வரசித்தி விநாயகரின்

1 view
Skip to first unread message

hemalatha hemalatha

unread,
Dec 24, 2025, 9:38:32 PM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
அனுபூதி தொடர்களை ஆவலுடன் 
எதிர்பார்க்கிறேன்
துதி  படிக்க மிகவும்
அருமையாக உள்ளது
வரசித்தி விநாயகரை 
தரிசிக்க முடியவில்லையே என்கிற வருத்தத்தில்
இருந்தேன்
மிகவும் நன்றி

GOPAL Vis

unread,
Dec 24, 2025, 9:43:19 PM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
இரண்டாம் பத்துப் பாடல்களை அதே இழையில் இட்டிருக்கிறேன்.
கோபால்.

hemalatha hemalatha

unread,
Dec 24, 2025, 9:46:03 PM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
இரண்டாம் பகுதி
பாடல்கள் எனக்கு கிடைக்கவில்லை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtuF_f4TNh3u%2BWPRepoh_VwHBndbNRMK0oPM25xg%2Bu_T-g%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
Dec 24, 2025, 9:49:34 PM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
விநாயகர் அனுபூதி! (11-20)

எனதென் பதையின்(று) எரியிட் டிலையேல்
தனதென்(று) எனையுண் தழலா கிவிடும்!
மனமூ திடவெம் மலைபோற் கனலும்!
சினமும் பெருகும்! சிதைஇப் பொழுதே! ..(11)


[‘எனது’ என்னும் மமதையை இன்றே நீ எரித்து அழிக்கவில்லை என்றால், அது தனது என்று கொண்டு என்னை எரிக்கும் தழலாகி விடும்! (அலையும்) மனம் அதை ஊதிவிட, வெம்மையான மலைபோலத் தகிக்கலாகும்! அத்தோடு சினமும் அதிகரிக்கும். ஆகவே, இப்போதே (என் மமதையை) நீக்கிவிடுக!] ..(11)

தேடித் தெளியத் திறனற் றிலனே
பாடிப் புகழப் பணறிந் திலனே!
கூடித் துதிசெய் குழுகண் டிலனே!
சாடிப் பயனென் சடமென் றனையே? ..(12)

[நானாகவே தேடித் தெளிவடையும் திறன் அற்றவனாகவும், உன்னைப் பாடிப் புகழ்வதற்குப் பண்கள் அறியாதவனாகவும், பலரோடு கூடித் துதி செய்வதற்கும் சரியான சற்சங்கத்தை அடையாளம் காணாதவனாகவும் இருக்கிறேனே! சடமான என்னைக் குறைசொல்லி வைதாலும் பயனேது?] ..(12)

என்னோர் துணையே! இறவின் பிறகிங்(கு)
இன்னோர் பிறவிக்(கு) எறிவாய் எனிலும்
உன்னீர் அடிமீ(து) உளமொன் றுபடற்(கு)
என்னா வதுசெய் எளியேற்(கு) இறையே! ..(13)


[இறவு = இறப்பு]
[என்னுடைய ஒரே துணையானவனே! எனது இறப்புக்குப் பின், மீண்டும் ஒரு பிறவி கொடுத்து இங்கே எறியப் போகிறாய் என்றாலும், உன் இரு திருவடிகளில் என் மனம் ஒன்று படுவதற்கு ஏதாவது செய்க இறைவனே!] ..(13)

இறைவா இபநீ இதயத்(து) அலராம்
அறையின் நறையில் அழகாய் அமரப்
பறைபெற் றிலனே! பழகும் கலியின்
கறைபட் டபினே கரைகாண்(பு) அரிதே! ..(14)


[இபம் = யானை; அலர் = மலர்; நறை = நறுமணம்; பறை = இறையருள்/வரம்]
[யானை முகனாகிய இறைவனே! நீ என் இதயமாகிய மலராலான (கரு)அறையின் நறுமணத்தில் அமர்ந்திருக்க நான் பாக்கியம் பெறாதவன் ஆனேனே! என்னோடு பழகிக் கொண்டிருக்கும் கலியின் கறை பட்டபின்பு, கரையைக் காண இயலாதே!] ..(14)

அரியுண் பணியை அணியா அணியும்
பரிபூ ரணனே! பணியா ரமுடன்
பொரியும் பழமும் புசியைங் கரனே
கரியே சகமாள் கணநா யகனே! ..(15)


[அரி = காற்று; பணி = பாம்பு; கரி = யானை]
[காற்றை உண்ணும் பாம்பை அணியாக அணிகின்றவனே! பரிபூரணமானவனே! பணியாரங்களும் பொரியும் பழங்களும் உண்ணுகிற ஐங்கரனே! யானைமுகனே! இந்தச் சகத்தை ஆளும் கணநாயகப் பெருமானே!] ..(15)

கனிவென்(று) அடையக் கயிலா யமலைப்
பனியில் தனியாய்ப் படிபெற் றவரை
நனிசுற் றியவா! நசையற் றமகா
முனிசத் துவரின் முதலாம் குருவே! ..(16)


[படி = உலகம்; பெற்றவர் = தாய் தந்தை; நனி = நன்கு; நசை = ஆசை; சத்துவர் = ஸத்குணம் மட்டுமே உடையவர்]
[ஒரு கனியை வென்று அடைவதற்காகக் கயிலாய மலைப் பனியில் வீற்றிருந்த உலகின் தாய் தந்தையரைத் தனியாக நன்கு சுற்றியவனே! ஆசை அற்ற, நற்குணங்கள் மட்டுமே கொண்ட மாமுனிகளுக்கு முதலாம் குருவானவனே!] ..(16)

குருவின் குருவாம் குகசண் முகனாம்
முருகன் குமரன் முதல்வா அணலே!
ஒருகொம் புடையோய் உரகக் கடியோய்!
தருவாய் அமரர் தருவாய் வளலே! ..(17)


[உரகம் = பாம்பு; கடி = இடுப்பு]
[குருவுக்கும் குருவான குகன், சண்முகன், முருகன், குமரனுக்கு முன்னவனான அண்ணனே! ஒற்றைக் கொம்பு உடையவனே! பாம்பை இடுப்பில் (கச்சையாக) அணிந்தவனே! தேவலோக கற்பக தருவைப்போன்ற வள்ளலே! அருள் தருக!] ..(17)

வளமத் தனையும் வரமாய்த் தருவோய்!
களபச் சிரனே கருணைக் கணனே!
முளரிப் பதனே முறமாஞ் செவியோய்
அளவற் றகொடை அளிஐங் கரனே! ..(18)


[களபம் = ஆண்யானை; முளரி = தாமரை]
[எல்லா வளங்களையும் வரமாகத் தருபவனே! யானைத் தலை கொண்டவனே! கருணைமிகும் கண்களை உடையவனே! தாமரைப் பாதங்களை உடையவனே! முறம் போன்ற செவிகளைக் கொண்டவனே! அளவில்லாமல் கொடுக்கும் ஐங்கரனே!] ..(18)

கரணக் கருவிற் கருமேந் திரியப்
புரணந் தனிலும் புலனைந் தினிலும்
மரணஞ் சயனம் மருளிற் கனவில்
சரணப் பரிசம் சதமா குகவே! ..(19)


[கரணக் கரு = அந்தக்கரணம்/உள்ளுணர்வு; கருமேந்திரியம் = வேலை செய்யும் உடல் உறுப்புகள்; புரணம் = அசைவு/துடிப்பு; பரிசம் = தொடுதல்; சதம் = நிலைப்பு]
[என் உள்ளுணர்விலும், உடல் உறுப்புகளின் அசைவுகளிலும்; ஐம்புலன்களிலும், மயக்கநிலை, கனவுநிலை, உறக்கநிலை, ஆகியவற்றிலும், இறப்புநிலையிலும், உன்னுடைய திருவடிகளின் இணைப்பு நிலைத்திருக்கட்டும்] ..(19)

கவியாத் துமலர்க் கழலோ துவதும்
திவியம் கமழும் திருநா மமதைச்
செவியாற் பருகிச் சிவமாங் கனலுக்(கு)
அவியா வதுமே அடியேன் பணியே! ..(20)


[யாத்து = இயற்றி; திவியம் = தெய்விகம்/இறைமை; அவி = வேள்வியில் ஆகுதியாக இடப்படும் பொருள்]
[கவிதைகள் இயற்றி உன் திருவடிகளைத் தோத்திரம் செய்வதும், இறைமணம் கமழும் உன் திருநாமத்தைக் காதுகளால் சுவைத்தபடியே சிவம் என்னும் அக்கினியில் ஆகுதி ஆகிவிடுவதே அடியேனுடைய பணியாகும்.] ..(20)

நல்வாழ்த்துகள்
கோபால்.
[24/12/2025]

On Tue, Dec 23, 2025 at 7:07 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
. . . . . . .
விநாயகர் அனுபூதி! (0-10)

நங்கநல்லூர் ஶ்ரீ வரசித்தி விநாயகர் துதி
[கலிவிருத்தம்; அந்தாதி]

. . . . . . . . . . .


hemalatha hemalatha

unread,
Dec 24, 2025, 9:50:55 PM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
மிகவும் நன்றி 
விநாயகர் துதி 11 - 20 

Reply all
Reply to author
Forward
0 new messages