மறக்கமுடியுமா? – ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) :- எழில்.இளங்கோவன் +++ தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்

43 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 5, 2017, 6:31:16 PM8/5/17
to

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு)

இன்னா செய்தாரை இனிமைச் செயல்களால்
 ஒறுத்தல் நன்றென உரைத்த பொருளுரை
 படித்து மேடையில் பாங்காய்ப் பொழிந்தும்
 தமிழ்நலம் நாடிய தகைசால் உரையைப்
 பொறுக்கலா ற்றாது வெறுக்கும் இயல்பால்
 அரசின் சார்பில் அளிக்க இருந்த
 பரிசைத் தடுத்த பரிசை  என்னென
 நற்றமிழ்நாடே நவில்க! நற்றமிழ்த்
 தொண்டு புரிதல் துயர்க்கே  கூட்டும்
 தமிழ்ப் பகைத்தோர் தள்ளினர் சிறையில்
 தமிழின் பேரால் தகுநிலை அடைந்தோர்
 தமிழ்ப் புகழ்பாடினும் தமிழை அடக்கி
 வாழவே முனையும் வன்கண்மையால்
 இழக்கச் செய்தனர் எய்துறு பரிசை.
 நன்றே! நன்றே! நற்றமிழ்த் தொண்டு!
 யாரே பகைவர்! யாவரே நண்பர்!
 எவர்வரின் இன்றமிழ் செழிக்கும் என்று
 உடல்பொருள் உயிர் இழப்பையும் எள்ளி
 தொண்டு செய்தோ மோதுயர் நலிந்திட
 அவரே மாறுறின் அன்னைத் தமிழ்தான்
 வாழ்தல் எங்ஙனம்? வையக மதனில்
 ஆகுல நீரரே அடைவர் பதவிகள்!
உண்மையாளர்கள் ஒடுங்கி மாள்வரே!

பிறருக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய உதவி மறுக்கப்பட்டாலோ காலத்தாழ்ச்சி செய்தாலோ சண்டையிட்டு வாங்கிக் கொடுக்கும் பேராசிரியர் தமக்கான உதவி என்றதும் வேறு முயற்சியில் ஈடுபடவில்லை; முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவில்லை. தமிழ்ப்பகைவர்கள் உயர் பதவிகள் பெறுவது விரைவில் பெருகி இன்றைக்கு அவர்கள் மட்டுமே பதவிகளும் பரிசுகளும் பெறும் தீங்கான நிலை உள்ளது. தமிழ் நாட்டில் தமிழர் தலைமையும் முதன்மையும் பெறுவது என்றோ?
 இச்சூழலில் ஐதராபாத்திலுள்ள உசுமானியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்று அரசு தெரிவித்தது. “யாருமில்லை என்று ஏன் சொல்கிறிர்கள்? நான் செல்ல ஆயத்தமாக உள்ளேன்” எனப் பேராசிரியர் அப்பணியிடத்திற்கான இசைவைத் தெரிவித்தார். தமிழ்நலப் போராளியின் உழைப்பால் பயன்பெற்றவர்கள், அவரது வழிகாட்டுதல் தேவை எனக் கருதி இங்கேயே வைத்துக் கொள்ளாமல் அப்பணியில் அமர்த்த வகை செய்தனர். இது குறித்த பேராசிரியரின் வேதனை வரிகள் பின்வருமாறு:

 அமைச்சகம் அன்பாய் என்னை அழைத்து,
 “நம்முடை அரசில் நற்பணி யாற்றிப்
 பல்புகழ் பெற்றிடும் பாங்குகள் இலையோ?
 இன்தமி ழரசின் இனிய துணையாய்
 இருத்த லின்றி ஏகுதல் ஏனோ?
 விருப்பம் தவிர்க; மேவுக இங்கென”
 அடுத்து மொழிந்து தடுத்து விடாமல்
கொடுத்தது இசைவு உவகை கொண்டே!
 மாணவர்களும் தமிழன்பர்களும் தமிழ்ப்பகைவர்கள் உங்களைச் சிறையில் தள்ளினர்; தமிழ்ப்பற்றாளர்கள் நாடு கடத்துகின்றனர். நீங்கள் செல்ல வேண்டா” என அன்புடன் வேண்டினர். பேராசிரியர் அவர்களை எல்லாம், “அயலகம் செல்வது  தமிழ்ப்பணிக்காகத்தான்” என அமைதிப்படுத்தி விட்டு உசுமானியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக (சூன்20, 1968 இல்) பணிப்பொறுப்பை ஏற்றார்.
 ஆந்திர மாநிலத்திலும் பேராசிரியரின் தமிழ்ப்பணி தொடர்ந்தது. தமிழ் மக்கள் மிகவும் எளிய நிலையில் இருப்பதை அறிந்து அவர்களுக்கேற்ப கல்வி நேரத்தை மாற்றியமைத்துத் தமிழ் படிக்கச் செய்தார்.
 இடையில் பேரறிஞர் அண்ணாவின் மறைவு (பிப்.2,1969) அவரைப் பெரிதும் பாதித்தது. இருவருக்குமே ஒருவர்மீது மற்றொருவருக்குப் பெருமதிப்பும் பேரன்பும் இருந்தன. பேரறிஞர் அண்ணா அவர்களின் வெளிநாட்டுப்பயணங்களை,

 ஆயிரக் கணக்கில் அமெரிக்கா சென்றுள்ளனர்
 தமிழராய்ச் சென்று தமிழ்ப்புகழ் அறிந்திட
 ஒல்காப் புகழுடைத் தொல்காப்பியத்தையும்
 உலகப் பொதுமறை உயர்திருக்குறளையும்
 நெஞ்சையள்ளும் நீள் புகழ்ச் சிலம்பையும்
 தம்முடன் கொண்டே தமிழ்உரு வெடுத்துச்

சென்றதாகப் பாராட்டினார். தொல்காப்பியம் எனக் குறிப்பிடுவது பேராசிரியர் இலக்குவனாரின் ஆங்கில மொழிபெயர்ப்பையே ஆகும். வெளிநாடுகளுக்குச் செல்லும்பொழுது அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு இந்நூலை அளித்தார். குறிப்பாக ஏல் பல்கலைக்கழகத்தில் அளித்து அங்குள்ள மாணாக்கர்களுக்கு இதன் அடிப்படையில் வகுப்பும் எடுத்தார். போப் ஆண்டவரைச் சந்திக்கும் பொழுதும் தமிழ் நாகரிகத்தின் பெட்டகமாகத்  திகழும் இந்நூலை அளிப்பதாக எழுதி அளித்தார். தம் மீதும் தமிழின் மீதும் பற்று கொண்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவு குறித்துக் கையறுநிலைப்பாடலும் பாடினார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்

மறக்கமுடியுமா? – ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) :- எழில்.இளங்கோவன்

மறக்கமுடியுமா?

  ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை)

கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடுதான் இவரின் சொந்த ஊர்.
தொழில்  தொடர்பாக, நாஞ்சில் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து, கேரளம் மாநிலம் ஆலப்புழையில் குடியேறியவர்கள் பெருமாள்பிள்ளை, மாடத்தியம்மாள்  இணையர்.
இவர்களின் மகனாக ஆலப்புழையில் பங்குனி 23, 1886 / 1855ஆம் ஆண்டு ஏப்பிரல் 4ஆம் நாள் பிறந்தவர் ‘மனோன்மணீயம்’ பெ.சுந்தரம்(பிள்ளை).
தமிழ் மொழி இயல், இசை, கூத்து என மூன்று பிரிவுகளைக் கொண்டது. கூத்து என்பது நாடக வடிவத்தின் பெயர்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
 என்பது தொல்காப்பியம்.
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்
 என்கிறது பட்டினப்பாலை.
 பார்த்து மகிழ்வதற்கு மட்டுமன்று நாடகம். படித்து இன்புறவும் முடியும் என்பதைத் தன் மனோன்மணீயம் நாடகக் காப்பியத்தால் நிறுவிக் காட்டினார் சுந்தரம்(பிள்ளை).
இலிண்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The secret Way) என்ற நூலின் மூலக் கருவைத் தழுவி எழுதப்பெற்ற மனோன்மணீயம் வெளிவந்த ஆண்டு 1891.
இந்நூலுள் ‘சுந்தரமுனிவர்’ என்ற ஒரு கதை மாந்தரை உருவாக்கி உலவ விட்டிருப்பார் அவர். பேரசிரியர் சுந்தரம்(பிள்ளை)யின் மதிப்பு வாய்ந்த ஆசான்களில் ஒருவரான கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளை மனத்தில் இருத்தி, உருவாக்கப் பட்ட படைப்பு.
 கோடக நல்லூர் சுந்தரசுவாமி, கைக்கோட்டு ஐயாறு சாமி, நாராயணகுரு, சட்டாம்பி சுவாமி போன்ற சாமியர்கள் சிலர் இவரின் நண்பர்கள் என்பதனால், இவர் சைவத்தின் மீது நாட்டம் கொண்டும், அதற்கான ஆய்வுகளின் மீதும் நாட்டம் கொண்டும் இருந்தார் என்பதில் வியப்பேதும் இல்லை.
  பத்துப்பாட்டு நூல் தொகையில் புலவர் நக்கீரர் எழுதிய ‘திருமுருகாற்றுப்படை’, ‘நெடுநல்வாடை’, மாங்குடி மருதனார் எழுதிய ‘மதுரைக்காஞ்சி’ ஆகிய மூன்று நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சுந்தரம்(பிள்ளை).
 அவை  The Ten Tamil Ideas  என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
  பத்துப்பாட்டு குறித்த மிகச் சிறந்த ஆய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிடச் செய்தார்.
 தன் இளம் பருவத்தில், தமிழ்ப் புலவரான இவரின் தந்தையார் பெருமாள்(பிள்ளையிடம்) திருக்குறள், மூதுரை, பழமொழி, சிறுபஞ்சமூலம் போன்ற அறநூல்களைப் பழுதில்லாமல் படித்துள்ளார்.
  பின்னர்த் தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் ஆசிரியர் நாகப்பட்டினம் நாராயணசாமி(பிள்ளை)யிடம் முறைப்படி தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார்.
தேவார திருவாசகத்தையும் இளமையிலேயே தெளிவுறப் படித்திருக்கிறார்.
1877ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.
1877ஆம் ஆண்டு ‘திருநெல்வேலி ஆங்கில & தமிழ் கல்விச்சாலை’யின் தலைமை ஆசிரியரானார்.
இந்தக் கல்விச்சாலை பின் வந்த காலங்களில் ‘இந்து கல்லூரி’ஆக மாறக் காரணமாக இருந்தவர் சுந்தரம்(பிள்ளை).
அவர் முதுகலைப் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து ‘திருவனந்தபுரம் பாலராம வர்மர் மகாராசா கல்லூரி’யில் தத்துவத்துறை ஆசிரியராகப் பணியமர்த்தப் பெற்றார்.
இக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய இவர், திருவனந்தபுரம் அரண்மனையில், அரண்மனைத்துறைத் தனி ஆணையராக மன்னரால் அமர்த்தப் பெற்றார்.
1855ஆம் ஆண்டில் மீண்டும் மன்னர் கல்லூரியில் தத்துவத்துறைத் தலைமைப்  பேராசிரியர் பெறுப்பேற்றார்.
இந்திய & மேற்குலகத் தத்துவம், வரலாறு, தொல்பொருளியல், கல்வெட்டு ஆய்வு, இலக்கண & இலக்கியம், நவீன அறிவியல் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர் சுந்தரனார்.
‘திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி’ என்ற இவரின் ஆய்வு நூல் 1894ஆம் ஆண்டு வெளியானது.
நற்றொகை விளக்கம், திருவிதாங்கூர் பண்டைய மன்னர்களின் கால ஆராய்ச்சி போன்ற இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைச் சுந்தரனார் எழுதியிருக்கிறார்.
இவரின் மனோன்மணீயத்தின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டவர் பேராசிரியர் வையாபுரி(ப் பிள்ளை). மூன்றாம் பதிப்பு சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்தால் வெளியிடப் பெற்றது. தொடர்ந்து 25 திற்கும் மேற்பட்ட பதிப்புகளில் இந்நூல் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது
அடியேன் கடையேன் அறியாச் சிறியோன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனும் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைவிந் நாடகம்
வெள்ளிய தெளினும் விளங்குறின் களைக்காற்
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பெ குறியெனக் குறித்தே
 மனோன்மணீயம் பாயிரத்தில் வரும் இந்த வரிகள் சுந்தரனாரின் தமிழ் வேட்கையைத் தெள்ளெனக் காட்டுகிறது.
“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழியா நின் சீரிளமைத் திறம்வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே” என்று தமிழின் சீரிளமையை விதந்து போற்றும் ஆசிரியர், ஆரியம் உலக வழக்கு அழிந்து ஒழிந்தது என்பதையும் மறக்காமல் சுட்டிக்காட்டியிருப்பது, இன்றைய சூழலில் முதன்மை பெறுகிறது.
இன்னும் ஒருபடி மேலே சென்று 16.12.1896 ஆம் நாளில் சுந்தரனார் அவரின் நண்பர்  சே.எம்.நல்லுசாமி பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் இப்படி எழுதியிருக்கிறார் :
“Most of what is ignorantly called Aryan Philosophy, Aryan civilization is literally Dravidianor Tamilian at the bottom”.
(பொதுவாக ஆரியத் தத்துவம், ஆரிய நாகரிகம் என்றெல்லாம் சொல்லப்படுவனவற்றில் அடித்தளத்தில் திராவிட அல்லது தமிழ்த் தத்துவமே உள்ளது என்பது பேருண்மை.)
‘மனோன்மணீயம்’ ஆசிரியர், பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) அவர்கள் ‘இராவ்பகதூர்’ பட்டம் பெற்றவர்.
இவரின் மகன் நடராச(பிள்ளை) பின்னாளில் கேரளவின் அமைச்சராக இருந்திருக்கிறார்.
சித்திரை 15, 1928 / 1897ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 26ஆம் நாள் பேராசிரியர் சுந்தரனார் அவர்கள், தம் 42ஆம் அகவையில் இயற்கை  எய்தினார்.
எழில்.இளங்கோவன்


சூலை 29, 2017

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages