இந்தியா என்பது பல தேசிய அரசுகளின் இணைப்பு. இதன் நிலப்பரப்பும் நிலையாக இல்லாமல், உருவான காலத்திலிருந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா என்னும் செயற்கை அமைப்பே உருவானது. 1858 ஆம் ஆண்டில் இன்றைய இந்தியப் பரப்புடன் இலங்கை, ஆப்கானிசுதானம், பருமா, கிழக்கு வங்காளம், சிந்து, வடமேற்கு எல்லை மாநிலம் எனப்படும் பாக்கிசுத்தான் முதலியவை சேர்ந்த பரப்பே இந்தியா எனப்பட்டது. இப்பரப்பு எல்லைக்குள்ளேயே தனியரசுகள் சிலவும் ஆங்கிலேயர் அல்லாத பிறர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளும் இன்றைக்கு இணைக்கப்பட்டவாறு இல்லாமல் தனித்தனியாக இருந்தன. பின்னர் ஒவ்வொன்றாகப் பிரியவும் சேரவும் புதிய புவிப்பரப்பு உருவாகியுள்ளது. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே இலங்கையும் ஆப்கானிசுதானும் பிரிந்தன. 1935இல் பருமாவும் (மியான்மர்); 1947 இல் பாகிசுத்தானும் பிரிந்தன. அதேபோல் மாகி-காரைக்கால்- புதுச்சேரிப் பகுதிகளும்(1954), கோவா(1961), சிக்கிம் (1975) டையூ-டாமன்(1987) ஆகியனவும் இந்தியாவுடன் இணைந்தன. வெவ்வேறு காலங்களில் பெரு மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன. இவ்வாறு இந்தியா எனப்படும் பரப்பிலிருந்து சில நிலப்பரப்புகள் பிரிக்கப்பட்ட பொழுதும் வேறு சில நிலப்பரப்புகள் சேர்க்கப்பட்ட பொழுதும் சில நிலப்பரப்புகள் மாற்றியமைக்கப்பட்ட பொழுதும் இந்நிலப்பரப்பின் பெயர் மாற்றப்படவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பரப்பளவு சுருங்கியும் விரிந்தும் இந்திய இறையாண்மை என்பது இவ்வாறு மாறுதலுக்குள்ளாகும் பொழுது அதனை நிலையானதாகக் கருதி, அது பற்றிப் பேசக் கூடாது என்பது நடைமுறைக்கேற்றதல்ல. ஆளும் அதிகாரம் நாம் வாழும் நிலைக்கு ஊறு விளைவிக்கும் பொழுது அது குறித்துப் பேசித்தான் ஆக வேண்டும் என்பது உலக நடைமுறையே. மக்களாட்சி மக்களாட்சியாகவே விளங்குவதற்கு இறையாண்மை குறித்த கருத்துப் பரவல்கள் தேவை. எனவே, இந்திய இறையாண்மை கேள்விக்குறியாகும் பொழுது கருத்தாய்வுகள் எழுவது இயற்கையே. இதனை வரவேற்று உரியவாறு செப்பம் செய்யும் பொழுதுதான் இந்திய இறையாண்மை செழுமை அடையும்.நம் நாட்டமைப்பு எத்தகையது எனக் குறிப்பிடும் 26.11.1949 இல் அறிவித்து 1950இல் வெளிவந்த இந்திய அரசியல் யாப்பு பேரரசாண்மை வாய்ந்த மக்களாட்சிக் குடியரசு எனக் குறிப்பிட்டது. பின் 1976 இல் நடைமுறைப்படுத்திய திருத்தத்தின்படி, பேரரசாண்மை வாய்ந்த சமநலமை நெறிசார்ந்த சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு எனக் குறிப்பிடுகிறது. நாம் இறையாண்மை என்பதுதான் இந்திய அரசின் தமிழ் மொழி பெயர்ப்பில் பேரரசாண்மை எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் விதி முதல் உட்பிரிவில் 1.1. இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஓர் ஒன்றியமாக இருத்தல் வேண்டும். எனக் குறிக்கப்பட்டுள்ளது. ‘states’ என ஆங்கிலத்தில் குறிப்பதை மாநிலங்கள் என மொழி பெயர்த்துள்ளனர். எனினும் ‘united states of America’ என்னும் பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று சொல்வது போல் ‘அரசுகளின் ஒன்றியம்’ என்று குறிப்பிடுவதே சிறந்தது. அவ்வாறு குறிக்கும் பொழுது ஒவ்வோர் அரசும் இறையாண்மை மிக்க அரசாக இருத்தலை உணர்த்துவதாகக் கொள்ளலாம். இந்திய ஆட்சியால் ஏற்கப்பட்ட அரசியல் யாப்பின்படி இந்தியாவை அல்லது பாரதத்தை நாடு என்று கூறுவதுகூடத் தவறுதான். பரத அரசுகளின் கூட்டமைப்பு என்று சொல்லலாம். இங்கே பரதம் என்பது பரதனின் பெயரால் வந்தது அல்ல. இந்நிலப்பகுதி பெரும்பாலும் கடலால் சூழப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் முற்றிலும் தமிழர்களால் ஆளப்பட்டு வந்த தமிழ்நிலமாக இருந்தது. கடல் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பரதவர்கள் எனப்பட்டனர். பெரும்பான்மைப் பரதவர்களால் சூழ்ந்த நிலப்பகுதி பரதவ நாடு என்றும் பின்னர்ப் பரதநாடு என்றும் அழைக்கப்பெற்றது. இதுவே பரதனின் பெயரால் அமைந்த நாடு என்று தவறாகவும் எண்ணப்படுகிறது. இதுவே பின்னர் பாரதநாடாகவும் குறிக்கப் பெற்றது. இந்தியா என்ற பெயர்தான் வேண்டுமென்றால் தமிழ் இந்தியா என்று அழைக்கப்படலாம். இனி, எவ்வாறு அழைக்கப்படலாம் என்பது குறித்து ஆராயாமல், தற்போதைய சூழலில் இந்திய இறையாண்மை குறித்துப் பேசுவது தவறா எனப் பார்ப்போம்.
இந்திய அரசியல் யாப்பு விதி 19.1.இல் பின்வருமாறு கூறுகிறது. 19.1.அ. குடிமக்கள் அனைவரும், அ.பேச்சு உரிமைப் பேற்றுக்கு மற்றும் சிந்தனை வெளிப்பாட்டு உரிமைப் பேற்றுக்கு உரிமை உடையவர் ஆவர்.இதற்கிணங்க இந்திய இறையாண்மை குறித்துப் பேசுவது அல்லது சிந்தனையை வெளிப்படுத்துவது சட்டப்படித் தவறாகாது. இந்திய அரசியல் யாப்பு விதி
29.1. தமக்கெனத் தனிவேறான மொழி, எழுத்துரு அல்லது பண்பாடு உடையவராயும் இந்திய ஆட்சிப் பரப்பில் அல்லது அதன் பகுதி எதிலும் குடியிருப்பவராயும் உள்ள குடிமக்களின் பிரிவினர் எவரும் அவற்றைச் சிதையாது காக்கும் உரிமை உடையவர் ஆவர். எனக் குறிக்கிறது. எனவே, நமது மொழிக்கோ எழுத்துருவிற்கோ பண்பாட்டிற்கோ சிதைவு நேரும் பொழுது அல்லது சிதைவு நேரும் வாய்ப்பு உள்ளது என அச்சம் வரும் பொழுது அது குறித்துப் பேச ஒவ்வொருவருக்கும் உரிமையை நமது அரசியல் யாப்பே தந்துள்ளது.
மேலும் இந்திய அரசியல் யாப்பு 344.3. இந்தியாவின் தொழில், பண்பாடு, அறிவியல் ஆகியவற்றின் முன்னேற்றத்தையும் பொதுப்பணிகள் பற்றிய வகையில் இந்தி மொழி பேசாத பரப்பிடங்களைச் சேர்ந்தவர்களின் நேர்மையான கோருரிமைகளையும் நலப்பற்றுகளையும் உரியவாறு நாட்டத்தில் மேற்கொள்ளுதல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இந்த விதி இந்தியைப் பரப்புவதால் ஏற்படும் நலக்கேடுகளைக் குறித்தாலும் வேறுவகையிலும் இவ்வாறு நலப்பற்றுகளை நாட்டத்தில் மேற்கொள்ளாமல் அரசுகள் நடந்து கொள்ளும் பொழுது அது குறித்துத் தட்டிக் கேட்கும் உரிமை, நலப்பற்றுகளை இழந்தவர்களுக்கு உரித்தாகின்றது. இருப்பினும் பின்னர்க் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி இந்தியாவின் பேரரசாண்மை, ஒருமைப்பாடு, ஏமக்காப்பு, அயல்நாட்டரசுகளுடன் நட்புறவு முதலானவற்றிற்கு எதிராக விதி 19.1.அ. பயன்படுத்தப்படக் கூடாது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்கவே அயல்நாட்டு நட்புணர்விற்கு எதிராகப் பேசுவதைக் குற்றமாக அரசு கருதும் நிலைப்பாடு வருகிறது. எனினும் நாம் ஒன்றைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். இறையாண்மை என்பது அதிகாரம் உறைதலைக் குறிப்பதால் இந்த அதிகாரமானது நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக மாறும்பொழுது அதைத்தட்டிக் கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. பலராலும் பலவகையாக விளக்கப்படும் இறையாண்மை என்பதன் அடிப்படையில் குற்றம் சுமத்துவது நல்லரசிற்கு ஏற்றதல்ல. இந்தியாவுடன் நட்பு பாராட்டும் சிங்கள அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசுவதைக் குற்றம் எனக் கருதினால் இறையாண்மை இலக்கணத்தின்படி, முப்படைகளும் பொருள்களும் அமைச்சும், நட்பும் அரணும் உடைய தமிழ்ஈழ இறையாண்மைக்கு எதிராக இந்திய அரசு நடந்து கொள்வதும் தவறாகிறது.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு இதழ்
01.01.2011
மீள் பதிவு
(வெருளி நோய்கள் 186 -190 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 191 -195
191. அம்மம்மா வெருளி – Waizuphobia
தாய்வழி பாட்டி/அம்மம்மா தொடர்பான அளவு கடந்த பேரச்சம் அம்மம்மா வெருளி
00
192. அம்மைத்தடுப்பூசி வெருளி- Vaccinophobia
அம்மைத் தடுப்பூசி தொடர்பான பேரச்சம் அம்மைத்தடுப்பூசி வெருளி
தடுப்பூசி போடல், அம்மை குத்தல், அம்மை குத்துதல், அம்மைத்தடுப்பூசி குத்துதல், அம்மைப்பால் குத்துதல் எனப் பலவகையிலும் அம்மைநோய்த் தடுப்பிற்கான ஊசி குத்துதல் குறிக்கப் பெறுகிறது. ஊசி குத்தினால் வலிக்கும் என அஞ்சுவோர் உள்ளனர். இதுபோல் தடுப்பூசி போட்டுக் கொண்டால் காய்ச்சல் வரும் என அஞ்சுவோரும் உள்ளனர்.
சிறுவர்களிடம் மட்டுமல்லாமல், பெரியவர்களிடமும் அம்மைத் தடுப்பூசி வெருளி உள்ளது.
00
193. அயர்ச்சி வெருளி- Copophobia/Kopophobia
அயர்ச்சியின் பொழுது ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அயர்ச்சி வெருளி.
அயர்ச்சி, களைப்பு அல்லது சோர்வு ஏற்பட்டால் நோய் ஏற்படும், உடலுக்கு முடியாமல் போகும், படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் போய்விடும், இவற்றால் மேற்கொண்டு வேலைபார்க்க முடியாமல் துன்பப்பட நேரிடும் என்று கற்பனைகளை வளர்த்துக் கொண்டு பேரச்சம் கொள்வர்.
களைப்பால் வேலையைக் குறித்த காலத்தில் முடிக்க முடியாது, குறிப்பிட்ட நேரத்திற்குள் படிக்க முடியாது குறித்த நேரத்தில் முடிக்க முடியாமையால் வரவேண்டிய பணமோ வெற்றியோ வராது போய்விடும் களைப்பால் உடல் நலக் கேடு ஏற்படும் மருத்துவச் செலவு ஏற்படும் என்று களைப்பு தொடர்பாகப் பேரச்சம் கொள்வர்.
kopo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அயர்ச்சி/சோர்வு/ களைப்பு. இக் களைப்பு உடலளவிலும் இருக்கலாம், மன அளவிலும் இருக்கலாம்.
00
194. அயலவர் வெருளி – Peregrinophobia
அறிமுகமில்லா அயலவர்களைப்பற்றிய காரணமற்ற பேரச்சம் அயலவர் வெருளி.
அயலவர் வெருளி(Peregrinophobia) என்பது முற்றிலும் புதியவர்களைப் பற்றிய வெருளி. அயல்நாட்டினராக இல்லாமல் உள்நாட்டினராக இருந்தாலும் புதியவராக இருந்தால் பேரச்சம் கொள்வது.
00
195. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia
அயலாரைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அயலார் வெருளி
அயல்(27), அயலிலாட்டி(3), அயலிற்பெண்டிர்(1), அயலார்(2), அயலோர்(3), அயல(9), அயலது(25) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களி்ல் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்க்காலத்தில் அயல் நாட்டார், அயல்வீரர்கள் வரும்பொழுது நாடு தோல்வியைத் தழுவினால் அயலவர் மீது அச்சம் கொண்டுள்ளனர்.
அயல் நாட்டினர், அயல் மொழியினர், அயல் இனத்தவர், அயல் ஊரினர், உறவும் நட்புமாய் அமையாத அயலார் என அயலார்கள் மீது சிலர் தேவையற்ற பேரச்சம் கொள்வர். இந்தியாவின் வடக்கே அசாம் முதலான மாநிலங்களில் அயலார் வெருளி ஏற்பட்டுப் பெருஞ்சிக்கல்கள் எழுந்துள்ளன என நாமறிவோம்.
அயலவர் வெருளி(Peregrinophobia) காண்க.
xenos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அயல்நாட்டினர்/முன்பின் அறியாதவர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5