அன்புதன்னில்
செழித்திடும் இவ்வையம்!
கண்ணன், திருவள்ளுவர், யேசு கிரிஸ்து, புத்தர், அல்லா, வள்ளலார், மகாத்மா காந்தி அடிகள் வழியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்! அவர்கள் அனைவரது போதனைகளும், அறிவுரைகளும், அறவுரைகளும் அன்பின் அடிப்படையில் அமைந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
கண்ணன் கீதையில் அர்ஜுனனைப் போர் செய்யத் தூண்டினாலும், மனித வாழ்க்கை அன்பின் அடிப்படையிலேயே அமையவேண்டும் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார்.
உலகப் பொதுமறை வழங்கிய வள்ளுவப் பெருந்தகை “அன்புடைமை” என்று ஒரு அதிகாரத்தையே வழங்கியுள்ளார்.
ஏசு கிரிஸ்து அன்பின் சிறப்பை அழகாக அறிவுறுத்தி, அன்பு வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.
புத்தரின் “பெளத்த மத”த்தின் அடிப்படையே “அன்பு”தான்.
”அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
அன்பினிற் போகும் என்றே – இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி”
என்றார் பாரதியார். மேலும்,
அன்பினால் முக்தியென்றான் புத்தன் அந்நாள்
அதனையிந் நாட் கோவிந்த சாமி செய்தான்
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போல;
சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி,
அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்;
அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்.
என்பார்.
அல்லா ‘அன்பு’ எனும் உயர் சக்தியினாலேயே வாழவேண்டும், வாழ முடியும் என்று வலியுருத்தினார்.
வடலூர் வள்ளலாருடைய சமரச சுத்த சன்மார்க்கம், மனித நேய ஒருமைப்பாடு எனும் ஆன்மீகக் கொள்கைகள் அன்பின் அடிப்படையை அஸ்திவாரமகக் கொண்டது.
அண்ணல் காந்தியடிகள் வாழ்நாள் முழுமையும் அன்பையும், உண்மையையும் கடவுளாகக் கொண்டு வாழ்ந்து, நாட்டு விடுதலையை வாங்கிக் கொடுத்தார்.
இவர்களது அடிச்சுவட்டில் நடந்த பாரதிப் பெருமகன் இந்த வையம் செழிக்க வேண்டுமென்றால் அதன் அடிப்படை அன்பாகத்தான் இருக்க முடியும் என்ற கருத்தில் “அன்பு தன்னில் செழித்திடும் இவ்வையம்” என்று பாடினார். அது எவ்வளவு உயர்ந்த கொள்கை, தத்துவம் என்று எண்ணிப் பார்க்கும் பொழுது, இன்றைய சூழ்நிலையில் “அன்புப் பாதைக்கு”மாற்றுப் பாதை இல்லை என்று கூறலாம்.
திலகரின் புகழ் பாடும்பொழுது பாரதி சொல்வார்
”அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும்
புதுமலர் அவன் பெயர்” என்பார்
இறைவி என்றாலும், வலிமை என்றாலும், ”அன்பு கனிந்த கனிவே சக்தி” என்பது பாரதி கருத்து.
அன்பினைக் கருவியாக ஏற்றவர்களுக்கு துன்பம் வராது என்பதை ’கண்ணன் என் தந்தை’ என்ற கவிதையில், கண்ணன் தந்தையாகக் கூறுவது போல ”அன்பினைக் கைகொள் என்பான்-துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்!” என்பார் பாரதி.
”அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! அன்பு நெறியில்தான் அறம் வளர முடியும் என்பதில் பாரதிக்கு அவ்வளவு நம்பிக்கை.
அன்பு கொண்டவர் எப்படியிருப்பார்? ”அன்பும் பணிவும் உருக்கொண்டோர்-அணு
வாயினும் தன்சொல் வழாதவர்” என்று ’பாஞ்சாலி சபதம்’ வழி வலியுறுத்துவார் பாரதி.
”அன்பு மிகுந்த தெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!” என்று குழந்தைகளுக்குப் போதிப்பார் பாரதி.
”அன்பென்று கொட்டு முரசே –அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
அன்பென்று கொட்டு முரசே – மக்கள்
அத்தனை பேரும் நிகராம்!” என்று ’முரசு’ கொட்டுவார்.
”இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஒளடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புக்கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கு மன்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே! அன்புசெய்தல் கண்டீர்!
இவ்வையம் செழித்திட ‘அன்பு செய்தல்’ அவசியம்!
அன்பு செய்வதே தவம் என்பதை ஏற்ற பாரதி தனது ‘வினாயகர் நான்மணிமாலையில்’
”செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம்செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை-அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு” என்பார்.
அன்பே சிவம்! அன்பே கடவுள்!! அதனால்தான் பாரதி “அன்புதன்னில் செழித்திடும் இவ்வையம்” என்றாரோ?
சிவாஜி தனது சைன்னியத்திற்கு உரையாற்றுவது போல எழுதப்பட்ட பாடலில் சிவாஜி சொல்லுவார்
“தாய் நாட்டு அன்பிலாதிருப்போன் ஆரியனல்லன்” என்று.
’மஹா காளியின் புகழை’ப் பாடும் பொழுது, “அன்புவடி வாகிநிற்பள்” என்பார்.
அன்பிற்கு என்றும் அழிவில்லை என்பதை வலியுறுத்தி
“துன்ப நினைவு அகலும் சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! கிளியே! அன்புக் கழிவில்லை காண்” என்பார் பாரதி.
”அன்பும் சிவமும் இரண்டு என்பர், அறிவிலார்,
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே” என்ற மாணிக்க வாசகர் கூற்றை அப்படியே மனத்தில் கொண்டவர் பாரதி.
இறைவனை ”அன்பினில் விளைந்த ஆரமுது” என்பார் மாணிக்கவாசகப் பெருமான்.
அன்புதன்னில் இந்த வையம் செழித்திட வேண்டும் என்பதற்காக, வள்ளலார் வேண்டுவார் “ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்“ என்று.
பரசிவத்தின் பெருமைதனைக் கூற விரும்பிய வடலூர் வள்ளலார் பாடினார்:
அன்பெனும் பிடிக்குள் அடங்கிடும் மலையே, அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே, அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே, அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே, அன்புருவாம் பரசிவமே!
அன்பெனும் இறைத்தத்துவத்திற்குள் மனித இனமே அடக்கம் எனத்தெளிவாக்கி ’அன்புப் புரட்சி’ செய்தவர் அல்லவா வடலூர் இராமலிங்கர்?.
வள்ளுவன் வாய்ச்சொல்லின் சில விளக்கங்கள்:
அடைத்துவைக்கக் கூடியது அல்ல அன்பு; அடக்கிவைத்திருப்பவர் கண்ணீரே காட்டிக் கொடுத்துவிடும்
அன்பில்லாதவர்கள் அனைத்தையும் அபகரிப்பர்; அன்புடையவர் உடல், உயிர் அனைத்தையும் தருவர்.
மனித உயிருக்கு, எலும்பும், உடலும் மற்றவர்க்கு அன்பைத் தருவதற்கே.
நாம் காட்டும் அன்பு, மற்றவரிடத்து ஆர்வத்தை உண்டாக்கும்; அந்த ஆர்வம் நட்பை அளிக்கும்.
பிறர்மீது காட்டும் அன்பின் பயனே, மனிதன் இன்பமுடன் வாழ்வது.
அன்பு அறத்திற்கும், வீரத்திற்கும் துணை நிற்கும்.
எலும்பற்ற புழுக்களை, வெய்யில் காய்ந்து, ஒழிப்பதைப் போல, அன்பற்றவர்களை அறம் அழிக்கும்.
பாலைவனத்தில் பட்டுப்போன மரம் தளிர்க்காது; அவ்வாறே, அன்பில்லாதவனது வாழ்க்கை செழிக்காது.
அன்பில்லாதவர்க்கு, புற உறுப்புக்களினால் பெறும் பயன் ஒன்றுமில்லை.
அன்பு வழியில் சென்றால்தான் உயர்நிலை கிடைக்கும்; இல்லாதவரின் உடல், தோலால் போற்றிய வெற்றுடம்பே.
இந்தக் கருத்துக்களை முழுமையாக மனத்தில் ஏற்று ஒவ்வொருவரும் வாழ்க்கையை நடத்தி வந்தால், இவ்வையம் செழிப்பாகத்தானே இருக்க முடியும்?.
ஆம்! ஆன்மீகவாதிகளும், அரசியல்வாதிகளும், இலக்கியவாதிகளும் அன்பின் சிறப்பையும், பெருமையையும், இன்றியமையாமையையும் ”அன்புதன்னில் செழித்திடும் இவ்வையம்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் இன்றைய நிலையையும், சமூகச் சூழ்நிலையையும் கூர்ந்து கவனிக்கும் நல்ல உள்ளம் படைத்த
வர்கள் அனைவரும் அனுபவிக்கும் வேதனையையும், வருத்தத்தையும் எழுத்தில் வடித்துமாளாது;சொல்லில் சொல்லி மாளாது.
வேதனைக்குரியது. இதைக் குறித்து வருத்தமுறும் நல்ல உள்ளங்கள் ஏக்கம் தான் என்ன? மீண்டும் அன் இனிவரும் காலத்தில் “அன்பு” எனும் சொல்லே மறந்துவிடுமோ என்ற அச்சம் கவ்வுகிறது! உலகம் எங்கும் தீவிரவாதம், அச்சம், கோபம், பொறாமை, உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல், கள்ளமும் கபடும் இரத்தத்தில் ஊறிவிட்ட நிலை, பேசுவதெல்லாம் பொய்- வயது வரம்பிற்கு எல்லாம் அப்பால்! வீட்டில், சமுதாயத்தில், நாட்டில், உலகில் எல்லா எல்லையிலும் அன்பு எனும் பண்பு மறைந்துவருவது வேதனைக்குரியது. இதைக் குறித்து வருத்தமுறும் நல்ல உள்ளங்கள் ஏக்கம் தான் என்ன? மீண்டும் அன்பை வளர்ப்பது எப்படி என்பதே.
பொறுப்பும் கடமையும் உள்ள பெற்றோர்கள், தமது குழந்தைகளின் சிறுவயது முதற்கொண்டே அன்பின் பெருமையையும், சிறப்பையும் போதித்து, தமது வாழ்விலும் முழுமையாகக் கடைப்பிடித்து அன்பு செழிக்க முன்மாதிரியாகத் திகழவேண்டும்.
பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆன்றோர்களின் அறவுரைகளை, அறிவுரைகளை துவக்கத்தில் கண்ட இலக்கியங்களினின்று, வாழ்விலிருந்து அன்பின் சிறப்பைச் சொல்லிக் கொடுத்து, ஆசிரியப் பெருந்தகைகள்தாமே முன் உதாரணமாகத் திகழ்ந்து அன்பை வளர்க்க வேண்டும்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தமது ஆண்டுத் திட்டப் பணியாக ஏற்று சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் ”அன்பு செய்தல்” குறித்து நிரந்தரமாக விழிப்புணர்வு அளித்துச் செயலாற்ற வேண்டும்.
அலுவலகங்கள், பெரிய நிறுவனங்கள் கடமையையும், ஒழுங்கையும், நிலைநாட்டப் பாடுபடுவதைப் போன்று அன்பை வளர்க்கச் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு அளவில் அன்புப் பாதையில் மக்களை வழிநடத்த அரசியலாரும், ஆளும் பெருமக்களும் தாமே முன்மாதிரியாக இருந்து, நிரந்தரமாகச் செயலாற்ற வேண்டும்.
ஆன்மீகப் பெரியோர்கள் சமுதாயத்தில் அன்பு பெருக தமது எண்ணத்தால், சொல்லால், செயலால் ஆவன செய்ய வேண்டும்.
இன்று ’அன்பு’ அரிதாகப் போவதற்குக் காரணமான தொலைக்காட்சி நாடகங்கள், ’சீரியல்கள்’, திரைப்படங்கள் தமது வழியைச் சற்றே மாற்றிக் கொண்டு சமுதாயக் கண்ணோட்டத்தோடு கடமை ஆற்ற வேண்டும். எல்லாவகை ஊடகங்களுக்கும் இம்மாபெரும் வேள்வியில், பணியில் பங்கு உண்டு.
’அன்புதன்னில் இவ்வையம் செழிக்க’ ஒவ்வொரு தனிமனிதனும் தன்னால் இயன்றதைச் செய்தே ஆக வேண்டும்! நமது வீட்டிற்காகவும், நாட்டிற்காகவும், இந்த வையம் செழிப்பதற்காகவும் நம்மால் முடிந்ததைச் செய்வோமே! இன்றே, இப்பொழுதே துவங்குவோமே!
அன்புள்ள சுப்பராமன் ஐயா,
நல்ல கட்டுரை.
ஒரு சிறு தட்டச்சுப்பிழை.
அன்பே சிவம் என்ற இந்த செய்யுள் மாணிக்கவாசகரால் பாடப்பட்டதல்ல. திருமூலரால் திருமந்திரத்தில் பாடப்பட்டது.
அன்புடன்,
குமார்(சிங்கை)
...
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எனது அன்பிற்கினிய சந்தவசந்த அறிஞர்களே,
இன்று தை மாதம் 6ஆம் நாள்; தை மாதம் முதல் நாள் வாரம் ஒருமுறை என் பாரதி சிந்தனைக் கட்டுரைகள் வரும் என்று எழுதியிருந்தேன். முதற் கட்டுரையாக “அன்புதன்னில் செழித்திடும் இவ்வையம்” என்ற கட்டுரையை இட்டிருந்தேன். அதற்கு சிங்கை குமார் அளித்த பின்னூட்டத்திற்கு நன்றி.
இவ்வாரம் “பாட்டுத் திறத்தாலே” என்ற கட்டுரை. படிக்கவும் தயவு செய்து, இயன்றால் பின்னூட்டம் அளிக்கவும்..
பாட்டுத் திறத்தாலே!
என் வி சுப்பராமன், சென்னை.
ஆம்! பாடல்கள்! பாடலகளில்தான் எத்தனை வகை, எத்தனை ரகம், எத்தனை தரம், எத்தனை ராகங்கள், எத்தனை தாளங்கள், எத்தனை கருத்துக்கள், எத்தனை செய்திகள், எத்தனை பா(ba)வங்கள்! முத்தமிழ் மலர்களில் எத்தனை இனிமையான ஒரு மலர், மணம் மிகுந்த மலர், நிறம் கொள்ளை கொள்ளும் மலர், மனத்தை ஈர்க்கும் மலர், மனிதர்களுக்குப் பிடித்த மலர், இறைவனுக்கு இனிமையான மலர்- “கவிதை மலர்”! மக்கள் உறவினை உயர்த்தும் மலர்-கவிதை மலர்!
பாடல்கள்- தேசியப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், ஞானப் பாடல்கள், -பலவகைப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாடல்கள், காதல் பாடல்கள், நாட்டுப்புறப் படல்கள், நையாண்டிப் பாடல்கள், சிலேடைப் பாடல்கள், இரங்கல் பாடல்கள்!
பாடல்கள்-மெல்லிசைப் பாடல்கள், இந்துஸ்தானிப் பாடல்கள், மேல்நாட்டுப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள், கர்னாடக இசைப் பாடல்கள்! பல்வகை மொழிப் பாடல்கள்!
பாடல்கள் – மனிதன் இசைக்கும் பாடல்கள், பறவைகள் பாடும் பாடல்கள், செடி கொடி, மரங்கள் இசைக்கும் பாடல்கள்!
ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல்கள்?
ஆம்! இந்தப் பாடல்கள், கவிதைகள், இசை ஆகியவை எல்லாம் யாருக்கு, எதற்கு, எப்பொழுது, என்ன செய்யும்?
பாடல்கள் தெய்வீகமானவை. உள்ளத்தை உயர்த்தும் தன்மை கொண்டவை; உள்ளத்தை உருக்குபவை; நெஞ்சத்தை நெகிழ வைப்பவை! அன்பை ஊட்டும்; ஆர்வத்தை ஏற்படுத்தும்; இன்பம் தரும்; உயர்வைக் கொடுக்கும்; ஏற்றம் தரும்; வாழ்வை இனிமையாக்கும்; கோபத்தைக் குறைக்கும்; நேர்மறை நினைவுகளை வளர்க்கும். உடல் நிலையை நிலையாய் வைக்கும்!
மகுடியை வாசிக்கக் கேட்கும் பாம்புகள் படமெடுத்து ஆடும்; இசை கேட்கும் செடிகள் இனிதாய் செழித்து வளரும்;
வள்ளலார் கூறியதைப் போல பாடல்கள் “செங்கருப்பஞ் சாற்றினிலே, செழுஞ்சுவை தேன் கலந்து, பால் கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து உவட்டாமல் இனித்திடச் செய்யும்! தெருட்பாடல் உவந்தெமையும் சிவமாக்கும்!
அதனால்தான் பாரதி “ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே” என்றாரோ?
பாரதி உலகில் எவற்றைக் கண்டார்?
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும், அறிவும் உயிரும் உளவே;
தின்னப் பொருளும், சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டும், காண நல்லுலகமும்
களித்துரை செய்யக் கணபதி பெயரும்
என்றுமிங் குளவாம்.
“நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்”
அவர் செய்யும் கவிதைகள் அனைத்தும் பராசக்தியால் செய்யப் படுபவை அல்லவா?
வினாயகரை மேலும் கேட்பார்:
” போற்றி! கலி யாணிபுதல்வனே! பாட்டினிலே
ஆற்றல் அருளி அடியேனைத் – தேற்றமுடன்
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்!”
“பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்தசுவைத்
தெண்டமிழ்ப் பாடல் ஒருகோடி மேலிடச் செய்குவையே!”
ஒருகோடிப் பாடலா? எதற்கு? பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திடவேண்டும் அல்லவா?
“தசையினைத் தீ சுடினும், சிவ சக்தியைப் பாடும் நல் அகம் கேட்ட”வரல்லவா பாரதி?
காணி நிலம் வேண்டுமாம்; அங்கு தூணில் அழகியதாய் - நல்மாடங்கள் துய்ய நிறத்தினவாய், ஓர் மாளிகை கட்டித்தர வேண்டுமாம்; அந்தக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்றுமிள நீரும், பத்துப் பனிரண்டு தென்னை மரங்களும் பக்கத்திலே வேண்டுமாம்; முத்துச் சுடர் போல நிலாவொளி முன்பு வரவேண்டுமாம்; கத்துங்குயிலோசை சற்றே வந்து காதில் பட வேண்டுமாம்; சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளந்தென்றல் வர வேண்டுமாம்; பாட்டுக் கலந்திடவே அங்கே ஒரு பத்தினிப் பென் வேண்டுமாம்; கூட்டுக்களியிலே கவிதைகள் கொண்டு தர வேண்டுமாம்!
இவையெல்லாம் போக
”…………… …………………………………. என்றன்
பாட்டுத் திறத்தாலே- இவ்வையகத்தைப்
பாலித்திட வேணும்”
பாரதியாரது பாட்டுத்திறன் எப்படிப்பட்டது?
பாரதியாரை நேரில் கண்டு பழகி அறிந்தவர் பாவேந்தர்.அவர் கூறுவார்:
பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூறச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
திறம் படவந்த மறவன்., புதிய
அறம் பாடவந்த அறிஞன்………………………………………. என்று!
மேலும் கூறுவார்:
”சுப்பிரமணிய பாரதி தோன்றி என்
பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்”
”உய்வகைகாட்டும் உயர் தமிழுக்குப்
புது நெறி கட்டிய புலவன் பாரதி!” என்பார்.
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் பாலிக்க வந்த பாரதியைப் பற்றி, 1876 ஆம் ஆண்டு பிறந்து 1954 ஆம் ஆண்டு மறைந்த கவிமணி சி. தேசிக வினாயகம் பிள்ளை, “பாரதியும் பட்டிக்காட்டானும்” என்ற தலைப்பில் அருமையான ஒரு கவிதை ஆக்கினார். அதற்கு ஒரு முன்னுரை: பட்டிக்காட்டான் பட்டணம் போனான்; பாரதி பாடலைப் பண்ணொடு கேட்டான்; அதில் அவன் மனம் ஈடுபட்டது. சில தினங்களில் ஊருக்குத் திரும்பினான். அங்கே தன் நண்பர்களுக்கு அப்பாடல்களின் அருமை பெருமைகளை உணர்ந்த மட்டில் விவரித்துக் கூறினான். எப்படி?
பாட்டுக் கொரு புலவன் பாரதி, அடா! அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினான் அடா! –
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே, அடா! – அந்த
கிறுக்கல் உளறுமொழி பொறுப்பாய், அடா!
தொடர்ந்து பாரதியின் வெவ்வேறு கவிதைகளின் நயத்தை விவரிப்பார் கவிமணி. “அமரகவி” என்ற தலைப்பில் பாரதிக்கு இப்படிப் புகழாரம் சூட்டுவார்:
ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
ஒருவரையும் அஞ்சாமல் எடுத்துரைத்தோன்
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்,
அமரகவி யென்றவரும் புகழப் பெற்றோன்,
சீருயரும் தமிழ்மக்கள் செய்தவத்தால்
தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய
பாரதியார் பெயர்போற்றி ஏத்து வோமே,
பாமாலை புனைந்தவர்க்குச் சாத்து வோமே!
இக்காலக் கவிஞர் வீ. விஸ்வநாதன் என்பார்
சூனியத்தில் ஞானம் காட்டி
சுதந்திரத்தின் வீரம் வாழ்த்தி
தேனினிக்கும் பாடல் மூலம்
தெளிவான உலகம் காண
மானிடத்தில் கவிஞனாக
வந்தது தெய்வம் அம்மா!
வானிடத்தில் விரிந்த சோதி
மகாகவி ஆயிற்றம்மா!
ஆம் அந்த மகாகவி தனது பாட்டுத்திறத்தாலே இப்படித்தான் இவ்வையத்தைப் பாலிக்க விரும்பினாரோ!
கவிமணி ச சவகர்லால் பாரதியை இப்படி வருணிப்பார்:
இந்தக் கவிஞனின் பர்வையும் வீச்சும்
எத்தனை புதுமையடா! – இங்கே
எந்தக் கவிஞனு மிந்தவோர் உச்சியை
எட்டிய தில்லையடா!
பழைமையைப் போற்றிப் புதுமையை ஏற்றும்
பாடல் மயக்குதடா! - அவன்
பழமையுள் காணும் புதுமையை எண்ணிப்
பார்த்திட வியக்குதடா!
புலமையின் கட்டுள் பொதிந்திடு கவிக்குப்
புதுநெறி காட்டியவன் – எந்த
அழகும் தமிழில் இருந்திடப் பாடும்
ஆசையை ஊட்டியவன்!
ஆம்! இது ஒருவகையில் பாட்டுக் கொரு புலவன் பாரதி அவனது பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்ததின் முறையோ!
1921 செப்டெம்பர் மாதம் 11ஆம் நாள் அவரது உயிர்பறவை சிறகொடிந்து விழுந்தது;; இருப்பினும் அவர் நினைவும், பாடல்களும் யுகம் யுகமாய் வாழச் சாகா வரம் பெற்றவையல்லவா? நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளுக்குப் பிறகும், விடுதலை நாள், குடியரசு தினம் என்றால் நாம் காலையில் எழும் பொழுதே நம் காதுகளில் கேட்கும் பாடல்களெல்லாம் பாரதியின் பாடல்கள் தாமே! எத்தனையோ கவிஞர்கள் நாட்டில் மலர்ந்தும், பாரதிப் பெருமகனாரின் உயரத்தை எட்ட முடியவில்லை என்று எண்ணும்பொழுது, நமது உள்ளம் எல்லாம் சிலிர்க்கிறது அல்லவா! அவர் தனது பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் பாலித்துக் கொண்டு வருகிறார் என்பதும் தெளிவாகின்றதல்லவா?
பாரதி தனது பாட்டுத்திறத்தாலே இந்த வையகத்தைப் பாலித்து வருவதால், அவரது பாடல்களைப் படிக்காத நாளெல்லம் பிறவா நாளே! அவரது சிந்தனைகளைச் சிந்திக்காத நாளெல்லாம் பிறவா நாளே!! அவரது அறிவுரைப்படி நடவா நாளெல்லாம் நாம் பிறவா நாளே!!!Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email. | Know More > |
எனது அருமை சந்த வசந்த அறிஞர் பெருமக்களே,
இன்று தை மாதம் 15 ஆம் நாள். பாரதி சிந்தனைக் கட்டுரை -3 இங்கே இடப்பட்டிருக்கிறது. நேரமும், மனதும் இணையும்பொழுது படிக்கவும், பின்னூட்டம் இடவும். நன்றி
என் வி சுப்பராமன்
(Bharathi-15)
15. நம்பினோர் கெடுவதில்லை.
”நம்பிக்கை’ என்ற அடிப்படையில் எழுப்பப் பட்ட ஒரு திருக்கோயிலே மனித வாழ்க்கை! ஆம்! ‘இவர் தான் எனது தந்தை” என்பதே நாம் நம் தாயின் சொற்களில் வைத்த நம்பிக்கை அல்லவா? நம்பிக்கைதான் நமது வெற்றிக்கு அடிப்படை .”உன்னால் முடியும் தம்பி” என்ற சொற்கள் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருந்தால், செய்யும் பணியில் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியோடும் ஈடுபடமுடியும். வெற்றி காண முடியும்!
அண்ணல் காந்தியடிகள் இந்நாட்டு விடுதலையைப் பெற முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் பணியாற்றியதால்தான் எத்தனை, எத்தனை இன்னல்களையும், இடையூறுகளையும், சவால்களையும் குன்றென நிமிர்ந்து நின்று சமாளித்து நாட்டு விடுதலை கிடைத்தது என்பது வரலாறு.
நம்பிக்கை நமக்கு வலிமை தருகிறது. நமது செயல்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.
பாரதி கூறுவார்: “நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்” என்று.
”ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே” என்று நாடு விடுதலை பெறுவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே பள்ளுப் பாடியவர். அவருக்குத்தான் எத்தனை நம்பிக்கை?
அதனால்தான், இந்த நம்பிக்கையை வெற்றிக்கு ஒருபடி என்று கூறுவர்.
ஆம்! அந்த ஆன்மீகச் செல்வரான திருஞானசம்பந்தருக்குத் தான் எத்தனை நம்பிக்கை! கற்றுணைப் பூட்டி, கடலிற் பாய்ச்சினும் அவருக்கு நல்ல துணையாக நின்று அவரைக் காப்பது இறைவனுடைய நாமம் “நமச்சிவாய” என்பதாம்!
”சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப்பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே”.
ஏசு கிறிஸ்து தனது போதனைகளில் நம்பிக்கையைப் பற்றி நிறையப் பேசுவார். நபிகள் நாயகமும் அவ்வாறே.
மனித குலத்தைச் சார்ந்த எவருக்கும் ‘நம்பிக்கை’ என்பது மிகப்பெரும் வலிமையன்றோ?
அந்தத் திரைப்படத்தில் வந்த இந்தக் காட்சியை மனத்திரைக்குக் கொண்டு வாருங்களேன்
”ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே”
மற்றவர்கள் நம்மீது வைப்பது, நம்பிக்கை; நாமே நம்மீது வளர்த்துக் கொள்வது ’தன்னம்பிக்கை’. நம்மிடம் அமைந்துள்ள நற்பண்புகள் பிறருக்கு நம்மிடம் நம்பிக்கையை வளர்க்கும். வெற்றிக்கு ஒரு படி நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்!. வெற்றி பெற்ற மனிதர்களால் சமுதாயமும், நாடும், உலகமும் மேம்பாடு அடைகிறது. எனவே வெற்றி பெற்ற மனிதர்களை உருவாக்குவதில் சமுதாயத்திற்கும் பெரும் பங்கு உண்டு.
நம்பிக்கையோடு வெற்றியைத் தழுவ நினைக்கும் மனிதர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நற்பண்புகளின் பட்டியலை திருவள்ளுவர் இவ்வாறு வகுத்து வைத்தார்:
அடக்கமுடைமை, அருள் உடைமை, அவை அஞ்சாமை, அவையறிதல், அழுக்காறாமை, அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினை உடைமை, இடனறிதல், இடுக்கண் அழியாமை, இனியவைகூறல், இன்னா செய்யாமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, காலம் அறிதல், சான்றாண்மை, சொல்வன்மை, தெரிந்து செயல்வகை, தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், பண்புடைமை, பயனில சொல்லாமை, புறங்கூறாமை, பெருமை (குற்றமற்ற தன்னம்பிக்கை) பொறையுடைமை, மடியின்மை, வலியறிதல், வாய்மை, வினைத்திட்பம்.! சாதாரண மனிதர்களால், இத்தகு குணநலன்களைப் பெற முடியுமா என்று வியக்கத் தோன்றும். திருக்குறள் ஒரு ஏட்டுச்சுரைக்காய் அல்ல; முயன்று அன்றாடம் கடைப் பிடிக்கக் கூடிய வாழ்க்கை நெறிகளே. இவையனைத்தும் ஒரு சாதனையாளனுக்குத் தேவையான நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் அளிக்க வல்ல சிறந்த ஆயுதங்களாகும். எனவே வெற்றியை விரும்பும் ஒவ்வொருவரும், இத்தகு குணநலன்களை வளர்த்துக் கொள்ள தீவிரமாக, மனமாற உறுதியேற்று செயலாற்ற வேண்டும்.
நாம் எடுத்த பணி வெற்றிகரமாக முடியுமோ, முடியாதோ என்ற அச்சமும், மனச்சலனமும் ஏற்படுவது இயற்கை.அதற்காகத்தான் பாரதி கணபதியிடம் வேண்டுவார்:
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
………………………………………………………………………………………………………………..
இவையும் தர நீ கடவாயே! என்று.
மனத்தில் சலனம் வந்துவிட்டால், அதைவிட்டு மீண்டு வருவது கடினம் என்பது அனுபவம். எனவேதான் ஏற்கெனவே பாரதி “மனதில் உறுதி வேண்டும்” என்று கேட்டதைக் கண்டோம்., ”அசையா நெஞ்சம்” வேண்டும் என்பதும் அவர் கேட்பதில் ஒன்று. “அச்சம் வேண்டேன்” என்பார். ஆம் ! அந்த அச்சம் வராமல் இருக்க நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை அனைவரிடமும் வைக்க வேண்டும்- இறைவனிடத்தில், தம்மிடத்தில் பெற்றோரிடத்தில், நண்பர்களிடத்தில்!. அப்படியில்லை என்றால் மனதில் நிம்மதியும் அமைதியும் விலகிவிடும்.,
எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் அவருக்கு ஏதாவது ஒன்று தேவையென்றால் ஒருவரிடம் சொல்லுவார்; அவர் உண்மையாக முயன்று உதவ முற்படுவார். நம்பிக்கை முழுமையாக வைக்காது, மற்றொருவரிடம் சொல்லுவார்; மூன்றாவது, நான்காவது என்று பலரிடமும் சொல்லுவார். முதல்முறை சொன்னபோது அனைவரும் செய்தனர்; காலம் செல்லச் செல்ல அவருக்கு யாருமே உதவுவதில்லை- காரணம், அவர் நண்பர்களுக்குத் தெரியும் அந்தப் பெரியவர் மூன்று நான்கு பேர்களிடமாவது சொல்லியிருப்பார்; யாரேனும் ஒருவர் செய்துவிடுவார்; நாமும் ஏன் நமது உழைப்பையும், நேரத்தையும் வீண் செய்ய வேண்டும் என்று! அவருக்கு முழுமையாக எவர் மீதும் நம்பிக்கையில்லாததுதானே, யாருமே செய்யாத நிலை!! நேராகக் காணும் மனிதரிடம் நம்பிக்கையில்லாத அந்த மனிதர், கண்ணால் காணமுடியாத இறைவனிடம் எப்படி முழுமையாக நம்பிக்கை வைப்பார் ; பயன் எப்பொழுதும் கவலையிலே இணங்கிநிற்பார் பாவம்! இதைப் போன்று இச்சமுதாயத்தில் இன்னும் எவ்வளவு பேர்களோ!
“நம்பினோர் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பு; அம்பிகையைச் சரன் அடைந்தால் அதிக வரம் பெறலாம்” என்பதை மனத்தில் ஏற்று, இறைவனிடம், மக்களிடம், சமுதாயத்திடம் நம்பிக்கை வைப்போம், வெற்றியடைவோம், நன்மை பெறுவோம்; இன்பம் பெறுவோம்; அமைதியோடு வாழ்வோம்!
அன்புள்ள சுப்பராமன்,
ஒரு தட்டச்சுப் பிழை:
திருநாவுக்கரசர் என்பதற்கு பதிலாக திருஞானசம்பந்தர் என்று தட்டச்சாகி இருக்கின்றது.
அன்புடன்,
குமார்(சிங்கை)
...
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.