தொல்லியல் சான்றிதழ் படிப்பு - கள ஆய்வுப் பயணம்
தவத்திரு
சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் தமிழ்த்துறை
மாணவர்களுக்கு “தொல்லியல் சான்றிதழ் படிப்பு” எனும் மதிப்புறு
பாடத்திட்டத்தை தமிழ்த் துறையுடன் இணைந்து நமது யாக்கை மரபு அறக்கட்டளை
செயல்படுத்தி வருகின்றது. நடப்பு கல்வி ஆண்டிற்கான தொல்லியல் சான்றிதழ்
படிப்பை ஐம்பது மாணவர்கள் தொடர்கின்றனர். அவர்தம் கல்வி பயணத்தின் அங்கமாக,
திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில் தொல்லியல் கள ஆய்வுப் பயணம்
மேற்கொண்டனர்.
திருப்பூர்
மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் குரக்குத்தளி ஆளுடைய நாயனார் எனும் இடை
வரலாற்றுக்கால கோயிலில், கோயில் கல்வெட்டுகள் வாயிலாக அறியப்பெறும் சமூகம்,
சமயம், நுண் கலைகள், கோயிற்கலை மரபு ஆகியவற்றை அறிய செய்யும் உரையாடல்
நடைபெற்றது. கடத்தூர் கொங்கவிடங்கீஸ்வரர் கோயிலில் கல்வெட்டுகளைப்
படியெடுத்து ஆவணப்படுத்தும் வழிமுறைகளைக் கற்றறிந்தனர். ஐவர்மலை சமணப்
பள்ளியில் அவைதீக சமயங்களின் வரலாற்றுக் கால பங்களிப்புகள், வட்டெழுத்துக்
கல்வெட்டுகளின் பரவல், பெருவழிப் பாதைகளின் பங்களிப்பு என உரையாடல்
நீண்டது. மதகடிப்புதூர் பாறை ஓய்விடத்தில் பாறை ஓவியக் கலையின் அறிமுகமும்
எதிர்கால ஆய்வுக் களங்கள், வாய்ப்புகள் குறித்தும் விரிவான உரையாடல்
நிகழ்த்தப்பட்டது.
தொல்லியல்
சான்றிதழ் வகுப்பை தொடங்கி தமிழியல் துறை மாணவர்களுடன் பயணிக்கும் இந்த
நல்வாய்ப்பினை வழங்கிய பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியின்
தலைவர் திருமிகு அடிகளார் அவர்கள், கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள்,
ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நம் நன்றிகள்.
குறிப்பு:
தொல்லியல் சான்றிதழ் படிப்பு திட்டமானது தொல்லியல், கல்வெட்டியல் துறை
பாடங்களைப் பல நுண் வகைப்பாட்டில் வைத்து, கோட்பாடு மற்றும் செய்முறை
விளக்கம் இரண்டையும் இணைத்து கற்கும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.