ஐநூற்றுவர் வணிகக்குழுவின் சமணப்பள்ளி கல்வெட்டு.
***************************************************
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வல்லத்திராகோட்டை அரசு மாணவர் விடுதி வளாகத்தில் ஐநூற்றுவர் வணிகக்குழு பெயரில் சமணப்பள்ளி இருந்ததற்கான கல்வெட்டு மற்றும் செம்புறைக் கல்லால் ஆன ஐயனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விடுதி வளாகத்தில் கீழ்புறம் சுவரை ஒட்டி கிடக்கும், ஒரு அடி நீளமும், முக்கால் அடி அகலமும் கொண்ட கற்பலகையில் ஐந்து வரிகளில், “ஸ்வஸ்தி ஶ்ரீ இப்பள்ளி வல்லநாடன் பெருங்கோவில் நகரத்தார் ஐந்நூற்றுவப் பெரும்பள்ளி “ என்று கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பெருங்கோவில் நகரத்தார் ஐந்நூற்றுவர் என்பார், சோழர் காலத்தில் திருவரங்குளத்தை மையமாகக் கொண்டு இயங்கிய வணிகக் குழுவாக இருக்கலாம். புதுக்கோட்டை மாவட்ட வணிகச் சமூகங்களில் ஒன்றாக வல்லநாட்டு நகரத்தார்கள் இன்றளவும் திருவரங்குளத்தைச் சமூகப் பண்பாட்டு மையமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி என்பது சமணம் மற்றும் புத்த கோவில்களைக் குறிப்பிடும் சொல் ஆகும். இக்கல்வெட்டில் உள்ள பள்ளியானது பெரும்பாலும் சமணப் பள்ளியைக் குறிக்கலாம். ஏனெனில் வல்லத்திராகோட்டையைப் போல தெற்கு வெள்ளாற்றின் இருபுறமும் ஏராளமான சமணத் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சமணப்பள்ளிகள் வணிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கல்வெட்டில் அரசர் பெயர் குறிப்பிடப்படவில்லை. எழுத்தமைதியைக் கொண்டு கி.பி 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். வணிகக்குழு மற்றும் சமணப்பள்ளி குறித்துக் குறிப்பிடுவதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது.
கல்வெட்டின் அருகே இரண்டடி நீளமும், இரண்டடி உயரமும் கொண்ட செம்புரைக் கல்லால்(செம்பாறங்கல்) ஆன தேவியுடன் கூடிய ஐயனார் சிற்பம் ஒன்று கண்டெடுக்கபட்டுள்ளது. எளிதில் உடையக்கூடியதும் துளைகள் நிறைந்ததுமான செம்புரைக் கல்லில் சிலை செய்வது கடினமான வேலையாகும். இருந்தும் செம்புரைக் கல்லில் நேர்த்தியாக இந்தச் சிற்பம் செய்யப்பட்டுள்ளது வியப்பை அளிக்கிறது. தலை உடைந்த நிலையில் இருக்கும் இந்த ஐயனார் சிலையை உள்ளூர் மக்கள் குப்பச்சி அம்மன் என்று அழைக்கின்றனர்.
மேலும் இந்த வளாகத்தில் கொல்லன்கோவில் கிணறு என்ற கிணறு ஒன்று கடந்த 2018 வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. கஜா புயலுக்குப் பின் மூடப்பட்ட அந்தக் கிணற்றைச் சுற்றிலும் இது போன்ற பல செம்புரைக் கல்லால் ஆன சிலைகள் இருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இப்படி புத்த கல்வெட்டுகள் காண்பது அரிது. ஏதோ யுவான் சுவாங் காஞ்சியில் விகாரை இருந்ததை குறிப்பிட்டுள்ளாராம்!!!