தனிமையிலும் மனதிலும் ஒரு வாழ்க்கையும் ஊருக்கும் உலகுக்கும் ஒரு வாழ்க்கையும் வாழ்வதுதான் உயர்ந்த பண்பாடு, சிறந்த கலாச்சாரம் கடைபிடிக்க வேண்டிய நாகரிகம்.
ரகசியங்கள் அத்தனையும் பாதுகாக்கப்பட்டவன் சிறந்த பண்பாடு உடையவன். ரகசியங்கள் அம்பலமாக்கப்பட்டவன் பண்பாடு சிதைத்தவன்.
ரகசியம் கண்டுபிடிக்கப்படும்போது தெரியாமல் செய்துவிட்டேன் இனி நல்வழியில் செல்வேன் என்று சத்தியம் செய்துவிட்டு ரகசியம் காப்பதில் முன்பை விட அதிக அக்கறை கொண்டு தன் வழமையான தவறுகளில் மூழ்குபவன் பண்பாடு உடையவன்.
தெரிந்தது தெரிந்துபோய்விட்டது இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்று துணிந்து தன் இயல்புபோல் வாழ்பவன் பண்பாடு சிதைப்பவன். பெரும் தவறுகளைச் செய்துகொண்டு அவற்றை மறைத்து வாழ்பவன் பண்பாடு காப்பவன்.
இப்படியாய் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் என்பதெல்லாம் தனிமனித வக்கிரங்களை மூடும் அழகான போர்வைகள்.
இவை இவ்வாறு இருக்க ஊர், நாடு, உலகம், மொழி, இனம் என்று எல்லாம் கடந்து ஓர் பண்பாடு உண்டு. ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தை மனதில் கொண்டு செயல்படுவதும், ஒளிவு மறைவு இன்றியும் அடுத்தவர் சுதந்திரம் காத்தும் தன் சுதந்திரம் அனுபவித்தும் வாழ்வது உயர்ந்த பண்பாடு கலாச்சாரம் நாகரிகம்.