மஹாளய அமாவாசையான இன்று(25.9.2022 ஞாயிற்றுக்கிழமை) நான்கு ராமேஸ்வரங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு:-
ராமேஸ்வரம், திருராமேஸ்வரம், குருவிராமேஸ்வரம், காமேஸ்வரம் ஆகிய நான்கும் "சதுர்த்த ராமேஸ்வரம்" எனப் போற்றப்படுகின்றன. இந்த நான்கு திருத்தலங்களிலும் மகா கணபதிக்கான `சதுராவ்ருத்தி தர்ப்பணம்' எனும் விசேஷமான பூஜையை, ஆகமப் பூர்வமாக அகத்தியரின் முன்னிலையில், ஸ்ரீராமபிரான் நிகழ்த்தியாக ஞானநூல்கள் சொல்கின்றன.
தொடர்ந்து நான்கு மாதங்கள்... ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை திதியில் ஒரு திருத்தலம் என்ற கணக்கில், ராமேஸ்வரம் தொடங்கி இந்த நான்கு தலங்களுக்கும் சென்று, இறை தரிசனத்தோடு பிதுர் வழிபாடு செய்து வருவது மிகவும் விசேஷம். இதனால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும்.
1. ராமேஸ்வரம்
தென்னாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்தின் மகிமைகளும் திருக்கதைகளும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. ஆகவே, இத்தலம் குறித்த அபூர்வ தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
ஸ்ரீராமர் - சீதாதேவி இருவரும் ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு முன்பே, இந்தத் திருத்தலம் `அக்னித் தீர்த்த நீராடல்' தலமாக, வெவ்வேறு திருப்பெயர்களில் பிரசித்தி பெற்றிருந்தது. இங்கிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையில், சுமார் 4 கி.மீ தொலைவில் கோயில் கொண்டிருக்கிறாள் நம்புநாயகி அம்பிகை. நம்பு, நம்பன், நக்கன் என்பது ஈஸ்வரனையே குறிக்கும். இந்த நம்புநாயகி அம்மன் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் ஜடாயு தீர்த்தம் உள்ளது. ஸ்ரீராமர் நீராடிய ஜடாயு தீர்த்தத்தின் மகத்துவத்தை சுகபிரம்ம மகரிஷிக்கு வியாசர் விளக்கியுள்ளார். நம்புநாயகி அருளும் பூமியும், ஜடாயு தீர்த்தமும் ராமநாத சுவாமிப் பிரதிஷ்டைக்கும் மூத்தவை.
அதேபோல், ராமேஸ்வரம் சிவாலயத்தில் சேதுமாதவப் பெருமாள் சந்நிதி அருகில் புண்ணிய தானேஸ்வரர், பாபபட்சேஸ்வரர் சந்நிதிகளும் உள்ளன. ராமநாத ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், இந்த மூர்த்திகளையும் அவசியம் தரிசித்து வாருங்கள்.
கால விரயம், பொருள் விரயம் செய்ததால் ஏற்படும் பிரச்னைகளும், அறியாத வகையில் தவறான வழிகளில் பொருளீட்டியதால் ஏற்பட்ட பாவங்களும், பித்ரு தோஷங்களும் நீங்கிட ராமேஸ்வரம் சென்று வழிபடவேண்டும். இங்கு ஒரே நாளில் 22 தீர்த்தங்களில் நீராடுவது விசேஷம்.. 2.திருராமேஸ்வரம்
மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில், திருதுதுறைப்பூண்டியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவிலும், ,மன்னார்குடியிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள திருத்தலம் திருராமேஸ்வரம். சீதாதேவிக்கு, அவள் மகாலட்சுமியின் அவதாரம் என்று ராமபிரான் உணர்த்திய திருத்தலம் இது என்பார்கள்.
திருமகள், சீதாலட்சுமியாக சிவலிங்க மூர்த்தத் துக்கு பூஜை செய்யும் அபூர்வ திருக்கோலத்தை இங்கே தரிசிக்கலாம். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், துவாதசி மற்றும் பஞ்சமி திதி நாள்களிலும், அனுஷ நட்சத்திர நாளன்றும், இங்கு உரலில் மஞ்சள் இடித்து மங்களாம்பிகைக்குச் சாற்றி வழிபடுவார்கள். இதனால் மங்களகரமான வாழ்வு சித்திக்கும் என்பது நம்பிக்கை. சுவாமியின் திருப்பெயர் ஸ்ரீராமநாதஸ்வாமி. ஏமாந்து இழந்த பொருள் மற்றும் சொத்துகளை மீட்டெடுக்க அருள் வழங்கும் தலம் என்பார்கள் பெரியோர்கள். இங்கு, தீர்த்த நீராடல் விசேஷமானது. சீதை கணவரைப் பிரிந்திருந்த பாவம் போகவழிபாடு செய்த இடம். இலங்கை போரில் சொர்க்கம் அடைந்த வானர சேனைகள் முக்தியடையவும், தசரத மகாராஜா முக்தி யடையவும் ராமர் வழிபாடு செய்த இடம். மாசி 22-25 தேதி வரை சூரிய ஒளி இறைவன்மீது படர்கிறது. எனவே இது பாஸ்கரத் தலம் என்று அறியப்படுகிறது. நீத்தார் கடன் பிதுர் பூஜைகள் செய்ய சிறந்த மேற்கு நோக்கியதலம் இதுவாகும். இந்த திருராமேஸ்வரம் சுவாமியை தரிசிக்க காசி, இராமேஸ்வரம் சென்றபலன் கிடைக்கும்.சொத்துகளை மீட்டெடுக்க அருள் வழங்கும் தலம் என்பார்கள் பெரியோர்கள். இங்கு, தீர்த்த நீராடல் விசேஷமானது எனவும் சொல்லப்படுகிறது.
3. குருவி_ராமேஸ்வரம்
திருவாரூாிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது குருவி ராமேஸ்வரம்; கேக்கரை எனும் ஊர் வழியாகச் செல்லலாம். ஸ்ரீராமர், குருவிக்கு முக்தி தந்தத் தலம். இத்தலத்துக்கு திருப்பள்ளிமுக்கூடல் என்றும் திருப்பெயர் உண்டு. இங்கே அருள்பாலிக்கும் இறைவன் ஸ்ரீமுக்கோணநாதேஸ்வரர்; அம்பாளின் திருநாமம் ஸ்ரீஅஞ்சனாட்சி.
ஜடாயுவுக்கு அவரது முக்தியைக் குறித்து ஈஸ்வரன் எடுத்துரைத்த தலம் இது. அப்போது, ராவணனால் நான் மடிந்தால், புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்காமல் போகுமே' என்று வருந்தினாராம் ஜடாயு. அவருக்காக இங்கே இறைவன் உருவாக்கிய தீர்த்தமே திருமுக் கூடல் தீர்த்தம் என்கின்றன ஞானநூல்கள்.ராமாவதாரத்துக்கு முன்பே ராம நாமத்தை ஜபித்து வாழ்ந்தவர்கள் `ராமகே(தி)'. இவர்கள் திரேதா யுகத்தில் பல்லாயிரக்கணக்கில் வசித்த `ராமகே' எனும் இடமும் கயாவுக்குச் சமமாகப் போற்றப்படும் கேக்கரையும் குருவி ராமேஸ்வரத்தின் அருகிலிருப்பது விசேஷம்.
4. காமேஸ்வரம்
நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே அமைந்திருக்கிறது, காமேஸ்வரம். புனிதமான அரிச்சந்திரா நதி, கடலில் கலக்கும் "பிதுர்முக்தி பூமி" காமேஸ்வரம். சிவாலயம், விஷ்ணு ஆலயம் இரண்டும் அமைந்த க்ஷேத்திரம்.
இதன் தொன்மைப் பெயர் `ராமேஸ்வர ராமேஸ்வரம்'. பின்னர் காமேஸ்வரம் என்றாயிற்று. நல்லவிதமான விருப்பங்களுக்கு ‘காமம்’ என்று பொதுப்பெயர் உண்டு. அப்படியான நம்முடைய நல்ல விருப்பங்களை நிறைவேற்றும் திருத்தலம் இது என்றும் சொல்லலாம். அருள்மிகு காமேஸ் வரரும், காமாக்ஷி அம்பிகையும் அருளும் இந்தத் தலத்தில், திரேதா யுகத்தில் ராமனும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனும் வழிபட்டுள்ளார்கள். வாழ்வில் அறிந்தோ அறியாமலோ நாம் சொன்ன பொய்யுரைகளால் ஏற்பட்ட பாவங்கள், நமது வாக்கால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்குவதற்கு வழிபட வேண்டிய திருத்தலம் இது. இந்தக் காமேஸ்வரம் திருத்தலத்துக்குச் சென்று, அரிச்சந்திரா நதி கடலில் சங்கமமாகும் பகுதியிலோ, காமேஸ்வரம் கடற்கரையிலோ நீராடுவதால் சகல பாவங்களும் நீங்கும்; வாழ்க்கையும் செழிக்கும் என்று கூறப்படுகிறது.எப்போது முடியுமோ அப்போது ஆன்மீக அன்பர்கள் அனைவரும் இந்த நான்கு புனிதத்தலங்களையும் தரிசித்து இறையருள் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (ஞாயிற்றுக்கிழமை அளிக்கும் விபரத்தை இன்றே அளித்துள்ளேன்) நா.சுவாமிநாதன், எண்-25, அக்ரஹாரம், தேப்பெருமாநல்லூர் அஞ்சல் - 612 204, கும்பகோணம்.