புறநானூறு 2 ஆம் பாட்டு - 4

140 views
Skip to first unread message

iraamaki

unread,
Aug 12, 2010, 8:48:57 PM8/12/10
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com
அடுத்துள்ள 4 வரிகள் பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவை.
 
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலும்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
 
மேலே உள்ளதை ஆழ்ந்து படித்தால் பாண்டவ, கௌரவ பாரதப் போரின் இருபக்கப் படைக்கும் சேரன் உணவளித்துப் புரந்ததாய் உரைகாரர் சொல்லுவது நம்ப முடியாதது என்று புலப்படும். ஏனெனில் இவ்வரிகள், “ஐவரோடு சினமுற்று தும்பைப் போரில் பொருதுகளத்து ஒழிந்த நூற்றுவருக்கு பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தது” பற்றிச் சொல்லுகின்றன. [அலங்குளைப் புரவி ஐவர் என்ற கூட்டுச்சொல் இங்கு கருத்தாவைக் குறிக்கவில்லை. ”பொலம்பூந் துமை ஈரைப்பதின்மர்” என்பது தான் இங்கு கருத்தா. ”பொருதுகளத்தில் ஒழிதல்” என்பது கருமம் / வினை. அதைப் பின்பற்றும் கருமம்/வினை ”பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தல்” என்றாகும். மீண்டும் பாடல் வரிகளை ஆழ்ந்து படியுங்கள்.]
 
வரிகளைப் படித்தவுடனேயே ”அறந்தவறிப் பாண்டவர் நிலம் பற்றிக் கொண்ட கௌரவருக்கா, பெண்ணை இகழ்ந்து, பழி செய்த கௌரவருக்கா, சேரர் பெருஞ்சோற்று மிகுபதம். கொடுத்தார்கள்?” என்ற நயன்மைக் கேள்வி நமக்குள் எழுகிறது. ”18 நாள் பாரதப் போர் உண்மையில் நடந்ததா?” என்ற கேள்வி பின்புறம் நிற்க, அந்தப் போர் மோரியருக்கும் முன்பு நடந்திருக்கவே வாய்ப்புண்டு என்ற காலநிலையை வைத்துப் பார்த்தால், ”வானவர் அன்பன்” என்று மோரியரைப் பின்பற்றித் தன்னை அழைத்துக் கொண்ட சேரலாதன் எப்படிப் பாரதப் போர் காலத்திலிருந்தான்? - என்ற காலமுரணும் நமக்குள் கேள்வியாய் அரும்புகிறது. இக் காலமுரணைத் தவிர்க்க வேண்டுமானால், ”ஒருவேளை கௌரவர் பாண்டவர் என்று இங்கே அடையாளப் படுத்தியதே தவறோ? இது வேறு வரலாற்றுச் செய்தியோ?” என்ற எண்ணமும் எழுகிறது. மொத்தத்தில் ஏரணப்படி (logicaly) பார்த்தால் இங்கே மாபாரதக் கதையைத் துணைக்கு அழைத்ததே தவறு என்ற முடிவுக்கே நாம் வருகிறோம்.
 
சண்டைக்கு இழுத்து வஞ்சிப் போரிட்டது யாரோ ஒரு ஐந்துபேர். அவருக்கு எதிராய்த் தும்பைப் போரிட்ட 100 பேரும் இப்போரில் இறந்து போனார்கள். தொன்மத்தில் வேண்டுமானால் நூற்றுவர் கௌரவராகலாம்; வரலாற்றில் நூற்றுவர் வேறு யாரோவொருவராய் இருக்கமுடியாதா? அவர் யார்? நூற்றுவர் என்பது ஏன் ஒரு சொல்விளையாட்டாய் இருக்கக் கூடாது? ”பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்பதற்குப் பொருளென்ன? - என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி ஒரு விளக்கம் தும்பைப் போரியற்றிய, சேரரையொட்டிய ஓர் அரசமரபினர் பற்றிச் சொல்ல முடியும். கொஞ்சம் பொறுமையாகப் பார்க்கலாம்.
 
பல்வேறு காரணங்களால் செங்குட்டுவனின் கடைசிக் காலம் கி.மு.75க்கு அருகில் என்றே முடிவு கொள்ளவேண்டியிருக்கிறது. கனகவிசயர் என்னும் கண்வர் மேலும், சுங்கர் மேலும், செங்குட்டுவன் படையெடுத்தது ஏறத்தாழ கி.மு.80 ஆக இருக்கலாம். வேறெந்தக் காலமும் இந்தப் படையெடுப்பிற்குப் பொருந்தவேயில்லை. ”இளங்கோ பொய் சொல்லவில்லை, வரலாற்றுச் செய்தியை மட்டுமே சொன்னார்” என்று கொண்டால், சிலம்புக் கதை நடந்த காலம் பெரும்பாலும் கி.மு.80க்கு அருகிற் தான். [விளக்கம் வேண்டுவோர் ”சிலம்பின் காலம்” என்ற என் தொடரைப் படிக்க வேண்டுகிறேன். உளுத்துப் போன கயவாகுக் கதையை வைத்துக்கொண்டு சிலப்பதிகாரத்தைக் கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்கு இழுத்து வரும் போக்கை நான் அங்கு கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறேன்.]
 
பதிற்றுப்பத்தின் பதிகச் செய்திகளால் செங்குட்டுவன் அரசு கட்டிலில் வீற்றிருந்தது 55 ஆண்டுகள் என்றாகிறது. அப்படியானால் அவன் பட்டத்திற்கு வந்தது கி.மு.130 என்று ஆகும். சேரனுக்கு முன்னால் குடக்கோச் சேரனாய் இருந்தது இவன் தந்தை நெடுஞ்சேரலாதனே (மற்ற உறவினரெல்லாம் சேரநாட்டின் பகுதிகளையே ஆளுநர்கள் போல் ஆண்டிருக்கின்றனர். மைய அரசை ஆண்டது நெடுஞ்சேரலாதனும் அவன் மகன் செங்குட்டுவனுமே.) நெடுஞ்சேரலாதன் ஆண்டது 58 ஆண்டுகள். நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் மகன் செங்குட்டுவனுக்கும் இடையே அரசன் - இளவரசன் என்ற மேற்படுகை ஆண்டுகள் (overlap years) 20 என்று கொண்டால் நெடுஞ்சேரலாதன் குடக்கோ ஆனது கிட்டத்தட்ட கி.மு.168 என்று ஆகும். இனி அவனுக்கும் அவன் தந்தை உதியன் சேரலுக்கும் இடைப்பட்ட மேற்படுகை ஆண்டுகள் 20 என்று கொண்டு, உதியஞ் சேரல் தனியே ஆட்சி செலுத்தியது 25 ஆண்டுகள் (ஒரு நிரவல் ஆட்சிக்காலம் - average rulling period) என்று கொண்டால் கிட்டத்தட்ட உதியஞ்சேரல் பட்டத்திற்கு வந்தது கி.மு.193 என்றாகும். அதாவது பெரும்பாலும் கி.மு.2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உதியஞ் சேரல் ஆட்சிக்கு வந்திருக்கலாம் என்ற கருதுகோளை நாம் கொள்ளுவோம். [இந்தக் கருதுகோள் 5, 10 ஆண்டுகள் இந்தப்பக்கம், அந்தப்பக்கம் போகலாம். இப்போதைக்கு இந்தத் துல்லியம் போதும்.]
 
அந்தக் காலத்தில் கி.மு..185 ல், மகதத்தில் ஆட்சி புரிந்தவன் மோரியரின் கடைசியரசன் பெருகதத்தன் (=ப்ருகத்ரதன்) ஆவான். இவன் தான், இவன் அமைச்சன் சுங்கன் புஷ்ய மித்திரனால் கொலை செய்யப்படுகிறான். [கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு இந்த மகதநாட்டுப் பெருகதத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தவே கூடப் பாடப்பட்டிருக்கலாம். உரையாசிரியர்கள் அவனை வெறுமே ஆரிய அரசன் என்று சொல்லிவந்திருக்கிறார்கள்.] சுங்கன் இப்படி அரண்மனைக் கொலைசெய்து அரசுகட்டில் ஏறியதை ஏற்றுக் கொள்ளாத சாதவா கன்னர்கள் (இவர் தான் மோரியர்களின் தண்டநாயகர்களாய், தக்கணப்பாதையின் வாயில் காப்போராய், படித்தானத்தில் - பயித்தான் paithan - அரசு வீற்றிருந்தவர்கள்) சுங்கரை எதிர்த்துப் போரிட்டு வந்தார்கள். சுங்கருக்கும் சாதவா கன்னருக்கும் இடையே இருந்த போர் வஞ்சி - தும்பைப் போர் தான். சுங்கர் செய்தது வஞ்சிப் போர்; சாதவா கன்னர் செய்தது தும்பைப் போர்.
 
சாதவா கன்னர் என்பவர் தான் நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதிகாரத்தில் அழைக்கப்படுபவர். சாதவா கன்ன எனும் பாகதப் பெயரைப் பலரும்  பலவிதமாய் அடையாளங் காணுவர். ”சாதவா கன்ன என்ற பெயர் Indo-Austric மொழிகளில் சாத = குதிரை; கன்னா = மகன்  என்று எழுந்ததாகச் சிலர் சொல்வர். ஆனால் சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால்,”நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்லமுடியும். சிலம்பும் அப்படித்தான் மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். "அவனைப் போட்டுச் சாத்திட்டான்" என்று இன்றையத் தமிழ் வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா?
 
அந்தச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்குதல் என்னும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற ஆங்கிலச் சொல்லும் கூடப் பொடி என்ற பொருளில் எழுந்தது தான்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான் [வடபால் மொழிகளில் பழகும் சொல்]. ஆகச் சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலரும் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (= சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவுதான். [ஆனாலும் சொல் விளையாட்டில் நூற்றுவர் என்பதை 100 பேர் = ஈரைம்பதின்மர் என்று இடக்கரடக்கலாய்க் கூறமுடியும்.] இன்னும் ஒரு சிலர் சாதவா கன்னர் என்று படிக்காது சாத வாக(ன்)னர் என்று படிக்கிறார்கள். அப்படிச் சொல் பிரிப்பது தவறென்றே தோன்றுகிறது. சரியான சொற்திரிவு சதம்>சதவர்>சாதவர்>சாதவா = நூற்றுவர் என்றேயாகும்.
 
கன்னர் என்பது கர்ணி என்றும் திரிகிறது. இங்கே ”காது, கன்னக்குழி” போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்னன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் விதப்பாகச் சொல்லப்படுவான். பாகதத்தில் கிருஷ்ண என்பது கன்ன என்றாகும். கன்னன் என்பது சேரன், சோழன், பாண்டியன், போல ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும். சேர, சோழ, பாண்டியருக்கு இன அடையாளம் (சாரல் பூசியவர் சாரலர்>சேரலர், கோழி = பொன்னிறம்-மஞ்சள்/குங்குமம் பூசியவர் கோழியர்>சோழியர், பாண்டில் பூசியவர் பாண்டியர்) சொல்வது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநர்>கன்னர் என்று ஆகியிருக்க வாய்ப்புண்டு.
 
கன்னரின் ஆட்சிக்காலம் கி.மு.230 - கி.பி.220 என்று சொல்லுவார்கள். கன்னரின் முதலரசன் சீமுகன். இவர்களின் முதற் பேரரசன் சாதகர்ணி I (கி.மு. 180-124) சுங்கரைக் கட்டுப்படுத்தி மாளுவம்/ அவந்தியைப் பிடித்தான். அத்திகும்பா கல்வெட்டும் (கி.மு.172) சாதகர்ணி I ஐப் பற்றிப் பேசுகிறது. முதலாம் சதகர்ணிக்கு அப்புறம் ஒரு பெருவீழ்ச்சி கன்னருக்கு ஏற்பட்டது. சாதகர்ணி I ற்கு முன்னால் தும்பைப் போரில் தோற்று போய் பலர் இறந்திருக்கலாம். 
 
சிலம்பைப் படித்தால், சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் நல்ல உறவு நெடுநாட் பட்டு இருந்திருக்க வேண்டும் என்று புரிகிறது. இரண்டு மூன்று தலைமுறைகளாய் உதியன் சேரல் காலத்திருந்தே இந்த உறவு தொடர்ந்திருக்கலாம். ”தம் நண்பருக்கு ஆனது தமக்கானது” போல் கன்னரின் தொடக்க காலத் தும்பைப்போர்த் தோல்விகளைச் சேரர் நினைத்திருக்கலாம். அந்தத் தும்பைப் போரில் இறந்தவருக்காகச் சேரர் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்திருக்கலாம். இது வேறெங்கும் பதிவு செய்யப்படாத வரலாற்றுச் செய்தியாய் ஏன் இருக்கக் கூடாது?
 
இனிப் பெருஞ்சோற்று மிகுபதம் என்பதற்கு வருவோம். பொதுவாகத் தமிழர் வாழ்வில் முன்னோர் வழிபாடு என்பது என்றுமேயுண்டு. (அது மற்ற திராவிடர் வாழ்விலும் இருந்திருக்கலாம்.) எடுத்துக் காட்டாக இன்றைக்கும் தென்பாண்டிநாட்டில் சிவகங்கைச் சீமையில் வீட்டில் நல்லது நடக்க வேண்டுமானால் [ஒரு திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.] தம் முன்னோரை நினைந்து வருடைய ஆசி வேண்டிக் குறிப்பிட்ட விழவிற்கு சில நாட்கள் முன்னால் ”படைப்பு” என்ற ஒன்றைச் செய்வார்கள். இது ஒரு முன்னோர் வழிபாடு. அந்த முன்னவர் ஆணென்றால் வீட்டில் அவர் நினைப்பில் வைத்திருக்கும் கோடி வேட்டியையும், துண்டையும் நீர் நிலையில் அமிழ்த்திக் கசக்கிப் பிழிந்து பங்காளிகள் எல்லாம் அதைக் கொண்டுவந்து உலர்த்திப் பின் மடித்து வேட்டியை படையல் செய்யும் இடத்தில் வைத்து அதற்கு மேல் ஒரு துண்டை தலைப்பாகைக் கட்டுபோல் அழகுற ஆக்கி,  கூடவே உருத்திராக்க மாலை அணிவித்து அந்த முன்னாள் ஆவி அங்கு குடிவந்தது போலவே செய்வார்கள். இதே போல இறந்து போன முன்னவர் பெண் (பாட்டி என்று கொள்ளுங்களேன்) என்றால் கோடிச் சேலையை நீரில் அமிழ்த்திக் கசக்கிப் பிழிந்து பின் உலர்த்தி அவரைப்போலவே உருவகம் செய்து தாலி அணிவித்து, முன்னாற் பாட்டி அங்கு எழுந்தருளுவது போலவே செய்து வைப்பார்கள். தாத்தனுக்கோ, பாட்டிக்கோ வேண்டப்பட்ட உணவு வகைகளைப் பண்ணி கூடவே படையற் பண்ணிகாரங்களைச் செய்து முன்னோர் ஆவிக்குப் படையலிட்டு பின்னாற் கூடியிருக்கும் சுற்றத்தார் அனைவருக்கும் பெருஞ்சோறு படைப்பார்கள். படைப்புச் சோறைத் தான் பெருஞ்சோறு என்பார்கள்.
 
முன்னோர் படையல் முறைதான் இன்றுங் கூட சிறுதெய்வக் கோயில்களான ஐயனார் கோயில்களிலும், காளி கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும், கருப்பர் கோயில்களிலும் திருமேனிகளுக்கு முன்னாற் செய்யப்படும் வழிபாட்டு முறையாகும். பின்னால் இது ஆகம சமயத்திலும் பரவி பெருமானமயம் ஆக்கப்பட்ட கோயில்களிலும் (Brahminised temples) கூட நடைமுறையானது. நாட்கள் ஆக ஆக ஒவ்வொரு சிறுதெய்வக் கோயிலும் நம் நாட்டில் பெருமானமயம் ஆகிக் கொண்டே வந்தாலும் பெருமானர் அல்லாத (non-brahmin) பழக்க வழக்கங்கள் ஏதோவொரு வகையிற் தொடர்ந்து பின்பற்றப் படுகின்றன. ஆக ஒரு இனக்குழு நடவடிக்கை (tribal practice) கொஞ்சங் கொஞ்சமாய் சமய நடவடிக்கை (religious temple practice) ஆகியிருக்கிறது. ”ப்ரசாத்” என்று வடமொழியில் மொழிபெயர்த்துச் சொல்கிறார்களே அது கூடப் “பெருஞ்சோறு” என்பதன் நேரடிச் சங்கத மொழிபெயர்ப்புத் தான். கோயில் ஆகம நெறிமுறைகளுக்கும் வேத நெறிக்கும் எந்தத் தொடர்புங் கிடையாது. இந்து மதம் என்பது வேத நெறியும், ஆகம நெறியும், இனக்குழுப் பழக்கங்களும் கலந்த ஒரு கலவை நெறி. வேத நெறியின் தாக்கம் அதில் ஒரு சிறு பகுதிதான். எல்லாவற்றையும் வேதம் வழியாகப் பார்ப்பதைப் போல முட்டாள் தனம் கிடையாது. ஆனாலும் பல ஆராய்ச்சியாளர்கள் அந்த முட்டுச் சந்திற்குள்ளேயே போய்விழுகிறார்கள். அரச பாட்டைக்கு வரமாட்டேம் என்கிறார்கள்.
 
இது போக, முன்னோர் இறந்த, குறிப்பாகத் தந்தை தாயர் இறந்த நாளின் போது (அதாவது அதே நாள்மீன் ஏற்படும் நாளில்) தமிழர் “பிண்டம் மேய பெருஞ்சோறு கொடுப்பதும்” உண்டு. [தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் வஞ்சித் திணைபற்றிய குறிப்பில் 9 ஆம் துறையாக ”பிண்டம் மேயப் பெருஞ்சோற்று நிலை” சொல்லப்பெறும்.] பிண்டம் என்பது எள்ளுச் சோற்றுருண்டை. இதை இந்தக் காலத்தில் பெருமானமயச் சடங்குகள் கூடிப்போன காரணத்தால் ”தர்ப்பணம் செய்தல்” ”திதி கொடுத்தல்” என்று சங்கத வழக்கில் மொழிபெயர்த்துச் சொல்லுவார்கள். அடிப்படை வழக்கம் தமிழர் வழக்கம் தான். இதைச் செய்வதிற் பூசாரி தான் மாறிவிட்டார். பழம் அறிவருக்குப் (பறையருக்குப்/ பண்டாரத்திற்குப்/ குயவருக்குப்) பகரியாய் இப்பொழுது பார்ப்பனர் வந்துவிட்டார். அதனாலேயே இது பார்ப்பனர் வழக்கம் ஆகிவிடாது. [இன்றுங் கூட பெருஞ்சோற்று விருந்தின் முதல் மரியாதை எங்கள் பக்கம் பறையர் என்னும் அறிவருக்குத் தான்.]
 
இன்னொரு விரிவாகத் தென்பாண்டி நாட்டில் பெரும்பகுதியில் ஆடி அமையுவாவின் (ஆடி அமாவாசையின்) போது நீர்நிலைகளுக்கு அடுத்திருந்து (கடல், ஆறு, ஏரி, குளம் இப்படி அது விரியும்) மூன்று தலைமுறை முன்னவர்க்குப் பிண்டம் மேயப் பெருஞ்சோறு கொடுப்பதுண்டு. சென்ற வாரம் தான் தமிழ்நாடெங்கணும், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் இது நடந்தது. குமரி, நெல்லை மாவட்டங்களில் ஆடி அமையுவாவிற் பிண்டங்கொடுத்துப் பெருஞ்சோறு படைப்பது பெரிதும் உண்டு. பெருஞ்சோறு கொடுப்பதற்கு அரசனாய் இருக்கவேண்டியதில்லை. வசதியிருக்கும் எவனும் இதைச் செய்யமுடியும். செல்வ நிலைக்குத் தகுந்தாற் போல் பெருஞ்சோற்றின் செழுமை மாறும். அவ்வளவு தான்.
 
“பெருஞ்சோற்று மிகுபதம்” என்பது இரட்டை வழக்கு. பெருஞ்சோறு என்றாலும் மிகுபதம் என்றாலும் ஒரே பொருள் தான்.
 
இங்கே நூற்றுவர் கன்னரின் முன்னோருக்கு படையலெடுத்து, சேரரும் அவரும் ஒரே குலம் போலத் தான் என்று ஊருக்கே உணர்த்திச் சேரன் நட்பரசோடு சொந்தம் கொண்டாடுகிறான். அவ்வளவுதான். “சேரனே! நூற்றுவர் கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் செய்தாயே? அவன் குலமும், உன் குலமும் ஒன்றென்று பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்று சொல்லுவோம்?” என்று புலவர் வியக்கிறார்.
 
நூற்றுவர் கன்னர் மேல் சினந்து படையெடுத்து வஞ்சிப்போர் செய்த அந்த ஐவர் யார் என்று என்னாற் சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் சேரருக்கு வேண்டிய அவந்தியரசராய் இருக்கமுடியாது. பெரும்பாலும் பகையரசரான மகத அரசராகவே இருக்க முடியும்.      
 
அன்புடன்,
இராம.கி.

C.R. Selvakumar

unread,
Aug 12, 2010, 9:01:23 PM8/12/10
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
அன்புள்ள இராம.கி  ஐயா,
 
பலமுறை படித்து பதியவைத்துக்கொள்ள வேண்டிய செய்திகள்.
எத்தனைப் பொறுமையாக எத்தனை ஆழமாக அலசுகின்றீர்கள்!
 
மிக்க நன்றி ஐயா!
 
அன்புடன்
செல்வா

2010/8/12 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

R.C. Palaniappan

unread,
Aug 13, 2010, 12:27:08 AM8/13/10
to tamil_...@googlegroups.com
மிக அருமை,
இரா.சி.பழனியப்பன்,
இராஜபாளையம்

>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>


>> .
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>
>
>
>
> --
> Regards
> Selva
> ___________________
> C.R.(Selva) Selvakumar
>

> --
> You received this message because you are subscribed to the Google

> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com


> For more options, visit this group at

> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

Reply all
Reply to author
Forward
0 new messages