மேலூர் பல்லவர் கட்டட பாணி திருவுடை அம்மன் திருமணங்கீசுவரர் கோயில் கல்வெட்டு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மேலூரில் அமைந்த பல்லவர் கட்டட பாணி திருவுடை அம்மன் திருமணங்கீசுவரர் கோயில் கருவறை வடக்கு, மேற்கு சுவர் 44 வரிக் கல்வெட்டு - துந்துபி வருசம் ஐப்பசி மாதம்
- 15 க்கு ஸ்ரீமத் சந்திரகிரி, திருப்பதி,
- காலஹஸ்தி, மண்டியம், வேலாம்
- பாடி, தொண்டைமானாற்றூர், நாரண
- புரம், நகரி, ஆரணி, கொத்தபாளை
- யம், நல்லாற்றூர் பாளையம், முத்
- தாம்மேடு, சேரம்படிப்பூண்டி, கொ
- ள்ளூர், சோழப்பட்டடை, சோழபுரம்,
- கோடம்பாக்கம் புலியூர், மயிலா
- ப்பூர் முதலாந அன்பத்தாறு தேச
- த்து பலரும் புழல்க் கோட்டமா
- ந வல்லூர் தம்பிரானாற் திருமணங்
- காவுடைய தம்பிரானாற் இருமழிப
- யம்மாக வல்லூர் தேசத்தாரும்
- [பி]டிச்ச யெருத்துக்கு களஞ்சியத் தி
- லே நெல்லுகொண்ட யெருத்து
- நற்பணம் நெல்லுக்கு நூறுபொதிக்கு குடுத்
- தோம் னூறு பொதிக்கு ஒரு பணமா
- கராச்சவிட்ட னாயக்கருக்கு புண்ணி
- யமாக னாயக்கருடைய முத்தி
- ரை மனுஷர் திருமலை னாயக்கர்
- கட்டளை யிடுகையில் னாம் இந்த ப
- டி சந்திராதித்தவரையும் நட
- த்தக் கடவோமாகவும் ஸம்மதித்து இந்த
- நெல்க் கொண்டு திருமணங்கா
- வுடைய தம்பிரானார்க்கும்
- இந்தத் தன்மம் மாதம் மாதம் தப்பாமல் இந்த முதல் க்
- காத்தாரும் கடை இ[க்] கூட்டங்களும் - - -
- கவும் இந்த பொதிவகையில் வந்த தாரண வருஷ - - - -
- வும் வாகைப்படிக்குப் போக - - - ங் கீழையூர்
- வேளாளர்க்களும் மானியம் மெ- - டாரும் ஒரு உபைய்
- யமும் திருமணங்கா ஊராரும் பண்டத்தாரு
- ம் ஒரு உபையமும் வியாபாரிகள் ஒரு உபை
- யமும் யிடையரும் சிவம்படவரும் இழை மூ
- ஞ்சிகளும் ஒரு உபையமும் முதலிகளில் இரண்டு உபையமும்
- கணக்கபி[ள்]ளைகள் ஒரு உபையமும் நடத்தக் கடவோம்மாகவும்
- இதிலும் அம்மாவாசைப்படிக் குறைப[ட்]டதே யுண்டானால்
- திருமணங்கா உடைய நயினார் கோயில் முதலிலே யீட்டு
- நடத்தக் கடவாராகவும் திருமலை நாயக்கர் வைச்ச தென்னை மரம்
- அம்[மா]வசைபடிக்கே நடத்தக்கடவர்கள்ளா[க]
- வும் இத்தன்மத்து[க்கு] இயாதொ
- ருத்தர் அகிதம் நினைத்தே யுண்டா
- னால் தேவருக்கும் தேசங்களுக்கும்
- நரகம்மாய் போக கடவார்கள்
இரு மழி > முழுக்க > நெல்லை உரலில் இட்டு குத்தி; கராளன் - குள்ளன் > கராச்சவிட்ட - குறைத்து விட்ட; எருத்து - உயர்ந்து நிற்கும் பகுதி, கோபுரம் போல் கொட்டியது; முத்திரை மனிதன் - அரசு தூதுவன்; பண்டத்தார் - செல்வர்; உபையம் - அறக்கொடை, donation
விளக்கம்: சோழர் ஆட்சியில் தொண்டை மண்டலம் செயம்கொண்ட சோழமண்டலம் என்று 24 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு பல நாடுகளாக வகுக்கப்பட்டு ஆளப்பட்டது. இந்த கல்வெட்டில் 10 ஆம் வரியில் 56 தேசங்கள் என்று குறிக்கப்பட்டாலும் சந்திரகிரி, திருப்பதி, காளத்தி, மண்டியம், வேலாம்பாடி, தொண்டைமானாற்றூர், நாரணபுரம், நகரி, ஆரணி, கொத்தபாளையம்,நல்லாற்றூர் பாளையம்,முத்தாம்மேடு, சேரம்படிப் பூண்டி, கொள்ளூர், சோழப்பட்டடை, சோழபுரம், கோடம்பாக்கம் புலியூர், மயிலாப்பூர் முதலான 18 ஊர்களே குறிக்கப்படுகின்றன. இந்த ஐம்பத்தாறு தேசத்தவர் பலரும் புழல் கோட்டமான வல்லூர் (அனல் மின் நிலையம் அமைந்த பகுதி) இறைவன் திருமணங்காவுடைய தம்பிரானுக்கு இரண்டு கைக்குத்தல் உபைய்யமாக தர இசைந்து வல்லூர் தேசத்தாரும் புடைத்த (பிடிச்ச - தூற்றிய) நெற்குன்றுக்கு களஞ்சியத்தில் நெல்லாக கொண்ட ஒரு நெற்குன்றுக்கு வரிப்பணம் என நெல் நூறு பொதிக்கு கொடுத்தோம் என்கின்றனர். அந்த நெல் பொதி ஒவ்வொன்றுக்கும் வரிப்பணத்தில் ஒரு பணம் குறைத்துவிட்ட நாயக்கருக்கு புண்ணியம் ஏற்பட்டது என்கின்றனர். நாயக்கருடைய அரச தூதுவர் திருமலை என்பவர் இந்த வரிப்பண குறைப்பை கட்டளை யிட்டார். அதன்படியே சந்திர சூரியர் உள்ள காலம் வரை நடந்து கொள்வதாக ஒப்புக்கொண்டோம். இந்த வரிக்குறைப்பு நெல் கொண்டு திருமணங்காவுடைய இறைவனுக்கு இந்த அறக்கொடை தப்பாமல் மாதா மாதம் செய்துவர ஏற்பாடானது. இந்த பொதிவகையில் அடுத்த 22 ஆண்டு கழித்து வரும் தாரண வருஷம் வரை வாகைபடிக்கு போக கீழையூர் வேளாளர்களும் மெ - - டாரும் ஒரு அறக்கொடையும், திருமணங்கா ஊரவரும் செல்வரும் ஒரு அறக்கொடையும், வணிகர் ஒரு அறக்கொடையும், இடையரும் மீனவரான சிவன்பட்டவரும் ஒரு அறக்கொடையும், இழைமூஞ்சியர் ஒரு அறக்கொடையும், முதலியார்கள் இரண்டு அறக்கொடையும், கணக்குபிள்ளைகளான கருணீகர் ஒரு அறக்கொடையும் நடத்துவோம் என்று ஒப்புக்கொண்டனர். இதில் அமாவாசை படிக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் திருமணங்கா ஈசன் கோயில் முதலில் இருந்து எடுத்து நடத்திக்கொள்ளட்டும். முத்திரை மனிதர் திருமலை நாயக்கர் நட்ட தென்னை மரத்துக் காய்களை அமாவாசை படிக்கு பயன்படுத்திக் கொள்ளட்டும். இந்த அறக்கொடை ஏற்பாட்டிற்கு எவரேனும் இடைஞ்சல் செய்வாரானால் அவர் இறைவனுக்கும் நாட்டிற்கும் எதிராகின்றபடியால் நரகத்திற்கு போகட்டும். இந்த கல்வெட்டில் குறிக்கப்படும் திருமலை நாயக்கர் என்பவர் மதுரை வேந்தர் அல்லர் மாறாக, இந்த ஊர்கள் அடங்கிய சித்தூர் மண்டலத்தின் நாயக்கருடைய அரசு தூதுவர் என்றே கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் திருமலை நாயக்கர் ஆட்சியில் துந்துபி ஆண்டு நிகழவேயில்லை மாறாக 1502, 1562, 1622, 1682, 1742 ஆகிய ஆண்டுகளில் தான் துந்துபி ஆண்டு நேர்ந்தது. இக்கல்வெட்டு ஐப்பசி மாதம் 15 ஆம் நாள் வெட்டப்பட்டுள்ளது. எனினும் கொத்த பாளையம் ஆகிய சொற்களை வைத்து இச்சொற்கள் தெலுங்கு வழி வந்த சொற்கள் என்பதை கருத்தில் கொண்டு நாயக்கர் ஆட்சிக் காலம் என்று கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 30, பக்கம் 213 - 215