"ஒவ்வொரு நாளும் பேரின்பம்"
(மீ. விசுவநாதன்)
சித்திரை மாதம் பிறப்பதுவும் - பின்
சென்றது மறுபடி தோன்றுவதும்
நித்திய புருஷன் இயக்கத்தில் - வரும்
சித்திர வாழ்க்கையின் நிழற்படமே
காலையில் பூக்கள் மலர்வதுவும் - பின்
கதிரவன் மறைகையில் வாடுவதும்
வேலையில் தர்ம ராஜனவன் - நிதம்
விதிவழி நடத்துற கர்மபலன்
எத்திசை வாழும் உறவுகளும் - தினம்
இன்பமாய் நிறைவுடன் இருந்திடுக
புத்தொளி வீசி நலமுடனே - நற்
பொழுதென நாளுமே விருந்திடுக
கவிதையும் கதைகள் கட்டுரையும் - நெடுங்
கனவெனும் சமுத்திர வெண்நுரைகள்
இவைகளில் போதை கொள்ளாமல் - மனம்
இயல்புடன் இருந்திடப் பழக்கிடுவோம்.
அச்சமே நீங்க அன்புசெய்வோம் - அது
ஆனையின் பலமெனத் தெம்புகொள்வோம்
எச்சமாய் உள்ள வினைப்பயனில் - நம்
ஈகையின் கணக்கினைக் கூட்டிடுவோம்
(14.04.2026. 12.05 am)