Vyasa teertha story

3 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Jan 25, 2026, 12:32:07 PM (3 days ago) Jan 25
to
வியாச தீர்த்தர்

பொன்னி நதியில் நீராடிவிட்டு, புருஷாத்தம குகைக்குச் சென்று கொண்டு இருந்தார் பிரம்மண்ய தீர்த்தர்.  

சுவாமீ பாதத்தில் விழுந்தாள் ஒரு பெண். தீர்க்க சுமங்கலி பவ... அவர் வாழ்த்தினார். அவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. 

நா குழறியபடி, சுவாமீ! உங்கள் மகிமையைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்தேன். என் கணவர் பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறார்... அவள் அழுதாள். 

கவலைப் படாதே! உன் மஞ்சள் குங்குமத்திற்கு ஒரு குறைவும் ஏற்படாது, என்றவர், அவளுடன் புறப்பட்டார். தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை மயங்கிக்கிடந்தவன் மீது தெளித்தார். 

தூக்கத்தில் இருந்து எழுவதைப் போல அவன் எழுந்து அமர்ந்தான். அப்போது அவளிடம், சீக்கிரம் உனக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கும். 

ஆனால்.... என்ன ஆனால்...அவள் கேள்விக்குறியுடன் அவரை ஏறிட்டாள். அதை என்னிடம் ஒப்படைத்து விடுவது உன் பொறுப்பு,. அவர் அவளது பதிலுக்கு காத்திராமல் வேகமாகப் போய்விட்டார். அந்தப்பெண்ணும் தாய்மை அடைந்தாள். 

1447, ஏப்ரல் 22ல் அவளுக்கு அந்தக் குழந்தை பிறந்தது. குழந்தையை எடுத்துக் கொண்டு, பிரம்மண்ய தீர்த்தரிடம் சென்றாள். 

அவர் அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டார். விஜயராஜர் எனப் பெயரிட்டார். ஐந்து வயதில் உபநயனம், பிரம்மோ பதேசம் செய்து வைத்தார். 

ஏழு வயதானதும், சந்நியாசதீட்சை வழங்கி வியாசதீர்த்தர் என்று திருநாமம் சூட்டினார். பாதராயர் என்ற குருவிடம், வியாசதீர்த்தர் வேதம், சாஸ்திரம், தத்துவம் கற்றுக் கொண்டார். 

பின், தவவாழ்வில் ஈடுபட்டார். பிரம்மண்ய தீர்த்தரின் காலத்திற்குப்பின், 1467ல் வித்யாபீடத்தின் அதிபதியாக வியாசதீர்த்தர் பொறுப்பேற்றார். 

விஜயயாத்திரையாக பல திருத்தலங் களுக்குச் சென்று மத்வமத சித்தாந்தத்தை நிலைநாட்டினார். வியாசதீர்த்தரின் புகழ் நாடெங்கும் பரவியது. 

பொறாமை கொண்ட சிலர், மடத்தின் சமையல்காரனின் உதவியுடன், தீர்த்தரின் உணவில் விஷம் கலந்தனர். எப்போதும் உணவை கடவுளுக்கு நைவேத்யம் செய்து விட்டுச் சாப்பிடுவது தீர்த்தரின் வழக்கம்.

விஷ உணவும் வழக்கம்போல நைவேத்யத்திற்கு வைக்கப்பட்டது. சமையல் காரருக்கு குற்ற உணர்வு உண்டானது. 

தீர்த்தர் உணவைச் சாப்பிட அமர்ந்த போது, சமையல்காரர் தீர்த்தரின் பாதத்தில் விழுந்து, தான் செய்த தவறைச் சொல்லி அழுதார். தீர்த்தர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. 

விஷ உணவை இயல்பாக சாப்பிட்டு எழுந்தார். பக்தர்கள் அனைவரும் சமையல்காரனுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தீர்த்தர் அதையும் ஏற்க மறுத்து விட்டார். 

ஏற்கனவே 12 ஆண்டுகள், வேதம் கற்பித்த குருநாதர் பாதராஜரிடம், மீண்டும் சிலகாலம் வேதசாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். 

ஒருநாள் உடல்நலம் இல்லாமல் படுத்து இருந்தார் பாதராஜர். தான் செய்ய வேண்டிய பூஜையை வியாசதீர்த்தரைச் செய்யச் சொன்னார். 

பூஜை பெட்டிகளில் இருந்த விக்ரஹங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார் வியாசதீர்த்தர். ஒரு பெட்டியை மட்டும் திறக்க முடியவில்லை. அந்தப் பெட்டிக்கு மூடிய நிலையிலேயே தினமும் தீபாராதனை நடக்கும் என்று அங்கிருந்தவர்கள் கூறினர். 

தீர்த்தர், அந்தப்பெட்டியை திறந்ததோடு அதிலிருந்த வேணுகோபால விக்ரஹத்திற்கு பூஜையும் செய்து மகிழ்ந்தார்.

படுக்கையில் கிடந்த பாதராஜரின் காதில் பாடல் ஒலி கேட்டது. கஷ்டமானநிலையிலும் எழுந்து வந்து விட்டார். வேணுகோபாலனையும், தீர்த்தரையும் கண்டு மெய்சிலிர்த்தார். தீர்த்தருக்கு விக்ரஹத்தை பரிசளித்தார்.  

சந்திரகிரியைத் தலைநகராகக் கொண்டு, விஜயநகரப் பேரரசை ஆட்சி செய்த நரசிம்ம பூபாலன், பாதராஜரைத் தன் அரண் மனையில் ராஜகுருவாக இருக்கும்படி வேண்டினான். ஆனால், பாதராஜரோ பரம ஞானியான வியாசதீர்த்தரே ராஜகுரு பதவிக்குத் தகுதியானவர் என்று மன்னருக்குப் பரிந்துரை செய்தார். 

அதன்படி வியாசதீர்த்தரே ராஜகுருவாக நியமிக்கப்பட்டார். விஜயநகர மன்னராக இருந்த கிருஷ்ணதேவராயருக்கும், வியாசதீர்த்தர் மீது அளவுகடந்த பக்தி உண்டு. 

அரண்மனை ஜோதிடர்கள் கிருஷ்ணதேவராயரின் ஜாதகத்தை கணித்தனர். மன்னருக்கு குக யோக காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தசமயத்தில் அவரது உயிருக்கு ஆபத்து விளையும் என அறிந்தனர். இதை அறிந்த கிருஷ்ணதேவராயர் தப்பிக்கும் வழிமுறையை ஆராய்ந்தார். 

ராஜகுருவான வியாசதீர்த்தரையே விஜயநகரத்தின் மன்னராக்கினார். குகயோகம் வந்த நாளில், கிருஷ்ண தேவராயர் வியாசதீர்த்தரின் முன் பணியாள் போல நின்று கொண்டிருந்தார். 

அப்போது, கொழுந்து விட்டு எரிந்த தீப்பிழம்பு அரண்மனைக்குள் நுழைந்தது. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த வியாசதீர்த்தர், தான் போர்த்தியிருந்த காவித் துண்டை அதன் மீது வீசினார். அந்த துணி எரிந்து சாம்பலானது. அத்துடன், குகயோகத்தின் ஆற்றலும் காணாமல் போனது.

வியாசதீர்த்தர் கிருஷ்ண தேவராயரிடம், இனி பயம் வேண்டாம். மீண்டும் அரசாட்சி செய்! என்று கட்டளையிட்டார். கிருஷ்ணதேவராயர் மீண்டும் பதவியேற்றார். வியாச தீர்த்தருக்கு 92 வயதான போது இறைவனோடு ஐக்கியமானார். இவரே மீண்டும் ராகவேந்திர சுவாமியாக அவதரித்ததாகச் சொல்வர்.
Reply all
Reply to author
Forward
0 new messages