
(குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-தொடர்ச்சி)
நல்லார் தொடர்பைக் கைவிடாதே!
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
(திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰ – 450)
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பல பத்து மடங்கு தீமை ஆகும்.
பதவுரை
பல்லார் – பலர்; பகை – எதிர்ப்பு;பகைத்தல்; கொளலின் – கொள்வதைவிட ; பத்து – ஓர்எண்; அடுத்த – மேன்மேல்வருதல்; தீமைத்தே – தீமையே; நல்லார் – நற்பண்புடைய பெரியோர்; தொடர் – தொடர்பை; கைவிடல் – கைவிடுதல் – கைவிட்டுவிடுதல்;
பத்தடுத்த என்பது பதின்மடங்கு என்பதைக் குறிக்கிறது. அடுக்கி வரும் பத்தின் எண்ணிக்கை எனக் கொள்ள வேண்டும்.
நல்லவர் தொடர்பைக் கைவிடக்கூடாது என்பதால் பல்லார் என்பதில் நல்லவர் அடக்கம் இல்லை எனலாம்.
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். (திருக்குறள், ௮௱௭௰௩ – 873)
எனத் திருவள்ளுவர் பலரின் பகை கொள்பவன் பித்துப்பிடித்தவரை விட அறிவிழந்தவன் என்கிறார்.
அத்தகைய பல்லார் தீமையை விட நல்லோர் தொடர்பைக் கைவிடலைப் பதின்மடங்கு தீமை என்கிறார்.
பகை என்பது ஒருவரின் வளர்ச்சிக்கு ஆக்கத்திற்கு ஊக்கத்திற்குத் தடையாய் அமையும்; தீங்கு விளைவிக்கும்; முன்னேற்றத்தைத் தடைப்படுத்தும். முயற்சி மேற்கொண்டு பகையை வெல்லலாம்; வாகை சூடலாம். என்றாலும் அதற்கு முன்னதாகப் பகையால் விளையும் தீமை தீமைதானே. அவ்வாறான தீமைகளை விடப் பன்மடங்கு தீமைகள் நல்லோர் தொடர்பைக் கைவிடுவதால் விளையும் என்கிறார் திருவள்ளுவர். நல்லோர் தொடர்பு ஒருவருக்குத் தீமைகளிலிருந்து காக்கும் கேடயமாக விளங்கும். அத்தகைய காப்பு கருவியைப் புறக்கணித்தால் பெருந்தீங்குகள் அல்லவா விளையும்? எனவேதான் நல்லார் தொடர்பைக் கைவிடுதலைப் பெருந்தீங்காகத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
முனைவர் சாலமன் பாப்பையா, அதிகாரம் முழுவதிலும் பெரியார் என்பதைத் துறைப் பெரியவர் என்றே குறிப்பிடுகிறார். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அந்தந்தத் துறைப் பெரியவர் நட்பும் உறவும் தொடர்பும் தேவை என்கிறார். பெரியார் என்பதற்கு அறிவிலும் பட்டறிவிலும் பண்பிலும் பெரியார் எனப் பிறர் கூறுகையில் இவர் மாறுபடக் கூறுவதும் சரியே. என்றாலும் துறைப்பெரியவராய் இருப்பினும் பண்பிற் சிறந்தவராயும் இருத்தல் வேண்டும்.
கடுவெளிச்சித்தர்
வல்லவர் கூட்டத்திற் கூடு
என்றும்
நல்லவர் தம்மைத்தள் ளாதே
என்றும் கூறுகிறார்.
இதனையேதான் திருவள்ளுவர் நல்லார் தொடர்பைக் கைவிடுவதன் தீமையைக் கூறுவதன் மூலம் நல்லார் தொடர்புடன் இருக்க வலியுறுத்துகிறார்.
எனவே, நல்லார் தொடர்பைப் பற்றிக் கொண்டு
நல்லன அடைந்து சிறப்போம்
– இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 746-750: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 751-755
காலணி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காலணி வெருளி.
காலணி காலைக் கடித்துவிடும், கால்கள் புண்ணாகி நடக்க முடியாது என்பனபோன்ற கவலைகளும் அவற்றால் காரணமற்ற பேரச்சமும் கொள்கின்றனர்.
Papoutsi என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காலணி எனப் பொருள்.
00
காலணிப் பெட்டி(shoebox) குறித்த வரம்பற்ற பேரச்சம் காலணிப் பெட்டி வெருளி.
காலணி வெருளி(Papoutsiphobia). அடைப்பிட வெருளி (Claustrophobia) உள்ளவர்களுக்குக் காலணிப் பெட்டி வெருளி வர வாய்ப்புள்ளது.
00
காலநிலைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காலநிலை வெருளி.
மிகுதியான மழை,மிகுதியான வெயில், மிகுதியான குளிர், காலநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் முதலியவற்றால் ஏற்படும் அளவுகடந்த பேரச்சமே காலநிலை வெருளி.
இடி மின்னல் வெருளி(ceraunophobia). வானிலை வெருளி(Astrophobia/ Astraphobia/keraunophobia/tonitrophobia/Meteophobia)) முகில் வெருளி(Nephophobia) உள்ளவர்களுக்குக் காலநிலை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
காலந்தவறாமைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காலந்தவறாமை வெருளி.
காலந்தவறாமை என்பது சரியான உரியநேரத்தில் வருவதும் உரிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்வதுமான நற் பழக்கமாகும். மேலும் இது மற்றவர்களின் நேரத்திற்கு மதிப்புளிப்பதாகும். வெற்றிக்கு அடிப்படையுான நற்பண்புமாகும், சிறப்பான நேர மேலாண்மைக்கு உதவுகிறது
ஒழுக்கத்தை வளர்க்கிறது. நேரந்தவறாமையைப் பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் பொறுப்பானவர்களாகவும் நம்பகமானவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். இது நம்பிக்கையையும் நல்ல நற்பெயரையும் வளர்க்க உதவுகிறது. நேரந்தவறாமையை வளர்ப்பது சிறந்த ஒழுங்கமைப்பிற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அமைதியான வாழ்க்கைக்கும் வழிவகுக்கிறது.
எனவே, காலந்தவறாமையைப் பின்பற்றாவிட்டால் அவப்பெயர் ஏற்படும், திட்டமிடுதலைச் சரியாக முடிக்க முடியாது, பிறரின் சினத்திற்கு ஆளாக நேரிடலாம் எனக் கவலைப்பட்டுக்காலந்தவறாமை வெருளிக்கு ஆளாகின்றனர்.
திருவள்ளுவர், உரிய காலத்தல் செயலாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் காலமறிதல் ஏன்னும் ஓர் அதிகாரத்தையே(எண் 49 திருக்குறளில் வழங்கியுள்ளார். சோம்பலின்றிச் செயற்பட்டால்தான் காலந்தவறாமையைப் பின்பற்ற முடியும் என்பதற்காக மடியின்மை என ஓர் அதிகாரத்தையும்(எண் 61) அளித்துள்ளார். பிற இலக்கியங்களிலும் இவை வலியுறுத்தப்படுகின்றன.
00
காலப் பயணம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காலப் பயண வெருளி.
காலப் பயணம் என்பது கடந்த காலத்திற்கு அல்லது எதிர்காலத்திற்கு பயணிக்கும் ஒரு கற்பனைச் செயற்பாடாகும். இது, மெய்ம்மையியல்(தத்துவம்)புனைகதைகள், குறிப்பாக அறிவியல் புனைகதைகள் ஆகியவற்றில் இடம் பெறும் ஒரு கருத்தாகும். புனைகதைகளில், காலப் பயணம் பொதுவாக கால இயந்திரம் எனப்படும் ஒரு கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் இலக்கை அடைகிறது. கால இயந்திரம் என்ற கருத்தை எச்.சி.வெல்சின் 1895 ஆம் அறிமுஆண்டு வந்ந புதினமான கால இயந்திரம் (H. G. Wells,1895,The Time Machine) ]அறிமுகப்படுத்திப் பரவலாக்கியது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5