30.06.2016
இன்றைய அமுதவரி
"ஆணொப்பார் இவன் நேரில்லைகாண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே!"
(பெரியாழ்வார் திருமொழி, 1-3)
ஸ்ரீகிருஷ்ணாவதார சரிதைகளை (சரித்திரங்கள்) பரிபூரணமாக அனுபவிக்க ஆசைகொண்ட பேரியாழ்வார் ஸ்ரீகிருஷ்ணனுடைய திரு அவதார வைபவத்தை இத்திருமொழியில் அருளிச்செய்கிறார். கண்ணபிரான் திரு அவதரித்த காலத்தில் திருவாய்ப்பாடியில் (கோகுலம்) இருந்தவர்கள் சந்தோஷ மிகுதியால் வெளிப்படுத்திய விஷயங்களை அருளிச்செய்துள்ள பாசுரங்களில் ஒன்றை இன்று அனுபவிப்போம். கண்ணன் பிறந்திருக்கிறான் என்று அறிந்துகொண்ட திருவாய்ப்ப்பாடி மக்கள், கண்ணனைக் கண்டு இப்படிச் சொல்வதாக அருளிச்செய்கிறார் பெரியாழ்வார்.
"ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண்" - ஆண் தன்மை ஒத்திருப்பவர்களில் இவனோடு ஓத்திருப்பார் (இவனுக்கு நிகரானவர்) யாரும் இல்லை;
"திருவோணத்தான் உலகாளும்" - (இவன் - கண்ணன்) ச்ரவண (திருவோண) நக்ஷத்திரத்தில் அவதரித்த ஸர்வேஸ்வரனுடைய விபூதிகள் (நித்ய விபூதி, லீலா விபூதி) அனைத்தையும் ஆளக்கடவன்
"என்பார்கள்" - என்று சொல்லுவாருமாக ஆனார்கள்.
கண்ணபிரான் அவதரித்த காலத்தில் கோகுலத்தவர்கள் அந்தக் குழந்தையைப் பார்க்க நந்தகோபர் திருமாளிகையில் புகுந்துகொண்டும், புகுந்து (அவனைப்) பார்த்தவர்கள், வெளியே வந்துகொண்டும், அவர்களில் ஸாமுத்ரிகா லக்ஷணம் தெரிந்தவர்கள், "இவன் எல்லாரைக் காட்டிலும் விலக்ஷண (சிறப்புமிக்க, மகிமையுடைய) புருஷன் என்னும்படியாக லக்ஷணங்கள் அமைந்திருப்பதனால், இவன் உபயவிபூதி நிர்வாஹகனாக இருப்பன் - அதாவது, நித்யவிபூதி (மேலுலகமான பரமபதம்), லீலா விபூதி (கீழுலகமான இந்த பூமி) ஆகிய இரண்டையும் நியமிப்பவன் (ஆள்பவன்) என்று சொல்லிக்கொண்டும் இருந்தார்கள்.
கண்ணபிரான் பிறக்கும்போது சங்கு சக்கரங்களுடன் தோன்றக்கண்ட தேவகி வஸுதேவர்கள், "இந்த ரூபத்தை கம்ஸன் தெரிந்துகொள்ளாதபடி மறைத்துக்கொள்" என்று பிரார்த்திக்க, அவர்கள் சொன்னபடி கேட்டு, அக்காலத்தில்கம்ஸனாலே ஏற்பட இருந்த ஆபத்திலிருந்து தப்பினபடியால், கன்ணபிரானைப் "பேணிச் சீருடைப்பிள்ளை" என்று இந்தப் பாசுரத்தின் முதல் அடியில் கொண்டாடுகிறார் பெரியாழ்வார். சொல்பேச்சைக் கேட்ட பிள்ளையன்றோ "சீருடைப்பிள்ளை"! "பேணி" என்றால் தன்னை மறைத்துக் கொண்டு என்று பொருள்.
"ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை" - லோகத்தில் உள்ளவர்கள் ஆண் என்ற தன்மையில் மாத்திரம் இவனை ஓத்திருக்கிறார்களே ஒழிய (தவிர), மற்றபடி, திருமேனி அழகு, வீரம், எளிமை ஆகியவற்றில் இவனுக்கு நிகரானவர்கள் இல்லை என்கிறார் ஆழ்வார். "ஆண் ஓப்பான்" என்று அநுஸந்தித்தாலும், ஆண்களுக்கு உரிய லக்ஷணத்தால் இவனுக்கு நிகரானவர்கள் எவரும் இல்லை என்றே பொருள்படும்.
புருவம் வட்டமழகிய பொருத்தமிலியைத் தொடர்ந்து அனுபவிப்போம்.
ப.வெங்கடகிருஷ்ணன்
கைரவிணி க்ஷேத்ரம்