தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5), கடலூர் இரவு-தொடர்ச்சி)
நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா?
எங்குச் சுற்றினாலும் இங்குதான் வந்து நிற்க வேண்டும் என்பது போல், காலநிலை மாற்றம் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் புதைபடிவ எரிபொருளின் வாசலில்தான் நிறுத்தப்படுகிறோம்.
செடிகொடிகள் மரங்கள் விலங்குகள் (மனிதனும் கூட) மண்ணில் புதைந்து நீண்ட காலம் மக்கிச் சிதைந்துதான் புதைபடிவ எரிபொருள் உண்டாகிறது. அது கரி வளி, நீரகம் எனும் இரு தனிமங்களால் ஆனது. நிலக்கரி, எண்ணெய் (கல்+நெய் = கன்னெய், பெற்றோல்), இயற்கை எரிவாயு ஆகியவை முதன்மையான புதைபடிவ எரிபொருள்கள் ஆகும்.
நிலக்கரி என்பது பாறையடுக்குகளில் படிவுகளாகக் காணப்படுகிறது. பாறையும் மடிந்த செடி கொடி மரங்களும் விலங்குகளும் மக்கிய நிலையில் அடுக்கடுக்காகக் குவிந்து நிலக்கரி ஆகின்றன. ஒரு நிலக்கரித் துண்டின் எடையில் பாதியளவு புதைபடிவச் செடி கொடிகள் மரங்களாக இருக்க வேண்டும்.
காவிரித் தீரத்தில் புதைபடிவ எரிபொருள் கிடைப்பதற்குக் காரணம்: காட்டாறாகப் பெருகிவந்த காவிரியாறு செடி கொடிகள் மரங்களை எல்லாம் சாய்த்து மண்ணில் புதையச் செய்து விட்டது. இலட்சக்கணக்கான ஆண்டுகளில் அது மக்கிக் கரியும் பிற எரிபொருளும் ஆயிற்று.
கன்னெய் என்பது படிவுற்ற பாறையடுக்குகளில் களிப்பாறை(shale) போன்று திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. இந்த மூலப்பொருளைச் சூடாக்கி கெட்டியான எண்ணெய் ஆக்கி, இதைப் பயன்படுத்தி வளியெரிநெய் (gasoline) செய்யலாம். வட அமெரிக்காவில் கன்னெய்யை வளியெரிநெய் என்றுதான் சொல்வர். இயற்கை எரிவாயு வழக்கமாகக் கன்னெய்ப் படிவுகளுக்கு மேல் சிப்பங்களாக (அல்லது பொட்டலங்கள் போல்) காணப்படுகிறது. கன்னெய் இல்லாத படிவப் பாறை அடுக்குகளிலும் எரிவாயு காணப்படுவதுண்டு. இயற்கை எரிவாயு முதன்மையாக ஈரவளியால்(methane) ஆனது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயன்படுத்தப்படும் மொத்த ஆற்றலில் 81 விழுக்காடு நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயுவிலிருந்து பெறப்படுவதாகும். வீடுகளில் குளிர் போக்கிக் கதகதப்பூட்டவும், ஆலைகளில் எந்திரம் இயக்கவும், சாலையில் வண்டியோட்டவும் தேவையான மின்னாற்றல் இப்படித்தான் இயற்றப்படுகிறது.
புவியானது அள்ள அள்ளக் கொடுக்கும் அட்சய பாத்திரமன்று. இருக்கிற நிலக்கரியை எல்லாம் எடுத்துத் தீர்த்து விட்டால் புதிய நிலக்கரி கிடைக்க இலட்சக்கணக்கான ஆண்டுகளாகும். எண்ணெயும் எரிவாயுவும் கூட இப்படித்தான். இந்த ஒரு காரணத்துக்காகவே புதைபடிவ எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டும். அதாவது புவித்தாயின் அடிவயிற்றிலேயே விட்டுவைக்க வேண்டும்.
இரண்டாவதாக, கடந்த 20 ஆண்டுகளில் மாந்தச் செயல்பாடுகளால் கரியுமிழ்வுகள் பெருகிப் போனதில் கிட்டத்தட்ட முக்கால் பங்கிற்குப் புதைபடிவ எரிபொருள்களே பொறுப்பாகும். இப்போது புதைபடிவ எரிபொருள் மீதான சார்புநிலையைக் குறைக்கவும், இந்த எரிபொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் கெடுவதைக் குறைக்கவும் வழியுண்டா? என்று அறிவியலரும் பொறியியலரும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
நிலக்கரியைக் காட்டிலும் இயற்கை எரிவாயு 50 விழுக்காடு குறைவாகவே உமிழ்வுடையது என்பதால் எரிவாயு கொண்டு வண்டியோட்டும் படியான ஊர்திகளை வணிக அளவில் கிடைக்கச் செய்யும் தொழில்நுட்ப ஆய்வுகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காற்று மண்டலத்திலிருந்து கரியிருவளியைப் பிடித்து நிலத்தடியில் பதுக்கி வைக்கும் ஆய்வுகளும் நடக்கின்றன.
எல்லாம் சேர்ந்து புதைபடிவ எரிபொருளின் தீங்கைக் குறைத்துப் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்திக் காலநிலை மாற்றத்துக்குத் தடை போட்டு விடுமா? விடும் என்ற நம்பிக்கை இல்லை. இந்த நிலத்தடி பூதங்களை வெளியே வர விடாமல் உள்ளேயே அடைத்து வைப்பதற்குத்தான் வழி தேட வேண்டும். முதலில் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு பரவாமல் தடுக்கப்பட வேண்டும்.
ஒரு சில ஆண்டுகள் முன்பு பச்சை வேட்டைக்கு எதிராகச் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது அருந்ததி இராய் கேட்டார்:
“நாம் களிக்கனிமத்தை மலையிலேயே விட்டு விடலாமா? “(“Shall we leave the bauxite in the mountains?”)
அலுமினியத்துக்கு இன்றியமையாத மூலப் பொருள் களிக்கனிமம் (bauxite)எனும் தாது. களிக்கனிமச் சுரங்கங்களாலும் களிக்கனிமத்திலிருந்து ஈயம் செய்யும் செய்முறையாலும் பாரிய சூழற்கேடு நிகழ்கிறது. அதைத் தவிர்ப்பதற்காகக் களிக்கனிமம் எடுப்பதை நிறுத்தி விடுவோமா? அதாவது, உங்கள் சுரங்கக் கொள்கை என்ன? என்று கேட்டார் அருந்ததி இராய்.
நம் சுரங்கக் கொள்கை என்ன? நிலக்கரியை நிலத்திலேயே விட்டு விடுவோமா?
தோழர் தியாகு
தரவு –தாழி மடல் 19
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 601-605 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 606-610
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
606. பட்சி சகுனம் – புற்குறி
607. அத்தினாபுரம் – குருநகர்
நூல் : பெருமக்கள் கையறு நிலையும் – மன்னைக் காஞ்சியும் (1927)
நூலாசிரியர் : அ.கி. பரந்தாம முதலியார்
(தென்னிந்திய தமிழ்க் கல்விச்சங்கக் காரியதரிசி)
★
608. அந்தப்புரம் – உள்ளறை
நூல் : நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தி உரையும் (1928)
உரையாசிரியர் : சோடசாவதானம் தி. சுப்பராய் செட்டியார்
★
609. சலதரங்கம் – நீர்க்கிண்ணத்திசை
தென் இந்திய மருத்துவ சங்கம்
21.4.1928 ஆம் நாள் மாலை 5 மணிக்குச் சங்க நிலையத்தில் சிறுத்தொண்ட நாயனார் குரு பூசை நடைபெற்றது. சங்கத் தலைவர் பண்டித எஸ். எஸ். ஆனந்தம் அவர்களின் உருவப்படத்தைச் சங்கத்தில் திரு. மதுரை முத்து முதலியார் அவர்கள் திறந்து வைத்தார். அப்போது பண்டிதர் சித்த-
வைத்தியத்திற்காகவும் மருத்துவ குலத்தாருக்காகவும் செய்த தியாகங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். பின்னர் இசைப்புலவர் ஆர். வி. நாயுடு அவர்களால் யாழ், சுரகெத், சித்தரா, நீர்க் கிண்ணத்திசை (சலதரங்கம்) முதலிய இன்னிசைக் கருவிகள் வாசிக்கப்பட்டன.
– காரியதரிசி
இதழ் : குடியரசு – 5. 5. 1928
★
610. Petrol, Tank – ஆவி எண்ணெய்ப் பெட்டி
காரைக்குடிக்கும் தஞ்சாவூர்க்கும் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திர(மோட்டார்) உந்து ஒன்றுக்குப் ‘பெட்ரோல் டாங்கி’ (ஆவி எண்ணெய்ப் பெட்டி) ஓட்டையாய் ஓடும்போது தெருவெல்லாம் ‘பெட்ரோல்’ சிந்திக்கொண்டே போகிறது. அதைக் கீழே சிந்தவொட்டாமல் ஒரு தொட்டியில் பிடித்துக் கொண்டு வண்டியின் பின்னால் தொடர்ந்து வர ஒர் ஆள் தேவை. சம்பளம் பிடிக்கும் ‘பெட்ரோலில் ‘பாதியைத் தரப்படும். விருப்பமானவர்கள் தெரிவித்துக் கொள்ளவும். விலாசம், ஆசைக்கார அஞ்சப்பன், பாடாவதி பேருந்து ஊழியம்(bus servuce), காரியக்குடி.
இதழ் : ஆனந்த விசய விகடன் (1928, சூன் தாய் – 1 பிள்ளை – 4 பாக்கட் விகடங்கள், பக்கம் – 196
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 27 January 2023
(தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா? – தொடர்ச்சி)
ஏ. எம். கே. (6)
மனவுறுதி
சட்டத்தின் ஆட்சி என்றும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் சட்டம் தன்வழிச் செல்லும் என்றும் அரசிலிருப்பவர்கள் எவ்வளவுதான் பிரமாதமாய்ப் பறைசாற்றினாலும், அரசு இயந்திரத்தின் அடக்குமுறைக் கருவிகளே சட்டத்தை மீறுகிற சந்தர்ப்பங்களில் இந்தக் கோட்பாடுகளை எல்லாம் வசதியாக மறந்து விட்டுச் கண்களில் கறுப்புத் துணி கட்டி விடுவார்கள்.
இதை நியாயப்படுத்த அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? ஆயுதப் படையினரின் மனவுறுதி கெட்டு விடக் கூடாதாம். சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது மக்களின் மனவுறுதிதானே தவிர, ஆயுதப் படையினரின் மனவுறுதி அன்று. ஓர் உண்மையான மக்களரசுக்கு மக்களின் மனவுறுதிதான் முதன்மையாக இருக்க வேண்டும்.
‘மனவுறுதிக் கோட்பாடு’ பல வழிகளிலும் செயல்படுவதால்தான், ஆயுதப் படையினர் கொலையே செய்தாலும் சட்டத்தின் கையில் சிக்காமலிருக்க முடிகிறது. சிக்கினாலும் எளிதில் தப்பிவிட முடிகிறது.
கடலூர் சிறைக்குள் பொன் நாடாரை அடித்துக் கொன்ற சிறை அதிகாரிகளின் ’மனவுறுதி’யும் கூட அரசுக்கு முக்கியமாய்த் தெரிந்திருக்க வேண்டும். விசாரணை முடிந்து நீண்ட காலம் கழிந்தபின் தண்டனை ஏதுமின்றியோ, அற்பசொற்பத் துறைவழித் தண்டனைகளுடனோ அவர்கள் வேலைக்குத் திரும்ப அழைக்கப் பட்டார்கள். ஒரே ஒருவர். அதிலும் அவர்கள் அனைவரிலும் உயரதிகாரியான சிறைக் கண்காணிப்பாளர் மட்டும் வேலைநீக்கம் செய்யப்பட்டார்.
கைதியின் மரணத்துக்காக ஒரு சிறைக் கண்காணிப்பாளர் வேலைநீக்கம் செய்யப்பட்டது — கைதிகள் நடத்திய போராட்டத்தினால் இப்படி ஒரு விளைவு ஏற்பட்டது — சாதாரண நிகழ்வு அன்று. இந்த சாதனை குறித்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் வேலைநீக்கத்துக்கான உண்மைக் காரணம் தெரிய வந்தது.
பொன் நாடாரைக் கொலை செய்ததற்காகவோ, அந்தக் கொலைக்கு உடந்தையாய் இருந்ததற்காகவோ, அந்தக் கொலையைத் தடுக்கத் தவறியதற்காகவோ சிறைக் கண்காணிப்பாளர் வேலைநீக்கம் செய்யப்படவில்லை. ஓர் இரவு முழுக்கச் சிறைக் கைதிகளை க் கதவடைப்புச் செய்யாமல் விட்டதற்காகவே அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டார். நீதி கேட்டுப் போராடிய கைதிகளை வலுவந்தமாய்ப் பிடித்துக் கொட்டடியில் அடைக்காமல் விட்டதுதான் கொலைப் பாதகத்தை விடவும் கொடுங்குற்றம்! இதுவும்கூட மனவுறுதிக் கோட்பாட்டின் வேலைதானோ என்னவோ!
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 19
00