டும். இத்தகைய சமச்சீர்க்கல்வியும் தொலைவில் கிடைப்பதாக இருக்கக்கூடாது. எனவேதான் அருகமைப்பள்ளியாக இருக்க வேண்டும். அருகமைப்பள்ளி இன்மையால் மாணாக்கர்கள் போக்குவரத்து நேர்ச்சிகளாலும் வழியிடை இடர்ப்பாடுகளாலும் தீங்கிற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டிற்குச் சொல்வதானால், அண்மையில் புனிதா என்னும் மாணாக்கியர் பள்ளி செல்லும் வழியில் கற்பழித்துக் கொல்லப்பட்ட அவலத்தைக் கூறலாம். அருகமைப்பள்ளியில் அம்மாணாக்கியர் சேரும் நிலை இருந்திருந்தால், இத்துயரம் நேர்ந்திருக்காது அல்லவா?
சமச்சீர்க்கல்வியுடனான அருகமைப்பள்ளிகள் இருந்தால், இட மாற்றங்களால் ஏற்படும் இன்னல்கள் நேரா. எப்பள்ளியாக இருந்தாலும் ஒரே வகை பாட முறை என்பதால் எப்பள்ளியிலும் இடமாற்றத்தின் பொழுது இடையிலும்கூட சேர்க்கலாம். பெற்றோர் இடமாற்றத்தால் பிள்ளைகள் ஓரிடம் பெற்றோர் ஓரிடம் என்னும் இடர் நிலை ஏற்படாது. அதனால் ஏற்படும் துன்பங்களும் பெற்றோர்களுக்கு ஏற்படாது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்