புலவர் இறைக்குருவனாரின் மறைவு தமிழுலகுக்குப் பேரிழப்பாகும்.
அன்னாரது இறுதி ஊர்வலம் 25.11.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை மேடவாக்கம் கூட்டுச் சாலையிலுள்ள சாயிராம் நகர் பாவலரேறு தமிழ்க்களத்திலிருந்து புறப்படும்.
மாபெரும் அறிஞரான திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களின்
வாழ்க்கைக் குறிப்பு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள தீவாமங்கலம் என்னும் சிற்றூரில் திரு. கோ.முத்தையா-மீனாட்சியம்மை ஆகிய வாழ்விணையர்க்குப் பத்தாவது மகவாகப் பிறந்தவர்.
பிறந்த நாள்: 1942 ஏப்பிரல் 2. பள்ளிப் படிப்பை நன்னிலம் கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் படிப்பை முடித்தார்.
இயல்பாகவே தமிழுணர்வு கொண்ட இவர் பள்ளிப் பருவத்திலேயே திருக்குறள் முழுவதையும் மனப்பாடம் செய்தார்.
பாடல்கள் புனைவதில் ஆர்வம் உடையவரானார். வள்ளுவர் வாழ்த்துப் பாமாலை என்னும் பாடல் நூலை அச்சிட்டு வெளிக்கொணர்ந்தார்.
இவர் தம் தமிழாசிரியர் புலவர் மணி மு.குஞ்சிதபாதனார் அந்நூலுக்கு வழங்கிய சாற்றுப்பா வருமாறு:
திருக்குறள் அமிர்தந் தன்னைத்
தீபமாம் மங்கலஞ் சேர்
கருத்தொளிர் சாமி நாதன்
காசினி யவ ரருந்தப்
பொருத்தமாய்ப் புதுவாய் பாவில்
புகட்டியே புகழ் விளங்க
அருத்தமும் இன்பும் உற்றே
ஆழிசூழ் உலகில் வாழி!
பள்ளிப் பருவத்திலேயே தவத்திரு மறைமலையடிகளாரின் திருவாசக விரிவுரையில் தொடங்கி அனைத்து நூல்களிலும் தோய்ந்து தூய தமிழிலும் சிவநெறியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
பெற்றோரிட்ட சுவாமிநாதன் என்னும் பெயரைத் தமிழில் இறைக்குருவன் என்று மாற்றிக்கொண்டார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இவர் பயின்ற காலை இந்தி வல்லாண்மை எதிர்ப்பு அறப்போரில் முன்னணியில் நின்று முனைந்து செயல்பட்டார். அப்போது இவர் எழுதி வெளியிட்ட நூல் மொழிப்புரட்சி என்பதாகும்.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ நிலையில் திருக்குறள், பரிமேலழகர் உரை, ஆத்திசூடி உள்ளிட்ட பத்து அறநூல்கள் ஆகியவற்றில் நிறைந்த புலமை உடையவர்கள் கலந்து கொள்ளும் “திருக்குறள் அறநூல் பரிசுத் திட்டம்” என்னும் போட்டியில் கலந்து கொண்டு வென்றார்.
பைந்தமிழ்ப் பாவலர் பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் இவரை திருக்குறள்மணி என்னும் சிறப்புப் பெயரால் பாராட்டினார். சித்தாந்தப் புலவர் முருக தம்பிராசு அவர்களிடம் மெய்கண்ட நூல்கள் பயின்றார்.
பல்கலைக்கழக மாணவர்களிடையே நல்ல தமிழில் பேசவும் உரை நிகழ்த்தவும் பழக்கும் பொருட்டு ‘மறைமலையடிகள் சொற்பயிற்சி மன்றம்’ என்ற அமைப்பை நிறுவி நடத்தினார்.
திருநெறிக் கழகம் என்ற அமைப்பை நிறுவித் திருவேட்களம் கோயிலில் வாரவழிபாடும் திருத்தொண்டர் புராணத் தொடர் சொற்பொழிவும் நடத்தினார்.
தூய தமிழ்த் தொண்டில் நாட்டங்கொண்ட இவர், பல்கலைக் கழகப் படிப்பை முடித்தவுடன் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தென்மொழிப் பணிகளில் ஈடுபட்டார். மொழி ஞாயிறு பாவாணர் அவர்களோடு பழகும் வாய்ப்பையும் பெற்றார்.
பள்ளிப் பருவத்திலேயே தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சொற்ப்பொழிவில் மனந்தோய்ந்து அதனை ‘வாழ்க்கை வட்டம்’ என்னும் பெயரில் எழுத்தோவியமாக்கினார். அக்கட்டுரை அக்கால் தமிழீழத்தினின்றும் வெளிவந்த ‘செந்தாமரை’ என்னும் ஏட்டில் வெளியாயிற்று.
குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்ற இவர், அடிகளாரைச் சிறப்பாசிரியராகக் கொண்ட ‘தமிழகம்’ என்னும் இதழின் பொறுப்பேற்று அதனை மதுரையில் இருந்து நடத்தினார். அதற்கு முன் இவர் நடத்திய இதழ் ‘பாவை’என்பதாகும்.
மொழிஞாயிறு பாவாணர் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று நடத்தினார். ‘வலம்புரி’என்னும் இதழையும் தொடங்கி நடத்தினார்.
மதுரைக் குருஞான சம்பந்தர் திரு மடத்தில் திருக்குறள் தொடர் விரிவுரை வகுப்பும் இவரால் நடத்தப்பெற்று வந்தன.
சென்னை எண்ணூர் பைந்தமிழ்ப் பாசறையில் கழக (சங்க) இலக்கியச் சொற்பொழிவுகளும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவுகளும் மணலி புதுநகர் செந்தமிழ்ச் சோலையில் திருக்குறள் தொடர் சொற்பொழிவுகளும் பல ஆண்டுகள் நடத்தியுள்ளார்.
சிங்கப்பூருக்கு இருமுறையும் மலேசியாவுக்கும் சென்று திருக்குறள் மற்றும் இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றி வந்துள்ளார். தமிழீழத்திற்குச் சென்று தமிழ்ப்பணி ஆற்றியும் தமிழ் மறவர்களையும் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
சென்னையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் சில ஆண்டுகள் கழகப் புலவராக இருந்து தாமரைச்செல்வர் வ.சுப்பையா அவர்கள் பாராட்டைப் பெற்ற இவர், முரசொலி ஏட்டில் சில ஆண்டுகள் துணையாசிரியராக இருந்து முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நல்லன்பையும் பெற்றவராவார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற பணிகளை இயன்றவரை தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழ்த் தேசிய இன எழுச்சிக்கும் அதன் உரிமை நலங்களுக்குமான பல்வேறு முயற்சிகளிலும் அறப் போராட்டங்களிலும் ஈழத்தமிழர்க்கான போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இவற்றை யொட்டி அவ்வப்போது சிறைப்படுத்தப்பட்டார்.
‘தமிழ்த் தேசிய செம்மல்’ ‘மொழிப் போர் மறவர்’, ‘இதழ்மாமணி’ முதலான விருதுகள் பல இவருக்கு வழங்கப் பெற்றுள்ளன.
திருக்குன்றம் மறைமலையடிகள் மன்றத்தின் சார்பில் முழுநிலவு தோறும் திருக்குறள் தொடர் விரிவுரை வகுப்பு நடத்தி வந்தார்.
மக்கள் தொலைக்காட்சியின் காலை வணக்கம் நிகழ்ச்சியில் ‘ஊரும் பேரும்’பற்றிய சிறப்புகளை கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக வழங்கி வந்தார்.
மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் வழியில் அவர்தம் பணிகள் தொய்வின்றி தொடர்ந்தது.

இவரைப் பற்றிய சில துளிச் செய்திகள்…
* தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரைப் பின்பற்றி வாழ்ந்தவர்.
* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் படிப்பை முடித்தவர்.
* 1965 இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்.
* பாவலரேறு பெருஞ்சித்திரனாரோடு தென்மொழி இதழின் தொடக்கக் காலத்திலிருந்து பணியாற்றியவர்.
* தமிழ் வாழ்வே தம்முடைய வாழ்வாக அமைத்துக் கொண்டவர்.
* பல நூல்களின் ஆசிரியர்.
* சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர்.
* முரசொலி இதழில் துணை ஆசிரியராகவும், தென்மொழி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
* மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழக்த்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர்.
* தென்மொழிக் குடும்பத்தின் – பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகன்.
* குன்றக்குடி அடிகளாரோடு நெருங்கிப் பழகியவர்.
* பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.