தமிழே விழி! தமிழா விழி !!
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை
இணைய அரங்கு உரை – 9
நாள்: ஆனித் திங்கள் 27ஆம் நாள் (11 – 7- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)
நேரம்: காலை 10-00 மணி .
இணையத்தில் இணைய:
Link :https://meet.google.com/zoz-tiqj-tzw
நெறியாளர் : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள்.
தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை.
வரவேற்புரை: கல்லூரி மாணவர் திருமிகு ரோசன் அவர்கள்.
செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி அவர்கள்.
தொடக்க உரை: முனைவர் சிவா அவர்கள்.
(உதவிப் பேராசிரியர் தில்லிப் பல்கலைக் கழகம்;
துணைத் தலைவர்: தில்லித் தமிழ்க் காப்புக் கழகம்)
தலைமை உரை: தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்.
அறிமுக உரை: மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் அவர்கள்.
சிறப்புரை: சித்த மருத்துவர் புகழ் முருகன் அவர்கள்.
தலைப்பு: “சித்த மருத்துவத்தின் சிறப்புகள்”
வினாத் தொடுத்தல்: அரங்கில் பங்கேற்போர்.
(யார் வேண்டுமானாலும் மருத்துவம் தொடர்பாக எவ்வித வினாவையும் கேட்கலாம்)
நன்றியுரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சய் அவர்கள்.
ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள்.
அனைவரும் வருக! தமிழமுதம் பருக!!
முனைவர் ஆனந்தி வாசுதேவன் ம. முனைவர் புத்தேரி தானப்பன்
செயலாளர். தலைவர்
தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்டுக!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்குத் தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்ட வேண்டுகிறோம்.
தமிழ்நாட்டரசு தமிழ்நாட்டுமக்களின் நலன்களைக் காப்பதாக, அம் மக்களுக்குரிய மொழியின் பயன்பாட்டைக் காப்பதாக இருக்க வேண்டும். அப்படியென்றால் அதனைத் தாங்கும் கட்சிகளும் துணைநிற்கும் கட்சிகளும் தமிழக நலன்களைப் பேணுவதாகத்தானே இருக்க வேண்டும். கட்சிக்குப் பெயர் சூட்டும் பொழுது திராவிடம் என்று சிதைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் எனப்பெயர் சூட்டிய அதன் தலைவர் ச.சோ.விசய், அரசையும் தமிழ் சார்ந்துதானே நடத்திச் செல்வார். எனவேதான் தமிழக நலக் கூட்டணி எனப்பெயர் வைக்க வேண்டுகிறோம்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (௬௱௪௰௫ - 645) என்னும் திருக்குறள் வழித் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறிதொரு சொல் அதனை வெல்ல முடியாது என்னும் சிறப்பு உடைய சொல்லையே சொல்ல வேண்டும் என்கிறார். பெயரும் அவ்வாறு பிறிதொரு பெயரால் வெல்ல முடியாத தன்மை உடையதாக இருக்க வேண்டும். மக்கள், சமூக நீதி, வெற்றி போன்ற சொல்லைப் பயன்படுத்துவதைவிடத் தமிழக நலம் என்பதைப் பயன்படுத்தினால் அதில் எல்லாமும் அடங்கி விடும். எனவே, ஆளுங்கட்சிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு நலன்மீது பற்று இருப்பதை வெளிப்படுத்தும் அளவிற்குப் பெயர் இருக்க வேண்டும். எனவே, அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் இலக்கை வரையறுத்துச் செல்லும் வகையிலும் கூட்டணியின் பெயர் இருப்பதே மக்களுக்கு ஏற்புடைத்தாகும்.
வேறு எப்பெயரைச் சூட்டினாலும் குறிப்பிட்ட அதன் மீது மட்டுமே கருத்து செலுத்தும் கூட்டணி என்றாகி விடும். அவ்வாறில்லாமல் ஒட்டு மொத்த தமிழக நலன் மீதும் கவனம் செலுத்தும் கூட்டணி என்பதன் அடையாளமாகத் ‘தமிழக நலன்’ என்பதைக் கூட்டணியின் பெயராக வைப்பதே பொருத்தமாக இருக்கும்.
தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக - கல்வி மொழியாக - வழிபாட்டு மொழியாக - ஆராய்ச்சி மொழியாக - வழக்கு மன்ற மொழியாக - தொடர்பு மொழியாக - மக்கள் மொழியாகத் தமிழ் மட்டுமே திகழும் வகையில் தமிழ்நாட்டு அரசின் செயற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.
ஆதலால், தமிழ் மக்கள் மீது, தமிழ் மொழியின் மீது, தமிழ் இனத்தின் மீது, பல்வகை மொழி, இன மக்கள் வாழும் தமிழ்நாட்டின் நலன்கள் மீது அக்கறை இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்ட வேண்டுகிறோம்.
தோழமைக் கட்சிகள் இதனை ஏற்றுக்கொண்டு ஆளுங் கட்சிக்குத் தெரிவிக்க வேண்டும். ஆளுங்கட்சியும் இதனை ஏற்று அமைச்சர் பெருமக்களிடமும் அவர்கள் முதல்வரிடமும் தெரிவிக்க வேண்டும். செயற்பாடுகள் தமிழக நலன் சார்ந்தே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் ச.சோ.விசய் அவர்களும் இதனை ஏற்றுத் தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்ட வேண்டுகிறோம்.
கூட்டணியின் செயற்பாடுகளும் அரசின் செயற்பாடுகளும் எல்லா வகையிலும் தமிழக நலன் சார்ந்தே இருக்க வாழ்த்துகிறோம்.
தமிழே விழி! தமிழா விழி!
உழுவல் அன்பின் இலக்குவனார் திருவள்ளுவன்