“சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு
ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள், “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” என்னும் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இது கலைச் சொற்கள் தொடர்பான ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும்.
இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் என்ன சொல்லுகிறது என்பதைச் சொல்லும் கட்டுரையாக ‘முன்னுரை’ என்னும் முதற் கட்டுரை அமைந்துள்ளது.
இக் கட்டுரைகள் யாவும் கலைச் சொற்கள் தொடர்பானவையே. எனினும் இந்நூல் கலைச் சொற்கள் குறித்து எழுதப்பட்ட தனி நூல் அல்ல. ஆயினும் கலைச் சொற்கள் குறித்த நல்ல புரிதலை அளிக்கக் கூடியதாக இந்நூல் விளங்குகிறது. எனவே சொல்லாக்க ஆர்வலர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். இந்நூலின் முன்னுரையே ஒரு கட்டுரை போலப் பரிணமிக்கிறது. முதற் கட்டுரையாகவும் அமைந்துள்ளது.
“கலைச் சொல் விளக்கம்” என்னும் இரண்டாம் கட்டுரை, காலந்தோறும் கலைச் சொல் குறித்த இலக்கியப் பதிவுகள், கலைச் சொற்கள் அமையும் முறை, பிற சொல் கலப்பின்றி இருக்க வேண்டியதன் இன்றியமையாமை, கலைச் சொற்கள் வழக்காற்றில் நிலைக்க வேண்டிய பண்புகள் முதலியன விளக்கப்பட்டுள்ளன.”
கலைச் சொல் என்றால் என்ன?
ஒரு சொல்லின் பொருள் வெளிப்படையாகக் குறித்தால் அது இயல்பான சொல்.
அச் சொல் வேறு பொருளை உணர்த்தினால் அது கலைச் சொல்.
காலந்தோறும் கலைச் சொற்கள் பற்றிய ஆழ்ந்த சிந்தனை தமிழறிஞர்களுக்கு இருந்துள்ளது. இதற்குத் தொல்காப்பியர், நன்னூலார், இளம்பூரணர், சேனாவரையர் போன்றோர் சான்றாவர். விடுதலைப்புலிகள் கலைச் சொற்களைப் பல தளங்களிலும் எடுத்துச் சென்றனர்.
கலைச் சொற்கள்,
1) விகுதி சேர்த்தல்.
2) தொகையாக்கல்.
3) கூட்டுச் சொல் அமைத்தல்.
4) பிற மொழிச் சொற்களைக் கையாளுதல்.
5) ஒலி பெயர்ப்புச் சொற்களைக் கையாளுதல்.
போன்ற வகைமைப்பாடுகளைக் கொண்டு அமைகின்றன.
இவற்றுள் பிறமொழிச் சொற்களைக் கையாளும் முறையையும் ஒலி பெயர்ப்பு முறையையும் அடியோடு தவிர்க்க வேண்டும் என்று இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் கூறுகிறார். ஒருக்கால் தவிர்க்க இயலாமல் பயன்படுத்த நேரிட்டால், பெயர்ச் சொற்களில் அமைந்த கலைச்சொற்கள் தவிர பிறவற்றை நாம் தமிழிலேயே குறிப்பிட வேண்டும் என்கிறார்.
சில காரணங்களால் சில தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும்போது அடைப்புக் குறிக்குள் அயற் சொல்லைக் குறிக்க வேண்டும். மாறாக, அயற் சொற்களை அப்படியே கையாளுதல் கூடாது. அப்படிக் கையாள நேரிட்டால் அயல் எழுத்துகளை நீக்கி தமிழ் வரி வடிவங்களிலேயே குறிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
கலைச் சொற்கள் வழக்காற்றில் நிலைக்க வேண்டுமானால் அவற்றுக்கு,
1) செறிவு, 2) பொருள் விளக்கம், 3) தெளிவு, 4) பாகுபாடு உடைமை, 5) தமிழ் நிலமெங்கும் பயன்படும் பொதுமை ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
இவ்வாறெல்லாம் இருந்தால்தான் கலைச் சொற்கள் பெருகும் என்றும் கூறுகிறார். தமிழ்க் கலைச்சொல்லாக்க வல்லுநர்கள் இவற்றையெல்லாம் மனத்தில் நிறுத்தி கலைச் சொல்லாக்கப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
மூன்றாவதாக உள்ள, “கலைச் சொல்லாக்க நெறிமுறைகள்” என்னும் கட்டுரையில், தமிழ் மொழியில் உருவாக்கப்படும் கலைச் சொற்கள் எவ்வாறு அமைந்துள்ளன? எவ்வாறு அமையவேண்டும்? என்பதுபற்றி சொல்லப்படுகிறது. மொழி பெயர்ப்பாளர்களுக்கு இது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
தமிழ் நாட்டில் தமிழ்மொழி, கல்வி மொழியாக இல்லை. எனவே கலைச் சொற்களின் தேவை குறைந்துள்ளது. கலைச் சொற்கள் என்பவை ஒரு பொருளை விளக்குவனவாக இல்லாமல் சுருங்கிய சொல்லாக அமைய வேண்டும் என இக் கட்டுரை எடுத்துச் செல்லுகிறது.
சுருங்கிய சொல்லாக இல்லாத கலைச் சொற்கள் அதன் பயன்பாட்டை இழக்கின்றன. இவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் தரப்படும் பொருள் விளக்கத்தைத் தமிழில் சொல்வதாக அமைந்துள்ளதே தவிர அப் பொருளை உணர்த்தும் சொல் வடிவை அவை பெறுவதில்லை. அதனால் அச் சொற்களின் பயன்பாடு குறைந்து ஆங்கிலச் சொற்களின் பயன்பாடே மிகுதியாகிறது. ஆகையால் கலைச் சொற்கள் ஏற்றதாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும் என்றும் இக் கட்டுரை வலியுறுத்துகிறது.
தமிழ் மொழியில் ஏராளமான கலைச் சொற்கள் இருக்கின்றன. அவற்றை உணராமல் அயற் சொற்களுக்கான கலைச் சொற்களைத் தேடி நேரத்தை வீணாக்குகிறோம். அதனைத் தவிர்க்க வேண்டும். அந் நேரங்களில் பின்வரும் கருத்துகளை நாம் நமது சிந்தையில் நிறுத்த வேண்டும்.
1) அறிவியல் வளர்ச்சிக்கு மீளாக்கச் சொற்கள் மிகுதியும் வேண்டப்படுகின்றன.
2) ஒரு சொல் நமக்குப் பிடித்துள்ளதா இல்லையா என்பது முதன்மையானதல்ல. அச்சொல் ஏற்றவாறு பயன்படுத்தக் கூடியதாக உள்ளதா என்பதுதான் முதன்மையானது.
3) எந்தக் கலைச் சொல் பயன்பாட்டில் நிலைத்துவிட்டதோ அந்தக் கலைச் சொல்லையே எல்லோரும் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.
4) சில சொற்கள் காலப் போக்கில் மாறிக் கொண்டே வரும். சான்றாக, பொருளியல் என்னும் சொல் முதலில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுப் பின்னர் செல்வ நூல் என்று சொல்லப்பட்டது. பின்னர் பொருளாதாரம் எனப்பட்டது. இப்போது அது பொருளியல் என அழைக்கப்படுகிறது.
5) அறியாமையால் சில சொற்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தானி என்பது. ஆட்டோ என்பதற்கு தானி என்பது பொருள் அல்ல. ஆகவே இது தவறு.
6) பயன்பாட்டுக்கு வராத எந்த ஒரு கலைச் சொல்லும் நிலைத்து நிற்காது. சொல்லைப் புரிந்து கொண்டு படைக்காமல் சொல்லுக்குச் சொல் என்ற நேர் முறையில் ஆக்கப்படும் கலைச் சொற்களும் தமிழ்ச் சொற்களைக் கையாளாமல் ஒலி பெயர்ப்புச் சொற்களாக மூலச் சொற்களைக் கையாளுவதும் கலைச் சொல் பெருக்கத்திற்குத் தடையாக உள்ளன.
7) ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்க் கலைச் சொற்களைத் தேடாமல் தமிழ்ச் சொற்களுக்கு ஏற்ற கலைச் சொற்களை ஆங்கிலத்தில் தேட வேண்டும்.
8) கலைச் சொற்கள் நீண்ட தொடராக இல்லாமல் சுருக்கமான சொல்லாக அமைய வேண்டும்.
9) சொல், இடத்திற்கு ஏற்ற பொருளைத் தரும் என்பதை அறிந்துப் பயன்படுத்த வேண்டும்.
10) தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கும் அயற் சொற்களின் மீது நாட்டம் செல்லுகிறது. இது கூடாது.
11) நமக்குச் சொற் களஞ்சியமும் வேண்டும், அதே நேரம் சொற்றொடர் பொருள் தொடர் களஞ்சியமும் வேண்டும்.
12) ஒரு சொல் ஒரு பொருள் என்ற முறையில் கலைச் சொற்கள் அமைய வேண்டும். அப்போதுதான் பொருள் குழப்பம், பொருள் மயக்கம், பொருள் ஐயம் ஆகியவை ஏற்படாது.
கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபடுபவர்கள் இந்தக் கட்டுரையாளர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் சொல்லுவதை நெஞ்சில் நிறுத்த வேண்டும்:
மூலச் சொல்லுக்கு நேரான மொழிபெயர்ப்புச் சொல்லை ஆக்கக் கூடாது. மாறாக, மூலப் பொருளுக்கு ஏற்ற மொழிபெயர்ப்புச் சொல்லையே ஆக்க வேண்டும்.
அச்சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும்.
பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆக்க வேண்டும்.
நன்னூலார் கூறும் பத்துக் குற்றங்கள் இல்லாதிருத்தலும்,
பத்து அழகுகளில் ஒன்றாய் அமைவதும் நலம்.
அயற் சொல் கலப்பை அறவே நீக்க வேண்டும்.
இலக்கியங்களில் இருந்தே கலைச் சொற்களைத் தெரிவு செய்ய வேண்டும். இலக்கியங்களில் இருந்து கலைச் சொற்களை மீளாக்கம் செய்ய வேண்டும்.
சிறந்த கலைச் சொற்களே சிறந்த நூலுக்கு அடிப்படை.
(தொடரும்)
நன்றி : தமிழணங்கு, மலர் 1: இதழ் 3, பக்கங்கள் 39-49
திறனாய்வாளர்: முனைவர் புதேரி தானப்பன், புது தில்லி
நூற்பெயர்: “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்“
ஆசிரியர்: ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன். பேச: 9884481652.
வெளியீடு: மலர்க்கொடி வெளியீட்டகம், சென்னை. பேச: 7401292612.
பக்கங்கள்: 124; விலை உரூ. 120/-
(தமிழ்நாடும் மொழியும் 5 தொடர்ச்சி)
4. சங்கக் காலம்
முன்னுரை
தமிழக வரலாறு என்றவுடனே அறிஞர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் உடனே நெஞ்சத்தில் தோன்றுவது முச்சங்கங்களேயாம். பண்டைக்காலத் தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, இலக்கியம், வாழ்க்கை ஆகியவற்றைத் தெள்ளத் தெளிய நாம் அறிய வேண்டுமானால், முச்சங்க வரலாறு, அச்சங்கப் புலவர்கள் யாத்த சங்க இலக்கியங்கள் ஆகியவற்றை நாம் நன்கு அறிதல் வேண்டும். முச்சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் கணக்கிலடங்கா. அவற்றுள்ளே முதற் சங்க நூல்கள் எனப்படுபவை இன்று பெயரளவிலேதான் காட்சி அளிக்கின்றன, இடைச் சங்க நூல்களிலே இன்றும் எஞ்சி நின்று மக்கள் உள்ளத்தையும் அக்காலத் தமிழகத்தையும் காட்டி நம்மைக் களிப்படையச் செய்துகொண்டிருப்பது ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமாகும். அடுத்து இடையிலே எழும்பிய நீருக்கும், ஏற்பட்ட போருக்கும், அயலார் மூட்டிய நெருப்புக்கும், நம்மவர் மறதிக்கும், கரையானுக்கும் இரையாகாதவாறு இன்றுவரை நின்று, நொந்த நந்தம் சிந்தையிலே செந்தேன் பொழிந்துகொண்டிருப்பவை கடைச்சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, குறள் என்பனவாம். இன்றும் கூட சங்கக் காலம் என்றாலும், சங்க இலக்கியங்கள் என்றாலும், கடைச்சங்கக் காலத்தையும் அக்கால நூல்களையுமே குறிக்கும். கடைச்சங்க இறுதிக்காலத்தில் எழுந்த இரட்டைக் காப்பியங்களாகிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் செவ்வி அருமைளையும், தமிழ் வளர்ச்சியையும், அக்காலச் சமய நிலையையும் இன்ன பிறவற்றையும் நாம் நன்கு அறிவதற்குப் பேருதவி புரிகின்றன. இனி இவற்றை முறையே ஆராய்வோம்.
முச்சங்கம்
தமிழ் நாடு பற்றிய எந்த வரலாறாயினும் சரி, அதிலே முதல் அத்தியாயமாக இருப்பது முச்சங்கம் பற்றிய வரலாறாகும். சங்கங்கள் எப்பொழுது தோன்றின? அவற்றை ஏற்படுத்திய மன்னர்கள் யார்? அவை எத்தனை ஆண்டுகள் உலகில் நிலவின? அவற்றிலிருந்த புலவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இயற்றிய நூல்கள் யாவை? போன்ற வினாக்கள் இன்று முச்சங்கம் பற்றி எழுப்பப்படுகின்றன.
சங்கத் தாய் ஈன்ற செழுங்குழவிகளாகிய பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, குறள் ஆகிய இலக்கிய நூற்களிலே சங்கம் என்ற சொல்லே கிடையாது. சங்கம் பற்றிய குறிப்பும் கிடையாது. கி. பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இறையனார் களவியலுரையிலே சங்கங்கள் பற்றிய குறிப்புகள் முதன் முதலாகக் கிடைக்கின்றன. முதலில் அந்நூல் தரும் குறிப்புகளை நோக்குவோம்.
தலைச் சங்கம்
இதனை முதலில் நிறுவிய பெருந்தகை காய்சினவழுதி என்ற பாண்டிய மன்னனாவான். இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் இருந்தவன் பாண்டியன் கடுங்கோன் என்னும் மன்னனாவான். இது நின்று புகழ் விளக்கிய இடம் தென் மதுரை. இச்சங்கம் நிலவிய ஆண்டுகளின் எண்ணிக்கை 4500. சங்கமிருந்து தமிழாய்ந்த புலவர்கள் 4449 பேர். இச்சங்கக் காலத்திலிருந்த அரசர்கள் 89 பேர். இச்சங்கத்திலிருந்த புலவர்களுள் அடையாளங் காணப்பட்டோர் அகத்தியர், நிதியின் கிழவன், முரஞ்சியூர் முடி நாகராயர் முதலியவராவர். இக்காலத்தெழுந்த நூல்கள் அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலியனவாம். இச் சங்கத்தின் கடைசி அரசனான கடுங்கோன் காலத்தில் ஒரு பெருங் கடல்கோள் ஏற்பட்டு முதற்சங்கம் அழிந்துவிட்டது.
இடைச் சங்கம்
முதற் சங்கத்தினை முந்நீர் விழுங்கிவிடவே, அடுத்து ஏற்பட்டது இரண்டாம் சங்கமாகும். இச்சங்கம் இருந்த நகரம் கபாடபுரமாகும். இந்நகர் பற்றிய குறிப்பு வான்மீகியின் இராமகாதையில் வருவதாகக் கூறுவர். இதிலே இருந்த இன் தமிழ்ப்பாச் செய்த புலவர்கள் 449 பேராவர். இச்சங்கத்தினைத் தோற்றுவித்தவன் வெண்டேர்ச்செழியனாம். இச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் தொல்காப்பியராம். இச்சங்கத்தின் இறுதி அரசன் நிலந்தருதிருவிற் பாண்டியன். இச்சங்கக் காலத்தில் எழுந்த நூற்கள் இசை நுணுக்கம், தொல்காப்பியம், வியாழமாலை அகவல், தொகைநூற் பாடல்களில் சில முதலியவாம். இந்தச் சங்கமிருந்து தமிழ்த் தொண்டு செய்தவர்கள் தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழியார், மோசியார், வெள்ளூர்க்காப்பியனார், சிறு பாண்டரங்கனார் முதலிய பல புலவராவர். இந்த இடைச் சங்கமும் கடல்கோளால் அழிந்தது.
மூன்றாம் சங்கம்
உலக அரங்கிலே நமக்கு ஏற்றத்தையும், இலக்கிய மாளிகையிலே தமிழன்னைக்குத் தனிச் சிறப்பையும், நொந்த நந்தம் சிந்தையிலே செந்தமிழ்த் தேனையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்ற எட்டுத் தொகை முதலிய இலக்கியங்களை ஈன்றெடுத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. இக்காலம் தமிழக வரலாற்றிலே பொன்னெழுத்துகளால் பொறிக்கப் படவேண்டிய காலமாகும்.
இடைச் சங்கம் கடல்கோளால் அழிந்த பின்னர், இப்பொழுதுள்ள மதுரையிலே இச்சங்கம் தோன்றியதாம். இதன் தலைவர் நக்கீரர். இச்சங்கத்தே வீற்றிருந்த புலவர் பெருமக்கள் தொகை 49-ஆம். இச்சங்கத்தின் கீழ் எல்லை கி. பி. 200; மேல் எல்லை கி. மு. 300. நெஞ்சையள்ளும் சிலம்பும், மணிமேகலையும், குறளும் பிறவும் தோன்றியது இக்காலத்தை ஒட்டியே தான்.
இந்த மூன்று சங்கம்பற்றிய அறிஞர் கருத்துகளிலே வேற்றுமைகள் பல உள. பொதுவாக அவர்களை இருவகையினராகப் பிரிக்கலாம். ‘இந்த முச்சங்க வரலாறே பொய்; கட்டுக்கதை; மூன்று சங்கங்கள் இருந்தன என்று சொல்லுவது அரபு நாட்டு ஈசாப்பு கதையை ஒத்தது’ என்பது ஒருசாரார் கருத்து. ‘இறையனார் களவியலுரை கூறும் கருத்துகள் அத்தனையும் முழுக்க முழுக்க உண்மை; மறுக்க முடியாதவை’ என்பது மற்றொரு சாரார் கருத்து. முதல் வகையினர்க்கும் இரண்டாம் வகையினர்க்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது.
முச்சங்கம் பற்றிய வரலாறுகளையும், சங்க இலக்கியங்களில் வருகின்ற கடல்கோள் பற்றிய குறிப்புகளையும், எகேல் போன்ற மேலை நாட்டாரது, குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சி உரைகளையும் பார்க்குங்கால், களவியல் உரைக் குறிப்புகளிலே ஓரளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணவேண்டியுள்ளது.
முச்சங்க வரலாற்றை முதல்வகையார் முழுதும் பொய் என்று முடிவுகட்டுவதற்குக் காரணம், அவற்றில் வருகின்ற புலவர்கள், அவை நடைபெற்ற ஆண்டுகள், ஆதரித்த அரசர்கள் ஆகியோரின் கற்பனைக்கெட்டா எண்ணிக்கை ஆகும்.
களவியலுரை கூறும் கற்பனைகளை ஒதுக்கி வரலாற்றுக் கண்கொண்டு நோக்குவோமாயின், கீழ்வருகின்ற முடிபுக்கே வருவோம். கி.பி. 200க்கு முன்னே பல சங்கங்கள் பல்வேறு காலங்களிலே இருந்து தமிழ்மொழியிலே எண்ணற்ற இலக்கண, இலக்கியங்களை இயற்றிச் செந்தமிழைச் செழுந்தமிழாகச் செய்திருக்கின்றன. பொய்ம்மையும், கற்பனையும், இடைச்செருகலும் நிறைந்த பாரதம், இராமகதை, விட்ணு புராணம், வாயு புராணம், வேதங்கள் ஆகியனவற்றையே வரலாற்றுக்கு அடிப்படையாகக் கொள்ளும்போது, அவை எவையும் இல்லாத சங்க இலக்கியங்களை வரலாற்றுக்கு அடிப்படையாகக் கொள்ளல் தவறாமோ?
(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்