ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 April 2026
(வெருளி நோய்கள் 1286 -1290 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1291 -1295
தீங்கிழைக்கும் தீயவன் அல்லது தீயவள் குறித்த அளவுகடந்த பேரச்சம் தீயர் வெருளி.
தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பவர்களைக் கண்டு வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.
தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் கதைகளிலும் வரும் தீய பாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தும் பேரச்சத்திற்கு ஆளாவர். பொறாமையால் அல்லது பழி வாங்குவதற்காகத் தனக்குச் சூனியம் வைப்பதாக அல்லது மந்திரத் தகடு வைப்பதாக எண்ணியும் பிறர் மீது வெறுப்பும் சினமும் கொண்டு அஞ்சுவர்.
00
தீச்செய்தி பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீச்செய்தி வெருளி.
தேர்வில் தோல்வி, தேர்தலில் தோல்வி, உறவினர் மரணம், கூட்டாளி மோசடி செய்து ஓட்டம், கடை தீப்பற்றி எரிதல், வெள்ளத்தால் பயிர் நாசம் என்பன போன்ற தீயச் செய்திகள் ஆள்மூலம் அல்லது தொலைபேசி மூலம் அல்லது குறுந்தகவல், பகிரித் தகவல் மூலம் வரும் எனப் பேரச்சம் கொள்வர். தீங்கு நேரும் என எதிர்பார்த்தும் தீய செய்தி குறித்து அது வரும் முன்னரே அளவுகடந்த அச்சம் கொள்வர். தீய செய்தி வந்தாலும் அ்தை எதிர்கொள்ள முயலாமல் மனம் கலங்கி மேலும் துயரம் வரும் எனப் பேரச்சம் கொள்வர். சிலர் நோய்வந்தால் மருத்துவரைப் பார்த்தால் ஏதும் தீரா நோய் இருப்பதாகச் சொல்வாரோ எனக் கவலைப்பட்டு அவரைச் சந்திக்கவும் அஞ்சுவர்.
00
தீத்தடுப்புப் பயிற்சி குறித்த வரம்பற்ற பேரச்சம் தீத்தடுப்புப் பயிற்சி வெருளி.
பள்ளியில் முதலுதவி வகுப்பில் தீத்தடுப்புப் பயிற்சிஅளிக்கும் பொழுதே உண்மையில் தீப்பற்றியுள்ளதாகக் கருதி அஞ்சுவர். தீத்தடுப்புப் பணியில் சேர்ந்த சிலருக்கும் இதுபோன்ற பேரச்சம் வருவதுண்டு.
தீத்தடுப்புப்பயிற்சியின் பொழுது தீக்காயம் ஏற்படுமோ தீயால் பாதிப்பு ஏதும் வருமோ என்று தேவையற்ற அச்சம் கொள்வோரும் உள்ளனர்.
00
தீப்பெட்டி குறித்த வரம்பற்ற பேரச்சம் தீப்பெட்டி வெருளி.
தீக்குச்சி அல்லது தீப்பெட்டி தொடர்பாக ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் தீப்பெட்டி வெருளி.
சூட்டில் தீக்குச்சி தானாகப் பற்றிக்கொண்டு விடும், கவனக் குறைவால் வேறு எதிலும் தீப்பற்றிப் பரவி அ்ழிவு ஏற்படுத்தும் என்பனபோன்ற தேவையற்ற அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாவர்.
00
தீய கனவு / நள்ளிரவுக் கனவு(nightmare) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தீய கனவு வெருளி.
kakos என்றால் தீய என்று பொருள். oneiros என்றால் கனவு என்று பொருள்.
கனவு வெருளி(Oneirophobia)யுடன் தொடர்புடையது. ஆனால் கனவு வெருளி நல்ல கனவுகள் தொடர்பானது.
காண்க: அணங்கு வெருளி
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 April 2026
(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக!: தொடர்ச்சி)
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்
தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள்
பொதுத்தலைப்பு:
இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை 6
கல்வியகங்கள் தொண்டு நிறுவனங்களாகச் செயற்படுக!
கல்வியகங்கள் வணிக நிறுவனங்களாக இல்லாமல் தொண்டு நிறுவனங்களாகச் செயல்படும் பொழுதுதான் இவர்களிடையே நல்லுறவு அமையும்; கல்வியிலும் மாணாக்கர்கள் சிறப்பர். ஆசிரியர்கள் பருவத்தேர்வு முடிவுகளின் பொழுது மட்டும் பெற்றோரை அழைக்காமல், சுழற்சி முறையில் தொடக்கக் காலத்திலிருந்தே பெற்றோரை வரவழைத்து மாணாக்கர் கல்விநிலை குறித்துக் கலந்து பேசி அதற்கேற்ப இரு தரப்பாரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மாணாக்கரின் வீட்டுச் சூழல் புரிந்தால்தான் அவர்களை எவ்வாறு வழி நடத்தலாம் என ஆசிரியர்களுக்குத் தெளிவு பிறக்கும். கல்வியகங்களில் தங்கள் பிள்ளைகளின் உண்மையான நிலை என்ன எனப் பெற்றோர் அறிந்தால்தான் அவர்களை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்குப் பிறக்கும். மாணாக்கர்களின் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற துறைகளிலும் விளையாட்டு, கலைகளிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இதற்குப் பெற்றோர் – ஆசிரியர் – மாணாக்கர் சந்திப்பு உதவும்.
மாணவர்களின் படிப்பார்வம், கற்கும்திறன், புரிதல் உணர்வு, தன்னம்பிக்கை, உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை, விளையாட்டில் உள்ள ஈடுபாடு, கலையார்வம், மந்த நிலை, தேர்வு குறித்த அச்சம், தற்கொலை மனப்பாங்கு முதலானவை பற்றி ஆசிரியர்கள் தொடக்கத்திலேயே பெற்றோர்களிடம் பேசி மாணாக்கர்கள் சிறப்பாகத் திகழ உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதிப்பெண் பெறும் இயந்திரமாக மட்டும் மாணாக்கர்களை உருவாக்கும் நோக்கத்தில் பெற்றோர்களிடம் பேசுவதில் பயனில்லை. கல்விக்கூடங்களில் மனவளப் பயிற்சி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் இருப்பின், மாணாக்கர் சிறப்பர்; ஆசிரியர் – பெற்றோர் –மாணாக்கர் உறவு சீராக அமையும். கற்றலின் இடையே நிற்கும் போக்கும் நின்றுவிடும்.
கல்வியகங்கள் அழைக்கும் பொழுது பெற்றோர்கள் செல்வதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் தவறாமல் பெற்றோர் இத்தகைய கூட்டங்களுக்குச் செல்வர். அன்றாட வருவாயைமட்டுமே நம்பி உள்ள பெற்றோர் வருவாய் இழப்பு ஏற்படாத வகையில், பள்ளிக்கு வரக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும். இதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர், பெற்றோர், மாணாக்கர் உறவு குறித்துப் பார்க்கும் பொழுது ஆசிரியர்களுக்கும் மேல் அலுவலர்கள் அல்லது பள்ளி நடத்துநருக்கும் உள்ள உறவு முறை குறித்தும் காண வேண்டும்.
மாணாக்கர்களை அடக்கி ஒடுக்கும் ஆசிரியர்கள்கூட அவர்களின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரிடம் அடிமைபோல்தான் நடந்து கொள்வர். அஞ்சும் இயல்புடைய ஆசிரியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டா. தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் தாளாளர் அல்லது கல்வியகத்தை நடத்துநர் அல்லது தாளாண் குழுவின் (நிருவாகத்தின்)அடிமையாக ஒத்துழைத்துப் போகாவிட்டால் பணிப்பாதுகாப்பில்லை என்ற நிலை. இதுதான் தனியார் கல்வியகங்களின் சூழல். அரசின் கல்வியகங்களிலும் ஏறத்தாழ இதே போன்ற நிலைதான். ஒத்துப் போகாத அடிமைத்தனத்துடன் வாழும் ஆசிரியர்கள் எவ்வாறு தன்மானமுள்ள தலைமுறையினரை உருவாக்குவர் என்று தெரியவில்லை.
நல்ல மதிப்பெண்களில் கருத்து செலுத்தினாலும் வேறு வகைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கே முதன்மை அளிக்கும் போக்கே நிலவுகிறது. இதனால், நல்ல ஆசிரியர்கள் புறந்தள்ளப்படுகின்றனர். எனவே, ஆசிரியர்களின் சமநிலையில் கருத்து செலுத்த வேண்டும். பள்ளிகளின் கடமை, கல்வியறிவும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் மிக்க தலைமுறையினரை உருவாக்குவதுதான். ஆனால், மதிப்பெண் பெறும் மனப்பாட இயந்திரமாக இளந்தலைமுறையினரை உருவாக்குவதே பெருங்கடமை எனக் கல்வியகங்கள் செயல்படுகின்றன. பெற்றோர்களும் மனித இயந்திரங்களை உருவாக்கும் கல்வியகங்களையே சிறந்த கல்வியகங்கள் என எண்ணுகின்றனர். இயல்பாகச் சிந்தித்து உணரும் வகையில் பாடத்திட்டங்களை அமைத்து, எழுச்சியும் தன்னார்வமும் மிக்க தலைமுறையினரை உருவாக்கும் அறிவுக்கூடமாகக் கல்வியகங்கள் அமைய வேண்டும்.
கல்வியுடன் தொடர்புடைய பயிற்றுமொழியை ஆட்சி மொழியுடன் இணைத்து அடுத்துப் பார்ப்போம். ஏனெனில் ஆட்சிமொழியாக இல்லாத மொழியைப் பயிற்று மொழியாக ஏற்க மக்கள் தயங்குவர்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்