(வெருளி நோய்கள் 654-658: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 659-663
கரப்பான்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கரப்பான் வெருளி.
கரப்பான் பூச்சி பறந்து மேலே விழும், உணவில் விழும், நோய் பரப்பும் என்பன போன்ற அருவருப்பும் கவலையும் அச்சமும் கரப்பான் பூச்சி வெருளிக்குக் காரணமாக அமைகின்றன.
கரப்பான் குருதி வெண்ணிறமாக இருக்கும். இதனை இரத்தமாக எண்ணாமல் அடிபட்டிருக்கும் கரப்பானைக் கண்டு அருவருப்பு அடைவர். கரப்பான் பூச்சி உடல் பலபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக் கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன.ஆதலால், இதன் தலையை வெட்டிவிட்டால் கூட இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும். எனவே, அடித்தாலும் சாகாது என எண்ணி இதனைக் கண்டு மேலும் அஞ்சுவர்.
00
கரிக்கோல்(Pencil) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கரிக்கோல் வெருளி.
Pencil என்பதை எழுதுகோல் என்றும் சொல்வர். ஆனால் அது பொதுச் சொல்லாக இருப்பதால் கரிக்கோல் எனக் குறிக்கப் பெற்றுள்ளது.
00
பாவச்செயல்கள் செய்வதற்கு அஞ்சுவது கரிசு வெருளி.
கரிசு என்றால் பாவம் என்று பொருள்.
பாவம் செய்தது அல்லது செய்வது தொடர்பான, அதன் விளைவுகள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கொள்ளுதல்.
தீவினை செய்வதற்கு அச்சம் இருப்பதுதான் நற்செயல்கள் செய்வதற்குத் தூண்டுதலாக அமையும். எனவே, இந்த அச்சம் தவறல்ல. ஆனால், எல்லாச் செயல்கைளயும் கரிசாகக் கருதி இயல்புக்கு மீறிய அச்சம் தவறாகும். இதனால் கரிசிற்குக் கழுவாய் செய்வதாக – பாவவிமோசனம் செய்வதாகச் சிலர் ஏமாற்றுவதற்கு ஆளாகின்றனர்.
pecca என்னும் இலத்தீன் சொல்லிற்குக் கரிசு, குற்றம் செய்தல்/ கற்பனைக் குற்றம் எனப் பொருள்கள்.
hamarto என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் பாவம் எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5