பதினாறு சீர் விருத்தம்
தந்தாதிமி திந்தாதிமி திந்தாதிமி தந்தா
தனதாந்திமி தனதாந்திமி தனதாந்திமி திந்தா
தந்தேன்வரம் இந்தாபிடி மைந்தாவென முந்தி
தனதாவென உனதேயெனப் பணிவார்க்கருள் மூர்த்தி
அந்தாதிகள் இல்லாதவன் ஆனைகுகன் தந்தை
அறுமாமறை முருகோனொடும் கரிமாமுக னோடும்
ஆடிக்குதி போட்டுக் களி கூடிச் ஜதிபாடி
ஆகாவென ஓகோவென அங்கெங்கினும் ஓட
மந்தாகினி அஞ்சம்புலி மானாகியர் ஆட
வாகாய்த் துடிதாளம் தர மாடும் விழி பார்க்க
வாடாச்சுடர் தீயாடிட பாம்பு படம்காட்ட
வாமம் உறை அருள்நாயகி மாறாநடம் கூட்ட
வந்தேயமர் வானோர்களும் வாழ்ந்தேமெனப் பொங்கி
மாதேவனின் திருத்தாள்பதம் போற்றிப் பணி செய்து
‘மைந்தாதியரோடே நடம் ஆடும் அருள் தேவா
வானோர் சொலும் ஒரு வாசகம் கேட்பா'யெனச் சொன்னார்
பதினான்கு சீர் விருத்தம்
இமய மலையில் அடியர் பரவ அருளைப் பொழியும் சிகரமே
இயக்கம் அவைகள் தமது கதியில் இசையப் புரியும் தலைவனே
அமுது தமிழின் அசைகள் இசைய அழகு புனையும் புலவனே
அரபுப் புரவி எனவன் நரியை அடைய அருளும் புனிதனே
திமுதக் கடலின்அலையில் விடமும் மிடறில் பொலியும் விடையனே
திகழும் மதுரைப் பதியில் அடியின் வரியை உடைய உடலனே
சமய குரவர் தமிழில் இதயக் கனிவு பெருகும் கடவுளே
சபையில் வருக, நடன வகைகள் தருக மனமும் உருகவே!
ஆட்டுவிக்கும் பிரான் ஆடினான் ஆடினான்
அடியவர்க்கா ஆடினான்
அண்டபகி ரண்டங்கள் சுண்டுவிரல் தூக்கியே
ஆனந்தமாய் ஆடினான்
கூட்டுவிக்கும் அருள் நாட்டுவிகும் விழி
கூத்தாடவே ஆடினான்
குண்டலம் மண்டலம் கூடவே ஆடிடக்
கொண்டாட்டமாய் ஆடினான்
ஊட்டுவிக்கும் தயை ஓட்டுவிக்கும் இறை
ஒய்யாரமாய் ஆடினான்
ஒருகோடி பலகோடி சதகோடி கோடியாய்
ஒவ்வொன்றுள்ளும் ஆடினான்
நாட்டிவைக்கும் உயிர் வீட்டிவைக்கும் வகை
நமசிவாயன் ஆடினான்
நானுளேன் எங்கணும் நானுளேன் என்னவே
ஞாலமெலாம் ஆடினான்
*
மண்ணெடுத்தே ஓர்கை பண்டம் ஆக்க-அதை
வாங்கி உடன் ஓர்கை உயிர்தேக்க-ஆடி
மண்ணிலத்தில் வைத்ததுவே காக்க-அதை
வாழவிட்டுப் பின்னொருகை போக்க
பண்ணெடுத்தோர் கை உடுக்கை போட-ஒரு
பக்கத்திலே தீக் கொழுந்து சாட-பிறை
பட்டொளிரும் கங்கைமனம் ஊட- இடப்
பாகத்திலே தேவி எழில் கூட
கண்ணெடுத்துத் தேவரெலாம் நோக்க-ஐயன்
கண்களிலே நல்லருளே பூக்க-சுடர்
கற்றைச் சடை பக்கம் எழுந்தார்க்க-அங்குக்
கந்தன் வந்து தந்தை முகம் பார்க்க
விண்டுரைக்க மாட்டாத ஆட்டம்-சிவன்
விதவிதமாய்த் தருவது கொண்டாட்டம்-அது
விண்ணவர்கள் கண்களுக்கோர் ஊட்டம்-அட
விரியுதுபார் நடனமழைப் பாட்டம்
*
எண்ணாத பலகோடி அண்டங்கள் இசைந்தாட
எழுந்தோடி சிவனாடினான்
இங்கிங்கெனாதபடி தங்கித்த தாமென்ன
எங்கெங்கும் நின்றாடினான்
பண்ணாட துடியாட படர்ந்தாடும் எரியாட
படமாடு மரவமாட
பட்டான மதியாட மானாட மழுவாட
பனியாடும் இமயமாட
கண்ணாட இமையாட இடமாடும் கனியாட
கதித்தோடும் கங்கையாட
கண்டக் கறுப்பாட புலியாடை கலந்தாடக்
கழலாடக் குழலாடவும்
விண்ணாளும் வேந்தாட, வித்துக்குள் மரமாட
விரிகதிர் பொங்கியாட
வேதாந்த நாயகன் விரிகதிர்த் தாயகன்
விரிவாக நடமாடினான்
*
நட்டநடு ராத்திரி இடுகாடு சுடுகாடு பேயாட பூத மாட
நடுவிலெரி பிணமாட தீயாட நாற்புறம் நரியாட கூகை யாட
சுட்டெரியும் விறகாட பந்தங்கள் தூக்கியே சூழவும் கூளி யாட
சுரும்பாடத் துரும்பாடக் கொள்ளிவாய்ப் பிசாசுகள் சுற்றியும் கூடி யாட
வட்டமிடு புகையாட மண்டையோடுகளாட வானத்தில் மீன்க ளாட
வடிவற்ற முண்டங்கள் துண்டங்கள் அங்கங்கே வந்துவந் தாடி யோட
இட்டமுடன் சுடலையின் பொடியினைப் பூசியே எம்பிரான் நடமாடினான்
ஏராளமாகவே எடுத்ததை முடிக்கின்ற எம்பிரான் நடமாடினான்.
*
மண்டையோட்டு மாலைகளைக் கண்டமெலாம் போட்டுக் கொண்டு
மாகாளி ஆடிவரும் நேரம்-கண்ட
மாத்திரத்தில் யாவும் விழும் கோரம்-அவள்
வந்தவழி நின்றவழி சென்றவழி அத்தனையும்
மத்தெடுத்துத் தான் கடைந்த செம்மை-அவள்
` வட்டவிழி தீக்கனலின் வெம்மை-கொடும்
சண்டமாருதம் போலக் கண்டபடி துண்டமிட்டுச்
சக்தியவள் ஆடிவரும் கூத்து-அவள்
சட்டச்சட சட்டவெனத் தட்டிமுட்டிக் கொட்டிவரச்
சங்கரனும் தானெழுந்தான் பார்த்து-இடத்
தாளெடுத்து முன்குதித்தான் ஆர்த்து-அங்கே
கொண்டவனும் கொண்டவளும் கூத்தாடும் ஆட்டத்தில்
கொத்துக் கொத்தாய் அத்தனையும் ஆடும்-பனிக்
குன்றுகளும் தாமுருகி ஓடும்-அந்தக்
கொக்கரிப்புக் காய்ச்சலிலே கூத்தாடும் பாய்ச்சலிலே
கொப்புளங்கள் ஆகிவிடும் மேடை-எங்கும்
கோபக் கனல் பெருகும் ஓடை-நீல
கண்டனவன் ஆட்டமெலாம் காளியவள் ஆடிவர
காலமதும் கண்டிடாத போட்டி-நடக்
கலையின் வகைகளெல்லாம் காட்டி-அங்குக்
காளியவள் தன்னுடைய ஆண்டியுடன் ஆடுகையில்
கச்சிதமாய் மாற்றிவிட்டான் ஆட்டம்-அந்தக்
காளியம்மை கொள்ளவில்லை வாட்டம்
நெடுநெடு நெடுநெடுவரை நடுநடு நடுங்கிட
நிறம்பிரி கதிர்வகை உலகில் ஒதுங்கிட
மடமடமடவென மரங்கள் ஒடிந்திட
வட்டமிட்டுக் கையைக் கொட்டி
எட்டுத் திக்கும் எட்டில் ஒட்டி
ஆடினான் சிவன் ஆடினான்
படபடபடவென வடவை சுருங்கிட
பறபற எரிகணை பறந்து நெருங்கிட
விடுவிடு நுதல்விழி பொறிகள் சொரிந்திட
ஒற்றைக் கையில் தீயைப் பற்றி
மற்றைக் கையில் மானைச் சுற்றி
ஆடினான் சிவன் ஆடினான்
தடதடவெனத் துடி சந்தம் முழங்கிடத்
தண்டிகு டிண்டிகு தாளம் வழங்கிட
கடகட கங்கண நாதம் எழுந்திட
மெட்டு வேதம் திக்கில் எட்ட
எட்டுத் திக்கும் மேகம் கொட்ட
ஆடினான் சிவன் ஆடினான்
முடிமுடியெனப் படம் நாகம் எடுத்திட
மொழிமொழியெனத் தமிழ் கானம் தொடுத்திட
அடிஅடிஅடியென நந்தி புடைத்திட
உச்சி மேலே காலைத் தூக்கி
இச்செயற்கோர் எல்லை ஆக்கி
ஆடினான் சிவன் ஆடினான்
எண்சீர் விருத்தம்
ஊர்த்துவமாய்க் கால்தூக்கி சிவன் ஆடும் போது
உடனாட மாகாளிக் கில்லையது தோது
ஆர்த்தெழுந்த சினமெல்லாம் தாமடங்கிப் போக
அம்மை முகம் நாணத்தால் செம்மைமுகம் ஆக
பார்த்தெழுந்து சிவபெருமான் பக்கத்தில் சென்றாள்
பாகமென அவளுடனே ஒன்றாகி நின்றான்
நேர்த்தியிதைக் கண்டவர்கள் பாதத்தில் வீழ்ந்தார்
நிறைவாழ்வு தாம்பெற்றார், வளமெல்லாம் சூழ்ந்தார்.

(பின் குறிப்பு- 2001 நவம்பரில் சந்தவசந்தத்தைத் தொடங்கிய போது தொடங்கிய மாதத்திலேயே வெளியிடப்பட்ட கவிதை இது. தெய்வ நடனங்கள் எனும் தலைப்பில் சேலையூரில் நடைபெற்ற ஒரு கவிதைப் பட்டிமண்டபத்திற்காக 30 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியது.)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBD%2Bb5%2Bzt%3Dm4A3xTO%2BfDGFtD-ipjpYfd_x%2BofZK%2BDDFC3A%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXaRCsDq2RiRUy-HGfyfo1-KLfq0yo444WpgoDRzjFD6Ew%40mail.gmail.com.
ஊர்த்துவ தாண்டவம்
பதினாறு சீர் விருத்தம்
தந்தாதிமி திந்தாதிமி திந்தாதிமி தந்தா
தனதாந்திமி தனதாந்திமி தனதாந்திமி திந்தா
தந்தேன்வரம் இந்தாபிடி மைந்தாவென முந்தி
தனதாவென உனதேயெனப் பணிவார்க்கருள் மூர்த்தி
அந்தாதிகள் இல்லாதவன் ஆனைகுகன் தந்தை