"புள் = வளையல், உட்டுளை உடையதென்பது". (பக். 219, மொழிநூல், மாகறல் கார்த்திகேயமுதலியார்).
புள் என்பது துளை என்ற பொருள் கொண்டது. இதனால் பெண்டிர் அணிகலமான வளைக்கு (வளைந்திருப்பதால் வரும் பெயர் வளை) புள் எனவும் பேருண்டு. புள் = வளை (துளை இருக்கும் அணிகலன்) என வரும் சங்க இலக்கியச் சான்றுகளைக் காண்போம். புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல. 108. தொல்.
புள் = முதனிலைத் தொழிற்பெயர். அதாவது, புள் 'பறவை' < புள்ளுதல்.
புளிஞர் என்ற சொல் அம்பால் துளைக்கும் வேடரைக் குறிப்பது. புலிந்தர் என்று வடமொழி நூல்கள் இத் தமிழ் வார்த்தையைக் கூறும். மறைந்து நின்று அம்பெய்த இராமனை நோக்கி, "வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் எவ்விய தென்னை" என்று வாலி கேட்டான் என்பது கம்பர் பாட்டு. மலைப் பளிங்கர் என்ற ஆதிவாசிகள் மலை வேடர்கள் ஆவர். புளிஞர் > பளிங்கர். அம்பால் துளைப்போர். இரண்டாம் எழுத்தாய், -ள்-/-ண்-/-ட்- த்ராவிடச் சொற்கள் பலவற்றில் பொருளமைதி கொண்டிலங்கும். புள்-. இதனால் சங்கம், பிற்கால இலக்கியங்களில் புள் = வளையல். நாளம், நாணல்கொண்டது, நாடி போல, புள்- > புண், புணர்- என்ற வினையைப் புள்ளுதல் எனும் வினை பிறப்பிக்கிறது. புடலை என்ற சொல்லும் புள் (வளையல்) போல உள்ளே தொளை உள்ளதால் புடலங்காய்க்கு உருவாகின பெயர். புட்டு/பொட்டு < புள்/பொள். புள்ளு(புள்ளி)/புணர்/புடலை : இத் தொகுதியை ஒப்பிடுக:
புஷ்கரம், புண்டரம், புண்டரீகம் என்ற சொற்கள் பற்றி ஆராய்ந்து முன்னர் எழுதினேன், புள் என்னும் தாதுவில் உற்பத்தி ஆகுபவை.
(1) "புள் கை போகிய புன்றலை மகாரொடு" (மலை படு. 253). புள் (வளையல்) அணிந்த கையையுடைய புன்தலை மக்கள்.
அதே போல்,
(2) ”நற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்பு வந்தலைப்பவும்” - குறிஞ்சிப் பாட்டு
இங்கேயும் புள் என்பது வளையல். புள் = துளை. எனவே, வளையலுக்கு ஆகுபெயர்.
ஆதாரம்: நச்சினார்க்கினியர்.
இதனாற்றான்,
"புள் = வளையல், உட்டுளை உடையதென்பது". (பக். 219, மொழிநூல், மாகறல் கார்த்திகேயமுதலியார்).
(3) மணிமேகலை:
"பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பப்"
பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்ப-பூஞ்சோலையில் மதுவுண்ணுதலையுடைய வண்டுகளின் ஒலிமிக,
பூங்கொடியார் கைப்புள் ஒலிசிறப்ப - பூங்கொடி போன்ற மகளிருடைய கையிலணிந்த வளைகளின் ஒலி மிக
(4) சிந்தாமணி:
"புள்ளும் யாழுங் குழலும் ஏங்கப்
புனைந்து வல்லான் நினைந்து இயற்றிய"
புள்ளும் யாழும் குழலும் ஏங்க - (தேசிகப் பாவையின் கையில் உள்ள) வளையும் யாழும் குழலும் ஒலிக்க
---------
தமிழிலே நெய்தல் திணைப்பாடல்களில் தலைவன் பிரிந்துசென்றுவிடுவான். தலைவி அவன் வரவுக்காக ஏங்குவாள். உடல் மெலிந்து கையில் உள்ள வளைகள் கழன்று விழும். குருகு என்பது நெய்தற் புள். அதாவது,
https://en.wikipedia.org/wiki/Water_birdதமிழில், குருகு = waterbirds,
இன்னும் சம்ஸ்கிருதப் பேராசிரியர் பலருக்கும் வால்மீகத்தில் பாலகாண்டத்தில் வரும் க்ரௌஞ்சம் என்பது அன்றில் ( Black ibis,
https://en.wikipedia.org/wiki/Red-naped_ibis ) என்று தெரியவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாக வாய்மொழி மரபாக நாட்டுக் கவிராயர்கள் அன்றிலை தலைவனைப் பிரிந்த தலைவிக்கு உவமை சொல்வதை வால்மீகி பாடியுள்ளார். இது தமிழால் விளங்குகிறது. "குருகு பெயர்க் குன்றம்" என்று குறுந்தொகை கடவுள்வாழ்த்தில் அன்றில்/கிரவுஞ்சம் குறிப்பிடப்படுகிறது. முருகன் க்ரௌஞ்சகிரியைத் தொளைத்த வரலாறு. சிலம்பு, மணிமேகலையிலும் பாடியுளர்.
"வடமொழியில் ‘க்ரௌஞ்சகிரி’ என்பது தமிழில் ‘குருகுபெயர்க் குன்றம்’ என்று கூறப்படுதலானும் க்ரௌஞ்சமென்பது அன்றிலின் பெயரென்பராதலானும் அன்றிலுக்கு (ஊஊ) “தடவுநிலைப்பெண்ணைக், கொழுமடலிழைத்தசிறுபொற்குடம்பைக், கருங்காலன்றிற் காமர் கடுஞ்சூல், வயவுப்பெடையகவும் பானாட்கங்குல்” எனப் பனைமடல்வாழ்க்கையும் கருங்காலுடைமையும் துணைபிரியா வியல்பும் கூறப்படுதலாலும் குருகென்பது அன்றிலாவிருக்கலாமென்று தோற்றுகிறது; இன்னும் ஆராய்தற்பாலது. அன்றிலின்செய்தி கலி. 129 : 12 - ஆம் அடிக்குறிப்பிற் காணலாகும்." (இ. வை. அனந்தராமையர், கலித்தொகை)
நல்லந்துவனார், புள்ளை (=வளையலை) "குருகு" என்றே கலித்தொகை நெய்தற்பாட்டில் பாடுகிறார்:
"கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழுற்ற கோடல்வீ
இதழ்சோரும் குலைபோல இறைநீவு விளையாட்கு
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகித்
தன் துணைப் பிரிந்த யாஅம் தனிக் குருகு உசவுமே"
மணம் உள்ள காந்தள் மலரின் மகரந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறுகின்றன, அதன் இதழ்களும் ஒவ்வொன்றாக உதிர்ந்து கீழே விழுகின்றன, அதுபோல, நீ திரும்பி வரவில்லையே என்று வருந்தும் உன் காதலியின் கைகளில் உள்ள வளையல்கள் கழன்று கீழே விழுந்தபடியிருக்கின்றன.
https://365paa.wordpress.com/2012/02/16/225/
அங்கைசேப்பக் குருகிரங்க
வலங்கலம்பூங் குழறுயல்வர
மங்கைநல்லார் பவழவம்மி
யரைத்தசாந்த மலர்பெய்மாலை (சிந்தாமணி, இலக்கணையார் இலம்பகம்).
நச்சினார்க்கினியர் விளக்குகிறார்: அங்கை சேப்ப - உள்ளங்கை சிவப்ப; குருகு இரங்க - வளை ஒலிக்க
இது மார்கழி மாதம். மாணிக்கவாசகர் இன்னோர் இடத்திலும் சிலேடையை - சங்க இலக்கியம் போல லாவகமாகக் கையாளுகிறார். அவரது திருவெம்பாவைப் பாட்டு ஒன்றில் குருகு என்பது நெய்தல் நிலத்துப் புள்களையும, உமையாளின் கை வளைகளையும் குறிக்குமாறு பாடியுள்ளது படித்து இன்புறத்தக்கது.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் ...
இன்னும் பல உதாரணங்கள் குருகுப் புள்ளை வளையல் என்று பொருள்கொள்ளும் அகப்பாடல்களைக் காட்டலாம்.
தஞ்சைவாணன் கோவை
224 பொருகின்ற செங்கயல் போல்விழி யாய்பண்டு போயநின்கைக்
குருகின் றணித்திறை கொள்வது காண்கநங் கொண்கர் பொற்றேர். (குருகு = வளையல்)
தருகின்ற சங்கத் தருவன்ன வாணன் தமிழ்த்தஞ்சைவாய்
வருகின்ற தென்றுமுன் னேயோகை கூறும் வலம்புரியே
பாட்டுக் குருகுந் தமிழ்ச்சொக்க நாதர் பணைப்புயமே
வேட்டுக் குருகுமெய்ந் நாணுன்விட்டாள்வண்டு மென்கிளியும் (குருகு = வளை)
பேட்டுக் குருகும்விட் டாளென்செய் வாளனல் பெய்யுமிரு.
கோட்டுக் குருகு மதிக்கொழுந் துக்கென் குலக்கொழுந்தே. - குமரகுருபர சுவாமிகள்.
காளமேகம் - சிலேடை:
மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!
ஓர் உரை. இன்னும் சொல்லலாம். 7 பறவைகள் இப்பாடலில்:
குருகு, சக்கிரவாகம், சிம்புள் (சரபம்), அன்னம், காக்கை, கொக்கு, குயில்.
5000 ஆண்டுகளாய் இந்திய மாதர்கள் விரும்பி அணியும் வளையல்கள் ஆகுபெயராக புள் என்று தமிழில் அழைக்கப்பட்ட பழமரபை நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். நெய்தல் பாடல்களில், புள் = குருகு என்றும் வரும்.
நா. கணேசன்