ஐதராபாத் : "அதிகரித்துவரும், "இன்டர்நெட்' பயன்பாட்டால், சமூக வலைதளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அளவிற்கு, ஒருவரை ஒருவர் சந்திப்பதும், தொடர்பு கொள்வதும் குறைந்து வருகிறது,' என, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக, ஆந்திர பல்கலைக் கழகத்தின், வணிகவியல் மற்றும் நிர்வாக இயல் துறை, ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, வாரங்கல் மற்றும் காக்கிநாடா ஆகிய நகரங்களில், "இன்டர்நெட்'டை தினமும் பயன்படுத்தும், 1,500 பேரிடம், இந்த ஆய்வை நடத்தியது.இதில், 21 சதவீதம் பேர், "டிவி' பார்ப்பதை தவிர்த்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பெரும்பாலானவர்கள், தினசரி பத்திரிகைகளை படிப்பதில்லை என்பதும், நூலகங்களுக்கு செல்பவர்கள் மிகக் குறைவாகவே (10.3 சதவீதம்) உள்ளதும் தெரியவந்தது. தகவல் தொடர்புக்கு இ-மெயில் பயன்படுத்துவதால், அஞ்சலகங்களுக்கு செல்வது, 16.7 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. சமூக வலைதளங்களின் பெருக்கம், "ஆன்லைன்' செய்திகள், இ-மெயில் தகவல்கள் போன்றவற்றால், மற்ற தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, கணிசமான அளவிற்கு குறைந்துவிட்டது.இதில், இன்டர்நெட் பார்ப்பவர்களில், 81 சதவீதம் பேர், 30 வயதுக்கும் குறைவானவர்கள். இதிலும், 15.6 சதவீதத்தினர், தங்களது இளங்கலை பட்டப்படிப்பை கூட முடிக்காதவர்கள். 37.9 சதவீதத்தினர், முதுகலை பட்டம் பெற்றவர்கள்.இதுகுறித்து, வணிகவியல் மற்றும் நிர்வாக இயல் துறை பேராசிரியர் ராஜலட்சுமி கூறியதாவது:இன்டர்நெட் பார்ப்பவர்களில், பெரும்பாலானவர்கள் அதற்கு அடிமையாகி உள்ளனர். 44 சதவீதத்தினர், இன்டர்நெட்டை பார்த்தபின், தங்கள் நேரம் வீணடிக்கப்பட்டுவிட்டதாக வருத்தப்படுகின்றனர். 18.3 சதவீதத்தினர், ஆன்லைனிலேயே, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர்.இதில், 62 சதவீதத்தினர், இவ்வாறு ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில், ஆர்வம் இல்லாதவர்களாக உள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தினாலேயே, "ஆன்லைன்' ஷாப்பிங்கை அதிகம் பேர் தவிர்க்கின்றனர்.அதே நேரத்தில், தொலைபேசி, மின்சாரம் கட்டணங்கள், ரயில், பஸ் மற்றும் விமானங்களின் முன்பதிவு போன்றவற்றிற்கு, அதிகம் பேர் இன்டர்நெட்டை நாடுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.