நம்பி தங்கக் கம்பி
சின்னச் சின்னத் தம்பி - அந்தத்
தம்பி பேரு நம்பி
சொன்னபடி செய்யும் - அவன்
சொக்கத் தங்கக் கம்பி
மிட்டாய் கேட்க மாட்டான் - எதையும்
வெளியில் தின்ன மாட்டான்
முட்டாள் பசங்க போலே எதற்கும்
முணுமுணுக்க மாட்டான்
குப்பை போட மாட்டான் - வீணாய்க்
கூச்சல் போட மாட்டான்
தப்பு செய்ய மாட்டான் - வம்புச்
சண்டை போட மாட்டான்
எதனைக் கேட்ட போதும் - அதை
எண்ணி எண்ணிப் பார்ப்பான்
கதைகள் பாட்டி சொன்னால் - மிகக்
கவனமாகக் கேட்பான்
பாட்டி சொன்ன கதைகள் - நெஞ்சில்
பதித்துவிட்ட விதைகள்
போட்ட விதை முளைக்கும் - பின்னர்
போற்றும் புகழ் விளைக்கும்
அன்று பாட்டி சொன்ன - கதை
அவனுளத்தில் மின்ன
என்றும் நினைத்துப் பார்ப்பான் -அதை
எண்ணந் தன்னில் சேர்ப்பான்
திருக்கு றள்பா சொன்ன- மிகச்
சிறப்புக் கொண்ட கதையாம்
பெருமை யோடு வாழும் - வழி
பேசு கின்ற கதையாம்
வேட்டை ஆட வேண்டி - இரு
வீரர் காடு சென்றார்
ஓட்ட முயல்தன்னை- ஒருவர்
உடனடியாய்க் கொன்றார்
தும்பிக்கையைத் தூக்கி - யானை
துரத்தப் பயம்போக்கி
நம்பிக்கையாய் வேலைஒருவர்
நன்கு வீசி நின்றார்
யானை தப்பிப் போச்சு- எனினும்
அவரே பெரிய வீரர்
ஆன படியால் பெரிதாய் - என்றும்
ஆசை கொள்ள வேண்டும்
என்று பாட்டி சொல்ல - அது
இவனுளத்தை வெல்ல
சின்னச் சின்ன ஆசை - இவன்
தேக்கி வைப்ப தில்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAwwoYwVP4qZpJoyVuTLtNyiTopCNc4A1gG5JX1%3Dztsyg%40mail.gmail.com.
On May 1, 2026, at 00:32, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--