🌹கேதார்நாத்_ஆலய_வரலாறு🙏
கேதார்நாத் கோயில் நம் புனிதமான பாரதத்தின் ஜோதிலிங்க சிவதலங்களில் ஒன்றாகும். இது கேதார்நாத்தில், *மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில், ருத்ரபிரயாக் மாவட்டத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.
இங்கு நிலவும் கடுமையான வானிலையின் காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் உள்ளார். கேதார்நாத் கோயில், பஞ்ச கேதார தலங்களுள் ஒன்றாகும்.
கடுமையான குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.
🌹கேதார்நாத்கோயில் அமைந்ததன் காரணம். மகாபாரப் போரில் தங்கள் உறவினர்களையே கொல்ல நேர்ந்ததால் ஏற்பட்ட பாபத்தை போக்கிக்கொள்ள பாண்டவர்கள் காசிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டனர்.
பின்னர் பாண்டவர்கள், காசியிலிருந்து கயிலாயம் நோக்கி பிரயாணம் செய்யத் தொடங்கினர். ஹரித்வார் வழியாக இமயத்தைப் பாண்டவர்கள் அடைந்தபோது சிவபெருமான் தொலைவிலிருந்து பாண்டவர்களுக்கு ஒருகணம் காட்சியளித்துவிட்டு மறைந்து விட்டார். அவ்வாறு பாண்டவர்களுக்குச் சிவபெருமான் காட்சி அளித்த இடம் தற்பொழுது 🌹 குப்தகாசி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
சிவபெருமானின் அருளைப் பெறாமல் திரும்புவதில்லை! என்ற உறுதியுடன் பாண்டவர்கள் குப்தகாசியில் இருந்து இமாலயப் பள்ளத்தாக்கில் இருக்கும் கௌரிகுண்ட் என்னும் இடத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் சிவபெருமானை மனமுருகத் துதித்து, அவரது தரிசனத்தை வேண்டி தேடியலைகையில் நகுலனும், சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையைக் கண்டனர்.
( சிவபெருமானே அவ்வாறு காட்டெருமையாகக் காட்சியளித்தாராம்).
உடனே பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான். ஆனால் அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட, பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்திலிருந்தப் பிளவு ஒன்றில் மறைத்துக் கொண்டது. பீமன் அதன் வாலைப் பிடித்து இழுக்க முயன்றான். அப்போது நிலத்தில் இருந்தப் பிளவு நேபாளம் வரை நீண்டது. அவ்விடம் தற்போது நேபாளில் தோலேஷ்வர்_மகாதேவ் என்று வழங்கப்படுகிறது.
அக்காட்டெருமையின் உடற்பகுதி கேதார்நாத்தில் இருந்தது.
காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு 🌹ஜோதிர்லிங்கம் உண்டானது. அதன் ஒளியிலிருந்து சிவபெருமான், பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அவர்களின் பாபத்தைப் போக்கியருளினார்.
பாண்டவர்கள் வழிபட்ட
அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது. கோயிலைச் சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன. பாண்டுகேஷ்வர் 🌹 என்னும் இடத்தில்தான் பாண்டு_மகாராஜா முன்பு உயிர் நீத்த இடமாகும்.
இங்கிருக்கும் பழங்குடியினர் பாண்டவ நிருத்யம் என்ற நடனத்தை ஆடுகின்றனர். பாண்டவர்கள் சொவர்க்கத்திற்கு சென்ற இடமான சொர்க்கரோகினி என்ற மலையுச்சி பத்ரிநாத்திற்குச் சற்று தொலைவில் உள்ளது. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்தச் சிவபெருமானோடு சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் சிவலிங்கமாகக் காட்சியளித்த சிவபெருமானுக்குப் 🌹பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான்.
அதன் நினைவாக இன்றளவும் கேதார்நாத்தில் இருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கங்கா நீரும், வில்வமும் சிவபெருமானின் வழிபாட்டிற்கு இங்கு பயன்படுத்தப்படுகின்றன.
நர, நாராயணன்களே அர்ஜுனரும், ஸ்ரீ கிருஷ்ணருமாகத் துவாபரயுகத்தில் அவதரித்து வந்தனர்.
நர_நராயணர்கள் திரிகா என்னும் கிராமத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். அவர்களுக்குக் காட்சியளித்த சிவபெருமானிடம், உலக மக்கள் நன்மைக்காக சிவபெருமான் எப்போதும் இங்கிருந்து அருள வேண்டும் என்று நர_நாருயணர்கள் வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இமயத்தில் # 🌹கேதார் என்னும் இடத்தில் ஜோதிர்லிங்க வடிவத்தில் திகழ்கிறார். அவர் கேதாரேஷ்வரர் என்று போற்றப்படுகிறார்.
கோயிலின் உள்ளே நுழைந்ததும் பாண்டவர்கள், ஶ்ரீகிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், சிவபெருமானின் காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளை நாம் காணலாம். கோயில் கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. கேதார்நாத்திற்கு அருகில் சிவபெருமானுக்கும்_ பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோயில் உள்ளது. ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து உத்தராகண்டிலுள்ள பல கோயில்களைப் புனரமைத்தாராம். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
தமிழிலக்கியத்தில்__கேதார்நாத்__
"கேதாரம் மேவி னானை" எனவும் "கேதாரம் மாமேருவும்" எனவும் திருநாவுக்கரசர் இந்த கேதார்நாத் சிவபெருமானைப் பாடியிருக்கிறார்.
பன்னிரண்டாம் திருமுறையில், "..வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கேதாரம் தொழுது..." என்றும் பாடியுள்ளார்கள்.
மகாபாரதப் போரினால் தங்களுக்கு ஏற்பட்ட பாபங்கள் தீர பாண்டவர்கள் கட்டி வைத்த புனிதமான கேதார்நாத்தில் குடி கொண்ட சிவபெருமானை மனதார துதித்து, வணங்கி, நமது பாபங்களும் தீர வேண்டிடுவோம்.
🌹கேதாரேஷ்வரரே_சரணம்.🙏
சிவாய நம
திருச்சிற்றம்பலம்