ப்ரஹ்ம யக்ஞம்:
Courtesy: Sri.Sarma Sastrigal
இன்று சென்னை ஷோலிங்கநல்லூர்
பகுதியில் வசிக்கும் ஒரு இல்லத்தில்
உபநயன பூர்வாங்கம் நடைபெற்றது.
அது சமயம் நான் கண்ட காட்சி ஒன்று
என்னை மிகவும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
அந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து
கொள்ள நினைக்கின்றேன்.
உபநயனம் செய்து கொள்ளும்
பையனின் 80 வயதை தாண்டிய
தாத்தா ப்ரஹ்ம யக்ஞம் செய்து
கொண்டிருந்தார். செய்து முடித்தவுடன்
ஒரு ஸ்லோகத்தை சொல்லி ஜலத்தை
தரையில் விட்டு ஒரு பத்து ரூபாயை
எடுத்து ஒரு டப்பாவில் போட்டதைக்
கண்டேன். மெய் சிலிர்த்தேன்.
உங்களுக்கு புரிந்ததா ? அவர்
எதற்காக அவ்வாறு செய்தார் என்று?
ப்ரஹ்ம யக்ஞம் செய்ததும் தக்ஷிணை
யாருக்காவது தர வேண்டும் எனும்
விதி உள்ளது. ஆதலால் அவர் அதற்கு
உண்டான விசேஷ ஸ்லோக-மந்திரத்தை
சொல்லி டப்பாவில் தினமும் போட்டு
வருவார். பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்
போது சேர்த்துவைக்கப்பட்ட அந்த
தொகையை சம்பாவனையாக
வாத்யாருக்கு மரியாதையுடன் அளித்து
விடுவார். இது தொடர்ந்து நடைபெறுகிறது.
அந்த விசேஷ ஸ்லோகம் என்னவென்று
தெரிந்து கொள்ள விருப்பமா?
இதோ:
“தூரஸ்தம் பாத்ரமுத்தியஸ்ய
ஸஜலம் பூமெள வின்யஸேத் !
தாதாச பலமாப்நோதி
க்ருஹீதாச ந தோஷபாக் !! “
சரி அது இருக்கட்டும். இது சமயத்தில்
ப்ரஹ்ம யக்ஞத்தை பற்றி சிறிது
யோசிப்போமே.
ப்ருஹ்ம யக்ஞம் என்பது மாத்யாஹ்நிக
சந்தியாவந்தனத்திற்கு பிறகு செய்ய
வேண்டும் என நம்மில் பலர் நினைத்து
கொண்டிருக்கலாம். அப்படியே
அனுஷ்டித்தும் வருகிறோம். இதில்
தவறில்லை. மேலே குறிப்பிட்ட
பெரியவர் மாதிரி தொடர்ந்து செய்தும்
வரலாம். ஏனெனில் இந்த பழக்கம்
பல காலமாக லெளகீகமாக
சம்ப்ரதாயத்தில் உள்ளது.
பெரியவர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பலன்களும் அதிகம். இது நித்ய
கர்மா. தொடர்ந்து அனுஷ்டித்து
வருவது மிகவும் விசேஷம்.
என்றாலும் விதிப்படி ப்ரஹ்ம யக்ஞம்
என்ன என்பதை சற்று சுருக்கமாக
தெரிந்துக் கொள்ளுவோம்.
சுருக்கமாக சொல்லுவதென்றால்
ப்ரஹ்ம யக்ஞத்தை இரண்டு
பகுதிகளாக பிரிக்கலாம்.
முதலில் வேத அத்யயனம்.
இரண்டாவது. தேவ ரிஷி
பித்ரு தர்ப்பணம்.
இந்த இரண்டு கர்மாக்களும்
தனித்தனியாவைகள் ஆகும்.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லை.
ஆனால் இப்போதைய கால
கட்டத்தில் இவைகள் இனைத்துக்
கூறப்படுகின்றன.
மேலும் மாத்யாஹ்நிகத்திற்கும்
பிரஹ்ம யக்ஞத்திற்கும்
தொடர்பில்லை. வெவ்வேறு.
சரி, விதிப்படி ப்ரஹ்ம யக்ஞம் என்ன
என்பதை மிக சுருக்கமாக இங்கே
பார்ப்போம்.
முதலில் அவரவர்களுடைய வேத
சாகையிலிருந்து ஒரு சில பகுதிகளை
பாராயணம் செய்ய வேண்டும்.
இந்த வேத ஓதுதலை ப்ரஹ்ம
யக்ஞ ப்ரஸ்னம் என்று
சொல்லுவார்கள்.
பிறகு மாத்யாஹ்நிகம்.
அதற்கு பிறகு தேவ ரிஷி
பித்ரு தர்ப்பணம்.
சரி, மீண்டும் ப்ரஹ்ம யக்ஞ
ப்ரஸ்னத்திற்கு வருவோம். இந்த
வேத ஓதுதலை அதற்கான விதி
முறைகளுடன் செய்யவேண்டும்.
அதாவது காயத்ரியை ப்ரணவம்,
வ்யாஹ்ருத்தியுடன் பிரித்திணைத்தும்
ஓங்காரமும் முன்னும் பின்னும்
அமைய வேதாதிகளைக் கூற
வேண்டும். தனது வேதத்தின்
வேதாதியைக் கூறியதும் அத்யயனம்
செய்த வேதத்தின் பகுதியை
முடிந்தவரை சொல்லி மற்ற
வேதாதி கூறி முடிக்க வேண்டும்.
முடிவில் ப்ரஹ்மா, அக்னி, பூமி
முதலானோருக்கு மூன்று தடவை
மந்திரத்தால் நமஸ்காரம் செய்ய
வேண்டும். இது ப்ரஹ்ம யக்ஞம்.
புருஷ ஸூக்தம்:
சரி, வேதாத்யயனம் முழுவதும்
செய்யாதவர்கள், அல்லது சொல்ல
இயலாதவர்கள் என்ன செய்வது
என்று கேள்வி எழலாம் அல்லது
கவலைப் படலாம். அதற்கும் நம்
பெரியவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.
அந்த இடத்தில் புருஷ ஸூக்தத்தை
சொல்லி வரலாம்.
முடிவில் ஒரு வார்த்தை:
தற்போது பழக்கத்தில் பரவலாக
கடைப்பிடிக்கப்பட்டு வரும் பத்ததியை,
அதாவது, மாத்யஹ்நிகம், ப்ரஹ்ம
யக்ஞம் (நாலு வேதத்திலிருந்து ஒரு
ரிக் (முதல் ரிக்) சொல்லுவது,
தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும்,
பித்ருகளுக்கும் தர்ப்பணம் செய்வது,
இத்யாதிகள்), செய்து வந்தாலே
நமக்கு பலன்கள் நிச்சயம் கிடைக்கும்
என்று நம் முன்னோர்கள் வழி
காட்டியுள்ளார்கள்.
ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ரு
தர்ப்பணத்தை பற்றி ஒரு வார்த்தை.
அப்பா அம்மா உயிருடன் இருப்பவர்கள்
இந்த தர்ப்பணத்தை செய்யலாமா
செய்யக் கூடாதா என்று பலருக்கு
சந்தேகம் நிலவுகிறது உண்மைதான்.
ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ருக்கள்
வேறு, நமது தனிப்பட்ட பித்ருக்களுக்கு
உத்தேசித்து அல்ல இங்கு வரும்
தர்ப்பணம். ப்ரஹ்ம யக்ஞத்தில்
வரும் பித்ருக்கள் திவ்ய பித்ருக்கள்
என்பர்.
ஆதலால் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும்
செய்த பிறகு வரும் பித்ரு தர்ப்பணத்தை
அனைவரும் (தந்தையுள்ளவர்கள் உள்பட)
எந்த வேறுபாடுமின்றி செய்யலாம்.
குருவருளும் திருவருளும்
எல்லோருக்கும் கிடைக்கட்டும்.