கல்வெட்டில் வரலாற்றின் சுவடுகள்
தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை வெளியிட்டுள்ள தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி XIX & XXII ஆகியவற்றில் இருந்து சில கல்வெட்டுகள்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊத்தங்கரை சாலையில் உள்ள கொரட்டி கிராமம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள 7 வரிக் கற்பலகைக் கல்வெட்டு.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ வலியடக்கியார்க் கேழாவது.
2. வலியடக்கியார் போவூர் நாடைந்நூறு பூமி
3. யுமாள காடு வெட்டிப்படை ஆறு[கு]ழுகூர் மேல்
4. வந்தெறிந்த ஞான்று வலியடக்கியார் கோ
5. [யி]ற்றமன் வாணிக வாணிளவரையன் இரண்டு
6. குதிரையும் மேலாரையும் குத்திப்பட்டான் நெ
7. த்தோர்பட்டி
ஞான்று - பொழுது; எறிந்த - அழித்த; கோயிற்றமன் - அரண்மனைப் பணியாள், சேவகன்; மேலார் - இராகுத்தான். குதிரை வீரர்.
விளக்கம்: மன்னர் வலியடக்கியார் போவூர்நாடு ஐநூறு நிலப்பரப்பை ஆண்டு கொண்டிருந்த போது அவனது 7 ஆம் ஆட்சி ஆண்டில் காடுவெட்டி மன்னனின் படை ஆறுகுழுமூர் ஊர் மீது வந்து அழித்த போது வலியடக்கியாரின் அரண்மனைப் பணியாள் வாணிக வாணிளவரையன் இரண்டு குதிரையை குத்திக் கொன்று அவற்றின் இராகுத்தன்களையும் கொன்று தானும் வீரசாவடைந்தான். அதற்காக அவன் குடும்பத்தாருக்கு குருதி சிந்தி உயிர் விடுவோருக்குத் தரப்படும் நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வழங்கப்பட்டது.
வாணிக என்ற சொல் இவன் வணிகர் குடியைச் சேர்ந்தவன் என்பதை காட்டுகிறது. அதே நேரம் வாணிளவரையன் என்பது இவன் வாணர் அரசர் குலத்தை சேர்ந்தவன் என்பதையும் குறிக்கிறது. இதாவது, பண்டு ஆறலைக் கள்வர் தம் பண்டங்களையும் உடைமைகளையும் கொள்ளையிடாமல் காத்தற் பொருட்டு வணிகர் தமக்கென தனியே ஒரு பாதுகாப்புப் படையை பேணினர். அப்படை சில வேளைகளில் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க எதிரி படையோடு போரிட்டு விரட்டியதால் மன்னன் வணிகரை சிறப்பித்து "எட்டி" என்ற பட்டம் வழங்கினான். இதுவே பின்னாளில் சகர முன் மெய் பெற்று 'செட்டி' ஆனது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் மன்னன் வணிகருக்கு தன் பெண்ணைக் கொடுப்பதும் வணிகரிடம் பெண் எடுப்பதும் நிகழ்ந்தது. அப்படியான ஒரு உறவில் தோன்றியவன் தான் இந்த வாணிக வாணிளவரையன் என்று புரிந்து கொள்ளலாம். இதாவது, வாண அரசன் வணிகனுக்கு மணம் முடித்த தன் மகள் வயிற்றுப் பேரனை தத்தெடுத்து இளவரசனாக ஆக்கி இருக்கிறான் என்பதே. மனுதர்மம் வணிகர்நெறி பொருள் விற்பது தான் என்று குறித்துள்ளது. ஆனால் இப்படி படை பேணுவதும் போரிடுவதும் சத்திரியர் நெறி என்று மனுஸ்மிருதி குறித்ததை வணிகர் செய்யலாமோ? இது விதி மீறல் அல்லவோ? இந்த மேற்கண்ட செயல் மனுதர்மம் தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்பதைத்தானே காட்டுகிறது? ஆனால் அரசியல் மேடையிலும் எழுத்திலும் மக்களை முட்டாள் ஆக்கும் விதமாக அல்லவா பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஆறு என்றால் ஓய்வு; குழுமூர் என்றால் கூடும் ஊர். இதாவது, படையினர் ஓய்விற்காக கூடும் ஊர் என்பது இதன் பொருள்.
பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XIX & ஆவணம் 12, 2001 பக்கம் 5.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேவர் முக்குளம் கிராமம் பள்ளிகொண்ட பெருமாள் கோவில் கூரையில் இருந்த 44 வரி வணிகக் கல்வெட்டு
ஸ்வஸ்திஸ்ரீ ராஜேந்திர / சோழ தேவற்கியாண்டு பதி / நெட்டாவதிற் / ஸ்வஸ்திஸ்ரீ தேவதேவந் த்ரி / _ _ வாணி அமரகன்யாச்சி தந் / வந்த தந்மோத புஜ / _ _ _ / ண் நாதந் ஸ்பஷ்ட நிர்ம்மித மஹாராசாதி / மர்த்தந ஸகல பராஸர / _ _ ரிய சாமுண்டேஸ்வரி / _ _ _ / வீரஸாஸன மஹா / புவந வீரர்க _ மஹா / வீர ஸ்ரீவி _ புத _ _ தி / ஐநூற்றுவரும் இ / வர் மக்களாந ஸ்ரீநா _ / வீரபுத்ரரோம் மாப்பந் புளியுமநை / க் கொன்ற பணிய் மக்கள் மண்டலங் / காக்கும் கண்டழியும் மண்டலங்கா / க்கும் கவறை செட்டியையும் ஐஞ் / ஞூற்றுவந் _ _ / (பின்பக்கம்) ல்கிந்ற பணிசை ம / கந் திடாவூரிருக்கும் ப்ரா / ஹ்மணந் அஞ்ஞூற்றுவாண்டா / நும் அருமொழிதேவ முநிவர் சி / ங்கமும் எதிராந சிங்கமும் சிறு / திடாவூரிருக்கும் கலியுக கண்டழி / யும் துறகலூர் எறியும் விடங்க / ச்செட்டியும் சத்துருகண்ட மாயி / லெட்டியும் பாதாளதூசியும் நாட்டுப் / பெருவாரியந் நாட்டுச்செட்டியும் / மேற்பாடி மூத்தநும் பாண்டி ஞாட்டைஞ் ஞூற்றுவாண்டாநும் வா / ளையூரைஞ் ஞூற்றுவாண்டாநு / ம் இவர்களோடும் வந்த பல்வ / கை வீரரும் ஸமையமும் இருக்க ந / ம் மகந், வீரகள் புத்திரனைக் கொற்ற / குலைப்பகையந் மாளனைக் குத்தி / க் கைதறித்து சமையத்துக் கிட / சோமையந் மகந் சாமுண்டந் பணி /கண்டு நாநாதேசிய வீர திருவடியாயிரு / ந்து இவனுக்கு வீர பட்டணஞ் செய்து / குடுத்து _ _ ணிக்கச் செட்டுங் கட்டி / _ யம்ப _ _ _
மக்களான - படைவீரரான; பணிசை - பணிசெய்; கண்டழி - துணை நிற்கும் படை; எறி - தங்கும் அல்லது காக்கும்; மாயிலெட்டி - எண்ணெய் வணிகன்; பெரு ஆரியன் - பெருந் தலைவன்; ஸமயம் - படையின் ஒரு பிரிவுப் பெயர்; கொற்ற - அச்சுறுத்திய; தறித்து - வெட்டி; கிட - ஆயுத சாலை; வீரபட்டணம் - வீரர் ஓய்வு கொள்ளும் மனைகள், rest house; கட்டி - அகமகிழ்ந்து; இயம்ப - சொல்ல
விளக்கம்: இந்த வணிகப் படைக் கல்வெட்டு முதலாம் இராசேந்திரனின் 18 ஆம் ஆட்சி ஆண்டு 1030 இல் வெட்டப்பட்டது. 3 ஆம் வரி முதல் 14 ஆம் வரி வரை வணிகர் தம் மெய்க்கீர்த்தியே இடம் பெற்றுள்ளது. 15 ஆம் வரியில் தான் செய்தி தொடங்குகிறது. திசை ஐந்நூற்றுவரும் இவருடைய படை வீரர்களான ஸ்ரீ நா _ _ வீரமக்களும் மாப்பன் புளியுமனை கொன்ற பணிமக்களும், இம்மண்டலம் காக்கும் துணை நிற்கும் படையும் இம்மண்டலம் காக்கும் கவறை செட்டியும், ஐந்நூற்றுவன் _ _ _ நில்கின்ற பணிசெய் மகனும், திடாவூரில் வாழும் பிராமணன் ஐந்நூற்றுவாண்டானும், அருமொழித்தேவ முனிவர் சிங்கமும் எதிரான (தம்பி) சிங்கமும், சிறுத்திடாவூரில் இருக்கும் கலியுக துணை நிற்கும் படையும், துறகலூரில் இருக்கும் விடங்கச் செட்டியும், சத்துருகண்ட மாயிலெட்டியும், பாதாளத்தூசியும், நாட்டுப் படையின் பெரு ஆரியனான நாட்டுச் செட்டியும், மேல்பாடி மூத்தனும், பாண்டி நாட்டு ஐந்நூற்றுவாண்டானும், வாளையூர் ஐந்நூற்றுவாண்டானும், இவர்களோடு வந்த இவர்தம் பல்வகை வீரரும், சமைய படையும் சூழ்ந்து இருக்க, "நம் மகனையும் வீரர்கள் மகனையும் அச்சுறுத்திய குலப்பகைவன் மாளனை கத்தியால் குத்திக் கையை வெட்டிய சமைய படையின் ஆயுத கிடங்கு சோமையன் மகன் சாமுண்டனின் செயற்திறன் கண்டு சாமுண்டனை நாநாதேசிய வணிகரின் வீரத்திருவடியாய் இருக்கவும் இவனுடைய படை ஆள்கள் ஓய்வு கொள்ள தங்கில் (வீரபட்டணம்) செய்து குடுத்து வசதி செய்யவும்" மாணிக்கச்செட்டி அகமகிழ்ந்து ஆணை இட்டார். குலப் பகைவன் என குறிக்கப்படும் மாளனும் வணிகனாகவே இருக்க வேண்டும்.
பாலக்காடு அட்டப்பாடி வணிகக் கல்வெட்டும் இதே போல வீரபட்டணம் செய்து கொடுத்ததை தெரிவிக்கிறது. ஐகுந்தம் வணிகக் கல்வெட்டும் இதே போல வணிகர்கள் மாபெரும் படையை பேணியதைக் குறிக்கிறது.
பார்வை நூல்: ஒன்றிய தொல்லியல் துறையால் 1926 இல் முன்பக்கம் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பக்க கல்வெட்டு அண்மையில் தான் அறியப்பட்டு நாளேட்டில் வெளியானது. முழுமையாக இன்னும் எந்த நூலிலும் அச்சேறவில்லை.
ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரில் உள்ள கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 9 ரிக் கல்வெட்டு.
- ஸ்வஸ்திஸ்ரீ திசை
- யாயிரத் தைஞ்ஜ ஞா
- ற்றுவ நானாதேசிய
- டைக்கலம் கிழங்க
- நாட்டு நித்தவிநோத
- புரத்திருந்து வாழும் வெ
- ள்ளாளன் வெண்டுவ்வ
- ன் திருக்குறையான்
- எடுப்பிச்ச மாநகரம்.
விளக்கம்: இந்த கல்வெட்டு நித்தவிநோத என்ற முதலாம் இராசராச சோழனின் பட்டப் பெயரை குறிப்பதில் இருந்து இக்கல்வெட்டு அவனது அல்லது இராசேந்திர சோழனது காலத்தது என கொள்ளலாம். கிழங்கு நாட்டில் நித்தவிநோதபுரத்தில் வாழுகின்ற அரச அதிகாரி வெள்ளாளன் வெண்டுவ குலத்தை சேர்ந்த திருக்குறையான் என்பவன் திசை ஆயிரத்து ஐநூற்று நானாதேசிக வணிகக் குழுவினருக்கு புகலிடமாக மாநகரம் ஒன்றை கட்டிவித்தான். இதே அருங்காட்சியகத்தில் முதலாம் இராசேந்திரனின் நாலாம் ஆட்சி ஆண்டு 20வரிக்கு மேல் உள்ள கல்வெட்டு ஒன்று இதே செய்தியுடன் உள்ளது.
பார்வை நூல்: கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு, புலவர் செ . இராசு, பக்கம் 48
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் நத்தம் கிராமம் திருப்பழனமுடைய நாயனார் கோவில் தெற்கு சுவறில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.
1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க _ _
2. [ழ] தேவற்கு யாண்டு 30 [ஆ]வது நிகரிலி சோழமண்டலத்து
3. _ _ ட்டு தகடூர் நா[ட்டு எ]யில்னாட்டுக் கலி[ஞ்சி]றைப் பற்றுக் [கா] _
4. கெயின்கறையில் வீடுடையார் திருபழனமுடைய நாய[னா] _
5. [ர்]த் திருக்கோவலூர் உடையார் திருவீரட்டானமுடையார் கோ[யி]
6. ல் தேவரடியாரில் ககையாழ்வி மகள் ஆளுடையனாச்சியார்
7. _ _ _ க்குத் திருப்பள்ளியறை நாச்
8. சியாரை எழுந்தருளிவித்து இன்னாச்சியார்
9. திருவத்தசாமத்துக்கு அமுதூட்டுக் குடுத்துவிட்ட
10. குட்டையூர் திருத்தி விட்ட நிலம் நாற்
பழனம் - வயல், பொய்கை ; நாயனார் - இறைவன்;
விளக்கம்: இந்த கல்வெட்டு 1208 இல் மூன்றாம் குலோத்துங்க சோழனின் 30 ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டது. நிகரிலி சோழ மண்டலத்தில் அடங்கிய தகடூர் நாட்டின் எயில் நாட்டு கலிஞ்சிறைப் பற்றில் காகைகறையில் கோவில் கொண்ட திருப்பழனமுடைய நாயனார்க்கு திருக்கோவிலூரில் கோவில் கொண்ட திருவீரட்டானம் ஈசுவரர் கோவில் தேவரடியாரில் ககையாழ்வியின் மகள் ஆளுடைய நாச்சியார் இங்கத்து திருபள்ளியறை இறைவியை எழுந்தருளச் செய்து இத்தேவிக்கு திருஅர்த்த சாம பூசைக்கு அமுதூட்ட குட்டையூரில் காடு திருத்தி சாகுபடிக்கு கொண்டு வந்த நிலத்தில் நாற்பது அளவு நிலத்தை கொடையாக கொடுத்தள். கல்வெட்டு அதற்கு மேல் சிதைந்து விட்டது. ஆளுடையநாச்சியாரின் தாய்ப் பெயர் ககையாழ்வி என்பதும் காகைகறை என்பதும் ஒலித் தொடர்பு கொண்டுள்ளதால் இவள் தன் தாய் ஊர் இது என்று வந்தனளோ? ககை, காகை இரண்டில் ஒன்றில் ஏதோ எழுத்துப் பிழை உள்ளது?
பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XIX, பக்கம் 238
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் கிராமம் அகத்தீசுவரர் கோயில் கருவறை தென்புற ஜகதி மற்றும் பட்டிகையில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ கடல் சூழ்ந்த பார் மாதருங் கலை மாதருங் சீர்மாதருங் போர்மாதரும் வந்து வாழ நாற்கடல் சூழ் புவி ஏழும் பாற்கடல் சூழ் புகழ் பரப்பச் சோதிமணிமுடி புனைந்தருளி அறு சமயமு மைம்பூதமு நெறியில் வந்து பாரிப்பத் தென்னவருஞ் சேரலருந் சிங்களரு முதலாய
2. மன்னவர் வந்திறை சூழ்த்து சேவிப்ப ஊழி ஊழி ஒரு செங்கோலேழு பாருமினி தளிப்பச் செம்பொன் வீரஸிம்மாஸனத்து உலகுடை முக்கோக் கீழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோ ராஜகேசரிபந்மரான திரிபுவனச்சக்ரவத்திகள் ஸ்ரீ இராஜாதிராஜா தேவர்க்கு யாண்டு நாலாவது ஐயங்கொண்
3. ட சோழ மண்டலத்து ஒய்மா நாடான விஜையராஜேந்த்ர வளநாட்டு எயில் நெடுங்கல் நாட்டு நெடியத்துக் குடிப்பள்ளி அப்பன் சாத்தநும் வெண்குன்றக் கோட்டத்து உரத்தி நாட்டு உரத்தி ஒரளி உதையன் பெருமாளும் பரிவேட்டை போன இடத்தில் ஒரளி உதையன் பெருமாள் புல்வாயை எய்த அம்பு பிழைத்து இவ்
4. வப்பன் சாத்தனை அம்புபட்டு பட்டமையில் இதுக்குப் பெருமக்களும் பெரிய நாட்டாரும் பன்னாட்டாரும் கூடி இருந்து பிராயச்சித்தம் விதித்தபடி இம்மண்டலத்து உலக்கை ஊராந ராஜேந்த்ர நல்லூர்த் திருவகத்தீஸ்வர முடைய மஹாதேவர் கோயிலில் வாதாபி விடங்கர்க்கு இ(வ்)வப்பன் சாத்
5. தனுக்காகப் பகைநீங்க இவ்வொ(ர)ளி உதையன் பெருமாளேன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு இக்கோயில் திருவுண்ணாழிகை ஸபையோம் உபையமாகக் கைக்கொண்ட பசு முப்பத்திரண்டும் இஷபம் ஒன்றுங் கைக்கொண்டு இத்திரு நுந்தா விளக்கு ஒன்றுஞ் சந்திராதித்த வரை எரிக்கக் கடவோம் ஆகச் சம்ம
6. தித்தோம் திருவு(ள்)ணாழிகைச் ஸபையோம்.
பரிவேட்டை - வேட்டைச் சுற்று; புல்வாய் - கலைமான்; பெருமக்கள் - பிரமாண ஊர் மன்ற உறுப்பினர்; பெரிய நாட்டார் - நாட்டாண்மை தலைவர்; பிழைத்து - தவறுதலாக; பன்னாட்டார் - பல்குழு வணிகராக இருக்குமோ?; வாதாபி விடங்கர் - உளியால் செதுக்கப்படாத லிங்கம்; உண்ணாழிகை - கருவறை
விளக்கம்: இந்த கல்வெட்டு இரண்டாம் இராசாதிராசன் மெய்க் கீர்த்தியுடன் தொடங்குகிறது. இது அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டு 1170இல் வெட்டப்பட்டது. தொண்டைநாடு என்னும் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய ஓய்மா நாடெனும் விசய ராசேந்திர வளநாட்டு எயில்நெடுங்கல் நாட்டில் உள்ள நெடியம் கிராமத்தில் வாழும் பள்ளியான அப்பன் சாத்தனும் வெண்குன்றக் கோட்டத்தில் அடங்கிய உரத்தி நாட்டு உரத்தி ஒரளி உதையன் பெருமாளும் சுற்று வேட்டைக்கு போன இடத்தில் ஒரளி உதையன் பெருமாள் கலைமானை நோக்கி விட்ட அம்பு தவறுதலாக அப்பன் சாத்தனை தைத்து அவன் இறந்து போகிறான். இதன் காரணமாக பிராமண ஊர் மன்றத்தாரும், பெரிய நாட்டரும், பன்னாட்டு வணிகரும் ஒன்று கூடி கொன்ற பாவத்திற்கு கழுவாய் விதித்து இம்மண்டலத்தில் உள்ள உலக்கை ஊரான இராசேந்திர நல்லூர் என்னும் இன்றைய ஒலக்கூரில் உள்ள அகத்தீசுவரர் கோவிலில் உள்ள வாதாபி விடங்கர் சிவலிங்கத்திற்கு இறந்த அப்பன் சாத்தன் கொலைப் பழிநீங்க இந்த ஒரளி உதையன் பெருமாள் ஏற்படுத்திய நுந்தா விளக்கு எரிப்பு ஒன்றுக்கு இக்கோயில் கருவறை பிராமணர் நன்கொடையாக முப்பத்திரண்டு பசுவும் ஒரு காளையும் பெற்றுக்கொண்டு இத்திரு நுந்தா விளக்கை ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் காலம் வரை எரிப்போம் என்று உறுதி கூறி கல்வெட்டினர் கருவறை பணி செய்யும் பிராமணர்கள்.
இங்கு நியாயத்தாரின் நீதிமன்றம் தவிர்க்கப்பட்டதோ? எல்லாம் மிரட்டல் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. உதையன் பெருமாள் நுந்தா விளக்கு எரிக்கும் அளவிற்கு செல்வ செழிப்புள்ள குடியில் பிறந்தவன் என்பதை அவன் சுற்று வேட்டையால் விளங்கிக் கொள்ள முடிகிறது. உரத்தி ஓர் ஊர் பெயர். ஒரளி ஊராளி என்பதன் கொச்சைத் திரிபா எனத் தெரியவில்லை.
பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXII, பக்கம் 8
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் உப்புவேலூர் கிராமம் திருவிருத்த பெருமாள் கோயில் வாசலில் உள்ள 2 வரிக் கல்வெட்டு
1. இக்கோயில் திருவாசல்
2. பறயன் திருவாசல்
விளக்கம்: இந்த கல்வெட்டு 14 ஆம் நூற்றாண்டினது என கருதப்படுகிறது. இந்த கோவிலின் தெய்வீக வாசல் ஒரு பறையனால் செய்விக்கப்பட்டதனால் அவன் பெயரில் பறையன் திருவாசல் எனக் குறிக்கப்பட்டது.
பறையர்கள் கோவிலுக்கு சந்தி விளக்கு ஏற்றிய கல்வெட்டுகள் பல உள. ஆனால் இது சந்தி விளக்கை விட அதிக செலவாகும் திருப்பணி என்பது இப்பறையன் செல்வச் செழுமையும் பதவியும் பெற்று வாழ்ந்திருக்க வேண்டும் என்று காட்டுகிறது. உண்மை இப்படி இருக்க தலித்தியர் தம்மை இச்சமூகம் 2,000 ஆண்டுகளாக ஊரில் வரவிடாமல் ஒடுக்கியதாக பொய்யை நம்பி பழிக்கின்றனர். எல்லாக் கோயிலும் ஊர் நடுவே தான் அமைந்துள்ளன. ஒருவர் கோவிலுக்கு செல்ல வேண்டுமெனில் பிராமணர் வாழும் தெருவைக் கடந்து தான் கோவிலுக்கு செல்ல முடியும். இத்திருவாசல் அமைத்த பறையன் ஊருக்குள் வந்து தானே இதை செய்திருக்க முடியும்? திருவாசல் செய்தவன் கோவிலில் சாமி கும்பிடாமலா இத்திருப்பணியை செய்திருப்பான்? எனவே பறையர் ஒடுக்குமுறை என்பது 16-17 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் நிகழ்ந்த நிர்வாக ஒடுக்கு முறை ஆகும். நிர்வாக ஒடுக்குமுறைக்கும் மதத்திற்கும் மனுதர்மத்திற்கும் எந்த தொடர்புமில்லை. விசயநகர ஆட்சிக்கு முன் பறையர் ஒடுக்கு முறை இருந்ததில்லை என்பதே உண்மை.
பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXII, பக்கம் 153.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரிய கோளாப்பாடியில் உள்ள 8 வரி நடுகல் கல்வெட்டு.
1. கோவிசைய மயேந்திர பருமற்கு
2. யாண்டு பதினொன்றாவது கீழ் வேணாட்
3. டுத் துடரி மேல் விலக்குமிறை
4. யார் வந்த ஞான்று பெரும்பா
5. ண்ணரையர் மருமக்கள் அம்கோ
6. ட்டையர் சேவகன் சாக்கை ப
7. றையனார் இளமகன் ஏறன்
8. எறிந்து பட்டான்.
ஞான்று - போது; மருமக்கள் - பெண் கொடுத்த உறவால் வந்த உறவினர்; சேவகன் - படைத்தலைவன்; இளமகன் - பயிற்சி பெறும் கன்னி வீரன்; எறிந்து - வென்று; பட்டான் - வீர சாவடைந்தான்.
விளக்கம்: இந்த கல்வெட்டு பல்லவன் முதலாம் மகேந்திர வர்மனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 601 இல் வெட்டப்பட்டது. கிழக்கு வேணாட்டு துடரி மீது விலக்குமிரையார் படையெடுத்து வந்த போது பெரும் பாணஅரசர் மருமக்களான அம்கோட்டையர்க்கு படைத்தலைவன் சாக்கை பறையனிடம் பயிற்சி பெரும் கன்னி வீரன் ஏறன் என்பவன் எதிரிப் படையை வென்று வீரசாவடைந்தான்.
துடரி இன்றைய பெரிய கோளப்பாடியாக இருக்கலாம். பறையர்கள் போர்வீரர்களாக தொன்முது காலம் முதல் இருந்து வந்துள்ளனர். அவர்கள் தம் இன மக்களை திரட்டி பயிற்சி தந்து போரிட்டதால் அப்படைக்கு தளபதிகளாகவும் இருந்துள்ளனர். சாக்கை பறையன் ஆடவும் தெரிந்தவனோ? ஏறு என்றால் காளை ஏறன் என்றால் காளையன். இப்படித்தான் அக்கால மக்கள் தமிழில் பெயர் வைத்தனர்.
பார்வை நூல்: செங்கம் நடுகற்கள் க.எண் 1971/96
திண்டுக்கல் மாவட்டம் உடும்பகுடி வேட்டைக்காரசாமி கோவில் 13 வரி நடுகல் கல்வெட்டு
1. ஸ்ரீ
2. இரணசிங்க
3. த் துவராவதி வெள்ளார்
4. பளி
5. நாயகன் கா
6. ரி சாத்தன்
7. உடும்பகு
8. டி நிரை கொள்ள
9. பின்பு சென்று
10. எறிந்து பட்டான்
11. பள்ளி வே
12. ளா(ந்) சாரிகன் சி
13. ய்
வெள்ளார் / வெள்ளாளர் - வெள்ளைத் தோல் ஆரியர்; பள்ளி - வன்னியர்; நிரை - கால்நடை கூட்டம்; கொள்ள - கொள்ளையிட; எறிந்து - வென்று; வேளாண் - அரசகுடி உறவினன், அரசகுடி ஆள்; சிய் - சேய், மகன்.
விளக்கம்: இந்த கல்வெட்டு 9 ஆம் நூற்றாண்டினதாக கொள்ளப்படுகிறது. இதில் வேந்தர் பெயர் ஏதும் குறிக்காமல் அங்கத்து குறுநில அரசன் பெயர் குறிக்கப்படுவது பல்லவர் ஆட்சிக் குலைவின் காரணமாக இருக்கலாம். இரணசிங்க துவராபதி வெள்ளாளர்க்கு படைத் தலைவனான சேவகன், பள்ளிசாதித் தலைவன் காரி சாத்தன் என்பவன் உடும்பகுடி கால்நடைகளை கொள்ளையிட்ட போது அதை தடுக்கப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று போரில் வென்று வீரசாவடைந்தான் பள்ளி வேளாண் சாரிகன் என்ற அரசகுடி உறவினன். அவன் மகன் இந்நினைவுக்கல் எடுப்பித்தான். இன்று இது வேட்டைகாரசாமியாக வணங்கப்படுகிறது.
வெள்ளாளர் என்பவர் வெள்ளைத்தோல் ஆரியர் என்பதால் தான் வெள்ளாளர் என்று குறிக்கப்பட்டனர். தொண்டை மண்டலத்தில் இருந்து கைக்கோளர், பறையர் ஆகியோர் படைவீரர்களாக தெற்கே சென்று தனியே படைப்பற்று குடியிருப்பு அமைத்தது போலவே பள்ளி என்னும் வன்னியரும் தெற்கே சென்று திண்டுக்கல்லில் படைப்பற்று அமைத்து வாழ்ந்ததற்கு சில நடுகற்கள் சான்றாக உள்ளன. இது அதில் ஒன்று.
பார்வை நூல்: இது வரலாற்று தேடல் குழுவால் புதிதாக அறியப்பட்ட நடுகல் கல்வெட்டு. இன்னும் நூலில் அச்சேறவில்லை.
மதுரை பழங்காநத்தம் மேற்கே உள்ள மாடக்குளம் ஊர் குளத்தின் வடக்கு மடைத்தூண் 12 விரிக்க கல்வெட்டு.
1. விறோதி வருஷம்
2. ஆவணி மாத
3. ம் 29 தேதி திருவா
4. லைவாயன் ம
5. டைக் கல்லு
6. எடுத்து நாட்டி
7. வித்தான் திரு
8. வாலை வாச்சி
9. அதிகாரி மகன்
10. ஆரியர் புத்திர
11. கணக்கு நாய
12. ன் பிள்ளை.
விளக்கம்: இந்த கல்வெட்டு விரோதி ஆண்டு 1709 அல்லது 1769 இல் ஆவணி மாதம் 29 தேதி வெட்டப்பட்டது என கணிக்கப்பட்டுள்ளது. மதுரை மாடக்குளம் ஊர் குளத்தின் திருவாலைவாயன் எனும் மடைக்கல் சாய்ந்து சரிந்து கிடந்ததை தூக்கி அதே இடத்தில் நிறுத்தினான் திருவாலை மன்ற அதிகாரி மகன் ஆரியர் புத்திர கணக்கு நாயன் பிள்ளை என்பவன். 18 ஆம் நூற்றாண்டு வரை ஆரியர், இதாவது உயர்ந்தோன் என்ற பட்டத்தை தாங்கியவர் வெள்ளாளர் ஆவர். ஆனால் அடுத்த 19 ஆம் நூற்றண்டில் அதை பிராமணர் பக்கம் திரும்பிவிட்டனர் அதே வெள்ளாளர்.
பார்வை நூல்: ஆவணம் 15, 2004, பக்கம் 120