2026-03-20
சேத்திரக்கோவை
----------------
(2025 ஜூன், 2025 நவம்பர் டிசம்பரில் தரிசித்த தலங்களில் பல இப்பாடல்களில் இடம்பெறுகின்றன.)
(எண்சீர் விருத்தம் - காய் காய் மா தேமா - அரையடி வாய்பாடு)
(திருத்தாண்டக அமைப்பு)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.41.1 - "வகையெலாம் உடையாயும் நீயே என்றும்")
முற்குறிப்பு:
பாடல் 1-4: ஜூன் 2025-இல் தரிசித்த தலங்கள் - (தரிசித்த வரிசையில்);
பாடல் 5-11: நவம்பர் டிசம்பர் 2025-இல் தரிசித்த தலங்கள் - (தரிசித்த வரிசையில்);
1)
புலிப்பாதர் பதஞ்சலியார் வேதம் என்றும்
.. பொலிநாமூ வாயிரவர் போற்று மன்றில்
கலிப்பாரும் கழற்பாதம் தூக்கி ஆடும்
.. கவின்கூத்தை அடியார்காண் தில்லை தன்னில்,
ஒலிப்பாரும் கடல்சூழ்ந்த உலகோர்க் கெல்லாம்
.. உயர்வானம் தருநல்லூர்ப் பெரும ணத்தில்,
சொலிப்பாரும் கூர்மழுவாள் சூலம் ஏந்தும்
.. தூயவிடை மேலானைக் காண லாமே.
* கோயில் (தில்லை / சிதம்பரம்), நல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்);
V. Subramanian