பகுதி - 6
நரி குதிரையான திருவிளையாடல்:
”குதிரைகள் வரப்போகின்றன. பாண்டியநாட்டிற்குப்
பெருங் குதிரைப்படை உருவாகி, நாடு வலிவுறப்போகிறது” என்றெண்ணித் தானைவேல் வாகை
மாறன் ஊரை அலங்கரித்ததற்கு அடுத்த நாள். “ஒரு மத்தன் (=மயக்கமுள்ளவன்)
பேச்சைக் கேட்டு, ஊரை அலங்கரித்த பித்தன் நீயொருவன் தான் இருக்க முடியும்” என்று
பேரமைச்சர் ஒருவர் மன்னனிடம் பழி பேசுகின்றார். “பெருந்துறையிலேயே எல்லாச்
செல்வத்தையும் அவன் போக்கி விட்டான், குதிரையாவது வருவதாவதாவது? அவனுக்கு இனியும்
இரங்காதே! அவனை வளைத்துப் பணத்தைத் திருப்பி வாங்கு! பொன்னை இழவாதே” என்று தூவம்
போடுகிறார். பிரம்படிக்காரர் மூலம் மாணிக்க வாசகரை மன்னன் தண்டிக்கத்
தொடங்குகிறான். திருவாதவூரிலேயே அவரைச் சிறையிற் தள்ளுகிறான். மீண்டும் வாசகர்
அரற்றுகிறார். பெருந்துறையானை எண்ணிக் குழைகிறார். 14 ஆம் பத்தாய்க் குழைத்த
பத்தும், பதினைந்தாம் பத்தாய் அருட்பத்தும் எழுகின்றன. இவையிரண்டுமே பெருந்துறையானை
முன்னிலைப் படுத்தி வாதவூரில் எழுந்தவை.
இந்தப் பத்துகளைக் கேட்ட பெருந்துறையான்
வாளாயிருக்கவில்லை. அவனுடைய சிவகணங்கள் மிழலை நாட்டு நரிகளையெல்லாம் குதிரையாக்கி
அவற்றில் ஏறிக் கொள்கின்றன. இவற்றின் முன்னால் வெள்ளைப் புரவியில் இறைவனும்
சேர்ந்து கொள்ளுகிறான். நரிகள் ஒன்று கூடிய இடம் தான் நரிக்குடி என்று
திருவாலவாயுடையார் புராணம் சொல்லுகிறது. (இன்றைக்கும் ஆவுடையார் கோயிலுக்கு அருகில்
நரிக்குடி இருக்கிறது. மாணிக்க வாசகரை ”வடுகப் பிள்ளை”யாக்கி கோகழியைக்
கர்நாடகத்தில் தேடுவோர் நரிக்குடியைக் கண்டுகொள்ளார் போலும்.) .
இறைவனும், சிவகணங்களும் மதுரை நோக்கிப்
புறப்படுகின்றனர். திருவாதவூரில் சிறைப்பட்ட வாதவூரருக்கு மதுரை நோக்கிக் குதிரைகள்
வருவதை மணிச்சிலம்பு ஓசையிட்டு இறைவன் உணர்த்துகிறான். ”வாதவூரினில் வந்து
இனிதருளிப், பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்” என்ற திருவாசகம் கீர்த்தி அகவல்
52-53 ஆம் அடிகள் இதை உறுதி செய்கின்றன. குதிரைகள் வரும் நேரத்தை வாதவூரர்
எதிர்பார்த்து நிற்கிறார். பின்னாற் குதிரைக் குளம்படியைக் கேட்ட தூதர்கள்
வாதவூரிடம் சொல்லி மன்னரிடம் அனுப்புகிறார்கள். அரசனுக்கும் செய்தி போகிறது. ஆவல்
மிகுதியால் அத்தாணி மண்டபத்திற்கு அரசன் வந்து சேருகிறான். அங்கு நிலவும் தந்தத்
திகை (tensile stress) கூடிக்கொண்டே போகிறது.
இவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாய் ஓர் உச்சச்
சரிவு போற் குதிரைகள் வருவதிற் சிறு காலத் தாழ்வு ஏற்படுகிறது. சற்று நேரத்தில்
எதிர்பார்ப்பு ஏமாற்றமாய் மாறுகிறது. பிரம்படிக்காரர்கள் கையில் வாதவூரர்
ஒப்படைக்கப் படுகிறார். அவர்கள் அடிக்க ஓங்க, மீண்டும் திருவாசகங்கள் பிறக்கின்றன.
16 ஆம் பத்தாய் அடைக்கலப் பத்து பிறக்கிறது. குயிற் பத்து அடுத்து எழுந்ததாய்
நம்பியார் திருவிளையாடல் சொல்லுகிறது. நாம் ஏற்பதற்கில்லை. ஏனெனில் அந்த நேரத்தில்
பரி மீது வரும் சிவன் மதுரை சேராதிருக்கும் போது அதைப் பற்றிப் பேசும் பாட்டுக்
கொண்ட குயிற் பத்து எப்படியெழும்? ஆக நிகழ்ச்சிகள் நடந்த காலத்திற்கும்,
நம்பியாருடைய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் எழுந்த காலத்திற்கும்
இடையிற் பெருத்த இடைவெளி இருந்திருக்க வேண்டும்.
அடைக்கலப் பத்தும் வேறு ஏதோவொரு பத்தும் அங்கு
எழுந்தன என்று நாம் இவ்விடத்துக் கொள்ளலாம். அந்த நேரத்தில் பகல் மாறி இரவு ஆனதோ
என்று சொல்லுமளவிற்குத் குதிரைகளின் கதிப்பிற் தூசு கிளம்புகிறது. மண்டபத்தின்
போக்கு மாறுகிறது. ஓர் எதிர்பார்ப்பு எல்லோர் மனத்திலும் குடிகொள்ளுகிறது. விதம்
விதமான குதிரைகளைச் செலுத்தி வரும் வீரர்களை எல்லோரும் பார்க்கிறார்கள்.
வியக்கிறார்கள். குதிரைகளை, அவற்றின் கதிகளை, நடைகளை, நம்பியார் திருவிளையாடல்
வியத்தாரமாய் விவரிக்கிறது. படிக்கும் நாமும் விரிவு கண்டு வியந்து போகிறோம்.
[குதிரைகள் பற்றி அறிவுகொண்டோர் அதை விளங்கிக் கொள்ளலாம். என்னால் முடியவில்லை.
எனவே தவிர்க்கிறேன்.]
அடுத்த விவரிப்பு, குதிரையோட்டி வந்த இறைவனைப்
பற்றியாகும். இவ்விவரிப்பு காலக்கணிப்பு அலசலுக்கு முகன்மையானது ஏனெனில், ”இறைவன்
அரபு இசுலாத்துத் தோற்றம் காட்டினார், எனவே மாணிக்க வாசகர் தேவார மூவருக்குப்
பிற்பட்டவர்” என்று ஒருசிலர் கதை கட்டுவர். திருவாலவாயுடையார் புராணம் நரி
குதிரையான திருவிளையாடல் 34 ஆம் பாட்டைக் கூர்ந்து படித்தால் அப்படி நமக்குத்
தோன்றவில்லை.
”மன்னியநித் திலமாலை நில வெறிப்ப
மாணிக்கக் குண்டலங்கள் வெயில் விரிப்பத்
துன்னுலகுக்கு ஒருகுதிரை யாளாம்
சோதி
சோதிவிடு குப்பாயம் மெய்ப்பால் மின்ன,
முன்னைமறைப் பரியைநெறி
ஐந்தும் ஓங்க
முடுகிவலம் இடம்பரிவத் தனம்செய் வித்து
மின்னுண்மணிப்
பொலன்கலினக் குசை வலித்து
விளங்குகர வாளம் கை துளங்க வந்தான்”
பாடலைப் புரிந்து கொள்ள ஏதுவாய், இதன் பொழிப்புரையை
இங்கு கொடுத்திருக்கிறேன்.
”கழுத்திற் தொங்கும் முத்துமாலை நிலத்தைக்
கூசவைக்க,
மாணிக்கக் குண்டலங்கள் வெயிலில் விரிந்திருக்க,
சோதி
விடும் குப்பாயம் அவனுடலில் மின்ன,
பக்க மறைப்போடு பரியின் இரு கண்கள்
இருக்க,
ஐந்துவகையான கதிகள் ஓங்கும் வண்ணம்
குதிரையை முடுக்கி வலமிடமாய்ச்
சுற்றி வந்து
மின்னுகின்ற மணிகள் பொருந்திய பொற்கடிவாளத்தை வலித்து,
விளங்குகின்ற கைக்கத்தி துளங்கிச் சொலிக்கும் வகையில்
துன்னுலகுக்கு
இவனொருவனே குதிரையாள் போல வந்தான்.”
மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.
வந்திருந்த குதிரையாள் அரபுத்தோற்றங் கொண்டபாய்த் தெரிகிறானா? இசுலாத்துத் தோற்றம்
இங்கு உங்களுக்குத் தெரிகிறதா?. ”இசுலாம் எழுந்ததன் பின் மாணிக்கவாசகர் கதை
எழுந்தது” என்று எப்படியெல்லாம் கதைவிடுகிறார்கள்? அவர்களை நோக்கி இம்”மூலத்தைப்
படியுங்கள்” என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. வெள்ளைக் கலிங்கத் (வெள்ளை
மேலாடைத்) தோற்றம் காட்டிய 18 ஆம் நூற்றாண்டுப் பரஞ்சோதி முனிவரைப்
பிடித்துக்கொண்டு, வலிந்து அதை அரபுத் தோற்றமாக்கினால் எப்படி? இதே வெள்ளைக்
கலிங்கத் தோற்றத்தைத் தான் அன்னைப் பத்தில் மாணிக்கவாசகரே சொல்லுகிறாரே? அப்புறம்
என்ன?
வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு
முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி
மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்
- அன்னைப் பத்து 7
இங்கே பள்ளிக் குப்பாயம் என்ற சொல்லை வைத்து ”பள்ளி
என்பது சமணம், புத்தம் போன்ற இசுலாம் பள்ளி வாசலைக் குறிக்கும்” என்று விளக்கி,
“இது மாற்று மதத்து ஆட்கள் போடும் குப்பாயம்” என்று மொத்தப் பொருள் சொல்லிக் குழப்ப
ஒரு சிலர் முயல்கிறார்கள். பள்ளிக் குப்பாயம் என்பது வடக்கே இருந்தவர் போடும் நீண்ட
அங்கிச் சட்டை. அது யவனர் காலத்திற்கும் முன் வடமேற்கு இந்தியாவில் (இற்றை ஈரான்,
ஆப்கனித்தான், பாக்கித்தான் போன்ற நாட்டு நிலப்பகுதிகளிலும் கூட) இருந்தது.
எப்பொழுது அங்கு தோன்றியது என்று தெரியவில்லை. தமிழருக்கு அது வடக்கிருந்து
அறிமுகமானது என்று மட்டுமே நாம் சொல்ல முடியும்.
மேலே காட்டிய 12 ஆம் நூற்றாண்டுத் திருவிளையாடற்
பாட்டும் ”மின்னுகின்ற குப்பாயம். முத்துமாலை, மாணிக்கக் குண்டலங்கள்
அணிந்திருந்தார், குதிரையின் கண்கள் பக்கவாட்டில் மறைக்கப் பட்டு இருந்தன. மணிகள்
பொருந்திய பொற்கடிவாளம், கையில் ஒரு கத்தி” என்று மட்டுமே சொல்லுகிறது. ”இது
நடுக்கடல் நாடுகளின் குதிரைக்காரர் தோற்றமா?” என்று கேட்டால் ”ஒருவேளை இருக்கலாம்,
இல்லாதும் போகலாம்” என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. எப்படியெல்லாம் மூல நூலைப்
படியாது இவர்கள் அவக்கரப் படுகிறார்கள்? படைச் சேவகர், குதிரையாட்கள் குப்பாயம்
போடுவது சிலம்பிலேயே சொல்லப் பட்டிருக்கிறது. சிலம்புக் குப்பாயம் பள்ளிக்
குப்பாயமா? - தெரியாது.
குதிரைத் தொகுதியின் நடுவில் வரும் நாயகனைக் கண்டு
”அவன் சொக்கன் தானோ?” என்று வியக்கிறார்கள். குதிரைகளின் நேர்த்தியைக் கண்டு
வியந்து, அரசன் ”குதிரைத் தலைவன் யார்?” என்று வாதவூரரிடம் கேட்கிறான். “சற்று
நேரத்திற் குதிரையில் வருவார்” என்று அவர் சொல்கிறார். அடுத்து இறைவன் குதிரைத்
தலைவனாய் வரும் தோற்றம் விவரிக்கப் படுகிறது. குதிரைத் தலைவனைப் பார்த்துப் தன்
கரங்களைக் கூப்பப் பாண்டியன் முற்படுகிறான். பின் ”குதிரைத் தலைவனை அரசன்
வணங்குவதா?” என்ற தயக்கத்தில் தன்னைத் தானே அடக்கிக் கொள்கிறான்.
”மிக்க மந்திரிகாள்! இந்த வெம்பரிச் செட்டி
நந்தம்
சொக்கனே போல் எனக்குத் தோன்றிடா நின்றான்; வந்த
கொக்கினைப் பாரீர்!
காலம் தாழ்த்ததாயினும் கொணர்ந்த
மிக்க மந்திரியைப் பாரீர்!!” என்று பன்முறை
வியந்தான்.
திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிலையாடல் 61
இப்படியாகக் குதிரைச்செட்டியையும், மாணிக்க
வாசகரையும் பற்றி மன்னன் வியக்கிறான். குதிரைத் தலைவன் தான் கொண்டு வந்திருக்கும்
குதிரைகள் பற்றி விவரிக்கிறான். என்னென்ன குதிரைகள் நல்லன என்றும் விவரிக்கப்
படுகின்றன. முடிவில் குதிரையின் எண்ணிக்கைகளும் விலைகளும் சொல்லப் படுகின்றன.
இப்பரிமா ஓர் இலக்கம் அவற்றினுள் இக்குழு ஓரொரு
மா
முப்பஃதாயிரம் ஓர் பழுதின்றி முதற்றரம் இத்தரமும்
வைப்பதின் நூறு குறைந்தன
பின்னிவை ஆயிரம் மற்றிவையும்
அப்படி பெற்ற விலைப்பொன் இலக்கம் அனைத்தும்
உணர்ந்து கொளே
திருவாலவாயுடையார்
புராணம், நரி குதிரையான திருவிலையாடல் 74
”இலக்கம் குதிரைகளா?” என்று வியந்து நிற்கிறோம்.
அவற்றுள் முப்பதாயிரம் முதற்றரக் குதிரைகள். அடுத்ததரக் குதிரைகள் முப்பதாயிரத்தில்
நூறு குறைந்ததாம். மூன்றாவது தரத்தில் ஆயிரம் குறைந்ததாம். நாலாவது தரத்தில்
பதினோராயிரத்து நூறு என்று நாம் கணக்குப் போட்டுக் கொள்ளுகிறோம்.
இக்குதிரைகளுக்குப் பெற்ற விலைப்பொன் இலக்கம். பொன் என்ன அலகு என்று
திருவாலவாயுடையார் புராணம் சொல்ல வில்லை. எனவே குதிரைத்தரங்களின் விலையை நம்மாற்
கணக்கிடமுடியவில்லை. அடுத்துக் குதிரையின் பெருமைகள் சொல்லப் பெறுகின்றன.
விற்பனையின் கடைநிலைக்கு வருகிறார்கள். அதன் பெயர்
கயிறு மாற்றிக் கொள்ளுதல். விற்பவன் வாங்குவோனிடம் “இந்தாப்பா, கயிற்றைப்
பிடித்துக்கொள், குதிரையை உன்னிடம் கொடுத்தேன். இனி நன்மை தீமை எல்லாம் உனக்கே.
எனக்கு இனிப் பொறுப்பில்லை” என்று கைமாற்றிக் கொள்ளுகிறார்கள்
”ஆதலால் அறிஞர் முன்னா அறவுறப் பேசிக்
கொண்டு
நீதியிற் கைக்கொள் இன்று நின்னது புரவியாக
வீதியிற் கயிறு மாறி
விட்டபின் நன்மை தின்மை
ஓதுவ நமது பாரம் அல்ல மேல் உன்ன” என்றான்.
அத்திறம் சொல்ல, ”நல்ல அறிவன் நீ அறைந்தது
ஒக்கும்
உத்தம நன்மை தின்மை உன் கை விட்டு என் கை புக்கால்
எத்தையும் அறிதல்
வேண்டா; என்னவே முற்றும்” என்னச்
சித்திர மாக்கள் தம்மைத் தென்னவன்
கைக்கொடுத்தான்
திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிலையாடல் 80-81
”இப்பேறு பட்ட குதிரைகளுக்கு நாம் கொடுத்த விலை
போதா. நமக்குக் குதிரைகள் வாய்த்தன” என்றெண்ணி மன்னன் மகிழ்ந்து
போகிறான்.
அய்யமில் லாமல் முன்னின்று ஆவணி மூல
நன்னாள்
துய்ய பேருலகுக் கெல்லாம் துளங்கி ராவுத்த ராயன்
மெய்யை மெய்யுடைய
மெய்யன் மெய்யடியானை வேண்டிப்
பொய்யிலா மன்னன் காணப் பொய்ப் பரிமாற்றம்
செய்தான்
-
திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிலையாடல் 83
இங்கே மெய்யடியான் என்பது மாணிக்க வாசகரைக்
குறிக்கிறது. மெய்யை மெய்யுடைய மெய்யன் = இறைவன். ஆக ராவுத்த ராயனாய் வந்த இறைவன்
மன்னனிடம் பொய்ப் பரிமாற்றம் செய்தான்.
அடுத்த பாடல் நாம் குறித்து வைக்க வேண்டிய பாட்டு.
பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்பியார், திருநாவுக்கரசர் தேவாரத்தில்
திருவாரூரைப் பற்றி வரும் பதிகத்தில் இருந்து சில வரிகளை எடுத்து அப்படியே தன்
பாடலில் ஆள்கிறார்.
மின்னிய உலகுதன்னில் வித்தின்றி நாறு
செய்வோன்
நன்னெறி யில்லாப் பொல்லா நரகரைத் தேவு செய்வோன்
மன்னிய நரிகள்தம்மை
மறுகெலாம் வாவி யேறித்
தென்னன்முன் குதிரையாகச் செய்பு தோன்றாமல்
விட்டான்
- திருவாலவாயுடையார் புராணம்,
நரி குதிரையான திருவிலையாடல் 84
இதில் வரும் வரிகள்
“நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு
செய்வானும்
விரதங்கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்”
என்ற திருநாவுக்கரசர் தேவார திருவாரூர் பதிகத்தை
அப்படியே தன்பாட்டில் நாலில் மூன்று அருளிச்செயலைக் குறிப்பனவாய் ஒத்திருக்கின்றன.
திருநாவுக்கரசர் சொல்லும் ”நரியைக் குதிரை செய்தது” திருநாவுக்கரசருக்கு முந்திய
அருளிச் செயல். இந்த அருளிச் செயல் மாணிக்க வாசகருக்காக நடந்தது என்பது நம்பியார்
கூற்று. அப்படியானால், ஏரணத்தின் படி, நம்பியார் காலத்துப் புரிதல் ”மாணிக்க வாசகர்
திருநாவுக்கரசருக்கு முன்புதான் இருந்தார்” என்பது எளிதில் பெறும் அல்லவா?
நண்பர்களே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏரணத்தைச் சரியாகப் புரிந்து
கொள்ளுங்கள். [C claims that foxes are turned into horses due to A. Further C
quotes B to be saying the same thing (that foxes are turned into horses). The
corroboration is not just for one miracle but three. B lived in 7th century. So
A who is referred to here must have lived prior to B] இதைச் சொல்வது 12 ஆம்
நூற்றாண்டு நம்பியார். அதாவது, 12 ஆம் நூற்றாண்டில் ஏழாம் நூற்றாண்டிற்கு முந்திய
திருநாவுக்கரசருக்கு முன்பே மாணிக்க வாசகர் இருந்திருக்கிறதாக ஒரு புரிதல்
இருந்திருக்கிறது.
What a beautiful evidence? I am pleasantly
surprised.
இனி இந்தத் திருவிலையாடலின் இறுதிக்கு வருவோம்.
பந்தியிற் குதிரைகளைக் கட்டுமாறு மன்னன் பணிக்கிறான். குதிரை ராவுத்தனுக்கு ஒரு
பட்டுத் துணியைக் கொடுக்கிறான். தன்னடியாருக்காக, அதைச் செண்டிற் தொங்கும்படி
இலாவகமாக வாங்கி, இறைவன் தன் முடியில் புனைந்து கொள்கிறான். அப்படிச் செண்டில்
வாங்கியது தன்னை அவமதித்ததாய் அரசன் உணர்ந்து சீற, வாதவூரர் “ அது அவர்கள் தேச
வழமை” என்று சொல்லி அமைதிப் படுத்துகிறார்.
பிடித்த பத்து இப்பொழுது எழுந்ததாய்
திருவாலவாயுடையார் புராணம் சொல்லுகிறது. அது ஏற்புடையதாய் இல்லை. பல்வேறு பொற்பட்டு
வரிசைகளை வாதவூரர்க்குச் செய்து அரசன் தன் அரண்மனை ஏகுகிறான்.நரி குதிரையான
திருவிலையாடல் முடிந்தது. அடுத்த திருவிளையாடலுக்குள் போவோம்.
இனித் திருவாசகத்தில் இருந்து நரி குதிரையான
திருவிளையாடல் பற்றிய அகச்சான்றுகள் வருமாறு:
குதிரையைக் கொண்டு
குடநாடு அதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந்து அருளியும்
- கீர்த்தித் திருவகவல்
27-28
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக்
காட்டிய தொன்மையும்
- கீர்த்தித் திருவகவல்
33-34
அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான்
நரியைக் குதிரை
ஆக்கிய நன்மையும்
- கீர்த்தித் திருவகவல்
35-36
ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
பாண்டியன்
தனக்குப் பரிமா விற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
ஆண்டான் எங்கோன் அருள்வழி
இருப்ப
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
- கீர்த்தித் திருவகவல்
37-41
மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக
னாகிய கொள்கையும்
- கீர்த்தித் திருவகவல் 44-45
இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே
நிற்கச் சிவனவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோள்கொண்ட நீற்றனாய்
சிந்தனையை
வந்துருக்கும் சீரார் பெருந்துறையான்
பந்தம் பரியப் பரிமேற்கொண்
டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதும்காண் அம்மானாய்
- திருவம்மானை 3
பெற்றி பிறர்க்கரிய பெம்மான்
பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள்
நீக்கிக் குணம்கொண்டு கோதாட்டி
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான்
தொல்புகழே
பற்றியிப் பாசத்தைப் பற்றநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம்
பாடுதும்காண் அம்மானாய்
- திருவம்மானை 20
மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த
கோலம் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றேவற்
கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ
- திருப்பூவல்லி 20
கோல வரைக்குடுமி வந்து குவலயத்து
சால அமுதுண்டு
தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலம் திகழும்
திருவுத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்பாடி
பூலித்து அகங்குழைந்து
பொன்னூசல் ஆடாமோ
- திருப்பொன்னூசல் 8
வெள்ளைக் கலிங்கத்தர் வெந்திரு
முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி
மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்
- அன்னைப் பத்து 7
உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும்
ஆவன்
பொன்னை அழித்ததன் மேனிப் புகழிற் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த
வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்க கன்வரக்
கூவாய்
- குயிற் பத்து 7
இப்பாடே வந்தியம்பு கூடுபுகல்
என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
தேன்புரையுஞ்
சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும் மகிழ்ந்து
- திருத்தசாங்கம் 6
பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற்
காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற் போதிரைஞ்சித்
தெரிவர நின்றுருக்
கிப்பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவரி யாதென்தன் உள்ளமதே
- திருப்பாண்டிப் பதிகம் 1
சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர்
சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்து
குதிரை
யின்மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
மதுரை யர்மன்னன் மறுபிறப் போட
மறித்திடுமே
- திருப்பாண்டிப் பதிகம் 2
நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற
நெஞ்சம்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்
ஓரின்ப
வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார்
பேரின்ப வெள்ளத்துள் பெய்கழ
லேசென்று பேணுமினே
- திருப்பாண்டிப் பதிகம் 3
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின்
தென்னன்நன்னாட்
டிறைவன் கிளர்கின்ற காலமிக் காலமெக் காலத்துள்ளும்
அறிவொண்
கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள
இருநிலத்தே
- திருப்பாண்டிப் பதிகம் 4
ஈண்டிய மாயா இருகெட எப்பொரு
ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ னும்சொல்ல வல்லனல்லன்
வேண்டிய போதே
விலக்கில் ஐவாய்தல் விரும்புமின்தான்
பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப்
பரிசிதுவே
- திருப்பாண்டிப் பதிகம் 6
மாயவ னப்பரி மேற்கொண்டு மற்றவர்
கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக்கு
ஆய அரும்பெருஞ்
சீருடைத் தன்னரு ளேயருளும்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி
சேர்மின்களே
- திருப்பாண்டிப் பதிகம் 7
விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந்
நீர்கடக்க
பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப்
புந்திகொ ளப்பட்ட பூங்கொடியார்
மரவியன் மேற்கொண்டு தம்மையும் தாமறி
யார்மறந்தே
- திருப்பாண்டிப் பதிகம் - 9
இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென்
என்புருக்கி,
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை
உலவுசடை உடையானே நரிகளெலாம்
பெருங்குதிரை ஆக்கியவா றன்றேயுன்
பேரருளே
- திருவேசறவு 1
வேடுரு வாகி மாகேந்திரத்து மிகுகுறை வானவர்
வந்துதன்னைத்
தேட விருந்த சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல மர்ந்த
பரிமாவேறி ஐயன் பெருந்துறை ஆதியந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறிவார்
எம்பிரா னாவாரே
- திருவார்த்தை 4
உள்ள மலமொன்றும் மாய உகுபெருந்தேன்
வெள்ளம்
தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்
வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு
- பண்டாய நான்மறை 2
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டின்
பரிபாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளும்
கெடநெஞ்சே வாழ்த்து
- பண்டாய நான்மறை 3
நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம்
நிகழ்வித்து
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய
பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும்
அறியேனே
- ஆனந்த மாலை 7
அன்புடன்,
இராம.கி.
சிலம்பொலி கேட்ட கதை 24
வாத வூரினில் வந்தினி தருளிப்
பாதச் சிலம்பொலி
காட்டிய பண்பும்
- கீர்த்தித் திருவகவல்
52-53
சீரார் திருவடித்
திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழ
தேரார்ந்த வீதிப்
பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ
- திருப்பூவல்லி 18
அன்புடன்,
இராம.கி.