ஃஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 21 April 2026
குறட் கடலிற் சில துளிகள் 44
புகழைத் தருவது நற்றுணையே!
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௭ – 457)
மன்னுயிர்க்கு ஆக்கம் தருவது நல்ல மனநிலையே! எல்லா வகையான புகழையும் தருவது நல்லினத்தின் துணையே!
பதவுரை:
மனநலம்=மனத் தூய்மை, மனத்தது நன்மை; மன்னுயிர்க்கு= நிலைபெற்ற உயிர்க்கு; ஆக்கம்=பெருக்கம், செல்வம், சொத்து, உயர்வு, ஆற்றல்; இனம்=குலம், சுற்றம், துணையாகச் சேரும் கூட்டம், சேர்க்கை; நலம்=சிறப்பு; நன்மை; எல்லா-அனைத்து; புகழும்-புகழையும்; தரும்=கொடுக்கும்.
“நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்” என்கிறார் பரிமேலழகர்.
அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர், “மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்” என்கிறார்.
அறிஞர் கா சுப்பிரமணியம், “மக்கள் உள்ளத்தின் சிறப்பு அவர்களுக்கு மேன்மேல் உயர்ச்சியைத் தரும். அவர்கள் சேரும் இனத்தினுடைய சிறப்பு அவர்களுக்கு எல்லாப் புகழையுந் தரும்” என்கிறார்.
“மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்” என்கிறார் உரையாசிரியர் மணக்குடவர்.
உள்ளத் தூய்மையைப் பேணிக்கொண்டால் அதுவே நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்; நல்லோர்களுடனான சேர்க்கையால் புகழ் எல்லாம் வந்தடையும்.
இனச்சிறப்பினால் நற்பெயர் கிடைக்கிறது. இதன்வழி எல்லா வகைப் புகழும் கிடைக்கும். சிறுமைக் குணம் உடையவர்கள் சேர்க்கையை நீக்கி நற்பண்புடையவர்களுடன் பழகினால் புகழ் தானே வந்தடையும்.
எல்லாப் புகழும் எனக் கூறுவதன் காரணம், எல்லா வகையான புகழும் கிடைக்கும் என்பதே. அஃதாவது நாம் ஆற்றும் நற்செயல்களால் கிடைக்கும் புகழ், நாம் வகிக்கும் பதவியால் வரும் புகழ், நமது அரசியல் நிலைப்பாட்டால் வரும் புகழ், நம் கல்வியால் வரும் புகழ், கொடையால் கிடைக்கும் புகழ்,ஈகையால் எய்தும் புகழ் எனப் பலவைகயிலும் நமக்கு வரக்கூடிய எல்லா வகைப் புகழையும் நாம் பெறலாம் என்பதை வலியுறுத்தவே
இனநலம் பேணும் போராளிகள் தங்கள் மக்களால் போற்றப்படுகிறார்கள். மனநலமும் இனநலமும் நம்மிடையே இல்லாத காரணத்தால்தான் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் உயிரிழக்கவும் உறுப்புகளை இழக்கவும் குடும்பத்தினரை இழக்கவும் உடைமைகளை இழக்கவும் நிலத்தைப் பறிகொடுக்கவும் காரணமாக இருந்து விட்டோம்.
எனவே, நமக்கு நல்லன விளையவேண்டு மென்றால், ஆக்கம் கிடைக்க வேண்டுமென்றால், செல்வம் சேர வேண்டுமென்றால், நல்ல மனத்துடன் திகழ வேண்டும். நன்மனம் இல்லையேல் எதிரான விளைவுகள்தான் நம்மைச் சேரும். அஃதாவது, செல்வம் சேராது, ஆக்கம் ஒட்டாது, நல்லன நிகழா. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு நல்ல மனம் கொண்டவர்களுடன்தான் நட்பு வைத்திருக்க வேண்டும், உறவு கொள்ள வேண்டும், சேர்க்கை இருக்க வேண்டும். அவ்வாறு நற்சேர்க்கை இருந்தால்தான் நன்மை எய்தலாம், செல்வத்தில் செழிக்கலாம், உயர்வு அடையலாம், புகழுடன் வாழலாம்.
எனவே, ஆக்கத்தையும் புகழையும் எய்த
மனநலமும் இனநலமும் கொள்வோம்
– இலக்குவனார்திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1291 -1295 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1296 -1300
தீயிலை அல்லது ஈவில் இலீபி(Evilleafy) என்னும் அசைவூட்டப்படப் பாத்திரத்தின் மீதான அளவுகடந்த பேரச்சம் தீயிலை வெருளி.
கற்பனைத் தீவிற்கான சண்டை(BFDI- Battle for Dream Island), மறுபடியும் கற்பைனத் தீவிற்கான சண்டை (BDFIA-Battle for Dream Island Again) ஆகிய மெய்ம்மைக் காட்சியில் (reality show)இடம் பெறும் கற்பனை அசைவூட்டப் பாத்திரமே தீயிலையாள் / தீயிலை.
00
தீயச் சூழல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீயச் சூழல் வெருளி
பொதுவாக மக்கள் தீய சூழல் அல்லது தீங்கிழைக்கும் தீய செயல்களில் இருந்து விலகி இருக்கவே விரும்புவர். ஆனால், இது குறித்து அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கொள்வோரே தீயச் சூழல் வெருளிக்கு ஆளாகின்றனர்.
kakos என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கெட்ட அல்லது தீய எனப் பொருள்.
00
தீயணைக்கும் நெடுநீர்க் குழாய்(fire hydrant) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீயணை குழாய் வெருளி.
உயரமான கட்டடத்தில் பயன்படுத்த நெடுநீர்க் குழாய் உதவியானது. ஆனால், அதைக் கையாளும் இடர்ப்பாட்டால் அதன்மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
தீ அணைப்பு வண்டி(fire engine) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீயணை வண்டி வெருளி.
தீ அணைப்பு வண்டியின் மணியொலியைக் கேட்டாலே அஞ்சி வெறுப்போர் உள்ளனர். வேறு எங்கும் தீப்பற்றினாலும் தங்கள் பகுதிக்கும், வீட்டிற்கும் தீ பரவும் என்று காரணமற்ற பேரச்சம் கொள்கின்றனர் சிலர்.
00
தீயணைப்பு, தீத்தடுப்புக் காவலர் மீதான அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் தீக் காவலர் வெருளி.
Pyros, vestis ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு முறையே, தீயுடன் சண்டையிடுநர்(தீ அணைப்போர்), உடை எனப் பொருள்கள்.
பொதுவாகச் சீருடை அணிந்தவர்கள் மீது பேரச்சம் கொள்பவர்களும் தீ யணைப்பு வீரர்கள்மீதும் அச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5