‘ஆசீவகமும் அரசியலும்’ எனும் தலைப்பில் கோதை சோதிலட்சுமி எழுதிய கட்டுரையை 22.04.2021 அன்று தினமணி வெளியிட்டது. அதற்கு நான் ஒரு மறுப்பை எழுதி தினமணிக்கு விடுத்தேன். எதிர்பார்த்தபடியே தினமணி அதை வெளியிடவில்லை. அதனால், அக்கட்டுரையை முகநூலில் வெளியிடுகிறேன்.
-குணா-
தினமணியின் பித்தலாட்டம்
-குணா-
தோன்றல்-இருத்தல்-அழிதல் எனும் முந்நிலையே இயற்பாடு (Phenomenon) எனப்படும். விதை விதையாயிருக்கும்போது, அதில் செடி இல்லை; அந்த விதை செடியானபின் அதில் விதையில்லை. விதையாய் இருக்கும்போது, செடி ஒரு பொய்ம்மை; செடியான பிறகு விதையும் ஒரு பொய்ம்மை. இதுதான் ஒன்று மற்றொன்றாகும் இயற்கையின் இயங்கியல். இது போன்ற இயங்கியலில், பொய்யில் மெய்யும் இருக்கும்; மெய்யில் பொய்யும் இருக்கும். மெய் பொய்யாகவும், பொய் மெய்யாகவும் மாறும் இயற்கையின் இயற்பாடு இதுவாகும்.
‘உள்ளமை’க்கும் ‘இல்லாமை’(இன்மை)க்கும் இடையில் காரண-விளைவு (காரிய) உறவு இருந்தால் மட்டுமே இந்தக் கூற்று பொருந்தும். விதைதான் செடியாகும்; கல் எதுவும் செடியாகாது. இதுவே காரணமும் விளைவும் எனும் உறவு. இக்‘காரண-விளைவு’ உறவு இல்லையெனில், பொய் பொய்யாகவே ஒரு முற்றுண்மையாயிருக்கும்.
பொருள், குணம், கருமம் (வினை), பொது, சிறப்பு, ஒற்றுமை, இன்மை எனப் பொருள்திணை எழுவகைப்படும் என்கிறது சிறப்பியம் எனும் ‘வைசேடிக’ மெய்யியல். ஒரு குறிப்பிட்ட பொழுதில் ஒன்று இல்லாமையைக் குறிப்பதே ‘இன்மை’ எனப்படும். அகத்தியரருளிய தருக்கச் சூத்திரம் என்னும் நூல் ‘இன்மை’யை முன்னின்மை, பின்னின்மை, முற்றுமின்மை, ஒன்றிலொன்றின்மையென நான்காக வகைப்படுத்துகிறது.
களிமண்ணைக்கொண்டு பானையை வனையலாம். அந்தப் பானையைச் செய்வதற்குமுன் களிமண் மட்டுமே இருக்கும். அதாவது, அப்போது பானை இருக்காது. இதுதான் ‘முன்னின்மை’. பானையை வடித்த பிறகு களிமண் இருக்கிறது. அடித்து நொறுக்கிவிட்டாலும் பானை இருக்காது. இதுவே ‘பின்னின்மை’. நீரில் இருக்கும் பொதுத்தன்மை, மண்ணில் இல்லை; மண்ணில் இருக்கும் பொதுத்தன்மை நீரில் இல்லை. இதுவே ‘முற்றுமின்மை’. மாட்டைப் பார்த்தால் அதில் குதிரை இல்லை. மாட்டிற்குள் குதிரை இல்லாமையும், குதிரையில் மாடு இல்லாமையுமே ‘ஒன்றில் ஒன்றின்மை’.
வெறும் களிமண்ணைக் காட்டி இதுதான் ‘பானை’ என்றால் அது பொய்; களிமண்ணைக்கொண்டு ஒரு பானையை வனைந்தபின், ‘பானை’ என்பது மெய். களிமண் என்பது அப்போது இல்லாத ஒன்றை குறிக்கும் பொய். இதுவே மெய் பொய்யாகும் இயங்கியல்.
தண்ணீரில் மண்ணின் தன்மை இல்லை. இது மெய். கண்ணுக்குத் தெரியும் தண்ணீரில் மண்ணும் உள்ளது என்றால், அது பொய். இங்கு மெய், பொய்யாகாது; பொய்யும் மெய்யாகாது. ஏனெனில், இஃது உண்மைக்கு புறம்பானது, அதாவது, முழுப்பொய்; அண்டப்புளுகு. ஏனெனில், தண்ணீருக்கும் மண்ணுக்கும் இடையில் காரண-விளைவு உறவு இல்லை.
மாட்டிற்குள் குதிரை இல்லை என்பதும், குதிரையில் மாடு இல்லை என்பதும்கூட அதே போன்றது. இதைத்தான் ‘ஒன்றிலொன்றின்மை’ என்றனர்.
‘ஆசீவகமும் அரசியலும்’ (22.04.2021) எனும் தலைப்பிலான கோதை சோதிலட்சுமியின் கட்டுரையின் வாயிலாக ஆசீவகம் கடவுள்மறுப்பு மெய்யியல் என்று தினமணி சொல்வது மெய்தான். ஆனால், கடவுள்மறுப்பு என்பது தமிழரின் மெய்யியல் மரபுக்கு எதிரானது என்று அது சொல்வதுதான் பொய்; முற்றும் பொய்.
எண்ணியம் (சாங்கியம்), உலகாய்தம், ஓகம் (யோகம்), ஆசீவகம், சிறப்பியம் (வைசேடிகம்), ஏரணம் (ஞாயம்) ஆகியனவெல் லாம் தமிழரின் அறிவு மரபில் வந்த மெய்யியல் பள்ளிகளாகும். தமிழருக்குரிய இம்மெய்யியல் மரபுகளையெல்லாம் களவாடித் தமதாக்கிக்கொண்டு இவை யாவும் பிராமணிய-சமற்கிருத வழிவந்தவை எனச் சொந்தம் கொண்டாடுவதுடன், தமிழில் - தமிழருக்கு - என்று தனி மெய்யியல் மரபு ஏதுமில்லையென வடுகப் பிராமணியம் அடாது விடாது புளுகிவந்தது. ‘திராவிடம்’ எனும் அதன் கள்ளக்கூத்தி அதற்கு ஒத்து ஊதியது; இன்னும் அதற்குப் ‘பீப்பீ’ ஊதி வருகிறது.
உலகாய்தம் எனும் நேரடிப் பொருண்மையிய (கடவுள்மறுப்பு) மெய்யியல் ஒருபுறம் இருக்கட்டும். ‘இந்திய மெய்யியல்’ எனும் பெரும் பொய்க்குள் புதைக்கப்பட்டுள்ள எண்ணியம் (சாங்கியம்) எனும் தமிழர் மெய்யியலே மெய்யியல்களுக்கெல்லாம் முன்னோடியாகும். அந்த எண்ணியத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்ட நிலையில், அது வெறும் ‘சாங்கிய’ மெய்யியலாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.
பேரண்டங்களும் உலகங்களும் உயிர்களும் எவ்வாறு தோன்றினவெனும் அடிப்படைப் பாடத்தைப் புகட்டும் அண்டவியலை (Cosmogony) உலகுக்கே முதன்முதலில் கற்பித்தது சாங்கிய மெய்யியலேயாகும்.
உலகங்களும் செடிகொடிகளும் உயிர்களும் தோன்றுவதற்குமுன் எங்கணும் ஒரு மென்துகள் படலமே வானளாவிப் படர்ந்து விரிந்திருந்தது என்பது சாங்கிய மெய்யியலின் அடிப்படைப் பாடம். அந்த மென்துகள் படலத்தை அது மூலப்பகுதி என்றது. ‘பகுதி’ என்பதைத்தான் கி. பி. 2ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய சமற்கிருத மொழியில் ‘பிரகிருதி’ என்று திரித்துக்கொண்டனர். இயற்கையின் முந்துநிலையைத்தான் ‘மூலப்பகுதி’ எனச் சாங்கியம் சொன்னது. தாய்மைநிலையைக் குறிக்கும்வண்ணம் தமிழ் மூதாதையர் அதைப் பெண்ணாக உருவகப்படுத்தினர். அதுவே பொருள்கள் அனைத்துக்குமாகிய முதற்பொருள் (பிரதானம்) எனப்பட்டது. இயற்கையாகிய அம்மூலப் பகுதியிலிருந்து 23 உருப்படிகள் தோன்றினவாம். நிலம், நீர், தீ, காற்று, விசும்பு (ஆகாயம்) எனும் பூதங்கள் ஐந்தும்; மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும்; ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை எனும் புலனுணர்வுகள் ஐந்தும்; வாய், கை, கால், எருவாய், கருவாய் எனும் வினையுறுப்புகள் ஐந்தும்; அறிவு, அகந்தை, மனம் ஆகிய மூன்றும் அடங்கியவையே அந்த உருப்படிகளாம். இவற்றுடன், வேலை வெட்டியில்லாத ஆதன் (புருடன்) எனும் ஆண்மகனையும் மூலப்பகுதியையும் சேர்த்துப் பொருள்கள் மொத்தம் இருபத்தைந்தாகுமெனச் சாங்கியம் சொன்னது. இந்த இருபத்தைந்தையும் ‘பகுதி’ என்றும், ‘விகுதி’ என்றும் மேலும் வகைப்படுத்தியது.
இந்தச் சாங்கியப் பாடம் இல்லாத சமய மெய்யியல் ஏதும் உலகில் இல்லை. பேரண்டமும் உலகங்களும் எவ்வாறு தோன்றின வென்பதைக் கற்பிக்கும் அண்டத்தோற்றவியல் எனும் அறிவியல் துறைக்குச் செருமனி நாட்டில் பிறந்த இம்மானுவேல் காண்ட் (Immanuel Kant) அடிகாலிட்டார். காண்ட்டின் கோட்பாட்டிலும் அக்கோட்பாட்டைத் தழுவி ஐரோப்பாவில் வளர்ந்த பிற அண்டத்தோற்றவியல் பாடங்களிலும் ஒளிந்து கிடப்பது எண்ணி(சாங்கி)யத்தின் மூலப்பாடங்களேயாகும்.
‘மூலப்பகுதி’ எனும் மூலப்பொருளுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை; அதை எவரும் படைக்கவுமில்லை என்று சொன்ன சாங்கிய மெய்யியலின் மூலப்பாடத்தில் உலகங்களையும் உயிர்களையும் ‘படைத்தோன்’ எனும் படைப்புக் கடவுளுக்கு இடமில்லை. அதாவது, எண்ணியம் (சாங்கியம்) தொடக்கத்தில் கடவுள்மறுப்புக் கோட்பாடாகவே இருந்தது.
மேற்கண்ட பாடங்களையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு ஒளிர்மை (சத்துவம்), அரசமை (இராசசம்), இருள்மை (தாமசம்) எனும் முக்குணங்களையும் பற்றிய பாடமாகச் சுருக்கி அச்சாங்கியத்தை வடுகப் பிராமணியம் திரித்துக் காட்டியது.
ஆசீவகமும் சிறப்பிய(வைசேடிக)மும் அணுக்கோட்பாட்டை அடியொற்றிய மெய்யியல்களாகும். இதனால், அடிப்படைப் பொருளென அவை சொன்ன ‘ஓரணு’(பரமாணு)வுக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை என்றன.
‘இல்லாதது தோன்றாது; இருப்பது அழியாது’ என்று பொருள் பட
இல்லாத தோன்றா கெடாவுள் ளனவென்பாய்
என்று ஆசீவகரான பூரணர் சொன்னதாக நீலகேசி (691:1.) சொல்கிறது. இதை ‘மாறா நிலைபேறு’ (Law of Conservation) என்று நீலகேசியின் உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.
நிலம், நீர். தீ, காற்று ஆகிய நால்வகை அணுக்களும் ஒன்று மற்றொன்றாவதில்லை என்றும்; இவ்வணுக்களுக்குப் பெயர்ச்சியும் எடையும் நிறையும் உண்டென்றும்; நிலவணு, நீரணு, தீயணு, வளியணு ஆகிய நான்கும் 4:3:2:1 எனும் விழுக்காட்டு மேனியில் சேர்ந்து பருப்பொருள்களாகத் திரள்கின்றனவென்றும் (மணிமேகலை 27:138-145); இந்நால்வகை அணுக்களுக்கும் தனித்தனிப் பால்(தன்மை)களும் சீர்(இயல்பு)களும் உண்டென்றும் ஆசீவகம் விளக்கியது.
ஊழைப் பற்றி ஆசீவகம் பெரிதுபடப் பேசியதென்னவோ உண்மைதான். வெறும் கண்ணுக்குத் தெரியாத நுண்பொருள்களாகிய அணுக்களின் ஓயாத அகப்பெயர்ச்சியை ‘ஊழ்’ என்றும்; பருப்பொருளின் ஓயத்தக்க புறப்பெயர்ச்சியை ‘வினை’ என்றும் ஆசீவகம் நுட்பமாக விளக்கியது. வடுகப் பிராமணியமும் பிற்காலச் சமயங்களும் அவற்றின் பொருள் தெரியாமல் ஊழையும் வினையையும் ஒன்றோடொன்று போட்டுக் குழப்பி ‘ஊழ்வினை’ என்றாக்கி, அதற்குத் ‘தலையெழுத்து’ என்று பொருள் கற்பித்தன.
சிறப்பிய(வைசேடிக)மும்கூட அணுக்கோட்பாடேயென முன்னரே சொன்னோம். ஏரணம் (நியாயம்) என்பது அளவையிய மெய்யியலாகும்.
மேற்கண்ட மெய்யியல்கள் எல்லாமே தமிழரின் மெய்யியல் மரபில் வந்தவை. வடுகப் பிராமணியம் அவற்றை ஆரவாரமின்றிக் களவாடி சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக்கொண்டு அவற்றின் மேல் முழுச்சொந்தம் கொண்டாடி வருகிறது.
இக்காலப் பொருண்மையிய இயங்கியலாகிய மார்க்சிய மெய்யியலைப் போன்ற அறிவியல் மெய்யியலே தொன்றுதொட்டு வந்த தமிழரின் அறிவியல் மெய்யியலாகும். இதனால்தான் அந்த அறிவியல் மெய்யியலில் ‘படைத்தோன்’ எனப்படுகின்ற கடவுளுக்குத் தொடக்கத்தில் இடம் தரப்படவில்லை. தமிழரின் மெய்யியல் பள்ளிகளின் மூலவர்களே - முதல் ஆசான்களே - பிற்காலத்தில் ‘இறைவன்’களாக்கப்பட்டனர்; பிறகு தெய்வங்களாகவும் கற்பிக்கப்பட்டனர்.
‘கடவுள் இருப்பதும், இல்லையென்பதும் கவைக்குதவாத வெறும்பேச்சு’ என்று கூறியவாறு வடக்கிலிருந்து வந்த புத்தமோ, ஓர் அறியொணாவியச் (Agnostic) சமயமாயிருந்தது. முந்தை அருகமும் ‘படைத்தோன்’ எனும் கடவுள் கோட்பாட்டை ஏற்கவில்லை.
கடவுள்மறுப்பு மெய்யியல்களான உலகாய்தம், ஞாயம், சிறப்பியம் (வைசேடிகம்) ஆகிய மெய்யியல் பள்ளிகளை மீமாஞ்சை, அருகம் (சைனம்), புத்தம் ஆகியவற்றுடன் சேர்த்துப் பின்னாளில் அவற்றைச் ‘சமயங்கள்’ என்று குறிப்பிடலாயினர்.
அறுசமயங்க ளென்பவான நையாயி கத்தோடு
உறையும் வைசேடிகம் மேலுளவு லோகாயு தந்தான்
குயிலு மீமாஞ்ச மென்றுகுறித்த வையன்றி நல்ல
நெறியு ளவருக்கம் புத்தம் நீதியென் றோதுமன்றே
என்று சூடாமணி நிகண்டு சொல்வதே அதற்குச் சான்றாகும். இவ்வாறு, ஆசீவகம் உள்ளிட்ட மெய்யியல்களெல்லாம் ‘சமயங்கள்’ என்றாக்கப்பட்டன.
ஆசீவகத்தை மட்டுமே கடவுள்மறுப்பு மெய்யியலாகக் காட்டுவது தினமணியின் ஒருதலைப் பாடம் என்பது இதனால் விளங்கவில்லையா?
புத்தம், அருகம் (சைனம்) ஆகிய வடக்கத்திய சமயங்கள் வந்த பிறகே தமிழர்களிடையே சமய, மதக் காழ்ப்புகளும் பிரிவினைகளும் விதைக்கப்பட்டன. அதற்குமுன், தமிழர்கள் தங்களின் மூதாதையரை மட்டுமே தெய்வமெனக் கும்பிட்டு வந்தனர். தம்மொடு வாழ்ந்து மடிந்த மூதாதையர்கள் வானமேறி உடுக்களாகத் (நட்சத்திரங்களாக) ஆயினர் எனும் தொல்குடிக் கருத்தும் அவர்களிடம் விளங்கியது. குலதெய்வ வழிபாட்டிற்கு இது வழிகோலியது. தொல் குடிப் போரில் மாண்டவர்க்கு நடுகல் நட்டு வழிபடுவதும் தமிழரின் மரபாயிருந்தது.
முன்னோரையும் முதியோரையும் கும்பிடுவது, ‘வழிபாடு’ (Worship) மட்டுமாகும். உலகங்களையும் உயிர்களையும் ‘படைத்தோன்’ எனும் கடவுள் கோட்பாட்டுக்கு அதில் இடமில்லை. நல்லறம் பூண்டு அறிவுச்செறிவுடன் வாழ்ந்து மறைந்தோரையும் அதேபோல் தெய்வங்களாக்கினர். ஆனால், அத்தெய்வங்கள்தான் உலகங்களையும் உயிர்களையும் படைத்தனவென்று யாரும் கூறவில்லை.
தமிழரில் அமணர் இருந்ததில்லையெனத் தினமணியின் கட்டுரை சொல்லாமல் சொல்கிறது.
ஆசீவகரே உண்மையான அமணராவர். அருகர்களோ, அவர்களுக்குப் பிறகு அமணராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்.
தலையின் மயிரைப் பறித்துண்ணுஞ் சாதி அமணர்
மறைத்தாலும்
எனும் பெரிய புராண (பெரிய புராணம், திருநாவுக்கரசர் புராணம் 300:1.) வரியில் வரும் ‘சாதி அமணர்’ என்பது ‘அமணர்களாகப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்’களையே குறிக்குமென நெடுஞ்செழியன் விளக்குகிறார். (பேரா. க. நெடுஞ்செழியன், அப்பரின் சமய மாற்றமும் சைவ சமய உட்பிரிவுகளும், தேமதுரத் தமிழோசை, திசம்பர் 2004, பக்கங்கள் 5-6.)
கி. பி. 3ஆம் நூற்றாண்டில் அலையலையாக வந்த களப்பாள வடுகர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு தமிழரின் மண்ணும் இறைமையும் உரிமையும் பறிபோயின. அவ்வந்தேறிகளை எதிர்த்துக் களமாடும் துணிவில்லாத தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் அப்போது கடவுள்முன் மண்டியிட்டும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தும் கிடந்தனர்; ஆண்டவனிடம் ‘சரணாகதி’ என்பதைப் புதிய சமயக் கொள்கையாக்கிக்கொண்டனர். இதனால் வந்ததே இறைப்பற்று (பக்தி) இயக்கம்.
இரண்டாம் உலகப்போரின்போது இட்லரின் படைகள் மேலை ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றின. அப்போது தத்தம் நாடுகளை மீட்க எளியரைப்போல் துமுக்கி ஏந்தி விடுதலைக் களமாடும் துணிவிலாது புழுபோல் கிடந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அறிஞர்களும் மேதைகளும் என்ன செய்தனர் தெரியுமா? ‘என் வீட்டிற்குள் நுழைந்த நாசி படைஞர்கள் கண்முன்னே என் மகளைக் கெடுக்க முயலும்போது என்னால் என்ன செய்ய வியலும்? அதைத் தடுக்கத் துணிந்தால், நாசிகள் கொன்றுவிடுவரே! அதனால், நான் முதலில் உயிரோடு இருத்தல் வேண்டும். (I should exist)’ என்னும் போங்கில் தங்களின் ஏலாமைக்கு ஞாயம் கற்பிக்கவென ‘இருத்தலியம்’ (Existentialism) முதலான உதிரிக் கோட்பாடுகளை மேயவிட்டனர். களப்பாளர் படையெடுப்புகளுக்குப்பின் கையறுநிலையில் புழுக்களாகிப்போன இது போன்ற இக்கட்டான நிலையில் தமிழர் அறிவுலகம் கிடந்த சூழலிலேயே இறைப்பற்று (பத்தி) இயக்கம் கால்கொண்டது போலும்.
தமிழர்கள் தம் மண்ணையும் கொடிகளையும் கொற்றத்தையும் இழந்த இது போன்ற நிலையில்தான் சமயத் தலைவர்களால் தமிழர்களின் நெஞ்சங்களில் கடவுள் கோட்பாடும் சமயப்பித்தும் ஆழமாக ஊன்றப்பட்டன. பெரிய கோவில்களேதும் இல்லாத குலதெய்வங் களை ஒதுக்கிவிட்டுச் சிவனையும் பெருமாளையும் பெரும்தெய்வங்களாக்கிப் பெரிய பெரிய கோவில்களைக் கட்டியெழுப்பி வழிபடும் சூழலை வடுக ஆண்டைகள் உருவாக்கினர்.
தொல்காப்பியத்தில் ‘சிவன்’ இல்லை; மாயோனாகிய விண்டு உண்டு; போர்த்தெய்வமான கொற்றவையின் சேயோன் (முருகன்) உண்டு. சிவனுக்கு முந்தியவனான முருகன், பிற்காலத்தில் அச்சிவனின் மகன்களில் ஒருவனாக்கப்பட்டான்.
‘தலையில் பிறையைச் சூடியவள்; நெற்றிக்கண்ணை உடையவள்; நஞ்சை உண்டதால் கருத்துவிட்டக் கழுத்தினையுடையவள்; பாம்பைக் கச்சையாக அணிந்தவள்; யானைத்தோல் போர்த்தவள்’ என்றெல்லாம் பொருள்பட,
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
என்று கொற்றவையைப் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்தக் கொற்றவையை ஆண்பாலாக மாற்றித் தலையில் பிறை சூடியவனாகவும், நெற்றிக்கண்ணை உடையவனாகவும், நஞ்சை உண்டதால் கறுத்த கழுத்தில் பாம்பை அணிந்தவனாகவும்’ கற்பித்து அவனைச் ‘சிவன்’ என்றாக்கினர். தாயாண்மை ஒழிந்து தந்தையாண்மை தோன்றிவிட்ட குமுக மாற்றத்தையே இது குறிக்கிறது.
நாயன்மார்களால் போற்றி வளர்க்கப்பட்ட சிவன் வழிபாடு தமிழரில் மேட்டுக்குடியினரிடம் பரவலானது.
இதேபோல், ஞாயிற்றுமண்டலத்தின் (Ecliptic) மீது பெயரும் ஞாயிற்றின் போக்கைக் குறிக்கும் உருவகமாகிய ‘விண்டு’ என்பது 'திருமால்' ஆனது. கி. பி. 7ஆம் நூற்றாண்டில் அருகமும் புத்தமும் ஆசீவகமும் வன்முறைக் கலவரங்களால் ஒழிக்கப்பட்டபோது, அருகமும் புத்தமும் மட்டும் ஆங்காங்கே தப்பிப் பிழைத்தன. அறிவியல் மெய்யியல் சமயமாகிய ஆசிவகமோ அதன் சுவடுகூடத் தெரியாதவாறு முற்றிலும் ஒழித்துக் கட்டப்பட்டது. இந்நிலையில், மாலியத்தில் புதைக்கப்பட்ட ஆசீவகம், விண்ணவம் (வைணவம்) என்றானது.
இயற்கையைப் பெண்ணாகக் கற்பித்து, அதுவே உலகங்களையும் உயிர்களையும் படைத்த 'முதற்பொருள்' என்று சாங்கிய மெய்யியல் சொன்னது. எதையும் படைக்கின்ற ஆற்றலே இல்லாது வேலை வெட்டியற்ற வெற்றுப் பார்வையாளனாகச் சாங்கியம் கற்பித்த ஓர் உருப்படியே ‘புருடன்’ ஆகும்.
தொன்றுதொட்டு வந்த இம்மெய்யியல் பாடத்தைச் சிவனிய சித்தாந்தம் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. படைப்பாற்றலும் மூலப்பொருளுமான மூலப்பகுதி(இயற்கை)யை அந்தச் சிவனியம் ‘பரை’ என்றாக்கியது. அச்சத்தியை எரித்துச் சாம்பலாக்கி மீண்டும் உயிர்ப்பித்துச் சத்தியைச் சிவனின் பாதி உடம்பாக்கியது. படைக்க வல்ல ஆற்றலே இல்லாதவனெனச் சாங்கியம் செப்பிய சிவனை அச்சிவனியம் ‘பரன்’ என்றது; அவனே படைப்புக் கடவுள் என்றும் சொன்னது. தொன்றுதொட்டு வந்த தமிழரின் மெய்யியல் மரபைச் சீர்குலைத்துத் தலைகீழாக்கிப் பெரிய குளறுபடி செய்தது சிவனியமே என்று சென்ற 26.04.2021 அன்று இவ்வுலகைவிட்டுப் பிரிந்த ஆதி. சங்கரன் எனும் ஆசீவகர் சொல்லிச் சொல்லிப் புலம்புவார்.
புத்தமும் அருகமும் தமிழரின் வாழ்வியலில் புகுந்த பிறகே ‘மதம்’ எனும் பேய் தமிழர்க்குப் பிடித்தது. அத்துடன், நாயக்கர் காலத்தில் ‘சாதி’ எனும் இன்னொரு பேயும் சேர்ந்துகொண்டது.
தமிழன் ‘இந்து’ அல்லன் என்று பிரித்துச் சொல்வதாகத் தினமணியின் கட்டுரை சொல்கிறது. ‘இந்து’ எனும் மதத்தைக் கற்பித்தவர்கள் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயருக்குமுன் ‘இந்துமதம்’ எனும் மதம் இருந்ததில்லை. ‘பழைய கள், புதிய மொந்தை’ என்பதைப்போல், பழைய பிராமணியத்திற்கு அவர்கள் சூட்டிய புதிய பெயரே ‘இந்து’வெனும் பெயர்.
‘தெய்வத்தின் குரல்’, முதல் பாகத்தில் ‘பெயரில்லாத மதம்’ எனும் தலைப்பில் காஞ்சிப் பெரியவர்,
“ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு
வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து
நதியைக் கடந்தே நம் பாரதநாட்டுக்கு
வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால், ஸிந்துவை
‘இந்து’ என்றும், அதை அடுத்த நாட்டை ‘இந்தியா’
என்றும், அதன் மதத்தை ‘இந்து’ என்றும்
குறிப்பிட்டார்கள்......
“ஆனால் ‘ஹிந்து’ என்பது நமது பூர்வீகப் பெயர் அல்ல.
‘வைதிக மதம்’, ‘ஸநாதன தர்மம்’ என்றெல்லாம்
சொல்கிறோமே, அவைதான் பெயரா என்றால்,
அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப்
பார்க்கும்போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே
குறிப்பிடவில்லை.”
என்று சொல்வதே அதற்குச் சான்று கூறும்.
வேதங்களை அடியொற்றிய ‘வேதியம்’ அல்லது ‘வைதிகம்’ எனும் சமயத்தை ஆசீவகம் ஏற்கவில்லை.
‘அறுவகைப் பிறப்புகள்’ எனும் கோட்பாட்டை ஆசீவகமே முன்மொழிந்தது. இவ்வாறிருக்கையில்,
“ஆசீவகம் வைதிய சமயம் என்றழைக்கப்படும் ஹிந்து
தத்துவங்களுக்கு எதிரானது என்ற கருத்து
ஏற்புடையதல்ல. விதிப்படி வாழ்க்கை என்பதும்
மறுபிறவிக் கோட்பாடும் வைதிக சமயம் என்று
சொல்லப்படும் சனாதனத்தின் கோட்பாடுகள்”
என்று தினமணியின் கட்டுரை கூறுவது உண்மைக்குப் புறம்பான ஒரு குளறுபடியாகும். மேலும், பிறப்பால் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் எனும் நால்வண்ணக் கோட்பாட்டை ஆசீவகம் என்றுமே ஏற்கவில்லை.
நால்வண்ணக் கோட்பாடுதான் ‘சனாதனம்’ என்று காஞ்சிப் பெரியவர் பின்வருமாறு விளக்கு வதைக் கருத்தில் கொள்க:
“ஆனால் ஹிந்து மதத்தில் மட்டும் சமூக
வாழ்வுக்கான அடிப்படை (Sociological Foundation)
ரொம்பவும் கெட்டியாக, ‘வர்ணாச்ரம தர்மம்’ என்ற
விசேஷமான அம்சம் உண்டாயிருக்கிறது.......
“வர்ண தர்மத்தை ஜாதிப் பிரிவினை என்று பொதுவில்
சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் வர்ணம்
வேறு, ஜாதி வேறு. வர்ணங்கள் நாலுதான்; ஜாதிகளோ
ஏகப்பட்டவை. பிராம்மணர் என்ற ஒரே வர்ணத்தில்
அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல ஜாதிகள்
இருக்கின்றன. நாலாவது வர்ணம் ஒன்றிலேயே
முதலியார், பிள்ளை, ரெட்டியார், நாயக்கர் என்று பல
ஜாதிகள் வருகின்றன.” (‘தெய்வத்தின் குரல்’, முதல் பாகம், ‘பெயரில்லாத மதம்’.)
தங்களைச் ‘சத்திரியர்’ என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்ச் சாதியினர் தமிழரில் உண்டு. அவர்களைப் பார்த்துச் சனாதனத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்டுப் பாருங்கள். அதற்கு அவர்கள் ஒன்று ‘இல்லை’ எனலாம்; அல்லது விழிபிதுங்கிச் சொல் வதறியாது மெல்ல நழுவலாம். தமிழரில் எந்தத் சாதியும் சத்திரியராயிருந்ததில்லை. ஏனெனில், சனாதனக் கோட்பாட்டைத் தமிழர்கள் பொதுவாக ஏற்றுக்கொண்டதில்லை. இதனால், தினமணியின் கட்டுரை குறிப்பிடும் ‘சனாதனம்’ என்பது மீமிகச் சிறுபான்மையரான பிராமணர் மட்டுமே கொண்டாடுகிற பிராமணியத்தையே மட்டுமே குறிக்கும். மேலும், தமிழ்நாட்டிலிருக்கும் பிராமணருள் 90 விழுக்காட்டினர் கன்னட, தெலுங்கு, மராத்தி வழிவந்தோராகவே இருப்பதாகச் சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் சொன்னது முற்றிலும் உண்மை.
தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம் எனும் தேசிய இன ஒருமை தமிழரிடையே தலையெடுக்கக் கூடாது என்பதற்காகவே ஈ. வெ. இராமசாமி நாயக்கர் மிக நுட்பமாகக் காய் நகர்த்தினார். அதற்காக அவர் இங்குக் கடைவிரித்த ‘நாத்திகம்’, தமிழரின் தொன்மையான அறிவியல் மெய்யியல் மரபுகளுக்கு ஒவ்வாத கொச்சை நாத்திகமே யன்றி வேறில்லை.
வேதாந்தமும் சித்தாந்தமும்
சிவ ஆகமங்களை அடியொற்றிய ‘சித்தாந்தம்’, வேதங்களை முன்னிலைப்படுத்திய ‘வேதாந்தத்’துடன் முரண்படவே செய்தது. தமிழ்நாட்டுச் சிவனியர்கள் சித்தாந்தத்தையே பெரிதும் போற்றினர். சிவனே அறுதி மெய்ம்மை என்று சொன்ன சித்தாந்தம், எல்லாம் அறிந்தவனாகவும் எங்கும் நிறைந்தவனாகவும் எல்லாம் வல்லவனாகவும் இருப்பவன் சிவனே என்றது. ‘பதி’ எனப்படும் முதற்பெரும் பரம்பொருள் சிவனே என்று அது சொன்னது. சத்தியின் பேராற்றலின் ஊடேதான் சிவனே உலகங்களையும் உயிர்களையும் படைத்தான் என்றும் அது கூறியது.
சிவனிய சித்தாந்தத்தின் முதற்பெரும் இருப்பிடமாயிருந்தது தமிழகமேயாகும். தமிழகத்திலிருந்த பிராமணரல்லாதோரே அச்சித்தாந்தத்தைப் போற்றி வளர்த்தனர்.
வேதங்களின் பின்னொட்டுகளான உபநிடதங்கள் முதலானவற்றை அடியொற்றிப் பேரான்மா (பரமாத்துமா), தனியான்மா (சீவாத்துமா) எனும் கருத்தியல் உருப்படிகளுக்கு இடையிலான உறவுகளை விளக்கும் ஒருமையியம் (அத்துவிதம்), சிறப்பு ஒருமையியம் (விசிட்டாத்துவிதம்), இருமையியம் (துவிதம்) முதலிய மெய்யியல் விளக்கங்களெல்லாம் வடுகப் பிராமணர்களால் மட்டுமே போற்றிப் புரக்கப்பட்டன.
கி. பி. 12ஆம் நூற்றாண்டில் கருநாடகத்தில் பிராமணனாகப் பிறந்த பசவண்ணர், வீரசிவனியச் சமயத்தைத் தோற்றுவித்தார். கோவில் வழிபாட்டையும் பிராமணர்களின் சாங்கியச் சடங்கு களையும் எதிர்த்துத் தனியொரு மதத்தை அவர் தோற்றுவித்தார். தென்னிந்தியாவிற்கேயுரிய சமய மரபுகளுக்குள் பசவண்ணரின் சிவனியமும் அடங்கும்.
தமிழரிடையே வளர்ந்த மாலியத்திற்குப் பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களும் பனுவல்களுமே அடிப்படை இலக்கியங்களாயின. ஆழ்வார்களின் இலக்கியங்களே இக்காலத் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியாயிருந்தனவென்றால் அது மிகையாகாது. மாலியச் சமயத்தின் தலைமை வடுகப் பிராமணரின் கைகளுக்கு மாறிய பிறகு, ‘சந்தச’ மொழியிலிருந்த வேதங்களை அடியொற்றிக் காஞ்சியை நடுவுமாகக்கொண்டு ‘வடகலை’ விண்ணவம் (வைணவம்) தோன்றியது. ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களையும் பனுவல்களையும் அடியொற்றித் திருவரங்கத்தில் குடிகொண்டு ‘தென்கலை’ விண்ணவம் வளர்ந்தது. விண்ணவத்திற்குள் மிருதியர் (சுமார்த்தர்) மரபுகளைப் புகுத்துவதைத் தென்கலை ஏற்கவில்லை. இதனால்தான், காஞ்சி வரதராசப்பெருமாள் கோவிலில் சமற்கிருதத்தில் ஓதுவதே பெருமாளுக்கு உகந்தது என்று சொல்லி வடுகவழி வடகலையினர் தமிழ்ப் பாசுரங்களைக் கோவிலுக்குள் பாடுவதை எதிர்க்கும்போது ஆழ்வார்களின் தமிழுக்காகத் தென்கலை விண்ணவம் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. ஆழ்வார்களின் தனித்தமிழைக் கெடுத்து மணிப்பவள நடையில் அவர்களின் ஆக்கங்களுக்கு உரையெழுதும் போக்கு செத்தும் சாகாமல் கிடப்பது மெய்தான். தமிழ் மண்ணில் பிறந்து தமிழரால் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பட்ட விண்ணவத்தில் காணும் இந்தப் போக்கு, ஒரு முரணணியும் மெய்ம்மையுமாகும்.
எவ்வாறாயினும், பண்டைத் தமிழர் மெய்யியல் மரபுகளைக் குலைத்த சிவனிய சித்தாந்தமும் விண்ணவமும் இறைப்பற்று (பத்தி) இயக்கத்தின் இரண்டு பெரிய கூறுகளாகும். அவற்றில் தமிழ் மண்ணின் வாசம் உண்டு. தமிழ்மண்ணில் வேர்பிடித்து வளர்ந்து தமிழர்களிடையே பத்திநெறியைப் பரப்பிய இருநிலைகள் அவையாகும்.
தமிழரிடையே தோன்றிய சாங்கியமாயினும் உலகாயுதமாயினும் ஆசீவகமாயினும் சிறப்பிய(வைசேடிக)மாயினும் ஏரண (ஞாய)மாயினும் அவற்றில் மூலநிலைகளில் உலகங்களையும் உயிர்களையும் ‘படைத்தான்’ என்னும் கடவுள் கோட்பாட்டிற்கு இடம் தராத அறிவியல் மெய்யியல்களாக விளங்கிய உண்மையை மூடி மறைக்கவியலாது.
மேலும், மற்கலி ஐயனார் ஆகாரெனத் தினமணியின் கட்டுரை கூறுகிறது.. ஐயனார் மூவர் என்று ஆசீவகத்தைப் பற்றிக் களஆய்வு செய்த பேராசிரியர் நெடுஞ்செழியன் உரிய சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.
மற்கலியே முதல் ஐயனார்; பூரணையும் பொற்கலை(புட்கலை)யும் இரண்டு பக்கங்களிலும் இருக்கும்வண்ணம் தோற்றமளிக்கும் பூரணக் காயபர் இரண்டாவது ஐயனார்; (பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மீனாட்சிபுரம் கல்வெட்டு குறிப்பிடும்) கணி நந்தாசிரியன் இயக்கன் (நந்தவச்சா) மூன்றாவது ஐயனார். பேராசிரியர் நெடுஞ்செழியன் இவ்வாறு நயம்பட விளக்குகிறார்.
ஐயனாரைப் பற்றிப் பிறர் செய்த ஆய்வுகளும் உண்டு. மேலும், ‘வள்ளுவத்தின் வீழ்ச்சி’, ‘தமிழர் மெய்யியல்’, ‘எண்ணியம் (சாங்கியம்), ஏரணம் (ஞாயம்) முதலிய நூல்களின் வாயிலாக அடியேனும்கூட ஆசீவகம், சிறப்பியம் (வைசேடிகம்), சாங்கியம், ஞாயம் ஆகிய மெய்யியல்கள் தமிழர் மெய்யியல்களே என்று உரிய சான்றுகளுடன் வழக்குரைத்துள்ளேன்.
ஐயனார் ஆசீவகத் தலைமக்களைக் குறிக்கிறது என்பதை மறுப்பதற்கு உரிய சான்றுகள் எதையுமே தராமல், நுனிப்புல்லை மேய்வதைப்போல் அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களை அள்ளித் தெறித்து - தமிழரின் அறிவியல் மெய்யியல் புலனங்களையும் மரபுகளையும் ஏற்க மறுத்து - தமிழர்களின் நலன்களுக்கு ஒவ்வாத வந்தேறி ‘இந்துத்துவச்’ சரக்குகளுக்குக் கடைவிரிக்கும் தினமணியின் போக்கு தமிழகத்தில் எடுபடாது.