தக்ஷிணாயனம்
(மீ.விசுவநாதன்)
ஆடி மாதப் பிறப்பின்று
அழகும் அத்தனை அதற்குண்டு !
வாடிக் கிடக்கும் பயிரெல்லாம்
வண்ணம் கொள்கிற சுகமுண்டு !
ஓடிப் பிடித்து விளையாடும்
உயிராம் காற்றதன் உறவுண்டு !
பீடித் திருக்கும் கவலைக்கு
பெரிய ஆறுதல் பிடியுண்டு !
சாதுர் மாஸ்ய விரதத்தை
சரியாய்த் துவங்கிடும் துறவியர்க்கு
தோதாய் இருந்து உதவுகிற
தூய தினங்களும் பலவுண்டு !
மாதர் மனத்தில் பலம்கூட்டி
மகிழ்ச்சி அளிக்கிற விரதமுண்டு !
ஓதும் பாவை தந்திட்ட
உறவாம் கோதையின் தினமுண்டு !
கதிரோன் தெற்கே பயணிக்கும்
காலம் துவங்குற கணக்கின்று !
நதியில் தண்ணீர் நிறைந்தோடும்
நல்ல பசுமைக் கணமுண்டு !
எதிலும் வெற்றி உனக்கென்று
இறைவன் காட்டுற வழியாக
புதியாய்ப் பிறந்த பொழுதெனவே
புத்தி மகிழ்கிற தொடக்கமிது !
*************************