கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை – மீள் பதிவு
எண்ணங்க ளெழுச்சிபெறு மின்பத்தில் திளைக்க
… ஏழிசையின் விதங்காட்டிக் கவியொன்று முளைக்கும்
வண்ணங்கள் வார்த்தையிலே வக்கணையா யமரும்
… வாழ்விற்குப் போதிக்கும் தத்துவத்தில் மிளிரும்
விண்ணேகிச் சென்றாய்நீ விண்ணவருங் களிக்க
… விசைகொண்ட அம்பாலெம் மிதயத்தைப் பிளக்க
கண்ணனவன் தாசனென்ற கவியரசே உன்போல்
… கவிபடைக்க யார்வல்லர் கடலாற்சூழ் மண்மேல்.
ஆட்டனத்தி ஆதிமந்தி காவியத்தைப் படைத்தாய்
… அனுபவத்தின் சாறுகொண்டு கவிதைகளைத் தொகுத்தாய்
வாட்டமுற்ற நாட்களிலும் வண்மையுடன் தொடர்ந்தாய்
… வனவாசம் மனவாசம் மாங்கனியோ டளித்தாய்
ஏட்டறிவு உனக்கிலை என்பவர்தாம் மடையர்
…. என்றுமுந்தன் காவியங்கள் அவர்கூற்றைப் புடைக்கும்
பாட்டமைத்தாய் பண்ணமைத்தாய் படைத்ததனால் இறைவன்
…. பட்டமது உனக்காகும் பாருள்ளோர் அறிவர்.
ஏசுவென்ற இறைவன்றன் காவியத்தைக் கொடுத்தாய்
… இறுதியிலே இரங்கற்பா உனக்கெனவாய்த் தொடுத்தாய்
பேசுவகைப் பொருளானாய் பொய்யுறவைத் துறந்தாய்
… பெம்மானின் அடிபணிந்துன் வாழ்நாளுக் கிரந்தாய்
மாசற்ற ஆன்மீகம் மனமேற்று நின்றாய்
… மாயவனின் கானத்தை மனமுருகத் தந்தாய்
பாசத்தில் பார்போற்ற உன்பேரும் வாழும்
… பாரதிப்பின் தாசற்பின் உன்புகழும் நீளும்.