




செய்குவோம், செயலிறுப்போம், சேருவோம்
வஞ்சி விருத்தம்
கண்ணின் விழிநீர் உறவாக்கா
எண்ணுந் தகுதி அவர்க்காகா
உன்னுந் தகுதி அவர்க்காகின்
உன்றன் துளிநீர் விழலாகா.
கொஞ்சம் அழுகை உளமேற்கும்
நெஞ்சம் நிறையிற் சிரிப்பார்க்கும்
வஞ்சத் துறவும் பகையாகும்
பஞ்செ னுமென்மை உறவாகும்.
பிம்பம் அழிக்க முயல்வோரும்
நம்பிக் கழுத்தை அறுப்போரும்
வெம்பி வெதும்பும் குணத்தோரும்
வம்பின் பிடியில் அழிவாரே.
கடந்த காலம் தரும்பாடம்
தொடருங் காலம் பரிசாகும்
தடங்கல் இல்லா எதிர்காலம்
புடத்திற் பொன்னாய் ஒளிவீசும்.
மீண்டும் தொடங்கப் பயம்வேண்டாம்
யாண்டும் முயற்சி உயர்வாக்கும்
காண்பார் கனவும் கனியாகும்
வேண்டும் வரத்தை இறைசேர்க்கும்.