வாலிகண்டபுரம் அருகில்
பெரம்பலூர் மாவட்டம்
பிரம்மதேசம் எனும் ஊர் பிரிதிசூரமங்கலம் என்ற பெயரில் பிரம்மதேயக் கிராமமாக விளங்கியது என்பதை வாலிகண்டபுரத்தில் உள்ள முதலாம் பராந்தகனின் கல்வெட்டு உரைக்கிறது.
பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள மூன்றாம் இராஜராஜனின் கல்வெட்டு இவ்வூரை "பிரிதிசூர சதுர்வேதிமங்கலமான பிரமதேசம்" எனவும், வாலிகண்டபுரத்தில் உள்ள பாண்டியர் காலக் கல்வெட்டு "பிரம்மதேசமான திருவாபரணமீட்ட நல்லூர்" எனவும் கூறுகிறது.

பிரம்ம தேசம்
இந்த ஊரில் "திருச்சிலாக்குன்றத்து மகாதேவர் கோயில்" எனும்
ஒரு சோழர் கால சிவன் கோயில் இருந்தது. ஏதோ காரணத்தால் அது அழிந்து பட்டது. எனவே அந்த கோயிலின் கற்களைப் பிரித்து அக்கற்களைக் கொண்டுவந்து வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் அம்மன் கோயிலைக் கட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.
இக்கற்களில் உள்ள கல்வெட்டுக்கள் அவ்வூர்ப் பெயரைப் பிரிதிசூரச் சதுர்வேதிமங்கலம் என்றும் கோயில் பெயரைத் திருச்சிலாக்குன்றத்து மகாதேவர் கோயில் என்றும் குறிப்பிடுகின்றன.
இவ்வூரில் ஒரு கல்வெட்டு கண்டறியப் பட்டுள்ளது. இது வெகுகாலமாக துணி துவைக்கும் கல்லாகப் பயன்படுத்தப் பட்டு வந்தது. இதனை கடந்த 2019 ம் ஆண்டில் கண்டு மனம் வருந்தினேன். செய்தித்தாள்களில் இந்த அவலநிலை செய்தியாக வெளிவந்தது. பின்னர் அவ்வூரைச் சேர்ந்த திரு. இளவரசன் (ஜெயா தொலைக்காட்சி) எனும் பெருமகனார் , நல்லோர் சிலரின் ஒத்துழைப்புடன் நேராக நிறுத்தி வைத்தார்.

இனி கல்வெட்டு....

இடம்:
பிரமதேசத்தில் இருந்து எளம்பலூர் செல்லும் சாலையில் செட்டியார் கடை அருகில் உள்ள திரு. இராஜேந்திரன் என்பார் வீட்டின் முன் நடப்பெற்றுள்ள கற்பலகை. கற்பலகையின் இரு புறங்களிலும் கல்வெட்டு 67 வரிகளில் அமைந்துள்ளது.

மன்னன்:
மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218), மூன்றாம் இராஜராஜன் (1216-1257)

ஆட்சியாண்டு:
10,6

காலம்:
கி.பி. 1188, கி.பி. 1222

கல்வெட்டுச் செய்தி
இவ்வூரின் பெயர் "பிரிதிசூரச் சதுர்வேதிமங்கலமான பிரம்மதேசம்" என்றும் இது கரிகால கன் வளநாட்டு வன்னாட்டின் கீழ் இருந்தது என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இவ்வூரை இராஜராஜ வன்னாடுடையார் என்பவர் வல்லுவன் புலியனான இருபத்துநால் பேரரையன் உள்ளிட்ட பள்ளிகளுக்கு (வன்னியர்) காணியாக வழங்கியுள்ளார். பிறகு மூன்றாம் இராஜராஜன் காலத்தில் இவ்வூரை நத்தமர்கள் (உடையார்கள்) வாங்கியதாகத் தெரிகிறது. இவர்கள் தாங்கள் வாங்கிய இவ்வூர் நில காணிகளை குறிப்பிட்ட சில பள்ளி வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தவிர பிராமணர், வெள்ளாளர் மற்றும் பள்ளிகள் ஆகியோர்களுக்கு விற்பதில்லை என முடிவுசெய்தது பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. இவ்வூரின் எல்லைகளாக அனுக்கூர் ,சிறுவிசலூர் ஆகியவை குறிப்பிடப்படுகிறது.
இக்கல்வெட்டு அக்காலத்தில் நிலவிய நிலஉடைமை முறை மற்றும் அவற்றைப் பராமரிப்பதில் சாதிகளுக்கு இடையே நிலவிய தொடர்பு பற்றி அறிய உதவுகிறது.

கல்வெட்டுப் பாடம்
5. (நா)ட்டு வந்நாட்டு பிரிதிசூரசது
7. தேசத்தை எங்களய்யந் ராஜரா
9. ர வல்லுவந் புலியநாத இருப
10. த்து நால்ப் பேரையந் உ
11. ள்ளிட்ட பள்ளிகளுக்கு காணி
12. செய்து குடுத்தார் ஸ்ரீரா
13. ஐ ராஜ தேவற்கு யாண்டு-சா
15. ந் கரிகால சோழநான சனநாத
16. வந்நாடுடையாநும் நத்தம
18. யாநும் இவ்வனைவோமும் பி
20. நாட்டரையருக்கும் புலியந்
22. பரையநுக்கும் புலியந் ெ
23. பரியாநாத வந்நாட்டு நா
47. ....வாலிகண்டபுரத்து......
48. டின் முக்கூட்டு மொக்க எழு
50. க்கு வடக்கும் மேபாற்கெல்
51. லை அனுக்கூர் எல்லைக்கு கிழக்
52. கும் வடபாற்கெல்லை சிறுவி
53. சலூர் எல்லைக்கு தெற்கும் இ
55. பட்ட நிலம் இவர்கள் இ...
58. த்து கொடு இருந்தமை....
60. புலியந் பெரியாநாந வந்நாட்டு நாடாழ்வாநும்
62. ணநாத வந்நாடு டையாநும்
67. .............
t
