007. வெண்பாவில் சங்கத் தமிழ்: 001. செம்புலப் பெயல்நீர் போல!

140 views
Skip to first unread message

sai...@gmail.com

unread,
Apr 27, 2022, 9:41:04 PM4/27/22
to சந்தவசந்தம்
#வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
இருவர் உரையாடலாயின்றி ஒருவரே தன்னிலையைச் சொல்லும் ஆசிரியப்பா வகையில் அமைந்த சங்கத் தமிழ்ப் பாடல்கள் சிலவற்றைத் தமிழாசான் ஒருவர் தன் மாணவனுக்கு விளக்கும் வகையில் எளிய வெண்பாக்களாக எழுதலாமெனத் தோன்றியதால் இந்தத் தொடர்!
.
இவ்வகையில், 'வெண்பாவில் சங்கத் தமிழ்' என்ற தலைப்பில் அன்பர்கள்
• பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய
• பதினெண் மேல்கணக்கு நூல்களில் காணும்
• தாமறிந்த, புகழ்பெற்ற சங்கத் தமிழ்ப் பாடல்களை
• எளிதில் பொருள் விளங்கும் வெண்பாக்களாக எழுதலாம்.
• நேரிசை ஆசிரியப் பாவானால் அதன் முச்சீர் ஈற்றயலடியை வைத்து
• வெண்பாவின் ஈற்றடியை எழுதலாம்.
• தமது வெண்பாவை அடுத்து
• மூலப் பாடலையும் பொழிப்புரையுடன் தரவேண்டும்.
• ஒரு பதிவில் ஒரு பாடல் மட்டுமே தரவேண்டும்.
.
அன்பர்கள் தம் படைப்பைத் தனி இழையில் மட்டுமே பதிய வேண்டும்.
.
★★★★★
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
காப்பு
(இன்னிசை வெண்பா)
.
உவேசா பதிப்பித்தே ஒண்டமிழ் காத்தளித்த
பாவேறு சங்கத் தமிழ்காணும் பாக்களை
வெண்பாவில் ஏற்றி விளங்கச்செய் ஏரம்பா
தண்ணருளாய்ச் சொல்லெனக்குத் தந்து.
.
001. செம்புலப் பெயல்நீர் போல!
குறுந்தொகை 40: செம்புலப்பெயனீரார்
(குறிஞ்சி: தலைவன் கூற்று)
(பஃறொடை வெண்பா)
.
என்தாயும் உன்தாயும் முன்னர் தெரிந்தவரா
என்தந்தை உன்தந்தை எம்முறை சொந்தமோ
முன்பின் அறிந்தவரா உன்னவன்நான் என்னவள்நீ
அன்புடைய நம்நெஞ்சம் தாமே கலந்தனவே
செம்மண்ணில் பெய்தமழை போல்.
.
★★★
மூலம்
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
—குறுந்தொகை 40, செம்புலப்பெயனீரார்
.
பொழிப்புரை: முனைவர் ப. பாண்டியராஜா
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்?
நானும் நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்?
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே
.
★★★★★

rathnam

unread,
Apr 28, 2022, 12:02:40 AM4/28/22
to santhav...@googlegroups.com
நல்ல இழை. மிக உபயோகமாக இருக்கும். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/f85b5a81-b186-40fb-aede-564a3b53029cn%40googlegroups.com.

saidevo

unread,
Apr 28, 2022, 12:06:41 AM4/28/22
to santhav...@googlegroups.com
ஆம், நன்றி, கவிஞரே. நீங்களும் பங்கேற்கலாம்.
ரமணி

saidevo

unread,
Apr 28, 2022, 2:10:30 AM4/28/22
to santhav...@googlegroups.com
சங்க இலக்கியப் பாடல்களை நன்கு ஆராய்ந்து விளக்கும் சில இணையச் சுட்டிகள் சில கீழே. கூகிளில் பாடல் சொல்லாட்சியை வைத்துத் தேடினால் இன்னும் பற்பல வலைப்பூக்களும் கிட்டும்!

sai...@gmail.com

unread,
Apr 28, 2022, 3:21:44 AM4/28/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
003. இவர்களால்தான் இவ்வுலகம்!
புறநானூறு 182: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
(திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக் காஞ்சி)
(பஃறொடை வெண்பா)
.
இவர்களால்தான் இவ்வுலகம்! இந்திரன் நாளும்
சுவைக்கும் அமிழ்தம் கொடுத்தாலும் ஆகாகா
என்றுதனித் துண்ணார் வெறுப்பிலார் யார்மாட்டும்
என்றும்சோம் பல்கொளார் அஞ்சுவதை அஞ்சுவார்
ஏற்றம் வருமெனில் இன்னுயி ரும்தருவார் 5
தூற்றலெனில் வையமேபெற் றால்கொளார் சோர்விலார்
மற்றவர்க்கே யத்தனிப்பார் ஏதும் தமக்கல்ல
இற்றை தினத்தில் இவர்போல் இருப்பவரால்
சுற்றுமே இந்த உலகு.
.
[ஏற்றம்: புகழ்; தூற்றல்: பழிச்சொல்; யத்தனம்: முயற்சி; சுற்றுமே: சூழ்ந்திருக்குமே]
.
★★★
மூலம்
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
—புறநானூறு 182, கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
.
பொழிப்புரை: முனைவர் பிரபாகரன்
இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Apr 28, 2022, 10:07:08 PM4/28/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
002. மன்னன் உயிர்த்தே!
புறநானூறு 186: மோசி கீரனார்
(திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக் காஞ்சி)
(அளவியல் இன்னிசை வெண்பா)
.
நன்னெல் உயிரன்று நன்னீர் உயிரன்று
மன்னன் உயிர்பொறுத்தே மாபெரும் நாடிருக்கும்
இன்றியமை யாதெனுயிர் என்றறிந்தே ஆளுகை
கன்றல்வேல் வேந்தர் கடன்.
[கன்றல் வேல்: சினக்குறி தாங்கிய வேல்]
.
★★★
மூலம்
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே.
—புறநானூறு 186, மோசி கீரனார்
.
பொழிப்புரை: tamilvu.org
அகன்று விரிந்த நிலத்தில் பரவி வாழும் மக்களுக்கு உயிராக அமைவது எது? நெல் முதலிய உணவுப் பொருள்கள் அல்ல. உயிரும், பயிரும் தோன்றுவதற்கும் அவை வளர்ந்து வாழ்வதற்கும் அடிப்படையாக அமையும் நீரும் அல்ல. மண்ணை ஆளும் மன்னன்தான் மக்களுக்கு உயிர் ஆவான். இதை அறிவது, வேலால் வெல்லும் படையை உடைய வேந்தனின் கடமை ஆகும்
.
★★★★★

sai...@gmail.com

unread,
Apr 29, 2022, 12:41:42 AM4/29/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
004. மலைநாடன் கள்வன்!
நற்றிணை 28: முதுகூற்றனார்
(திணை: பாலை)
(பஃறொடை வெண்பா)
.
என்கை எடுத்தவன் தன்கண்ணில் ஒற்றினான்
தன்கையை வைத்தெனது நெற்றியை நீவினான்
அன்னையைப் போல இனியசொற் கூறினான்
என்றாலும் பின்னரவன் என்னைப் பிரிந்ததால்
கள்வரைப் போலக் கொடியவனாய்க் காண்கிறேன் 5
உள்ளம் உடல்நலம் வாடேன் இனிமேலும்
வேங்கைமலர் பொன்னொப்ப நீலமணி நீரருவி
ஓங்குமலைப் பக்கத்தில் ஓடுகின்ற மேகத்தை
காற்றாடும் பச்சைச் கணுவுயர்ந்த மூங்கில்கள்
கீற்றிக் கிழிக்கும் உயர்ந்த கொடுமுடி 10
ஏற்றமலை நாடன் இவன்.
.
★★★
மூலம்
என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியும்
தன்கைக் கொண்டென் நல்நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணிஎன இழிதரும் அருவி பொன்என
வேங்கை தாய ஓங்குமலை அடுக்கத்து
ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில்
ஓடுமழை கிழிக்கும் சென்னிக்
கோடுயர் பிறங்கல் மலைகிழ வோனே.
.
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத்
தோழி சொல்லியது - குறை நயப்பும் ஆம்
—நற்றிணை 28
.
பொழிப்புரை:
என்கையால் தன்கண்ணை ஒற்றியும், தன்கையால் என்நெற்றி நீவியும், என் அன்னைபோல் இனிய சொற்கள் கூறியும் என்னோடு பழகியவன், இன்றென்னைப் பிரிந்து சென்றுவிட்டதால் அவனைக் கள்வர் போலக் கொடியவனாய்க் காண்கிறேன். நீலமணி போன்று வீழும் அருவியும், பொன்னைப் போன்று ஒளிரும் உதிர்ந்த வேங்கை மலர்களும் கொண்டுயர்ந்த மலைப் பக்கத்தில் ஓங்கி வளர்ந்த பசுமையான கணுக்கள் கொண்ட மூங்கில் மரங்கள், அவை காற்றில் ஆடும்போது மலைமேல் ஓடும் மழை மேகங்களைக் கிழிப்பதாகவும் அமைந்த உயர்ந்த சிகரம் கொண்ட மலையின் தலைவன் அவன்.
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Apr 29, 2022, 9:48:14 PM4/29/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
005. மறக்க முடியாது பாகனே!
நற்றிணை 42: கீரத்தனார்
(திணை: முல்லை)
(கலிவெண்பா)
.
மறக்க முடியாது பாகனே! பன்னாள்
வறட்சியில் துன்புற்ற வையவினை மீள
பழமழை பெய்து புதுநீர்கொள் பள்ளம்
குழைநாத் தவளை குரலெழுப்ப நம்தேர்
மணியொலி யைக்கேளாள் வாணுதல் என்றே 5
அணுகுமின் வேகமாய் ஆணை இளையோரே!
இல்லம் புகுந்தோர் தலைவனின் தேர்வருகை
மெல்லஅறி விக்க மிகவும் அழுக்கான
மங்கைதன் கூந்தலின் மாசற நீராடி
அங்குசில பூவைத்து வாரி முடிக்குமுன் 10
வந்த தலைவனை வாரியணைத் தாள்தன்-அ
விழ்ந்த தலைமுடி சட்டைசெய் யாமல்!
மடமையில் மங்கை மகிழ்ந்துகொண் டாடல்
விடைபெறுமோ உள்ளத்தை விட்டு!
.
★★★
மூலம்
மறத்தற்கு அரிதால் பாக! பன்னாள்
வறத்தொடு வருந்திய உலகுதொழில் கொளீஇய
பழமழை பொழிந்த புதுநீர் அவல
நாநவில் பல்கிளை கறங்க நாவுடை
மணியொலி கேளாள் வாணுதல் அதனால்,
ஏகுமின் என்ற இளையர் வல்லே
இல்புக்கு அறியுநர் ஆக மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇ,
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய்வருத் துறாஅ
அவிழ்பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே.
—நற்றிணை 42
.
பொழிப்புரை: தமிழ்ச் சுரங்கம் வலைதளம்
பாகனே! நீரின்மையாலே கோடையில் பல நாளாக வறட்சியுற்ற உயிர்கள் மகிழ்ச்சியோடு தத்தந் தொழிலை மேற்கொண்டு நிகழ்த்துமாறு; தொன்று தொட்டுப் பெய்யும் வழக்குப் போல மழை பெய்ததனாலாய புதிய நீர் நிரம்பிய பள்ளங்கடோறும் நாவினால் ஒலிக்கின்ற பலவாய கூட்டத்தையுடைய தவளைக ளொலித்தலானே; நாம் செல்லுகின்ற தேரிற் கட்டிய மணிகளின் ஒலியை ஒள்ளிய நுதலையுடைய நம் தலைவி கேட்டறிந்திலள்; ஆதலின் நீயிர் முன்னே சென்று கூறுமினென்றபடி அக்கட்டளையை ஏற்ற இளையோர் விரைந்து நமது மாளிகையிற் புகுந்து அறிவித்தனராக; உடனே மெல்ல அதுகாறுஞ் சீவிக்கை செய்யாத கூந்தலின் மாசு போகத் தூநீராடிச் சிலவாய மலரைக் கொண்டு பலவாய கூந்தலிலே முடிக்கின்ற அத்தறுவாயில் யான் உள்ளே புகுதலின்; என்னை நோக்கித் தன் மெய்துவள வந்து அவிழ்ந்து குலையு முடியினளாய் என்னை அணைத்துக் கொண்ட, மடப்பத்தையுடைய சிறந்த நம் அரிவை மகிழ்ந்து கொண்டாடுந் தன்மை யான் மறத்தற்கரியதுகாண்; அத்தகையாள் இன்றும் மகிழ்ந்தணைக்குமாறு விரைவிலே தேரைச் செலுத்துவாயாக !
.
For a lovely discussion of this verse, check:
.
★★★★★

sai...@gmail.com

unread,
Apr 30, 2022, 10:06:33 PM4/30/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
என்னே வருணனை, வாழ்க்கை!
இரவில் முன்றிலில் ஓய்வெடுத்தே ஆசினிப் பலா மரங்களின் உச்சியில் கூட்டமாகப் பறக்கும் மினிமினிப் பூச்சிகளை விளக்காகக் கொண்டு மழைமேகத்தின் இயக்கம் கண்டானாம் தலைவன்!
.
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
006. மலைநாடன் காதல் மகள்!
நற்றிணை 44: பெருங் கௌசிகனார்
(திணை: குறிஞ்சி)
(பஃறொடை வெண்பா)
.
நீரருவி ஆடியவள் நேரிலா ஆயமோடு
நீரிற் சிவந்த நெடுங்குளிர்க் கண்னால்
பொதுவாகப் பார்த்துவிட்டுப் புன்னகை தந்தே
சுதையவள் தன்னில்லம் காலையில் தோய்ந்தாள்
நினக்கோ அவள்துணை நெஞ்சே! இலைநீள் 5
தினைக்கதிர் முற்றிய கொய்து குறவரினம்
அல்கயர் முன்றில்முன் ஆசினிப்ப லாக்களின்
பல்மர மேற்கிளை மின்மினிகள் பார்த்தே
செலும்மழை மேகத் தியக்கம் அறியும்
மலைநாடன் காதல் மகள்! 10
.
[நேரிலா ஆயமொடு: ஒப்பிலாத தோழியரோடு; சுதை: மகள்; அல்கு-அயர்: இரவில் ஓய்வெடுக்கும்; முன்றில்: வாசல் முற்றம்]
.
★★★
மூலம்
பொருஇல் ஆயமோடு அருவி ஆடி
நீர்அலைச் சிவந்த பேர்அமர் மழைக்கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
மனைவயின் பெயர்ந்த காலை நினைஇய
நினக்கோ அறியுநள் நெஞ்சே! புனத்த 5
நீடிலை விளைதினைக் கொடுங்கால் நிமிரக்
கொழுங்குரல் கோடல் கண்ணி செழும்பல
பல்கிளைக் குறவர் அல்கு-அயர் முன்றில்
குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பல்மர உயர்சினை மின்மினி விளக்கத்து 10
செல்மழை இயக்கம் காணும்
நன்மலை நாடன் காதல் மகளே
—நற்றிணை 44
.
பொழிப்புரை: தமிழ்ச் சுரங்கம் வலைதளம்
நெஞ்சே! கொல்லையில் உள்ள நீண்ட இலையையுடைய முற்றிய கதிரைத் தாங்கமாட்டாமே சாய்ந்த தினையின் வளைந்த தாள் நிமிர்ந்துநிற்குமாறு அவற்றின் கொழுவிய கதிர்களைக் கொய்துகொண்டு போதலைக் கருதி; செழுவிய மிக்க பல கூட்டமுடைய குறவர்கள் சிறார் கூடித் தங்கி விளையாட்டு அயர்கின்ற முன்றிலின்கண் இருந்து; குடம் போன்ற காயையுடைய ஆசினிப் பலாவையுடைய தோட்டத்தில் நீண்ட பலவாய மரங்களினுயர்ந்த கிளைகளில் உள்ள மின்மினியை விளக்கமாகக் கொண்டு விசும்பு செல்லுகின்ற மழை முகிலினியக்கத்தை அறியாநிற்கும்; நல்ல மலைநாடன் அன்புள்ள புதல்வி, ஒப்பில்லாத தோழியர் கூட்டத்துடன் அருவியினீராடி; அங்கு நீரான் அலைக்கப்படுதலாலே சிவந்த பெரிய அமர்த்த குளிர்ச்சி¢யையுடைய கண்களின் குறிக்கப்படாத பார்வையையும், புன்னகையையும் நமக்குத் தந்து; தனது மனையிடத்துச் சென்றுவிட்ட பிற்பாடு; கருதிவந்த நின்னாலோ அவள் அறியத் தக்காள்! முன்னரேயன்றோ கைப்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்!
.
★★★★★
 

Subbaraman NV

unread,
Apr 30, 2022, 10:23:44 PM4/30/22
to santhav...@googlegroups.com
Good morning. May God bless you. Time permitting, please read my Blog Envius Thoughts. Extending May Day greetings, wishing a sumptuous Sunday, there is sumptuous posts today 1st May 2022 in "Envius Thoughts" in https:// nvsr.wordpress.com - "POCKET PACKED POEMS 2 including one on MAY DAY" and "ITHAKA POEM 730: Like a Boat on a Lake" for your kind read and response. Thanks. BLOG CROSSES OVERALL VIEW Score of 3,64,000

With the 117th view at 19.00 hours yesterday- 30th April 2022- ENVIUS THOUGHTS in https://nvsr.wordpress crossed over all view score of THREE LAC SIXTY FOUR THOUSAND from our esteemed viewers from more than 210 countries of the Globe which please continue. By God’s grace and friends wishes, quality and regularity of the posts will be maintained.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

sai...@gmail.com

unread,
May 1, 2022, 2:02:33 AM5/1/22
to சந்தவசந்தம்
Sir,
Please use a separate thread to speak about your eminent blog! Please do NOT troll my thread!
ramaNi

sai...@gmail.com

unread,
May 1, 2022, 9:42:39 PM5/1/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி

.தாழ்ந்த குலமாயினும் தம்சாதி குறித்த பெருமிதமும் வேறு குலத்தவர் வளங்கள் தமக்கு ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வும் சங்க காலத் தமிழர் வாழ்க்கையில் இருந்தன என்பதைக் கீழ்வரும் பாடலால் அறியலாம். Check this research paper, too.
.
007. எம்குலமும் செல்வர் உடைத்து!
நற்றிணை 45: பாடியவர் பெயர் தெரியவில்லை
(திணை: நெய்தல் )
(கலிவெண்பா)
.
இவளோ கடற்கரைச் சோலை இருப்பை
உவந்தசிறு ஏழைக் குடியினப் பெண்ணாவாள்;
நீலப் பெருங்கடல் நேர்கலங்க உட்சென்று
வேலையில் மீன்வலை வீசி எறிகின்ற
மீனவர் பெண்ணிவள்; மேற்குடி நீயோ 5
நெடுங்கொடிகள் காற்றசையும் மூதூர் நியமக்
கடுந்தேர்கொள் செல்வனின் காதல் மகனே;
பெருமீன் கொழுப்பறுத்துக் காய உலர்த்தி
வருகின்ற காக்கைகளை ஓட்டியே வாழும்
எமக்குன் வளமெலாம் எங்ஙன் பொருந்தும்? 10
அருகில் வராதேயெம் அங்கமெலாம் நாறும்!
பெருநீர் விளைச்சலே எம்சிறு நல்வாழ்க்கை
உம்போல் உயர்வுகள் கொள்வதிலை என்றாலும்
எம்குலமும் செல்வர் உடைத்து!
.
[இருப்பு: குடியிருப்பு; வேலை: கடல்; கடுந்தேர்: விரைந்து செல்லும் தேர்]
.
★★★
மூலம்
இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன்எறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே 5
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ
பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே 10
எம்மனோரில் செம்மலும் உடைத்தே
.
குறை வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது
—நற்றிணை 45
.
பொழிப்புரை: அ. நாராயணசாமி ஐயர்
நின்னாற் காதலிக்கப்படும் இவள்தான், கடற்கரைச் சோலையிற் பொருந்திய அழகிய சிறுகுடியின்கண்ணே இருக்கின்ற, நீலநிறத்தையுடைய பெரிய கடலுங் கலங்குமாறு அதன்மேற்சென்று வலைவீசி மீனைப் பிடிக்கின்ற பரதவர் புதல்விகண்டாய்; நீதானும் நெடிய கொடிகள் காற்றாலசைந்து நுடங்குங் கடைத் தெருக்களையுடைய பழைய ஊரின்கணுள்ள கடிய செலவினையுடைய தேரையுடைய செல்வ மன்னன் காதலிற் பெற்றுவளர்த்த புதல்வனாயிராநின்றனை, ஆதலிற் குலத்திற்கே பொருத்தமில்லை; அங்ஙனம் மணப்பதாயினும், நிணத்தையுடைய சுறாமீனை அறுத்திட்ட தசைகளைக் காயவைத்தல் வேண்டி வெயிலிற் போகட்டு அத்தசைகளைக் கூட்டமாகிய காக்கைகள் கவராதவாறு அவற்றை ஓட்டிப் பாதுகாக்கின்ற எமக்கு நின் சிறந்த நலந்தான் யாது வேண்டிக் கிடந்தது ? ஒன்றும் வேண்டா !; சுறா நிணத்தைத் தடிந்து பரப்புதலானே யாம் புலவு நாற்றம் நாறுகின்றேம்; இந்நாற்றம் நீ பொறாயாகலின், எம்மருகில் வராதேகொள் ! அகன்றுபோய் நிற்பாய்மன்; கடனீரை விளைவயலாகக் கொள்ளுகின்ற எமது சிறிய வாழ்க்கையானது நும்மோடு ஒக்க வுயர் வுடைத்தன்று; எம்போன்ற பரதவரில் நின் போன்ற செல்வமாக்களையும் எங்கள் மரபுடைத்தாயிராநின்றது;
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
May 2, 2022, 9:16:19 AM5/2/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
.
சத்திமுற்றப் புலவருக்கு முன்னரே ஒருவர் நாரையை விளித்துப் பாடியிருக்கிறார்! இது போன்ற பாடல்கள் பின்னால் எழுந்த தூது இலக்கியத்திற்கு முன்னோடி எனலாம்.
.
008. நாராய் நாராய்!
நற்றிணை 54: சேந்தங் கண்ணனார்
(திணை: நெய்தல்: தலைவி கூற்று)
(கலிவெண்பா)
.
வளைநீர்ப் பரப்பிரையை வாய்மேய்ந்து நீயுன்
கிளையுடன் உண்ணக் கெலித்துவரு வாய்பறந்து;
மேயும் இரைகளை மிக்குண்ணும் நாரையுன்
தூய சிறகுடைச் சுற்றமொடு சற்றே
இருந்தெனது சொற்களைக் கேளாய் சிறிதே 5
கருங்கால் உடல்வெண்மைக் காட்சியாம் நாராய்!
பெருந்துன்ப மேயிச் சிறுமாலைப் போதென்(று)
அறிந்தால்நீ என்னிடம் அன்புகொண் டென்னைப்
புறக்கணிக்கும் நெஞ்சம் புறந்தள்ளி என்குறையைக்
கொய்தளிர் ஆர்ந்துள கொன்றை மரத்திலை 10
மெய்யில் அணியுடை மேலணி மங்கைவாழ்
தெண்டிரை வாரணைக் கண்டல் மரவேலி
கொண்ட தலைவற் குணர்த்து.
.
[கிளை: சுற்றம்; கெலித்து: விரும்பி, வென்று;
அணியுடை மேலணி: ஞாழ்ல் மரத்திலைகளை ஆடைமேல் அணிதல்; தெண்டிரை வாரணை: தெள்ளிய அலைகளைத் தடைசெய்யும்; கண்டல்: Mangrove, அலையரிப்பைத் தடுக்கும் மரம்]
.
★★★
மூலம்
வளைநீர் மேய்ந்து கிளை முதல்செலீஇ
வாப்பறை விரும்பினை ஆயினும் தூச்சிறை
இரும்புலா அருந்தும்நின் கிளையடு சிறிதிருந்து
கருங்கால் வெண்குருகு எனவ கேண்மதி
பெரும்புலம் பின்றே சிறுபுன் மாலை
அதுநீ அறியின் அன்புமார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என்குறை
இற்றாங்கு உணர உரைமதி தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண்திரை மணிப்புறம் தைவரும்
கண்டல் வேலிநும் துறைகிழ வோற்கே.
—நற்றிணை 54
.
பொழிப்புரை: அ. நாராயணசாமி ஐயர்
கரிய காலையுடைய வெளிய நாராய்! நீ நின் சுற்றம் முதலாயவற்றோடு சென்று வளைந்த நீர்ப்பரப்பிலுள்ள இரையை அருந்தித் தாவிப் பறந்து வருதலை விரும்பி¢னையாயினும், இரும்புலா அருந்தும் தூச் சிறை நின் கிளையொடு சிறிது இருந்து எனவ கேள்மதி மிக்க புலவைத் தின்னுகின்ற தூய சிறகுகளையுடைய நின் சுற்றத்தோடு சிறிது பொழுது ஈண்டுத் தங்கியிருந்து என்னுடைய சொற்களைக் கேட்பாயாக!; சிறிய புல்லிய மாலைப்பொழுதானது எனக்குப் பெரிய வருத்தஞ் செய்தலை உடையதாயிராநின்றது; அதனை நீ அறியின்; என்மாட்டுப் பெரிதும் அன்புடையையாதலால் வேறுபட்ட மனங்கொள்ளாமல்; என்குறை இத்தன்மையதென்று தழை யுடுப்பவர் கொய்தற்குரிய குழை தழைந்த இளைய ஞாழல் தௌ¤ந்த திரையின் புறத்தைத் தடவாநிற்கும் கண்டல் மர வேலிகளையுடைய நுங்கடற்றுறைச் சேர்ப்பனிடஞ் சென்று அவன் உணருமாறு உரைப்பாயாக!
.
★★★★★

sai...@gmail.com

unread,
May 2, 2022, 10:14:41 PM5/2/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
.
சிங்கங்கள் நிறைந்த காட்டில் தைரியமாக ஒரு ஆமான் (காட்டுப் பசுமான்) கன்றுடன் தூங்கிறது என்றால் அதன் சுரையில் பால் கரந்து மந்தி தன் குட்டிகளுக்கும் தருகிறது! உன் தைரியம்தான் என்ன தலைவனே?!
.
009. விரைந்தே கடாவு வரைவு!
நற்றிணை 57: பொதும்பில் கிழார்
(திணை: குறிஞ்சி: தோழி கூற்று)
(கலிவெண்பா)
.
கிளையுடன் சிங்கம் கெழுமும் வனத்தில்
வளைந்தகோட்(டு) ஆமான் வதிந்தேதன் கன்றுடன்
வேங்கை மரத்தடியில் தூங்கும் பொழுதினில்
பஞ்சுத் தலைகொண்ட மந்தியொன்று பார்த்துவிட்டு
விஞ்சுதன்சுற் றத்தொலி வீழ்ந்துபடக் கையடக்கி 5
வீங்குசுரைக் கையழுத்தி வாங்கிய தீம்பாலைத்
ஆங்கதன் குட்டிகள் கைநிறை யப்பிழியும்
மாவரை நாடநின் மங்கை சிலநாளில்
சேய்நிறக் கோற்கதிர் சின்னத் தினைப்புனம்
கொய்வுறும் காலம் குறுகி வரும்போது 10
மைக்குளிர்க் கூந்தலாள் மாண்நலம் கெட்டழிய
இல்லச் சிறைப்படுவாள் என்பதே என்மருள்
அல்லல்தீர்த் தேகொள் வரைவு.
[கிளை: சுற்றம்; கெழுமும்: நிறையும்]
.
★★★
மூலம்
தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென
துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி
வீங்குசுரை ஞெமுங்க வாங்கி தீம்பால்
கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும்
மாமலை நாட மருட்கை உடைத்தே
செங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்
கொய்பதம் குறுகும் காலைஎம்
மைஈர் ஓதி மாண்நலம் தொலைவே
.
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
—நற்றிணை 57
.
பொழிப்புரை: அ. நாராயணசாமி ஐயர்
சிங்க முதலாய விலங்கின் கூட்டம் நெருங்கிய மலையின்கணுள்ள வேங்கை மரத்தின் கீழ் வளைந்த கொம்பினையுடைய ஆமான் தன் கன்றொடு தங்கியுளதாக; அவை துயில்வதனைக் கண்ட பஞ்சு போன்ற தலையையுடைய மந்தி கல்லென வொலிக்கும் தன் சுற்றத்தை அவை ஒலியாவாறு தன்கையா லமர்த்திவிட்டு அருகிலே சென்று; ஆமானின் பால் சுரந்த மடியை அழுந்தும்படி பற்றியீர்த்து இனிய பாலைக் கறந்து தன்தொழிலையுங் கல்லாத வலிய குட்டியின் கையில் நிறையப் பிழியா நிற்கும்; பெரிய மலை நாடனே !; சிவந்த தாளையும் வளைந்த கதிரையுமுடைய சிறிய தினையின் பெரிய கொல்லை, கொய்பதம் குறுகும் காலை முற்றுங் கதிர் கொய்யும் பதம் வந்துற்றது, வரவே, தலைமகள் மனையகம் புகுதாநிற்கும், புக்கபின் நீ அங்கே வருதற் கியலாமையின்; எமது கரிய ஈரிய கூந்தலையுடையாளது மாட்சிமைப்பட்ட நலம் கெட்டொழியுங் கண்டாய்; அங்ஙனம் கெடுவதை நோக்கி என்னுள்ளம் மருளுதலையுடையதாயிரா நிற்கும்; ஆதலின், நீ ஆய்ந்து ஏற்றபெற்றிப்பட ஒழுகுவாயாக!
.
★★★★★
 

Subbaraman NV

unread,
May 2, 2022, 10:27:54 PM5/2/22
to santhav...@googlegroups.com
Great.
May God bless you. Time permitting, please read my Blog Envius Thoughts. Wishing a sacred Akshayathrithiya and Ramzan, on 3rd May today there are three posts in Envius Thoughts in https://nvsr.wordpress.com - "AKSHAYA THRITHIYAI today!" "RAMZAN is TODAY" and "POCKET PACKED POEMS -4 Flowing Thoughts!" for your kind read and response. Thanks.
Dr. N V Subbaraman


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

sai...@gmail.com

unread,
May 2, 2022, 11:58:28 PM5/2/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
.
இயற்கையை உடன்பிறந்தார் சுற்றம்போல் பாவிக்கும் மரபில் இயங்கும் வாழ்க்கைபோல் ஏது?
.
014. புன்னை மரமென் தங்கை!
நற்றிணை 172: பாடியவர் பெயர் தெரியவில்லை
(திணை: நெய்தல்: தோழி கூற்று)
(பஃறொடைவெண்பா)
.
விளையாட்டாய்த் தோழியொடு வெண்மணல் இட்டுக்
களித்து மறந்துவிட்ட காழ்முளை விட்டெழ
நெய்விட்ட தீம்பாலைப் பெய்துவளர் இப்புன்னை
நுவ்வையாம் உன்னைவிடச் சீரென்றாள் அவ்வை
இதனடியில் உம்முடன் ஆடல் சிரித்தே 5
அதெமக்கு நாணம் தருவதாம், தங்கையன்றோ!
பாணர் புதியவர் பாடுகின்ற மெல்லிசைபோல்
காணும் வலம்புரிச் சங்கு கலிக்கும்
துறைநீர்த் தலைவனே தொட்டுவிளை யாட
நிறையபிற புன்னை நிழல். 10
[காழ்: விதை; நுவ்வை: உன் தங்கை; அவ்வை: தாய்;]
.
★★★
மூலம்
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே-
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!- நீ நல்கின்,
—நற்றிணை 172
.
பொழிப்புரை: அ. நாராயணசாமி ஐயர்
புதியராய் வந்த பாணர் பாடுகின்ற இளைதாய (மெல்லிய) இசைப்பாட்டுப் போல வெளிய
வலம்புரிச்சங்கு ஒலியாநிற்கும்; விளங்கிய நீரையுடைய துறைபொருந்திய நெய்தனிலத்தலைவனே!;
யாம் எம்மொடு விளையாடுகின்ற தோழியரோடு சென்று ஒருநாள் வெள்ளிய மணலிலூன்றினேமாகி
மறந்தொழிந்த புன்னை (யினது முற்றிய) விதையானது வேரூன்றி முளைத்து முளைதோன்றுதலானே; மீண்டும் அதனை நோக்கி மகிழ்ந்து நெய் கலந்த இனிய பாலை நீராக வார்த்து இனிமையொடு வளர்க்கு நாளில்; எம் அன்னை எம்மை நோக்கி "நீயிர் வளர்த்துவரும் புன்னையானது நும்மினுஞ் சிறந்ததன்றோ, அது நும்முடன் பிறந்த தங்கையாந் தகுதியுடையது கண்டீர்" என்று இதன் சிறப்பினை விளங்கவுரைத்தனள்; ஆதலின் எந்தங்கையாகிய இப்புன்னையின் எதிரில் நும்மொடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் வெட்கமடையாநின்றோம்; அம்மவோ? நீ இவளை அணைந்து நல்குவையோ? நல்குவையாயின் நிறைந்த மரத்தினிழல் பிறவும் ஈங்குள்ளனகாண்; அவ்வயிற் செல்லுதல் நல்லதொன்றாகும்.
.
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது;
குறிபெயர்த்தீடும் ஆம்.
.
★★★★★

sai...@gmail.com

unread,
May 3, 2022, 9:45:45 PM5/3/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
.
புண்பட்டுப் பிளிறும் யானை தலைவியாம்; வேடர் அம்புகள் அயலார் பழிச்சொல்லாம்; யானையின் துன்ப ஒலி மலைமீது மோதுதல், தலைவியின் புலம்பல் தலைவனைச் சேர்வதாம். உருவகங்கள் வேய்ந்த பாடல் நன்னிமித்தத்துடன் முடிகிறது.
.
010. அமுதுண்ணட்டும் அயல்வீட்டாள்!
நற்றிணை 65: கபிலர்
(திணை: குறிஞ்சி: தோழி கூற்று)
(கலிவெண்பா)
.
விட்டுவிட் டுக்கரைத்து வேகமுறும் காட்டாறு
பட்டுக் கலங்கிய பாசி கலந்து
ஒளிரருவி பாயும் துறைநீர் அருந்தும்
களிறு புலியைப் பொருதுவெற்றி கண்டாலும்
புண்பட்டே அல்லலுற போக்கிலிக் கானவர்கள் 5
வெண்தந்த ஆசையில் வில்லம் பெறிய
இடிவிழும் ஓசைபோல் யானை பிளிறும்!
கிடங்கில் மலைநாடன் கிட்டுவான் என்றாள்
அமுதமுண் ணட்டும் அயல்வீட்டா ளின்சொல்
நிமித்தம் நலமாம் நிலை. 10
.
★★★
மூலம்
அமுதம் உண்கநம் அயல்இ லாட்டி!-
கிடங்கில் அன்ன இட்டுக்கரைக் கான்யாற்றுக்
கலங்கும் பாசி நீர்அலைக் கலாவ
ஒளிறுவெள் அருவி ஒண்துறை மடுத்து
புலியொடு பொருத புண்கூர் யானை
நற்கோடு நயந்த அன்புஇல் கானவர்
விற்சுழிப் பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடிஇடி கரையும்
பெருமலை நாடனை வரூஉம்என் றோளே.
—நற்றிணை 65
.
பொழிப்புரை: அ. நாராயணசாமி ஐயர்
விட்டு விட்டுக் கரைத்துச் செல்லுதலையுடைய கான்யாற்றின்கண்ணே கலங்கும் பாசியை நீர் அலைத்தலானே அவை யாண்டும் கலப்ப; விளங்கிய வெள்ளிய அருவியினது ஒள்ளிய துறையின் கண்ணே பாய்ந்து; புலியுடனே போர்செய்தலானாகிய புண்மிக்க யானையின் நல்ல தந்தத்தை விரும்பிய அன்பற்ற வேடரின்; வில்லினின்றுவிடும் அம்புபட்டதனாலாகிய சுழன்ற அச்சத்தைத் தருகின்ற பிளிற்றலின் பேரொலியானது இடியிலுண்டாகு மிக்க முழக்கத்தைப் போல ஒலிக்கும்; பெரிய மலை நாடன் குறித்த பருவத்து வாராமையால் அவனை நாம் கருதியிருக்கும்பொழுது நம் அயல் வீட்டு மாதொருத்தி வேறொருத்தியிடம் உரையாடுகின்றவள் நமக்கு நன்னிமித்தமாகக் கிடங்கில் என்னும் ஊர் போன்ற சிறந்த இனிய சொல்லால் 'அவன் இன்னே வருகுவன்' எனக் கூறினள் காண்; அவ்வார்த்தை அசரீரியெனப் படுதலால் நம்மலை நாடன் இன்னே வரும் என யான் கருதுகின்றேன் நீ வருந்தாதேகொள் !; இங்ஙனம் நமக்கு நன்னிமித்தமாகக் கூறிய அவ் வயல்வீட்டு மாது தேவருணவாகிய அமுதத்தினை ஈண்டுக் கைவரப் பெற்று இப்பொழுதே உண்பாளாக!
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
May 4, 2022, 9:49:24 PM5/4/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
.
தன்னையே சரியாய்க் கவனித்துக் கொள்ளத் தெரியாத பெண்ணோ அவள்? அல்லது அன்னை மனத்தில் அவள் இன்னும் குழந்தை தானோ!
.
011. ஒன்றும் அறியாதவள் ஓடிப் போனாளே!
நற்றிணை 66: இனிசந்த நாகனார்
(திணை: பாலை: நற்றாய் கூற்று)
(பஃறொடை வெண்பா)
.
மிளகிட்டாற் போலநா மேவுசுவை புன்காய்
கொள்ளும் காய்ந்த உகாமரத்தில் வண்டுகளைத்
தள்ளியுண்டு துன்புற்றுத் தன்பிடரி யைச்சிலிர்த்தே
உள்ளம் மயங்கிப் புலம்புமே புன்புறா
வெந்துகள் பாலை விழைந்த தலைவனுடன் 5
சிந்தனை இல்லாமல் சென்றாளே இல்நீங்கி!
தன்மாலை சிக்குண்டால் தன்கை வளைகழன்றால்
தன்மேக லைக்காச தன்நேர் பிறழ்ந்தால்
சரிசெய்து கொள்ளத் தெரியா தழுவாள்
அரிவை அழகு விழிகள் சிவந்தே 10
ஒளிமழுங்கிப் போய்க்கலக்கம் கொண்டனவோ என்றே
அளுக்கி வருந்தும் அகம்.
[புன்புறா: புல்லிய புறா; அளுக்கி: குலைந்து]
.
★★★
மூலம்
மிளகு பெய்தனைய சுவைய புன்காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர்சிதர்ந்து உண்ட
புலம்புகொள் நெடுஞ்சினை ஏறி, நினைந்துதன்
பொறிகிளர் எருத்தம் வெறிபட மறுகி,
புன்புறா உயவும் வெந்துகள் இயவின்,
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்தொளி மழுங்கி அமர்த்தன கொல்லோ-
கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும்
காழ்பெயல் அல்குல் காசுமுறை திரியினும்
மாண்நலம் கையறக் கலுழும்என்
மாயக் குறுமகள் மலர்ஏர் கண்ணே?
—நற்றிணை 66
.
பொழிப்புரை: அ. நாராயணசாமி ஐயர்
மிளகினை யிட்டுவைத்தாற் போன்ற சுவையுடைய காய்ந்த கிளைகளையுடைய உகாய் மரத்தினுள்ள புல்லிய காயை; சிதர் சிதர்த்து உண்ட புலம்பு கொள் புன் புறா வண்டுகள் நெருங்காதபடி போக்கி உண்டதனாலாகிய வருத்தமிக்க புல்லிய புறா; நெடிய கிளை மேலேறித் தான் தின்ற தவற்றைக் கருதி வரைகள் விளங்கிய தன் பிடரி சிலிர்த்துத் தின்ற வெறிப்பினால் மறுக்கமுற்று வருந்தாநிற்கும்; வெப்பங்கொண்ட புழுதிமிக்க நெறியின் கண்ணே தன்னை விரும்பிய காதலனைக் கூடிச் சென்றனளாயினும்; சூடிய பூமாலை சிக்குண்டாலும் குறிய வளை கையினின்று நழுவினாலும் காஞ்சியணிந்த அல்குலின் மேல் நாலுகின்ற பொற்காசு இனம் முறை பிறழ்ந்து கிடந்தாலும்; அவற்றைத் திருத்துதற்குத் தெரிந்திலளாய்த் தனது மாட்சிமைப்பட்ட அழகானது அழிந்தொழியுமாறு கலுழாநிற்கும் என் அழகிய இளம் புதல்வியின் மலர்போன்ற கண்கள்; வெய்ய சுரத்திற் செல்லுங் கடுமையாலே சிவந்து ஒளி மழுங்கி¢க் கலக்க மடைந்தனவோ? இவ்வொன்றற்கே வருந்தா நிற்பேன்;
.
★★★★★

sai...@gmail.com

unread,
May 5, 2022, 10:09:37 PM5/5/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
.
ஊரில் எல்லோரும் இன்றிரவு மீன் வேட்டையில்! உன் காதலி இல்லத்தில் தனித்திருக்க நீயிரவு தங்கேன் என்று தலவனைச் சீண்டும் தோழி!
.
012. தங்குதற் கென்ன தடை?
நற்றிணை 67: பேரிசாத்தனார்
(திணை: பாலை: தோழி கூற்று)
(கலிவெண்பா)
.
தொலைவானில் ஏறிய செங்கதிர்ச் சோதி
மலைபின் மறையத் துறைதனிப் பட்டதே
மீனிறால் கொண்ட கருங்கால்கொள் வெண்குருகு
தானிறகு வீசியுப்பு வெண்குவட்டின் மேல்பறந்தே
புன்னைக் கருஞ்சினை புக்கோய்வு கொள்ள 5
கணைத்தண்டு நெய்தல் கரந்த சுழியில்
துணைசுறா நீந்தித் துளைந்தாடும் அவ்விடத்தில்
எல்லொலிக்கும் தண்கடலில் எம்மனோர் கூர்சோதி
மல்கும் விளக்குடன் வேட்டைக்குச் சென்றதால்
பொங்குநீர் ஓங்கும் புணரி முழவிசை 10
மங்கியுடை வாரியூர் எங்களூர் இன்றிரவு
தங்குதற் கென்ன தடை?
.
[வெண்குவடு: உப்புக் குவியல்; கணைத்தண்டு: திரண்ட தண்டு; துணைசுறா: சுறாவும் அதன் துணையும்; எல்லொலிக்கும்: இரவில் ஒலிக்கும்; சோதி: சுடர்; புணரி: அலை; வாரியூர்: கடர்கரையில் அமைந்த ஊர்]
.
★★★
மூலம்
சேய்விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால்வரை மறைய, துறைபுலம் பின்றே;
இறவுஅருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
வெண்கோட்டு அருஞ்சிறைத் தாஅய்க் கரைய
கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே;
கணைக்கால் மாமலர் கரப்ப, மல்குகழித்
துணைச்சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை
எல்இமிழ் பனிக்கடல், மல்குசுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர் அதனால்
தங்கின் எவனோ தெய்ய- பொங்குபிசிர்
முழவிசைப் புணரி எழுதரும்
உடைகடற் படப்பைஎம் உறைவின் ஊர்க்கே?
—நற்றிணை 67
.
பொழிப்புரை: அ. நாராயணசாமி ஐயர்
சேய்மைக் கண்ணே ஆகாயத்திலேறி வந்த செழுவிய கிரணங்களையுடைய ஆதித்த மண்டிலம் பெரிய அத்தம் என்னும் சிலம்பினூடு சென்று மறைதலானே யாருமின்றி நமது கடற்றுறை தனிமையா யிராநின்றது; இறா மீனைத் தின்றெழுந்த கரிய காலையுடைய வெளிய நாரைகள்; வெளிய உப்புக் குவட்டின் மேலாக அரிய சிறகை வீசிப் பறந்துசென்று கரையில் உள்ள கரிய கிளைகளையுடைய புன்னை மரங்களிலே தங்குதல் கொண்டன; திரண்ட தண்டினையுடைய நெய்தல் (கரிய) மலர் மறையும் படியாக நீர் பெருகுங்கழியின் கண்ணே துணையோடு சுறாமீன் இயங்குதலுஞ் செய்யும்; அவ்விடத்தில் இரவில் ஒலிக்கின்ற குளிர்ச்சியையுடைய கடலில் மிக்க விளக்கங்களைக் கொண்டு; எம் சுற்றத்தாரும் மீன்வேட்டையாடச் சென்றுவிட்டனர்; ஆதலால் பொங்குகின்ற பிசிரையும் முழவு போல ஒலித்தலையுமுடைய அலையெழுந்து உடைந்து விழுகின்ற கடற்கரையில் உள்ள நெய்தனிலத்தில்; யாங்கள் உறைதலையுடைய எம்மூரின்கண் இன்றிரவிலே தங்கிச் செல்லின் என்ன குறைபாடுண்டாகுமோ?
.
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி
வரைவு கடாயது.
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
May 6, 2022, 9:43:52 PM5/6/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவீச்சு
007. வெண்பாவில் சங்கத் தமிழ்
ஆக்கம்: குருநாதன் ரமணி
.
ந010. அருளிலா மாலை!
நற்றிணை 069: சேகம்பூதனார்
(திணை: முல்லை: தோழி கூற்று)
.
இயற்கை உயிர்கள் இன்புற்றிருக்கத் தான் மட்டும் தனிமையில் துன்புறும் தலைவிக்குத் தோழி கூறியது.
.
(கலிவெண்பா)
பல்கதிர் வேந்தன் பகல்வினை ஆற்றியே
செல்வழி செம்மையாய்ச் சையம் மறையப்
பறவைதன் குஞ்சுகள் கூட்டில் படியப்
புறவில் கலைமான் துணையை உடல்தழுவ
முல்லை அரும்புகள் மோனமாய் வாய்திறக்க 5
புல்லிதழ்ச் செங்காந்தள் பூத்து விளக்கேற்ற
ஆவின் கழுத்துறும் மாசில் ஒலிமணி
கோவலர் ஊதும் குழலொடு ஒன்றியே
மெல்லிசை யாரும் அருளிலா மாலைபோல்
செல்வத்தை நாடியெ சென்ற தலைவனின் 10
நாட்டிலும் நாளிதுவே என்றால் திரும்புவான்
ஈட்டிவரும் எண்ணம் விடுத்து.
[புறவு: காடு; ஆரும்: நிறையும்]
.
★★★
மூலம்
பல்கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றிச்
சேய்உயர் பெருவரைச் சென்றவண் மறைய
பறவை பார்ப்புவயின் அடையப் புறவில்
மாஎருத்து இரலை மடப்பிணை தழுவ
முல்லை முகைவாய் திறப்பப் பல்வயின்
தோன்றி தோன்றுபு புதல்விளக்கு உறாஅ
மதர்வை நல்ஆன் மாசுஇல் தெண்மணி,
கொடுங்கோல் கோவலர் குழலோடு ஒன்றி,
ஐதுவந்து இசைக்கும் அருள்இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
இனைய வாகித் தோன்றின்
வினைவலித்து அமைதல் ஆற்றலர் மன்னே!
—நற்றிணை 069, சேகம்பூதனார்
.
புறச்சூழல்
’அருளிலா மாலை’ ஒன்றில் அனைத்துயிர்களும் இன்புற்றிருக்கத் தலைவி மட்டும் தனிமையைல் துன்புறுகிறாள்.
.
அகச்சூழல்
தலைவர் நாட்டிலும் அவருக்கு இதே நிலையென்றால், அவர் அங்கிராது மீண்டு வரைவு கடாய்வார்.
.
பொழிப்புரை
, பல கதிர்கள் கொண்ட சூரிய மண்டினல் பகற்பொழுதைச் செய்து முடித்து
, தொலைவில் உயர்ந்த பெரிய மலையில் சென்று மறைய.
, பறவைகள் தம் குஞ்சிருக்கும் கூட்டினை (வயின்) அடையக் காட்டில் (புறவு)
, கரும்பிடரிக் கலைமான் இளைமையான தன் பெண்மானைத் தழுவியிருக்க.
, முல்லை யரும்புகள் மலர, பலவிடங்களில் உள்ள
, புதர்தோறும் காந்தள் தழைத்துத் தன் மலராகிய விளக்கேந்தி நிற்க,
, அகம் மலரும் நல்ல பசுவின் குற்றமற்ற மணியின் தெளிந்த ஓசை,
, வளைந்த கோலையுடைய ஆயர்களின் குழலோசையோடு சேர்ந்து,
, மெல்லிதாக வந்து ஒலிக்கும் அருள் இல்லாத இம்மாலைப் பொழுதானது
, பொருளீட்டு முயற்சியால் நம்மைக் கைவிட்டு அகன்ற தலைவர் சென்ற நாட்டிலும்
, இத்தன்மையாகத் தோன்றுமாயின்,
, அவர் தாம் மேற்கொண்ட செயலில் உறுதிகொண்டு தங்கியிருப்பார் அல்லர்;
, அது கழிந்தது என் செய்வேன் என்றபடி.
.
★★★★★

Reply all
Reply to author
Forward
0 new messages