சிவதாண்டவம் ( தமிழில் )
சந்தக் கலிவிருத்தம்
(தனாதனா தனாதனா தனாதனா தனாதனா)
சடைக்குமேல் பெரும்புனல் சதாநிதம் பொழிந்திடும்
விடத்தினைத் தரும்பணம் விளங்கிடும் கழுத்தினில்
உடுக்கைடுட் டுடுட்டுடென் றொலித்திடும் களிப்புடன்
நடித்தசண் டதாண்டவம் நமக்கருள் வழங்குமே (1)
சடைக்குளே சுழன்றுநீர் தடாகமாய் விளங்கிடும்
துடிக்கரன் நுதல்தனில் சுடர்தகக் தகக்கவே
படர்ந்தநற் சடைக்குமேல் பனிச்சுடர் தரித்தவன்
இடம்நிதம் பணிந்துநான் இறைஞ்சியே வணங்கினேன் (2)
பருப்பதன் மகட்கருள் பவன்நிதம் மகிழ்ந்திட
நிருத்தமிட் டணைத்தவன் நினைத்திடச் சிறந்தவன்
அருள்தனைக் கடைக்கணால் அளித்திடும் திகம்பரன்
வரம்தரும் சிவன்கழல் வணங்கிநான் மகிழ்கிறேன் (3)
அராமணிப் ரகாசமாய் அணிந்தவன் நிராகுலன்
விராவுகுங் குமத்துடன் விளங்குமா தரும்புகழ்
சராசரன் களிற்றதள் தரித்தவன் பராபரன்
புராரிசங் கரன்பதம் புகழ்ந்துபோற் றஇன்பமே (4)
அணாமலைக்கு நாதனே அரோகரா சிவாயெனக்
கணாயிரத் தனும்பரார் கனிந்துநின் றுபோற்றுமுக்
கணாஅரா நிலாதிகழ் கதிர்ச்சடா தராஉனைப்
பணோடுபா டியாடியே பணிந்துளம் மகிழ்கிறேன்(5)
கருப்புவில் தரித்துவந் தகாமனைச் சிதைத்திட
நெருப்பெனும் நடுக்கணால் நெருப்பைவிட் டெரித்தவன்
திருச்சடைக் குமேல்நிலா திகழ்ந்திடும் கபாலியை
விருப்புடன் வணங்கவே விளைந்திடும் நலன்களே (6)
பகைத்துவந் தகாமனைப் படாரெனக் கணால்சுடும்
தகத்தகத் தகத்திடும் தழல்கணன் பருப்பதன்
மகட்கிடம் வழங்கிடும் மகேஸ்வரன் மகாசிவன்
அகத்திலன் புவைத்துநான் அவன்பதம் வணங்குவேன் (7)
நிலாஇலா இராவணம் நிகர்த்தநீ லகண்டனே
நிலாநிலா தநீர்அரா நிலைத்தசெஞ் சடாதரா
சலாபமாய்க் களிற்றதள் தரித்ததே வதேவனே
உலாசமா கஆடியே உனைத்தினம் வணங்குவேன் (8)
பகைத்ததக் கனின்சிரம் பரித்தவன் புரத்தினை
நகைத்தெரித் தநாயகன் நமன்நடுங் கிடச்செயும்
புகழ்த்திருப் பதத்தினான் புகழ்மலிந் தகாமனைப்
புகைத்தெரித் தஈசனைப் புகழ்ந்துபோற் றநன்மையே (9)
மலர்களைச் சடைக்குமேல் மகிழ்ந்தணிந் தஈஸ்வரன்
மலர்ச்சரத் தைவிட்டமன் மதன்தனைப் பொடித்தவன்
பலம்மிகுந் தமுப்புரம் பகைத்துவந் தெரித்தவன்
நலந்தரும் சிவன்பதம் நயந்துநான் வணங்குவேன் (10)
சடைக்குளே அராவினம் சதாசுழன் றுசீறுமே
நடுக்கணோ தகித்திடும் நெருப்புடன் விளங்குமே
உடுக்கைமத் தளத்தொடே ஒலிக்கவே ஒலிக்கவே
நடித்தசண் டதாண்டவம் நமக்கருள் வழங்குமே (11)
நரர்சுரர் பகுப்பிலா நலம்வழங் குநாதனே
விருப்பிலா வெறுப்பிலா விகிர்தனே ஒருத்தனே
அருட்புரிந் தனைத்துமாய் அனாதியா னஜோதியே
வரம்தரும் சிதம்பரா மகிழ்ந்துநான் வணங்கினேன் (12)
அவாவெலாம் அகற்றியே அகன்றகங் கைஆடியே
சிவாயஓம் சிவாவெனத் திருப்பெயர் களோதியே
சிவாலயத் திலேஉனைத் தினம்வணங்கிடச் செயாய்
சிவாயஓம் சிவாயஓம் சிவாயஓம் சிவாயவே (13)
சதாசிவன் திருப்புகழ் சதாதினம் படிக்கவே
சதாநிதம் துதிக்கவே சதாநினைந் துகேட்கவே
நிதானமே நிலைத்திடும் நிறைந்தநன் மைநல்குமே
அதாகஞா னமேஅடைந் தருள்நிறைந் துவாழ்வரே (14)
இராவணன் படைத்தஇந் தஏற்றமிக் கபாடலை
இராமுடிந் தகாலைதன் னிலேஎழுந் துபாடவே
இராஜரா ஜராஜனாய் எலோருமே தொழும்படித்
தராதலத் திலின்பமே தழைத்துவந் துசேருமே (15)
பிற்குறிப்பு:
இராவணன் சமஸ்கிருதத்தில் இயற்றிய சிவதாண்டவ ஸ்தோத்ரத்தைத் தழுவி தமிழில் இயற்றப்பட்டது.
யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - தனாதனா தனாதனா தனாதனா தனாதனா.
இச்சந்தத்தைத் - தனாதனான தானனா தனாதனான தானனா - என்றும் நோக்கலாம்.
"லகு-குரு" என்ற அமைப்பு அடிகள்தோறும் 8 முறை வரும்.
லகு லகு லகு லகு லகு லகு லகு லகு
குரு = நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.
லகு = குறில் (ஒற்றுத் தொடராதபோது).
அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.
இச்சந்தத்தை வடமொழியில் "பஞ்சசாமரம்" (pañcacāmaram - पञ्चचामरम्) என்பர்;
Kanchipuram K Thangavel