குமரி தமிழை பற்றி பேசுபவர்கள் தொடர்ந்து மலையாளம் கலந்த தமிழ் என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். அப்படி சொல்ல கேட்கும் போது நிச்சயமாக எனக்கு கடுப்பாகும்.....
சமஸ்கிருதம் ஏறாத தமிழ் தான் குமரித்தமிழ் மலையாளம் என்பது சமஸ்கிறுதம் ஏறிய தமிழ். வடகேரள மலையாளத்தை விட தென் கேரள மலையாளத்தில் சமஸ்கிருதம் ஏறி நிற்பதற்கு காரணம் நம்பூதிரிகளும் சூத்திரர்களும்......
ஈழவர்கள், புலையர்கள் அதிகமாக வசிக்கும் திருவாங்கூர் பகுதிகளில் பாருங்கள் அவர்கள் பேசும் மொழியில் சமஸ்கிருத கலப்பு பெரிதாக இருக்காது. மணி சேட்டணின் பாடல் வரிகளை ஒரு தாளில் எழுதி வாசித்து பாருங்கள் நான் சொல்ல வருவது புரியும்......
குமரி மாவட்டத்தில் தமிழ் வழக்கில் இருந்ததற்கு ஈராயிரமாண்டுகள் வரலாறு இருக்கிறது. திருவாங்கூர் காலம் வரை தமிழ் கல்வெட்டுகள் உண்டு.மலையாளத்தின் முதல் புத்தகம் தமிழில் தான் அச்சிடப்பட்டது.சேர நாட்டிலிருந்து தமிழுக்கு சிறந்த இலக்கியங்கள் தரப்பட்டிருக்கினறன.......
மலையாளம் மொழிக்கு ஒரு அழகியல் உண்டு அதற்கு காரணம் தமிழின் பழமையான சிறந்த சொற்களை இன்றும் வழக்கத்தில் வைத்திருப்பதால்தானேயன்றி அதிலிருக்கும் சமஸ்கிருத சொற்களாலல்ல. மலையாளம் சமஸ்கிருதமேறாமல் இயங்க தொடங்கினால் அது தமிழ் தான்.......
குமரித்தமிழை நாம் பேசும்போதோ எழுதும்போதா புரியாதது போல் தமிழில் எழுதுங்கள் தமிழ் பேசமாட்டிங்களா என்பவர்களை செவிள்ல்லயே அறையவேண்டும் என்று தோன்றும் ஆனால் என்ன செய்ய அவர்கள் சந்தோசத்தை நாம் ஏன் கெடுக்க வேண்டும் என்று சிரித்து கடந்துவிடுவேன்......
குமரி மாவட்ட மொழியை நடையை எழுத்துகளில் தற்போது சரியாக கையாள்பவர்கள் பிரபு தர்மராஜும் ( கிழக்கு) விக்டர் பிரின்சு ( மேற்கு) இதற்கு முன்பும் பல எழுத்தாளர்கள் கையாண்டிருக்கிறார்கள். பிரபு அண்ணனின் புத்தகத்திற்கு இருக்கும் வரவேற்பும் விற்பனையும் அனைவரும் அறிந்ததே. விக்டர் எழுதிய கதைகளும் பல இடங்களில் விவாதிக்கபடுகிறது அவரது முதல் தொகுப்பில் ஒரு கதையாவது சினிமாவாக வரும் அவரது எழுத்துகள் முழுக்க முழுக்க விளவங்கோட்டு நடை இவர்கள் இருவரின் கதையோ அல்லது குமரி நடையில் எழுதப்படும் எழுதப்பட்ட புத்தகங்கள் குமரி தாண்டி விற்கபடுவதில்லையா என்ன......?
குமரி தமிழை சினிமாவில் எடுத்தால் சப்டைட்டில் போடுவீர்களா என்று நக்கலடிப்பவர்கள் உண்டு. கோவைத்தமிழுக்கோ சென்னைத்தமிழுக்கோ மதுரைத்தமிழுக்கோ இங்கு சப்டைட்டில் போடாதபோது எதற்கு குமரித்தமிழுக்கு சப்டைட்டில் என்று கேட்க தோணும். இப்படி நக்கலாக கேட்பவர்கள்தான் மலையாள திரைப்படங்களை சிலோகித்து கொண்டிருப்பார்கள். கொச்சினுக்கும் திருச்சூருக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய நகரத்தில் பேசப்படும் வழக்கில் வந்த அங்கமாலி டயரீஸ் படத்தை கொண்டாடி கொண்டிருப்பார்கள். மலையாள சினிமாவில் திருச்சூர், திருவனந்தபுரம், மலப்புறம், காசர்கோடு, இடுக்கி, குட்டநாடு, பாலக்காடு என அந்த அந்த இடங்களில் எடுக்கப்படும் படங்களின் அங்கே பேசப்படும் மொழி வழக்கைத்தான் சரியாக பயன்படுத்துகிறார்கள். காசர்கோடுகாரன் பேசும் மலையாளம் அனந்தபுரத்து காரனுக்கு புரிவதில் சில தடுமாற்றங்கள் இருக்கும் அங்கு எவனும் அவர்களை நீ ஏன் துளுவில் பேசுகிறாய் என்றோ கன்னடத்தில் பேசுகிறாய் என்று சிரிப்பு வராத நகைச்சுவைகளை செய்வதில்லை.......
ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் குமரித்தமிழை நகைப்பதில் சிலருக்கு ஒரு இன்பம். அது அனைவருக்கும் இருப்பதுதான் ஆனால் ல, ள, ழ வேறுபாடு உச்சரிக்க அறியாத தட்டை நாக்கர்கள் எங்களை நொட்டை சொல்வதுதான் பரிதாபம். நீங்கள் என்னத்தான் நக்கலடித்தாலும் நாங்கள் இப்படித்தான் பேசப்போகிறோம் எங்கள் மொழி நடையை எழுத்திலும் கொண்டு வந்துகொண்டிருக்கிறோம் விரைவில் முழு நீள சினிமாவிலும் கொண்டு வருவோம் அதை நீங்கள் ரசிக்கத்தான் போகிறீர்கள்.........
ஒரே ஒரு வேண்டுகோள் தான் தமிழ்மொழி அறிஞர்களே....
நாங்கள் பேசும் வழக்கை எப்படி வேண்டுமென்றால் நக்கலடியுங்கள் பிரச்சனையில்லை ஆனால் மலையாளம் கலந்த தமிழ் என்று மட்டும் சொல்லாதீர்கள் காரணம் மலையாளம் சமஸ்கிருதம் கலந்த தமிழ் எங்கள் தமிழில் சமஸ்கிருத வார்த்தைகளில்லை.................