அன்புள்ள நண்பர்களுக்கு,
கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிகையில் வளர்ச்சி
கண்டிருக்கின்றன. ஆனால் உள்ளடகத்தின் கனத்தில் சரிவு கண்டிருக்கின்றன.
திரட்டிகள் கவனம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பைத் தருவதால், கவனம் பெறுகிறோம்
என்ற மிதப்பே பாவனைகளை மேற்கொள்ளப் பதிவர்களை உந்துகிறது என்பதனால்
பாவனைகளே பதிவாகிப் போகின்றன. கண்ணாடி முன் நின்று முகம் பார்த்து
மகிழும் மனிதர்களைப் போல, பஸ்ஸில் பெண்களின் கவனத்தை ஈர்க்க முற்படும்
மீசை அரும்பாத ஆண்களைப் போல, திருவிழாவில் ஆண்களின் கவனத்தை ஈர்க்க
முற்படும் வளர் இளம் பருவத்துச் சிறுமிகளின் செய்கைகளைப் போல பல பதிவுகள்
இருந்து வருகின்றன. இவற்றோடு திரட்டிகள் குழு மனப்பான்மைக்கு
உரமளிக்கவும் செய்வதால், கருத்துக்கள் மீதான விவாதங்களை நொடிப்பொழுதில்
தனிமனிதர்கள் மீதான அவதூறுகளாகவும், துச்சமான எள்ளல்களாகவும்
ஆக்கிவிடவும் செய்கின்றன. ஓர் ஆரோக்கியமான கருத்துலகு உருவாக இந்தப்
பண்புகள் உதவாது.
இதைவிடப் பெரும் அபாயம், திரட்டிகளின் நிர்வாகிகள் முதலாளிகளைப் போல
கட்டளைகள் இடுவதையும், பதிவர்களை பயனாளிகளைப் போல நடத்துவதும், அவர்கள்
பயனாளிகள்தான் என்பதை பதிவர்களே ஏற்றுக் கொள்வதைப் போன்ற ஒரு மனோநிலையை
அவர்களிடம் ஏற்படுத்த முனைவதும்தான். உணமையில் பதிவர்கள் பயனாளிகள் அல்ல,
அவர்கள் பங்களிப்பவர்கள்.
இந்தச் சூழ்நிலையில் தமிழ் வலைப்பதிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு,
திரட்டிகளைச் சாராது பதிவுகள் செயல்படும் நிலைக்கு எடுத்துச் செல்வது
அவசியம்.
அதை நோக்கி நீங்கள் துவங்கியிருக்கும் முயற்சிகள்
வலுப்படுத்தப்படவேண்டியவை. விமர்சனங்களும் கல்லடிகளும் அரசியல்
சாயப்பூச்சுக்களும் சுமத்தப்படும். ஆனால் அதைப் பொருட்படுத்தாது
முன்னேறிச் செல்லுங்கள். 1500 பதிவுகள் என்பதை ஒரு இலக்காக வைத்துக்
கொள்ளலாம். அதை 2007ன் இறுதிக்குள் எட்ட இயலாது போனாலும் அதற்காகக்
காத்திருக்க வேண்டியதில்லை. 1000 என்பதே ஒரு critical mass தான்.
தொழில்நுட்பமும் கூட அவ்வப்போது சரிபார்த்து இற்றைப்படுத்திக் கொள்ளலாம்.
எல்லாத் துறைகளிலும் evoluton என்பது இயல்பானதே.
எந்த நெடும்பயணமும் ஒரு சிறு அடியில்தான் துவங்குகிறது.
அன்புடன்
மாலன்
On Dec 29, 3:46 am, Ravishankar <
ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> இடுகையின் மறுமொழியில் தெரிவித்து உள்ளார். பார்க்க -
http://kanimai.blogspot.com/2007/12/defective-by-design.html
>
> அன்புடன்
> ரவி