சிற்பக்கலைகள் தமிழருக்கே உரிய தொன்மைக்கலையாகும். எனினும் பிற்காலத்தில் சமசுகிருதம் புகுந்ததால் பழம் பெருமை அறிய முடியாமல் போயிற்று. 10 உரூபாய்க் கல்லைப் 10,000 உரூபாய்க்கு விற்பதில் காட்டும் ஆர்வம், முயற்சி, நாட்டத்தை இவர்கள் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் காட்டாததால், தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டை இழக்கின்றன.
மனு, மயன், துவஃட்டா, சிற்பி,, விஃட்வக்ஞ எனக் குறிப்பதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். சிற்ப வகைக்குரிய பெயர்களை மாற்றிவிட்டு, இப்பெயர் சிற்ப மூலவர்களைக் குறிப்பதுபோல் கட்டுரைத்து விட்டனர்.
கல்லு முலோகமுஞ் செங்கலு மரமு
மண்ணுஞ் சுதையு மெழுகு மென்றிவை
பத்தே சிற்பத் தொழிற் குறுப் பாகும்.
என்னும் பிங்கல நிகண்டு(பா.411) மூலம், கல், மாழை, செங்கல், மரம், மண்,சுதை, தந்தம், வண்ணம், கண்ட சருக்கரை, மெழுகு கொண்டு படிமங்கள் செய்துள்ளதை அறியலாம்.
கற்சிற்பிகள் - கல்வினையர், கற்றொழிலோர் என அழைக்கப்பெறுவர்.
ஏர்த்தொழிலுக்குரியவற்றையும் வீட்டிற்குத் தேவைப்படும் கதவு, நிலை, நாற்காலி, கட்டில் முதலானவற்றையும் கலைநயத்துடன் செய்யும் மரச்சிற்பிகள் தச்சர்/ மரவினையாளர் என அழைக்கப்பெறுவர். இவர்களையே மயா என்றனர். ( மயா > மயன்)
பொன்வினை செய்வோர் தட்டார் / செங்கொல்லர் என அழைக்கப்பெறுவர்.
பொன்னாகிய ஒளிரும் மாழையில் அணிகலன்கள் உருவாக்குமிடம் அக்கசாலை எனக் குறிக்கப் பெற்று அங்கே பணியாற்றும் பொன்வினைஞர் அக்கசாலையர் என்றும் குறிக்கப் பெற்றுள்ளனர். (சொன்னகாரர் என்றும் குறிப்பிடப்படுவர்.) இவர்களையே சமசுகிருதத்தில் விஃட்வக்ஞ என்கின்றனர்.
கொல்லர், கருமர், கம்மியர் எனப்படுவோரே மனு என அழைக்கப் பெற்றனர்.
வெண்கலத்தில் உருவாக்குநர் கன்னா், கன்னுவர், கஞ்சகாரர் எனப்பட்டனர்.
கருங்கல், ஐம்பொன், மரம் ஆகியவற்றில் இறைவன் உருவங்களாகிய படிமங்களைச் செய்பவர்களையே சிற்பிகள் என்றனர்.
கற்றச்சர் என்னும் வகையினர் சித்திரோடாவி என்றும் அழைக்கப் பெற்றுள்ளனர்.
கம்மாளர் / கம்மியர் என்பன பொதுப்பெயர்களாகும். எனவேதான், கருமார், தச்சர், கன்னார், தட்டார், சிற்பி ஆகிய ஐவகையினரும் பஞ்ச கம்மாளர் என அழைக்கப் பெறுகின்றனர்.
பூணூல் அணிந்தும் சமசுகிருதச் சொற்களைப் பயன்படுத்தியும் தங்களை ஆரிய வழி வந்தவர்களாகக் காட்டிக் கொள்வதைவிட்டுத், தாங்கள் தமிழர் மரபினர் என்பதைப் படிம வினைஞர்கள் உணர்ந்தால் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தித் தமிழ்ப்பெருமையை நிலைநாட்டித் தமிழ்க்கலைகளை ஓங்கச் செய்வர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.