இ ன்றைக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது
தனியார் தொழில் நிறுவனமாகட்டும் காலையில் 8 மணிக்கு
அல்லது 9மணிக்கு வேலைக்குப் போனால் எட்டு மணி நேர வேலையை ( கொட்டாவி விடுறது... குட்டித்தூக்கம் போடுறது... சாப்பாடு.... டீக்கடையில் கொஞ்ச நேர அரட்டை... அலுவலக நேரத்தில்......
"ம்ம்ம்... அப்பறம் நேத்து அந்தப்படத்துக்கு டிக்கெட் கெடச்சதா",
"பின் லேடன் உயிரோட இல்லையாமே".... சரிசரி..வாங்க
கேண்ட்டீன் போய் டீ...சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் என்ற அலசல் நேரம் உட்பட ) ஹாயா முடிச்சுட்டு ஜோரா வீட்டுக்குத் திரும்பிடுறோம்.
மேனேஜரோ இல்ல மத்தவங்களோ மாலை 5 மணிக்கு அந்த ·பைலை கொஞ்சம் பாத்துக் குடுக்க முடியுமா? என்று கேட்டால் இன்னைக்கு டயமாயிடுச்சு எல்லாம் நாளைக்குத்தான் என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக் கேட்டால் தகராறு... யூனியன், தொழிற்சங்கம் ஸ்டிரைக் என்ற மிரட்டல் எல்லாம் கூட வெளிப்படும். காரணம். இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பது உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்று.
8மணி நேரம் உழைப்பு (வேலை), 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு (உறக்கம்)என்ற குரல் அங்கிங்கெனாதபடி உலக நாடுகளில் ஒலித்தது. ஒலித்தவர்களில் எண்ணற்ற குரல்வளைகள் நெறிக்கப்பட்டது.ஒலித்த குரல்களின் உயிர்களைக் குடித்த குண்டுகள் எத்தனை? அடித்து நொறுக்கப்பட்டு முடமக்கப்பட்ட உயிர்கள் எத்தனை? தங்கள் இன்னுயிரை ஈந்து அவர்கள் தந்த வெப்பமான எட்டுமணி நேர உத்திரவாதத்தால்தான் இன்று உலகத் தொழிலாளர்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது முலாம் பூசப்படாத 24 காரட் உண்மை!
நூறு... நூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் சொகுசாக வேலை பார்க்க முடியுமா? 16மணி நேரம் 17 மணி நேரம் என்று உழைத்து ஒடாய்த் தேய்ந்த நம் முன்னோர்கள் புயலெனப் பொங்கி எழுந்து உழைப்பவர்களூக்கு உரிய உரிமை வேண்டும் என்று கண்ணீரும் செந்நீரும் சிந்தியதால் தான் இன்றைக்கு நாம் 8 மணி நேர வேலை என்ற சுகத்தை அனுபவிக்கிறோம். உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பிரசவகாலச் சலுகைகள், இன்ன பிறசலுகைகள் என்று சுகம் காண்கிறோம். உழைப்பாளர்கள் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. எட்டு மணி நேரம் வேலை; ஓவர் டைம்; போனஸ், உணவறை, ஓய்வுக்கூடம், தொழிற்கூடங்களில் பொழுதுபோக்கு மன்றம், ஓய்வூதியம், இன்ன பிற வசதிகள் இன்றைக்குத் தொழிலாளர்கள் பெற்று இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் எண்ணற்ற தொழிலாளர்களின் உயிர்த் தியாகமும் அவர்கள் இட்ட புரட்சி வித்தும் தான் காரணம்.
உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சி உண்டு கொழுத்த முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சிக் கொடியூன்றியது யார்? அதன் நெடிய வரலாறு கூறும் உண்மை என்ன என்று பார்ப்போமா?
1791ம் ஆண்டில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் முதன் முதலாக மரவேலை செய்யும் தச்சர்கள் வேலை நேரத்தைப் பத்து மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என தங்கள் குரலை உயர்த்தினர். 1810ல் சமூக வியலாளர் ராபர்ட் ஓவென் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைக்கு குரல் கொடுத்தார். 1848ம் ஆண்டு பிப்ரவரியில் வேலை நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கப் படவேண்டும் என்று பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1835ல் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து பொதுவேலை நிறுத்தத்துக்கு அறை கூவல் விடுத்தனர்.
1836ல் இந்த இயக்கத்தின் தொடர் போராட்டங்கள் காரணமாக முதலாளிவர்க்கம் சிறிது அசைந்து கொடுத்தனர். ஆனாலும் பலன் கிட்டவில்லை.
1871ல் கிரேட் பிரிட்டனில் டிரேட் யூனியன் ஆக்ட் என்ற சட்டத்தை கொண்டுவந்து தொழிலாளர்களை நசுக்க எத்தனித்தது. 1872ல் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு எட்டு மணி நேர வேலைக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை பிரம்மாண்ட பேரணியின் இறுதியில் முடிவெடுத்தனர்.
ஆஸ்திரேலியா....
18ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள பல்வேறு தீவுகளிலிருந்தும்,பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்டகைதிகள் மற்றும் அடிமைகளைக் கொண்டு கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தினர். இவர்கள் இரவுபகல் பாராது கடுமையான வேலைகளைச் செய்யப் பலவந்தப்படுத்தப்பட்டனர்! பலர் சரியான உணவின்மையாலும், ஓய்வின்மையாலும் மரணத்தைத் தழுவினர். தங்களைப்பாதுகாக்க யூனியன் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பத் துவங்கினர். தங்களுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்தமுயல்வதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுடன் ஆலோசித்தது. ஒருமணிநேரம் தாமதமாக வேலைக்கு வந்தாலும் அவர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை அல்லது மிகக்கடுமையான வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தப்பட்டனர். இதே நேரத்தில் தி மாஸ்ட்டர் அன்ட் சர்வன்ட் என்ற சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் பிரிட்டன் 1823ம் ஆண்டு இயற்றிய சட்டத்தைப்போல 1845ல் இயற்றி முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
ஏப்ரல் 21,1856ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு திடீரென்று கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் பேரணி ஒன்றை நடத்தி அரசை ஸ்தம்பிக்கச் செய்தனர். இதுதான் ஆஸ்திரேலிய வரலாற்றில் உழைப்பாளர்கள் ஒன்று திரள வழிவகுத்ததோடு எட்டுமணி நேர வேலையை வென்றெடுக்க பின்னாளில் வழிவகுத்தது!

(முதலாளிகளுக்குச் சாதகமாக 1847ல் அமெரிக்காவிலும்,கனடாவிலும், 1856ல் நியூசிலாந்திலும், தென் ஆப்பிரிக்காவிலும், கிரேட் பிரிட்டனில் 1871லும் சட்டங்கள் இயற்றப்பட்டது.)
இந்த ஒற்றுமையான தேசிய அளவிலான தொழிலாளர் இயக்கத்தைக் கண்ட அமெரிக்க மாநிலங்களில்உள்ள பிற தொழிலாளர்களிடமும் ஒரு உற்சாகம் பிறந்தது. காட்டுதீ போல பரவிய இந்த உற்சாகம்ஆலைத் தொழிலாளர்கள், பிற தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஆங்காஙேதொழிற்சங்கங்களை உருவாக்கி எல்லோரும் பீட்டரின் வழியில் 8 மணி நேர வேலை, வேலைப் பாதுகாப்புபோன்ற சலுகைகளைக் கோரி கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். பீட்டர் மற்ற தொழிற்சங்கத்தினரோடுகூட்டுக் கூட்டங்கள் நடத்தி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர்களுக்கானவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்று அரசை வற்புறுத்தும் வகையில் தீர்மானம் ஒன்றைக்கொண்டுவந்தார். இந்த நாள் அமெரிக்கச் சுதந்திர தின நாளுக்கும் நன்றி கூறும் நாளுக்கும்இடையில் அமையவேண்டுமென்றும் குரல் கொடுப்போம் என்றார் பீட்டர்.பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும்தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும்நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது. அரசியல்வாதிகள் கூட தங்கள் இயக்க நடவடிக்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது.
பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக்கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக்கடலில் நீந்துவது வழக்கம்.