வண்ண விருத்தம் முயற்சி 13 (ராம்)
(திருப்புகழ் சந்தம்)
தனன தனன தனதன தனத
தனன தனன தனதான
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிசூலன் (பழனி)
-------------------------------------------------------------------------------------
கருது மடியர் நெறிவ ழியது
கரைய வழலி லுறுவோனே
கரமு மிணைய வடியர் தொழுது
கணமு நினைத லருளோனே
கரியு மிடற உருகு மடியர்
கருணை மிகலி லெறிவோரின்
கனவு நனவு வருத லுணர்வர்
கசியு மருளி லொளிர்வோனே
உருகு மனதொ டுறைக ணியது
முடன டைவதி லிடராக
உதிர மொழுக அயரு முடலில்
உருவ மருளு மலையீசா
அருமை மகனு மரிது மடிய
அமுது தருத லுடனாக
அகமு முருக சிறுவ னுருவ
மருளு மினிய பெருமானே
பதம் பிரித்துப் பொருளுரை:
கருதும் அடியர் நெறி வழியது
கரைய அழலில் உறுவோனே
(தாழ்ந்த குலத்தில் பிறந்ததாகக் கருதப்பட்ட நந்தனார் (திருநாளைப்போவார்), தில்லை நடராஜப் பெருமானை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தார். தில்லை அந்தணர்களின் கூற்றுப்படி, சிதம்பரம் திருக்கோயிலின் முன் எரியூட்டப்பட்ட புனிதமான தில்லைச் செந்தீயில் (அழலில்) புகுந்தார். தீப்பிழம்பினுள் புகுந்து தம் முந்தைய உடல் கரையப் பெற்று, முப்புரிநூல் அணிந்த முனிவடிவோடு எவ்விதத் தீங்கும் இன்றிப் பிரகாசமாக வெளிவந்து நடராஜப் பெருமானின் திருவடி நிழலை அடைந்தார். அழலில் உறுவோனே - அப்படிப்பட்ட ஜோதியான இறைவனே.
கரமும் இணைய அடியர் தொழுது
கணமும் நினைதல் அருளோனே
(திருவாரூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவனடியார்களைத் தொழாமல் சென்ற சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருக்கு அருள்செய்த தியாகேசப் பெருமானையும்கூட "புறகு" (அடியார் கூட்டத்திற்குப் புறம்பானவர்கள்) என்று கண்டித்தவர் விறல்மிண்ட நாயனார். சிவனடியார்களின் பெருமையை உலகிற்கு உணர்த்திய அச்சேவையைக் கண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் கரங்களைக் கூப்பித் தொழுது நாயன்மார்கள் அனைவரையும் போற்றி "திருத்தொண்டத் தொகை" என்னும் அற்புதப் பதிகத்தைப் பாடி அருளினார். கண நேரமும் சிவனடியார்களை நினைந்து தொழும் பக்தர்களுக்கு அருள் புரியும் பரம்பொருளை இது குறிக்கிறது.)
கரியும் இடற உருகும் அடியர்
கருணை மிகலில் எறிவோரின்
கனவு நனவு வருதல் உணர்வர்
கசியும் அருளில் ஒளிர்வோனே
எறிபத்த நாயனார் வரலாறு:
(சிவகாமியார் என்னும் சிவனடியார் இறைவனுக்குச் சாத்துவதற்காகக் கொண்டுவந்த திருப்பூங்குடலையைப் புகழ்ச் சோழ மன்னனின் பட்டத்து யானை (கரி) தட்டிப் பறித்துச் சிதைத்தது. அதனைக் கண்ட எறிபத்த நாயனார், சிவனடியாருக்கு நேர்ந்த இடரைக் கண்டு பொறுக்காமல், அடியார் மீது கொண்ட அளப்பரிய அன்பினாலும் கருணையினாலும் தம் மழுவை எறிந்து அந்த யானையையும் பாகர்களையும் வீழ்த்தினார்.
அத்தகு ஒப்பற்ற அடியாரின் தியாகத்தை ஏற்றுக்கொண்டு, கனவிலும் நனவிலும் தம்மையே நினைந்து உருகும் அன்பர்களுக்குப் பேரருள் சோதியாக ஒளிர்ந்து அருள்புரியும் இறைவனை இப்பாடல் அடிகள் போற்றுகின்றன.
கரியும் இடற = (பட்டத்து) யானையானது (சிவனடியாரின் பூங்குடலையைக் கீழே தட்டிச்) சிதைக்கவும்
உருகும் அடியர் = சிவ சிந்தனையில் உருகினார் சிவனடியார்.
கருணை மிகலில் எறிவோரின் = (அச்சம்பவத்தைக் கண்டு பொறாது) சிவனடியார் மீது கொண்ட பேரன்பினாலும் கருணையினாலும் தன் மழுவை எறிந்து அந்நிகழ்வுக்குக் காரணமான யானையையும் பாகர்களையும் தண்டித்தார்.எறிபத்த நாயனார். அத்தகையர் போன்றோரின்
கனவும் நனவும் வருதல் உணர்வர் = கனவிலும் நனவிலும் தோன்றித் தம்மை உணரும் அன்பர்களுக்கு,
கசியும் அருளில் ஒளிர்வோனே = நெஞ்சம் கசியும் பேரருள் வடிவாகி ஒளிர்ந்து காட்சியளிக்கும் பரம்பொருனே
உருகும் மனதொடு உறை கணியது
உடன் அடைவதில் இடராக
உதிரம் மொழுக அயரும் உடலில்
உருவம் அருளும் மலையீசா
மூர்த்தி நாயனார் வரலாறு:
மதுரை மாநகரில் சொக்கநாதப் பெருமானுக்கு நாள்தோறும் சந்தனம் அரைத்துச் சாத்தும் திருத்தொண்டை மூர்த்தி நாயனார் செய்து வந்தார். சமண மன்னன் ஒருவன் ஆட்சியைப் பிடித்து, அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு தடைகளைச் செய்தான்.
இறைவனுக்குச் சந்தனம் சாத்தும் சேவை தடைபடக் கூடாது என்பதற்காக, மூர்த்தி நாயனார் சந்தன உரைகல்லிலேயே தன் முழங்கையை வைத்துத் தேய்த்தார். கை எலும்பு தேய்ந்து உதிரம் (இரத்தம்) பெருகி வழிந்த நிலையிலும் தளராது உழைத்த அவரது அளப்பரிய அன்பைக் கண்ட சிவபெருமான், அசரீரியாய் எழுந்து அவரது காயங்களை நீக்கித் தன் அருளுருவைக் காட்டி ஆட்கொண்டருளினார்.
உருகும் மனதொடு = சிவ சிந்தனையில் உருகுகின்ற தூய உள்ளத்தோடு
உறை கணி அது = (இறைவனின் திருமேனிக்குச் சாத்துவதற்காகத் தயார் செய்து) உறைந்திருந்த சந்தனக் கட்டையானது, - கணி – சந்தனக் கட்டை
உடன் அடைவதில் இடர் ஆக = உடனடியாகக் கிடைக்காமல் (மாற்று மன்னனின் சூழ்ச்சியால்) தடைப்பட
உதிரம் ஒழுக = (சந்தனம் கிடைக்காத சூழலில்) சந்தன உரைகல்லிலேயே தன் முழங்கையைக் தேய்த்து இரத்தம் பெருகி வழியவும்,,
அயரும் உடலில் = அத்திருத்தொண்டில் தம் மெய்யும் அயற்சியடைய
உருவம் அருளும் மலையீசா = அசரீரியாகத் தோன்றி அவரது காயங்களைக் குணப்படுத்தித் தன் பேரருள் வடிவைக் காட்டி ஆட்கொண்ட கயிலை மலையீசனே!
அருமை மகனும் அரிது மடியர்
அமுது தருதல் உடனாக
அகமும் உருக சிறுவன் உனுரும்
அருளும் இனிய பெருமானே
சிறுத்தொண்ட நாயனார் வரலாறு:
பைரவக் கோலத்துடன் வந்த சிவபெருமான், சிறுத்தொண்ட நாயனாரிடம் அவர்தம் அருமைப் புதல்வனான சீராளனைச் சமைத்து அமுதாகப் படைக்குமாறு கேட்டார். நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிறிதும் தயங்காது, தம் பெற்றெடுத்த மகனை அரிந்து (வெட்டி) உணவாக்கி உடனடியாக அடியாருக்குப் படைத்தனர்.
அவர்களின் அளப்பரிய பக்தியைக் கண்டு மனம் உருகிய சிவபெருமான், "சீராளா வா!" என்று அழைக்குமாறு கூற, மறைந்த அச்செல்வன் உயிருடன் ஓடிவந்தான். அடியாரின் தியாகத்தை ஏற்று, அக்குழந்தைக்கு மீண்டும் உயிர் வடிவம் தந்து ஆட்கொண்ட பேரருளாளரான இறைவனை இப்பாடல் அடிகள் போற்றுகின்றன.
அருமை மகனும் அரிது - தம் பெற்றெடுத்த அருமைப் புதல்வனாம் சீராளனை (சிவனடியார் வேண்டியபடி) அரிந்து
அடியர் அமுது தருதல் உடனாக : வந்த சிவனடியாருக்கு அமுதாகச் சமைத்து அளிப்பது உடனடியாக நடைபெற,
அகமும் உருக: சிறுத்தொண்ட நாயனாரின் அளப்பரிய பத்தியையும் தியாகத்தையும் கண்டு மனம் உருகி,
சிறுவன் உருவம் அருளும் பெருமானே: மறைந்த அச்சிற்றுயிரைச் சிறுவனாகவே மீண்டும் அழைத்துப் பெற்றோருக்கு உயிர்ப்பித்து அருளிய அப்பெருமானே.
அரிது – அரிந்து என்பதன் இடைக்குறை)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPxw1CaRCs%2BE%3DrhSYxsYXFmbJgz6m%3DgX2GvQP2N38YO5g%40mail.gmail.com.
தனன தனன தனன தனத
தனன தனன தனதான
என்று கொள்க
தவறுதலாக
தனன தனன தனதன தனத
தனன தனன தனதான
என்று முன்பு இட்டேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtjhBXz_L0bhVVXw2nXw9kn3UKdrnnXcN3JOXPq4zZBphA%40mail.gmail.com.
On 5 Aug 2026, at 11:49 AM, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF0uUpb3GNuJPyC5Qddrp5vXs%2BXe7Mb1pBA6t9T5seTNWg%40mail.gmail.com.