இந்தியாவின் முதலை இனங்கள்— தேமொழி

29 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 30, 2023, 8:43:34 PM1/30/23
to தமிழ் மன்றம்
இந்தியாவின் முதலை இனங்கள்

— தேமொழி


முன்னுரை:
இன்றிலிருந்து சற்றேறக்குறைய 3000 முதல் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணிக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் - ஆதிச்சநல்லூர்  பகுதி பழந்தமிழர் நாகரிகத்திற்குச் சான்றாக அகழாய்வில் கிடைத்துள்ள  பெருங்கற்காலத்துத் தொல்லியல் தடயங்களுள் ஒன்று புடைப்பு உருவங்கள் உள்ள பானையோடு.  அதில்,  ஒரு பெண்ணுருவமும், கொக்கு அமர்ந்துள்ள தாழை மரம் ஒன்று அவளுக்கு வலப்புறத்திலும், ஆண் மரைமான் ஒன்று அவளுக்கு இடப்புறத்திலும், அவளது காலருகில்  முதலை ஒன்றும் இருக்கும் காட்சி ஒட்டுருவமாக (applique) பானையோட்டில் காணப்படுகின்றது[1].  
Adichanallur- artifact.png
 இது போன்ற ஒரு காட்சி,  இயற்கையையும் அது சார்ந்த செய்திகளையும்  மிக நுணுக்கமாகப் பதிவு செய்யும் பழந்தொகை நூல்களில்,  குறிப்பாக நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றில் இடம் பெறும் 'நெய்தல்' நிலக் காட்சியே.  கருமையான கால்களைக் கொண்ட வெண்கொக்கு தாழை மரத்தில் அமர்ந்திருப்பதையும், கழிகளில் இருக்கும் முதலைகள் குறித்தும் பாடல் வரிகளில் இடம் பெறுவது வழக்கமே.  
          "கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை
          வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை"
                     - குறுந்தொகை, நெய்தல், பாடல்: 324
வளைந்த கால்களையுடைய, கொல்லுதலில் வல்ல ஆண் முதலை வழியில் பிறர் செல்வதை இல்லாமற்செய்யும் கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறை என்பது பாடல் விவரிக்கும் நெய்தல் நிலத்தின் கடற்கரை சோலை ஒன்றின் காட்சி.

முதலைகளை இடங்கர், கராம், முதலை என்று பல பெயர்களில் இலக்கியப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் தொன்று தொட்டுக் காணப்படும் முதலை வகைகள் மூன்றாகும். அவை முதலை, கராம் அல்லது கராஅம், இடங்கர் ஆகியன.  முதலையைக் குறிக்கும் பல சொற்கள் (ஒருபொருட் பன்மொழி) என்ற புரிதலில்  இருக்கும் ஒரு சொல்லுக்கு, அச்சொற்கள் அடுத்தடுத்து தொடர்ந்து ஒரு சொற்றொடரில் வருகையில் அவை வெவ்வேறு தனிச் சிறப்பு கொண்டவையாக இருக்கக்கூடும்  என்பதை நாம் உணரலாம்.

          "கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்"
                    (குறிஞ்சிப்பாட்டு-257)
என்று வளைந்த கால் முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும் என்று குறிஞ்சிப்பாட்டு தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறது. ஆகவே அனைத்தும் முதலை அல்ல. இன்று பொதுவாக முதலை என அறியப்பட்டாலும் இவை வெவ்வேறு முதலை இனத்தைக் குறிக்கும் கலைச்சொற்கள்.  எடுத்துக்காட்டாக, 'கராம்' என்றால் இது எங்கெங்கு காணப்படும் முதலைகள், அவற்றின் பண்புகள் என்ன, தோற்றம் எவ்வாறு இருக்கும் என்ற குறிப்புகளை கராம் என்ற சொல்லே தெளிவாக அறியத் தரும்.  

இவற்றுக்கான வேறுபாட்டைத் தெளிவு படுத்த விரும்பி பாவாணர் அவர்களும் தமது சொல்லாராய்ச்சிக் கட்டுரை ஒன்றில்  முதலை  — gavial/gharial, கராஅம்  — alligator, இடங்கர்  —  crocodile என்று விளக்கியுள்ளார் [2]. முதல் பார்வையிலேயே இவ்விளக்கம்  முற்றிலும் பிழையானது என்பது தெரிந்துவிடுகிறது.

அலிகேட்டர் (alligator) முதலை இனங்கள் இந்தியாவில் கிடையாது.  இவ்வகை முதலை இனங்கள் பெரும்பான்மையும் அமெரிக்கப் பகுதியில் காணப்படுபவை. இடங்கர் என்பதும் குரோக்கோடைல் (crocodile) என அறியப்படுபவை அல்ல.  ஆண் முதலையை கராம் என்று அழைத்ததாகவும் ஒரு தவறான குறிப்பும் இருக்கிறது.  ஆகவே, இந்தியாவில் காணப்படும் முதலை வகைகளைத் தெளிவாக அறிந்து கொள்வதற்கும் அடையாளப்படுத்துவதற்குமான தேவை இருப்பது தெரிகிறது.  
 
இலக்கியம்  தரும் முதலை குறித்த தரவுகளை மீள் பார்வை செய்ததில், முதலை என்பதை பொதுவான சொல்லாக ஏற்கும் முறை காலம் செல்லச் செல்ல பிற்காலத்தில் அதிகரித்துள்ளது தெரிகிறது.  கடற்கரையோரமும், கழிமுகப் பகுதிகளிலும் உப்புநீர் பகுதிகளில் வாழ்வனவற்றை முதலை என்றும்,
ஆறு குளம் போன்ற நன்னீர் பகுதிகளில் வாழ்வன கராம் அல்லது மகரம் இன முதலைகள் என்றும்,
நன்னீர் பகுதிகளில் வாழும் நீண்ட கூம்பு போன்ற  முகம் கொண்ட முதலை இனம் இடங்கர் என்றும் குறிப்பிடும் வழக்கம் இருந்ததை இலக்கியம் மூலம் அறியலாம்.  

இந்தியாவின் முதலை இனங்கள்:
1. கராம் முதலை — Marsh or  Mugger Crocodile (Crocodylus palustris)- freshwater species
2. முதலை  — Estuarine or Saltwater Crocodile (Crocodylus porosus)- marine species
3. இடங்கர் — Gharial (Gavialis gangeticus)- freshwater species
இந்தியாவில் இந்த மூன்று இன முதலைகள் மட்டுமே வாழ்கின்றன [3, 4].  
Types of Indian Crocodiles.jpg
 
1. கராம் முதலை — Marsh or  Mugger Crocodile (Crocodylus palustris):
இந்தியாவின்  முதலை என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டால் அது சதுப்புநிலத்தில் (Wetlands/Marsh) வாழும் இந்த முதலைதான். இது இந்தியாவில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் காணப்படும் இனமும் கூட.  இது  நன்னீரில் வாழும் முதலை இனம். இந்தியாவில் சதுப்புநிலங்களும் அதிகம். இயற்கைக்கு அரணாக இருப்பதால் 'நகரங்களின் நுரையீரல்கள்' என்று சதுப்புநிலங்கள்  அழைக்கப்படுகின்றன.    கடல் மட்டத்தைவிடக் குறைவான ஆழம் கொண்ட நீர்நிலையாகக் காணப்படும் சதுப்புநிலங்களின் எண்ணிக்கை   இந்தியாவில்  27,403 [5].  நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில்தான் சதுப்புநிலக் காடுகள் உள்ளன. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் சதுப்புநிலப் பகுதிகள் தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா பகுதி, இராமநாதபுரம்,  திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர்,  நாகப்பட்டினம், ஈரோடு, செங்கல்பட்டு, கடலூர், சென்னை போன்ற  மாவட்டங்களில் உள்ளன. தமிழகத்திற்கு அடுத்து, உத்தரப் பிரதேசம்,  ஒடிசா,  ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலும் சதுப்புநிலங்கள் அதிகம். தொடர்ந்து நடந்த சதுப்புநில வாழிடங்கள் அழிப்பினால் இந்த முதலை இனம் எண்ணிக்கையில் குறைவுற்று  அழிவை நோக்கிச் செல்லும் இனம் (Vulnerable Species) என்று இன்றைய கவனிப்பில் உள்ளது.
 wetlands.jpg
இந்த முதலை இனத்தை மகரம் என்று அழைப்பதால் இந்த முதலைக்கு  Mugger Crocodile என்ற பெயர் ஏற்பட்டது.  ஆனால் காலப்போக்கில் மகரம் என்றால் தொன்மக் கதையில் வரும் விலங்கினம் என்ற நிலை உருவானது மட்டுமின்றி,  மகரம் என்பது மகர மீன் வகையைக் குறிப்பதாகவும் மாறிவிட்டது. மகரம் என்பது கராம் என்றோ அல்லது கராம் என்பது மகரம் என்றோ மாறியிருக்கலாம்.  இவை நன்னீரில் வாழும் என்பதால் கராம் இன முதலை பொய்கை, அகழி, ஏரி, குளம், ஆறு, மடு, குண்டு, வாவி, கடற்கரைப் பகுதி சதுப்புநிலங்கள், கழிகள்  எனப் பல இடங்களில் வாழ்ந்ததாக இலக்கியப் பதிவுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  இவை பெரியதும் இன்றி சிறியதும் அன்றி இடைப்பட்ட அளவில் 4 அல்லது 5 மீட்டர் நீளம் கொண்டதாக  இருக்கும். முதலை இனங்களிலேயே மிகவும் அகண்ட வாயமைப்பு உடையதாக இந்த முதலை அறியப் படுகிறது. இவற்றில் ஆண் பெண் என்று பாலினம் பிரித்து அறிவது கடினம். இவற்றின் மேல் தோல்  சதுப்புநில சேற்றுடன் ஒத்துப் போக்கும் வகையில் அடர்த்தியான சாம்பல் கருப்பு நிறத்திலும் மரப்பட்டைகள் செடிகொடிகளுடன் மறைத்துவாழும் வகையில் தகவமைப்பைக்  கொண்டிருக்கும்.
 
2. முதலை  — Estuarine or Saltwater Crocodile (Crocodylus porosus):
கடற்கரையை ஒட்டிய உப்புநீர்க் கழிகளில், கழிமுகப் பகுதிகளில் வாழ்பவைதான் முதலை என்று அழைக்கப் படுபவை.  இவை உப்பு நீரில் மட்டும் வாழும் தகவமைப்பு கொண்டவை. இந்தியாவின் கிழக்குக் கரையோரங்களில் மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவில் இந்த இன முதலைகள் வாழ்கின்றன, இவை அழியக் கூடும் என்ற எச்சரிக்கை இல்லாத நிலையிலும் உள்ளவை. ஊர்வனவற்றிலேயே உலக அளவில் மிகப் பெரிய விலங்காக இருப்பது  உப்புநீரில் வாழும் முதலைதான், இதன் எடையும் அதிகம், உடலின் நீளமும் 7 மீட்டர் வரையிலும் கூட  இருக்கும்.

இம்முதலைகள் கடல் நீரில் வாழும் சில உயிரினங்கள் போல உடலில் அதிக அளவில் சேரும் உப்பை வெளியேற்றும் சுரப்பிகள் கொண்டவை. இச்சுரப்பிகள்  பெரும்பாலும் வாய்ப்ப குதியில் நாக்கின் அடியே இருப்பது வழக்கம். சில வகை முதலைகளுக்குக் கண்கள் பகுதியிலிருந்து சுரப்பி சுரக்கும் உப்பு நிறைந்த நீர் வெளியாகும்.  
tears -Types of Indian Crocodiles.jpgபொய் அழுகையை  'முதலைக் கண்ணீர்' (மெய்யான கண்ணீர் அல்ல) என்று குறிப்பிடக் காரணமும் இதுவே. ஆனால், முதலையைப் பொருத்தவரை அதிக அளவு உப்பைச் சுரப்பிகளின் மூலம் வெளியேற்றி, உடலின் உப்பு அளவை சீரான நிலையில் வைத்திருக்க உதவும் ஒரு தகவமைப்பு இது [6].  

3. இடங்கர் — Gharial (Gavialis gangeticus):
இந்திய முதலைகளில் மிக நீண்ட கூம்பு போன்ற முகம் கொண்ட முதலை இனம் இது. ஒருகாலத்தில் இந்திய நிலப்பரப்பில் பரவலாக வாழ்ந்தாலும் காலப்போக்கில் கங்கைச் சமவெளிப் பகுதியுடன் இடங்கர் இனத்தின் வாழ்விடம் குறுகிவிட்டதாகத் தெரிகிறது. இன்றைய நாட்களில் ஒரிசா மாநிலத்திற்கு தெற்கே, கோதாவரி ஆற்றுக்குத் தெற்கே  இந்த இனத்தைப் பார்க்க இயலாது என்பது தெரிகிறது. இதில் ஆண் பெண் பாலின வேறுபாட்டைத் தெளிவாகக் காண இயலும், வளர்ந்த ஆண் முதலையின் முகத்தின் நுனிப்பக்கம் குடுவை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும்.  இவ்வாறான அடியில் பருத்தும்,  இடுங்கிய  அல்லது குறுகிய நீண்ட கழுத்து கொண்ட குடுவை போன்ற முக அமைப்பின் தோற்றத்தினால் இதற்கு 'காரியல்' (Gharial -  ghara, an Indian word for pot because of a bulbous knob, ஜாடி வகை) என்ற பெயர் வந்தது.  தமிழிலும் 'இடங்கர்' என்பதற்கு 'நீர்மிடா' என்ற பொருள் உண்டு. ஆக, இம்முதலைகளின் முகம் மற்றும் வாய் அமைப்பின்  தோற்றம் காரணமாக இவை  தமிழிலோ அல்லது வடமொழியிலோ அதற்கானப் பெயரைப் பெற்றுள்ளன என்பது தெரிகிறது.   இடங்கர்  இன முதலைகள் நன்னீரில்  வாழ்வன.  மீன்களை அதிகம் உண்ணும், வட இந்தியக் கங்கைச் சமவெளி முதலை  இனம் இது, இதன் நீளம் 6 மீட்டர் வரை இருக்கும்.  இந்த இனம் அழிவை நோக்கி விரையும் இனம் என்பதால் பாதுகாக்கப் படவேண்டிய இனம் என்ற எச்சரிக்கை நிலையின் கீழ் உள்ளது.

முடிவுரை:
எனவே,  இந்தியாவில் காணப்படும் முதலை வகைகள் 'முதலை'  எனப் பொதுவாகக்  குறிப்பிடப்பட்டாலும், அவை கராம் (Crocodylus palustris), முதலை (Crocodylus porosus), இடங்கர் (Gavialis gangeticus) இனங்கள் என்பதையும், அத்துடன் தோற்றத்தாலும், வாழும் இடத்தாலும் வேறுபட்ட முதலை இனங்கள்  என்பதையும் அறியலாம்.  கராம் இன முதலைகளை இடங்கர் வாழும் இடங்களிலும் முதலை வாழும் பகுதிகளிலும் காண இயலும். இன்றைய நாட்களில் இந்த மூன்று இன முதலைகளும் வாழ்வது ஒரிசா மாநிலத்தில் மட்டுமே.  கராம்,  முதலை,  இடங்கர் குறித்து இலக்கியம் வழியாக மேலும் தெளிவாக அறிய இயலும். ஆனால் சான்றுகளுடன் அவற்றை விரிக்கின் பெருகும் நிலை உள்ளதால் இலக்கிய ஆய்வு முடிவுகள் தனியாகக் காட்டப்படுதல் நலம்.

IUCN Red List of threatened species status:
Crocodylus palustris (mugger) vulnerable, Crocodylus porosus (saltwater crocodile) least concern and Gavialis gangeticus (Gharial) Critically Endangered as per IUCN Red List of threatened species.

மேலதிகத் தகவலுக்கு:
[1] ஆதிச்சநல்லூர், தமிழிணையம் - தகவலாற்றுப்படை
https://www.tagavalaatruppadai.in/excavations-details?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6

[2] பாவாணர்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்: பக்கம் 38.

[3] Types of Crocodiles & Differences Between Crocodiles and Alligators and Gharials –  Bio Explorer.
https://www.bioexplorer.net/animals/reptiles/crocodiles/

[4] The Crocodiles Of India
https://www.natureinfocus.in/animals/the-crocodiles-of-india

[5] சதுப்பு நிலங்களைக் காப்போம்! பாறப்புறத் இராதாகிருஷ்ணன், தினமணி, செப்டெம்பர் 2022.
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2022/sep/02/lets-save-the-wetlands-3908920.html

[6] Crocodile tears: secretion of orbital fluid in a large, saltwater crocodile Crocodylus porosus Schneider, 1801, Herpetology Notes, volume 11: 373-374 (2018) (published online on 02 May 2018)
https://www.biotaxa.org/hn/article/view/34573/32999

நன்றி:
இந்தியாவின் முதலை இனங்கள்
— தேமொழி
தமிழணங்கு (பிப்ரவரி 2023) மலர்:1, இதழ்:8
``````````````````````````

தேமொழி

unread,
Feb 11, 2023, 4:03:06 AM2/11/23
to தமிழ் மன்றம்

நன்றி:   சிறகு - http://siragu.com/தமிழ்-இலக்கியங்களில்-முத/

தமிழ் இலக்கியங்களில் முதலைகள் — ஓர் மீளாய்வு

 —  தேமொழி  

பிப்ரவரி  11, 2023

1. wiki crocodile.jpg
முன்னுரை:
இயற்கையையும் அது சார்ந்த செய்திகளையும் மிக நுணுக்கமாகப் பதிவு செய்யும் பழந்தொகை நூல்களில் முதலைகளை இடங்கர், கராம், முதலை என்று பல பெயர்களில் இலக்கியப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக, வளைந்த கால்களைக் கொண்ட முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும் என்ற பொருள் தரும் “கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்” (குறிஞ்சிப்பாட்டு-257) என்ற குறிஞ்சிப்பாட்டு வரியானது பொதுவாக இச்சொற்கள் முதலையைக் குறிப்பதாக இன்று அறியப்பட்டாலும் இவை வெவ்வேறு முதலை இனத்தைக் குறிக்கும் சொற்கள் என்று காட்டி, ஒவ்வொன்றும் வெவ்வேறு வகை என்று தெளிவுபடுத்துகிறது. இலக்கியம் தரும் முதலை குறித்த தரவுகளை மீள்பார்வை செய்ததில், முதலை என்பதை பொதுவான சொல்லாக ஏற்கும் முறை காலம் செல்லச் செல்ல பிற்காலத்தில் அதிகரித்துள்ளது தெரிகிறது.

2. Types of Indian Crocodiles.jpg

— கடற்கரையோரமும், கழிமுகப் பகுதிகளிலும் உப்புநீர் பகுதிகளில் வாழ்வனவற்றை முதலை (Crocodylus porosus) என்றும்,
— ஆறு, குளம் போன்ற நன்னீர் பகுதிகளில் வாழ்வன கராம் (Crocodylus palustris) இன முதலைகள் என்றும்,
— நன்னீர் பகுதிகளில் வாழும் நீண்ட கூம்பு போன்ற முகம் கொண்ட முதலை இனம் இடங்கர் (Gavialis gangeticus) என்றும் குறிப்பிடும் வழக்கம் இருந்ததை இலக்கிய ஆய்வின் மூலமும் அறியலாம். [1]

நிகண்டுகளிலும் அகராதிகளிலும் முதலை:
கராம் இன முதலைகள் வடமொழியில் மகரம் (मकर — makara) என்று அழைக்கப்படுவதை சமற்கிருத அகராதி காட்டுகிறது [2]. தமிழ் இலக்கியங்களில் மகரம் என்பது சுறா (Shark) மீனைக் குறிக்கும் என்பதைத் தமிழ் நிகண்டுகள் மூலம் அறிய முடிகிறது.

ஆக, மகரம் என்பது வடமொழி வழக்காற்றில் முதலையையும், தமிழர் வழக்காற்றில் மகரம் என்பது கடலில் வாழும் சுறா மீனைக் குறிப்பதும் தெளிவாகிறது. கராம் இன முதலையை ஆங்கிலத்தில் பொது வழக்கில் குறிப்பிடுகையில் ‘Mugger Crocodile’ என்று குறிப்பிடுகிறார்கள். முக்கர் என்பது மகரம் என்பதில் இருந்து பெறப்பட்ட பெயர் என்றும் கூறப்படுகிறது (The Mugger Crocodile got its name from Indian mythology, where crocodile-like animal called ‘Magara‘. So the names Mugger and Magar are interchangeably used). [3]

‘தமிழ் இலக்கிய அகராதி’ என்ற அகராதி நூலும் மகரம் என்ற சொல்லுக்கு முதலை என்ற பொருளைக் காட்டுகிறது.[4] இவ்வாறு குழப்பம் தரும் வகையில் மகரம் என்ற சொல் முதலையையும் சுறாவையும் குறிப்பிடும் சொல்லாக ஒருசேரக் காட்டப்படுவதால் தமிழ் நிகண்டுகளிலும், தமிழ் இலக்கியங்களில் பலவற்றிலும் முதலை குறித்த ஆழ்ந்த தேடல் ஒன்று தேவையாகிறது.

சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி நிகண்டுகளில் முதலை:
முதலையின்‌ பெயர்‌ — சேந்தன் திவாகரம் நிகண்டு;
கிஞ்சுமாரமும்‌, இடங்கரும்‌, கராமும்‌, வன்‌ மீனும்‌, முதலை (ஆகும்‌) – 196
ஆண்‌ முதலையின்‌ பெயர்‌ கராம்‌, அவற்று ஆண்‌ (எனக்‌ கருதல்‌ வேண்டும்‌)-197
முதலையின்‌ பெயர்‌ — பிங்கல நிகண்டு;
சிஞ்சுமாரம்‌, இடங்கர்‌, வன்‌ மீன்‌, கராவே, கராமும்‌, முதலை – 318
கரா, அதன்‌ ஆண்‌ (எனக்‌ கருதல்‌ வேண்டும்‌) – 319
முதலையின்‌ பெயர்‌ — சூடாமணி நிகண்டு;
முதலை, செங்கிடையும்‌, முருந்தும்‌, இடங்கரும்‌. – 942
அதாவது, கிஞ்சுமாரம்/சிஞ்சுமாரம்‌, இடங்கர்‌, கராம்‌, வன்‌ மீன்‌, செங்கிடை, முருந்து, முதலை ஆகிய பெயர்கள் முதலையைக் குறிக்கும் என்றும், ஆண்‌ முதலையின்‌ பெயர்‌ கராம்‌ அல்லது கரா என்றும் நிகண்டுகள் பொருள் கூறுகின்றன[5].

நிகண்டுகள் கூறும் கரா = ஆண் முதலை என்ற பொருளை, “கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்” என்ற குறிஞ்சிப்பாட்டு வரியுடன் ஒப்பிட்டால், ஆண்‌ முதலையின்‌ பெயர்‌ கராம்‌ அல்லது கரா எனப் பொருள் கொள்வது சரியல்ல என்பதும், இந்தியாவில் தொன்று தொட்டு இன்று முதல் காணப்படும் மூன்று முதலை வகைகளையே குறிஞ்சிப்பாட்டு வரி தெளிவாகக் காட்டுகிறது என்றும் அறியலாம்.

மகரம்‌, சுறா மீன்‌ (ஆக வைப்பர்‌) என சேந்தன் திவாகரம் நிகண்டு-198 [5]
என்று குறிப்பிடுகிறது. இந்த ‘மகரம்’ என்ற சொல்லுக்கு மகர மீன்‌, பெரு மீன்‌, யானை விழுங்கும்‌ மீன்‌, திமிங்கிலம் என்ற விளக்கங்களும் நிகண்டில் காணப்படுகிறது. எனவே, மகரம் என்பது மிகப் பெரிய சுறாமீன், யானையை விழுங்கக் கூடிய தன்மையில் அளவில் பெரியது என்பதுடன் திமிங்கிலம் என்பதாகவும் காட்டப்படுகிறது. மகரம் கடலில் வாழ்வதாக மட்டுமே நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக, ‘முதலையை நிகண்டுகள் மகரம் என்று குறிப்பிடவில்லை’ என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
மலரின்‌ தாதுவான மகரந்தத்தைக் குறிக்கவும், மகரக் குறுக்கம் போன்ற இலக்கண விளக்கங்களிலும் மகரம் என்ற சொல் வேறு பொருள் கொண்டு பயின்று வருகிறது என்பதைக் கடந்துவிடலாம். காமனின் மகரக் கொடியில் மகரம் இருப்பதுடன் பலவகை அணிகலன்களும், இசைக்கருவிகளும் தோரணவாயில்களும் மகர என்ற சொல்லுடன் இணைத்துக் காட்டப்பட்டிருப்பதை மகரக்குழை, மகர வலயம், மகர குண்டலம், மகர வாசிகை, மகர யாழ், மகர வீணை, மகரக் கொடி, மகர தோரண வாயில், மகர ராசி என்ற பொருள் தரும் சொற்கள் மூலம் அறிய முடிகிறது.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் முதலை:
3. lit review on crocodiles.jpg
“கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்” 
என்ற குறிஞ்சிப்பாட்டு வரியை முதலை குறித்த ஆய்வுக்கு அடிப்படையாக இக்கட்டுரை எடுத்துக் கொள்கிறது. முனைவர் ப. பாண்டியராஜா அவர்கள் உருவாக்கிய இலக்கியத் தொடரடைவுகள் இணையதளம் (tamilconcordance.in) இந்த ஆய்வுக்கு மிகவும் இன்றியமையாத உதவியாக அமைந்தது (பார்க்க – படம்).

தமிழிலக்கியங்கள் மகரம் முதலையைக் குறிக்கவில்லை என்பது ஆய்விற்குப் பின்னர் தெளிவானதால், குழப்பம் தவிர்க்கும் நோக்கில் படத்தில் கொடுக்கப்பட்ட அட்டவணையில் மகரம் குறித்துச் சேகரித்த இலக்கியத் தரவுகள் காட்டப்படவில்லை. அவ்வாறே முதலை என்பது இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளதாகக் குறிக்கப்பட்டாலும், அது பரம்பொருளை/முதல்வனைக் குறிப்பதாக வேறு பொருளில் இடம் பெற்றிருந்தால் எண்ணின் அருகில் கேள்விக்குறி இடப்பட்டுள்ளது.

1. தொல்காப்பியம், 2. இறையனார் அகப்பொருள், 3. புறப்பொருள் வெண்பாமாலை, 4. நன்னூல், 5. நேமிநாதம், 6. சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு + எட்டுத்தொகை 18 நூல்கள்), 7. பதினெண்கீழ்க்கணக்கு(18 நூல்கள்), 8. சிலப்பதிகாரம், 9. மணிமேகலை, 10. சீவக சிந்தாமணி, 11. வளையாபதி, 12. குண்டலகேசி, 13. முத்தொள்ளாயிரம், 14. ஐஞ்சிறுகாப்பியங்கள், 15. கம்பராமாயணம், 16. நளவெண்பா, 17. பெருங்கதை, 18. கலிங்கத்துப்பரணி, 19. வில்லி பாரதம், 20. மூவர் தேவாரம் (திருமுறை 1 – 7), 21. திருவாசகம்(திருமுறை 8(1)), 22. திருக்கோவையார்(திருமுறை 8(2)), 23. திருமந்திரம் (திருமுறை 10), 24. பெரியபுராணம் (திருமுறை 12), 25. நாலாயிரத் திவ்விய பிரபந்தம், 26. திருப்புகழ், 27. தேம்பாவணி, 28. சீறாப்புராணம், 29. திருவருட்பா, 30. தாயுமானவர் பாடல்கள், 31. இரட்சணிய யாத்திரிகம் — என 65 நூல்களின் தொடரடைவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இந்த நூல்களில் இடங்கர், கராம்/கராஅம், மகரம், முதலை ஆகிய சொற்கள் இடம் பெரும் வரிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் கண்டறியப்பட்டவை பின்வருவன:

1. இடங்கர்: 
இடங்கர் குறித்த தமிழிலக்கியக் குறிப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி – மலைபடுகடாம் 211
கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறிஞ்சிப்பாட்டு 257
என்று சங்க இலக்கியங்களில் 2 முறை மட்டும் காணக்கிடைக்கிறது. இடங்கர் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தியவர் பிற்காலத்தில், 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர். கம்பராமாயணத்தில் 12 முறை இடங்கர் குறிப்பிடப்படுகிறது.

எடுத்துக்காட்டாக: பொய்கையின் இடங்கர் கவ்வ புராதனா போற்றி என்று – யுத்1:8 16/3
கம்பராமாயணப் பாடல்களில் இடங்கர் வாழுமிடங்களாகப் பொய்கை (யுத்1:8 16/3), கயம் (யுத்1-மிகை:3 18/1), அகழி (யுத்2:15 4/3), ஆகிய இடங்கள் காட்டப்படுகிறது.

அதற்குப் பிற்காலத்தில் எழுதப்பட்ட வில்லிபாரதம் (1 முறை), திருப்புகழ்(1 முறை), தேம்பாவணி(1 முறை), திருவருட்பா (2 முறை) போன்ற இலக்கியங்களில் இடங்கர் இடம் பெறுகின்றது. ஆனால் இடங்கர்=கராம்= முதலை என்ற பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது. இடங்கர் குறித்த இக்குறிப்புகள் கம்பராமாயணம் கொடுத்த தாக்கம் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

2. கராம்: 
தமிழின் முதல் நூலாக அறியப்படும் தொல்காப்பியத்தில் கராம் குறிப்பிடப்படுகிறது.
‘கராஅம்’ கலித்த கண் அகன் ‘பொய்கை’ – பட்டினப்பாலை 242 (பொய்கை)
‘கான்யாற்று’ ‘கராஅம்’ துஞ்சும் – அகநானூறு 18/3 (காட்டாறு)
‘கராஅம்’ கலித்த குண்டு கண் ‘அகழி’ – புறநானூறு 37/7 (அகழி)
‘கய’த்திடை கயமும் வெம் ‘கராமும்’ – வில்லிபாரதம்:1 36/3 (கயம்)
கராம் பொய்கை, காட்டாறு, அகழி, குளம் போன்ற பகுதிகளில் இருப்பதாக மேலே காட்டப்பட்ட பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

3. முதலை:
முதலை உப்புநீர் கொண்ட கடற்கரை கழிகளில் இருப்பதாகக் காட்டப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக சில பாடல்கள்:
கொடும் ‘கழி’ பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன் நாம ‘முதலை’ – நற்றிணை 287/6 (கழி)
இரும் ‘கழி’ ‘முதலை’ மேஎந்தோல் அன்ன – அகநானூறு 3/1 (கழி)
கொடும் தாள் ‘முதலை’ கோள் வல் ஏற்றை வழி வழக்கு அறுக்கும் ‘கானல்’ அம் பெரும் துறை – குறுந்தொகை 324/1 (கடற்கரை கானல்)

முதலை நன்னீர் வாழ்வனவாகவும் காட்டப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக சில பாடல்கள்:
கோள் வல் ‘முதலை’ய குண்டு கண் ‘அகழி’ – பதிற்றுப்பத்து 53/8
கடு முரண் ‘முதலை’ய நெடு நீர் ‘இலஞ்சி’ – புறநானூறு 37/10
‘ஆறே’ அருமர பினவே; யாறே சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை ‘முதலை’ – அகநானூறு 72/7-9

இடங்கரும் கராமும் முதலையும் வாழுமிடங்கள்:
நற்றிணை பாடல்களில்;
கராம் காட்டாற்றில் இருப்பதாக – நற்றிணைப் பாடல் 292 குறிஞ்சித்திணைப் பாடலும்
முதலை கழியில் இருப்பதாக – நற்றிணைப் பாடல் 287 நெய்தற்திணைப் பாடலும் காட்டுகின்றது
இவை தெளிவான வாழிட வேறுபாடுகளைக் காட்டும் பாடல்களாக உள்ளன.

மாறாக, ஒரே பாடலில் அகழியில் கராமும் முதலையும் இருப்பதாகப் புறநானூறு பாடல் (பாடல் 37) கூறுகிறது. இப்பாடலில் ஒரே அகழியில் உள்ள முதலையைக் குறிக்க கராம் முதலை ஆகிய இரு சொற்களும் அடுத்தடுத்து வருகிறது. இந்த அகழி வஞ்சி மாநகரின் சேரன் கோட்டையினைச் சுற்றியுள்ள அகழி. அதைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் போரிட்டு வென்றதைப் பாராட்டி மாறோக்கத்து நப்பசலையார் சில பாடல்களைப் பாடியுள்ளார்.
‘கராஅம்’ செருக்கித்திரியும் ஆழமான இடத்தையுடைய அகழியினையும், கரிய இடமாகிய ஆழத்தில், ஒன்று சேர்ந்து ஓடி யாமத்தை அறிவிப்பவரின் விளக்கின் நிழலினைக் கவ்விப்பிடிக்க முயலும் கடும் பகைமையுணர்வு கொண்ட ‘முதலை’களையுடைய ஆழமான நீரையுடைய நீர்நிலைகளையும் செம்பினால் ஆக்கப்பட்டது போன்ற மதிலையும் உடைய தலைமைப் பண்புள்ள பழமையான வஞ்சி மாநகரை வென்றவன் என்ற பொருள் தரும் கீழ்க்காணும் பாடலை மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார்.

சினம் கெழு தானை செம்பியன் மருக
‘கராஅம்’ கலித்த குண்டு கண் அகழி
இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் ‘முதலை’ய நெடு நீர் இலஞ்சி
செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர்
புறநானூறு பாடல்: 37/10 – மாறோக்கத்து நப்பசலையார்

இதிலிருந்து சங்க இலக்கியங்களிலேயே நன்னீர் வாழும் கராம் முதலை ஆகியவற்றை ஒரே பொருளில் பயன் கொண்டது தெரிகிறது. இதனால்தான் நிகண்டுகளும் கராம் என்பதை ஆண் முதலை எனக் குறிப்பிடுகின்றன எனக் கருத வேண்டியுள்ளது. ஆனால் முதலை இனத்தில் தோற்றத்தைக் கொண்டு ஆண் பெண் பிரித்தறிவது கடினம் என்று இன்றைய அறிவியல் தரவுகள் காட்டுகின்றன. இடங்கர் இன முதலை வகையில் மட்டுமே தோற்றத்தில் வெளிப்படையான வேறுபாடு காண இயலும்.

இது போன்றே மணிமேகலை பாடல் ஒன்றும் அகழியில் கராமும் இடங்கரும் ஒருசேர இருந்ததாகக் காட்டுகிறது.

கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் – மணிமேகலை:28/18

காஞ்சியின் அகழியில் புகும் பல்வேறு வகையான மணம் பரப்பும் நன்னீர் வகைகள் கலத்தலின் அந்நறுமணம் அங்குள்ள கராம், இடங்கர், மீன்கள் ஆகியவற்றையும் மணம் பெறச் செய்கின்றன என்று சாத்தனார் கூறுகிறார்.

4. முதலைகள் குறித்து செறிவுமிகுந்த தகவல் தரும் பழந்தொகை நூல்கள்:
ஆண் முதலையானது முற்ற வளர்ந்த மீன்களை நிறைய உண்ணும் (ஐங்குறுநூறு – 5/4);
தான் ஈன்ற குட்டியையே தானே தின்னும் முதலை (ஐங்குறுநூறு – 24/2; ஐங்குறுநூறு – 41/1,2);
முழங்கால் அளவேயான சிறிது நீரில் யானையைக் கொன்று வீழ்த்த இழுக்கும் ஆற்றலையுடைய முதலை (புறநானூறு 104, வரி 3-4);

இரையைத் தேர்ந்தெடுத்து அதை நோக்கி மெதுவாக ஊர்ந்து நகரும் வளைந்த காலையுடைய முதலை (மலைபடுகடாம் – 90,91)
போன்று முதலையின் பண்புகளை ஆவணப்படுத்தியுள்ளதுடன்,

நன்னீரில் வாழும் கராம் இன முதலை பொய்கை, அகழி, ஏரி, குளம், ஆறு, மடு, குண்டு, வாவி, சுனை, கடற்கரைப் பகுதி சதுப்புநிலங்கள், கழிகள் எனப் பல இடங்களில் வாழ்ந்ததாக இலக்கியப் பதிவுகளும் கொண்டு சங்க இலக்கிய நூல்கள் விலங்கின் வாழிடம், தோற்றம், பண்பு போன்றவற்றைக் குறித்த குறித்த செறிவான தகவலைக் கொடுக்கின்றன.

5. புராணக் கதைகள் கூறும் பிற்கால இலக்கியங்கள்:
பிற்கால இலக்கியங்களில், குறிப்பாக வைதீக மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு உள்ள பெரும்பாலான நூல்களில் முதலையின் பண்பு தோற்றம் போன்ற தகவல்களை ஆவணப்படுத்தும் வழக்கம் ஒழிந்துவிடுகிறது. மாறாக, முதலை குறித்த இரண்டே புராணக் கதைகள் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் பொழுதுதான் முதலை பற்றிய குறிப்புகள் பிற்கால இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவை முதலை குறித்த பயனுள்ள செய்திகளைக் கொண்டிருக்கவில்லை.

4.myth.jpg
(i) சுந்தரர் முதலை வாயில் இருந்து சிறுவனை மீட்டதைக் குறிக்கும் கதை:
திருப்புக்கொளியூர் என்று முற்காலத்தில் போற்றப்பட்ட ‘அவிநாசி’ பகுதிக்கு வரும் சுந்தரர் ஒரு இல்லத்தில் சிறுவனுக்கு உபநயனம் (பூணூல் அணிவித்தல்) நடக்கும் பொழுது அருகில் மற்றொரு வீட்டில் அழுகை ஒலி கேட்டு காரணம் வினவுகிறார். பூணூல் அணிவிக்கப்படும் சிறுவனும் அவனது தோழனுமான அண்டை வீட்டுச் சிறுவனும் இரு ஆண்டுகளுக்கு முன்னர் குளத்தில் விளையாடுகையில் தோழனை அங்குள்ள முதலை விழுங்கிவிடுகிறது. இன்று இவனுக்கு உபநயனம் நடப்பதைப் பார்க்கும் மகனைப் பறிகொடுத்த பெற்றோர், நம் மகனும் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவனுக்கும் உபநயனம் நடந்திருக்குமே என்று ஏங்கி அழுவதைச் சுந்தரர் தெரிந்து கொள்கிறார். சிறுவன் மறைந்த குளத்திற்குச் சென்று சிறுவனை மீட்க விரும்பி சிவனிடம் வேண்டி “புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே” என்று பாடுகிறார் [7] . இவ்வாறாகச் சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடி, இரண்டு வருடங்களுக்கு முன் முதலை விழுங்கிய குழந்தையைத் திரும்பப் பெற்றார் என்ற கதை பக்தி இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் வள்ளலார் காலம் வரை குறிப்பிடப்படுகிறது.

புரை காடு சோலை புக்கொளியூர் அவிநாசியே
கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே
- தேவாரம் -சுந்:936/3, 4 [8-ஆம் நூற்றாண்டு]
பெரு வாய் ‘முதலை’ கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளைதனை
- பெரியபுராணம் – 13.வெள்ளானைச் சருக்கம்:1 12/1 [12-ஆம் நூற்றாண்டு]
வெம் ‘கரா’ வாய்-நின்று பிள்ளை வர பாடும் வன் தொண்டர்க்காய் – திருவருட்பா -திருமுறை2:89 2/2,3 [19-ஆம் நூற்றாண்டு]

(ii) முதலை வாய்ப் பட்ட களிறு கஜேந்திரன்:
காட்டிலுள்ள யானைக் கூட்டத்திற்குத் தலைவனாக விளங்கிய ‘கஜேந்திரன்’ என்ற யானை நாள்தோறும் குளத்திலிருந்து தாமரை மலர்களைப் பறித்து திருமாலுக்குச் சாற்றி வழிபட்டு வருகிறது. ஒருநாள் குளத்திலிருந்த முதலை யானையின் காலைக் கவ்வி குளத்திற்குள் இழுக்கிறது. போராட்டத்தில் இறுதியாகத் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பிய கஜேந்திரன், “ஆதிமூலமே!” என்று அலறி திருமாலை அழைக்க, கருட வாகனத்தில் திருமால் விரைந்து வந்து, தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையைத் துண்டித்து யானையைக் காப்பாற்றுகிறார் [8]. இக்கதை பக்தி இலக்கியங்களில் திருமாலின் புகழ் பாட மீண்டும் மீண்டும் பல நூல்களில் இடம்பெறுகின்றது.

‘முதலை’ வாய் பட்ட களிறு – நாலாயிரத் திவ்விய பிரபந்தம்:126/1[7- 9ஆம் நூற்றாண்டு]
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற ‘கரா’ அதன் காலினை கதுவ
- நாலாயிரத் திவ்விய பிரபந்தம்:1076/2 [7- 9ஆம் நூற்றாண்டு]
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு ‘இடங்கர்’ பாழ் படவே எறிந்த
- திருப்புகழ் :82/13 [15-ஆம் நூற்றாண்டு]
(குறிப்பு: மேலே காட்டப்பட்ட பாடல்களில் ஒரே தொன்மக் கதைக்கு, முதலை கராஅம், இடங்கர் ஆகிய சொற்கள் மாற்றி மாற்றி எடுத்தாளப்பட்டுள்ளதைக் காண்க)

6. மகரம்: 
மகரம் என்ற குறிப்பு தமிழிலக்கியங்களில் பலமுறை தோன்றுகிறது. இருப்பினும், இவை முதலையைக் குறிப்பன அல்ல. நிகண்டுகளில் கண்டது போல தமிழிலக்கியத்தில் காணப்படும் ‘மகரம்’ என்ற சொல் சுறாமீனுடன் தொடர்பு கொண்டவை மட்டுமே. இது மாறுபடும் ஒரே ஒரு இடம் தேவாரத்தில் இடம் பெறுகிறது. சுந்தரர் தேவாரப் பாடல் வரி ஒன்றில் மகரமும் சுறாவும் அடுத்தடுத்து இடம் பெறுகின்றன.
“மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே.” (தேவாரம் 7.71 திருமறைக்காடு)
கடல் அலைகள் மகர மீனையும், சுறா மீனையும் கொணர்ந்து எறிகின்ற திருமறைக்காட்டின் கடற்கரை என்று மறைக்காடு பற்றிய சுந்தரரின் 7 ஆம் திருமுறை 71 ஆம் பதிகம் குறிப்பிடுகிறது.

உரை எழுதியவர்கள் பெரும்பாலும் மகர மீனையும், சுறா மீனையும் கடல் அலைகள் கரையில் எறிகின்றன என்று குறிப்பிடுகிறார்கள். நிகண்டுகளின் அடிப்படையில் பொருள் கொண்டால் அந்த மகர மீன் என்பது பெருமீன் திமிங்கிலமாகவும் இருக்கக்கூடும் எனப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. இராம.கி அவர்கள் தரும் விளக்கத்தில் மகரம் = முதலை எனப் பொருள் கொள்கிறார் [9].

மகரம் என்பது இலக்கியங்களில் கடலுடன் தொடர்பு கொண்ட உயிரினமாகவே வருகிறது.

எடுத்துக்காட்டு: பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை பொங்கி – கம்பராமாயணம், சுந்:10 8/1
நெரிஞ்சுற, கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம் நுங்க – கம்பராமாயணம்: சுந்-மிகை:1 3/4
என்ற பாடலில் சுறா = மகரம் மீன் என்ற பொருள் படவும் கூறப்படுகிறது.

ஆகவே, ஆற்றில், குளத்தில், பொய்கையில், ஏரியில் வாழும் முதலைகளை மகரம் என்ற சொல் குறிப்பதாக இக்காலத்தில் கூறப்படும் விளக்கங்கள் பொருத்தமற்றவை என்பதை அறியலாம்.

முடிவுரை:
முதலையும் இடங்கரும் கராமும் (குறிஞ்சிப்பாட்டு-257) என்ற குறிஞ்சிப்பாட்டு தனித்தனியே முதலை இனங்களைத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டினாலும் பிற்காலத்தில் முதலை, இடங்கர், கராம் ஆகியன முதலையைக் குறிக்கும் ஒரே சொல் என்ற ஒரு பொருட் பன்மொழி (பல சொற்கள் ஒரு பொருளைக் குறிப்பிடும்) வழக்கு ஏற்பட்டுவிட்டது. சங்க இலக்கியங்கள் முதலைகளைக் குறித்துச் செறிவான செய்திகளைப் பதிவு செய்துள்ளன. பிற்கால இலக்கியங்களில் காணப்படும் முதலை குறித்த தகவல்கள் கஜேந்திரமோட்சம், முதலை வாயிலிருந்த சிறுவனை மீட்ட கதை ஆக்கியவற்றுடன் மட்டுமே தொடர்புடையனவாகக் காணமுடிகிறது. மகரம் என்று முதலையைக் குறிப்பிடுவது வடமொழி வழக்காறு. தமிழ் இலக்கியங்கள் காட்டும் மகரம் சுறாமீனை மட்டுமே குறிக்கிறது எனவும் என்று இலக்கிய மீள்பார்வை மூலம் அறிய முடிகிறது.


சான்றாதாரங்கள்:
[1] இந்தியாவின் முதலை இனங்கள், தேமொழி. தமிழணங்கு (பிப்ரவரி 2023)  
https://archive.org/details/2023_20230130/page/19/mode/2up

[2] Spokensanskrit - An English - Sanskrit dictionary
https://www.learnsanskrit.cc/translate?search=makara&dir=au


[3] Types of Crocodiles & Differences Between Crocodiles and Alligators and Gharials –  Bio Explorer.
https://www.bioexplorer.net/animals/reptiles/crocodiles/

[4] தமிழ் இலக்கிய அகராதி, பாலூர் கண்ணப்ப முதலியார், மார்ச்சு 1957, பக்கம்: 314
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl3kZMy.TVA_BOK_0003568/page/314/mode/2up

[5] சேந்தன் திவாகரம் பிங்கலம் சூடாமணி, சாந்தி சாதனா பதிப்பு, 2004.
[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZUy.TVA_BOK_0002448]

[6] தமிழ் இலக்கியத் தொடரடைவு
http://tamilconcordance.in/

[7] முதலை வாயினின்று மீண்ட மதலை
http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=3205&id1=52&id2=0&issue=20160416

[8] கஜேந்திரனுக்கு மோட்சம்
http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5111&id1=50&id2=18&issue=20190416

[9] மறைக்காடு - 8
https://valavu.blogspot.com/2018/10/8.html
------------
Reply all
Reply to author
Forward
0 new messages